Friday, June 20, 2025

பஹல்காகாமில் குதிரைச்சவாரி

காலை 7 மணிக்கு ஶ்ரீநகரிலிருந்து ஒண்றரை மணி நேரப்பயணம் ‘தூத்பத்ரி’ எனும் என்ற இடத்திற்கு. விடிகாலை ஐந்தரைக்கே எல்லோருடைய அறைக்கதவை தட்டி டீ, காபி விநியோகம் செய்தார் குஷி யாத்ரா குக்கான பட். அடுத்து எல்லோர் கையிலும் டிபன் பொட்டலம் பார்சல். மிளகு மணத்துடன் வெண்பொங்கலில் அங்கங்கே ப.மிளகாய் எட்டிப்பார்க்க, ஏகத்தும் தேங்காய் துருவிப்போட்டிருந்தார் பட்.
தூத்-பத்ரி என்ற இடம் மலையுச்சியிலுள்ள சாய்வான புல்வெளி நிலப்பரப்பாகும். பசுமையான புற்கள் மற்றும் பெரிய கற்கள் மீது ஓடும் வெள்ளி பிரகாசிக்கும் ஓடைகள் அதன் அழகுக்கு மெருகூட்டுகின்றன. புல்வெளிகள் வழியாகப் பாய்ந்து வரும் அந்த நீர், தூரத்திலிருந்து பால் போன்ற வெண்மையான தோற்றத்தைக் கொண்டுள்ளதால் Dhoodh Patri (பால் பள்ளத்தாக்கு, Valley of Milk) என்ற பெயராம். ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் புட்காம் மாவட்டத்தில் உள்ள, கடல் மட்டத்திலிருந்து 9000 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம் ஸ்ரீநகரில் இருந்து 42 கிமீ தொலைவு. ஆண்டு முழுவதும் மிகவும் குளிராக இருக்குமாம்.
நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் அங்கே சவாரி செய்ய. ஒரு குதிரைக்கு ரூ.2250 சொன்ன குதிரை யூனியன் அன்பரிடம் பேரம் பேசி ரூ.ஆயிரம் வீதம் 10 குதிரைகள் எடுத்தோம். அந்த சுற்றுலாத்தளத்தை விட குதிரைச்சவாரி செய்தது அருமையான அனுபவம். சிறிய ஜமுக்காளம் போட்ட அழுக்கான சேணம், அதன் மேல் ஏற இரும்பு அங்கவடியில் இடது காலை நுழைத்து, குதிரைக்காரன் தாங்கிப்பிடிக்க, ஜம்மென்று வலது காலை தூக்கிப்போட்டு அமர்ந்தோம். கடிவாளக்கயிற்றை நம் கையில் கொடுத்து விட்டான் அந்த சிறுவன். ப்ர்ர்ரு.. என சத்தம் செய்தால் குதிரை நடக்கும். கயிற்றை பின்பக்கம் இழுத்தால் நிற்கும். மலை மேல் ஏறும்போது நாம் முன்பக்கம் சாய்ந்தும், சரிவில் இறங்கும்போது நம் உடலை விரைப்புடன் செங்குத்தாக வைத்துக்கொண்டால் குதிரைக்கு வசதியாக இருக்கும்.
பாவம்! வாயில்லா ஜீவன், எதுவும் சொல்லாமல் குதிரைக்காரன் சொன்னபடி செய்கிறது.
சேறும் சகதியும் உள்ள இடங்களில் தரையிலிருந்து மரங்களின் பெரிய வேர்கள் குறுக்காக ஓட, அதற்கிடையில் கால்களை வைத்து சர்வஜாக்கி்ரதையாக நடக்கிறது குதிரை. அடுத்து சிறு ஓடைகள், அதில் வழுவழுவென பாறாங்கற்கள், பாறைகளுக்கிடையே உள்ள சொற்ப இடத்தில் இலாவகமாக கால்களை ஊன்றி, தாவி ஓடையை குதிரை கடக்கும்போது மேலே அமர்ந்திருக்கும் நமக்கு சிரமமே தெரிவதில்லை. காரில் போகும்போது பள்ளங்களில் போவதே தெரியாத சஸ்பென்ஷன் போல இருந்தது இந்த குதிரைச்சவாரி.
புல்வெளியில் போகும்போது அவை சட்டென நின்று வரக் வரக்கென புற்களை கடித்து புசிக்கும்போது பாவமாக இருந்தது. அசைபோடா பிராணி அது, சாப்பாடு நேரே வயிற்றுக்கு தான் போகுமாம். சிறிய ஓடையில் நின்று ஆசை தீர தண்ணீர் குடிக்கின்றன. குதிரையின் அசைவுக்கேற்றவாறு நாமும் உடலை அசைந்து கொடுத்தால் இடுப்பு வலி தெரியாது. பாதை மோசமாக உள்ள இடங்களில் நாம் பின்புறங்களை சற்று தூக்கி அந்த இரும்பு அங்கவடியில் லேசாக நின்றுகொண்டால் சிரமம் தெரியாது.
குதிரைகளுக்கு வலுவான எச்சரிக்கை மற்றும் மந்தை உள்ளுணர்வு (herd mentality) உள்ளதால் மற்ற குதிரைகளுடன் ஜிகிரி தோஸ்தாக இருக்க விரும்புகின்றன. அதனால் தங்கள் கூட்டாளரிடமிருந்து பிரிக்கப்படும்போது பெரும் இழப்பை உணர்கின்றன. அவைகளை அன்பாக நடத்தினால் நம்மை அடிக்கடி நினைவு கூரும் இயல்புடையவை. ஏன், நம் குரலைக்கூட நினைவில் வைத்திருக்குமாம். மோசமாக நடத்தப்பட்டாலோ, மோசமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாலோ காண்டாகி பின்னங்கால்களை உதைத்து தம் கவலையையும் பதட்டத்தையும் வெளிப்படுத்தும் என்கிறான் பையன். அவைகளால் நமது உணர்ச்சிகளை படிக்க முடியுமாம். நம் முகபாவனைகளில் இருந்து அடையாளம் காண்பது மட்டுமல்லாமல் அந்த உணர்வுகளை ஆழமாகவும் உள்வாங்குகின்றனவாம். குதிரையுடன் பேசிக்கொண்டே இருந்தால் அதற்கு இஷ்டமாம். அந்த பையன் அவ்வப்போது செல்லமாக அதன் கழுத்தை தட்டினான். குதிரை பக்கத்தில் நாம் நிற்கும்போது அதன் கழுத்தருகே தான் நிற்க வேண்டுமாம். பின்னங்கால் பக்கம் நின்றால் உதை விழும் (குதிரையிடமிருந்து) என எச்சரித்தான். குதிரை பக்கத்தில் நிற்கும்போது நாம் திடீரென கத்துவதோ, அசைவதோ அதற்கு பீதியை உண்டாக்குமாம். மீறினால் உதை தான். அதனை அன்பாக நடத்தினால் சமத்தாக இருக்குமாம்.
தூரத்தில் பச்சைப்பசேலென மரங்களடர்ந்த பெரிய மலை. மலையின் மேலுள்ள பனி உருகி ஆறாக பெருக்கெடுத்து பாறைகளினூடே ஹோவென ஆர்ப்பரித்து ஓடும் நீரில் காலை வைத்தால் ஜில்லென ஐஸ் தண்ணீர் மாதிரி குளிர்கிறது. நம்மைச்சுற்றிலும் வெறும் காடுகளும் நீரும் தான். கரையில் தார்பாலின் கொட்டகையமைத்து உள்ளூர்க்காரர்கள் சுடச்சுட தேநீர் மற்றும் நூறு ரூபாய்க்கு மேகி நூடில்ஸ் செய்து விற்கிறார்கள். வியாபாரம் சக்கத்தாக ஓடுகிறது அங்கே.
குதிரையில் ஏறாமல் மனைவி Usharani Sridhar அங்கே பக்கி (Buggy) போன்ற Quad Bikeஇல் ஏறி அமர, ஜிவ்வென கிளப்பினான் காஷ்மீரி இளைஞன். சுமார் ஒரு மணி நேரம் நீர் நிலைகளையும் புல்வெளிகளையும் ரசித்தோம். ஆலியா பட் நடித்த Razi ஹிந்திபடப்பிடிப்பு நடந்த இடத்தை காட்டினார்கள்.
தூரத்தில் தெரியும் மலைகளுக்கு அப்பால் நமது அண்டை தேசமாம். ஆஃப்கான், பாக்கி, இரான் இளைஞர்கள் எல்லோரும் பார்க்க ஒரே மாதிரி கூரான நாசியுடன் அடர்தாடியுடன் அழகாக இருக்கிறார்கள். இருநூறுக்கும் மேற்பட்ட கான்வென்ட் பள்ளிச்சிறுமிகள் சுற்றுலாவுக்காக அங்கே வந்திருந்தனர். எங்கள் குதிரைகள் அவர்களைத்தாண்டி செல்லும்போது ‘ஹாய் அங்கிள்.. ஹாய் ஆன்ட்டி’ என அந்த குழந்தைகள் சகஜமாக எங்களுடன் பேச்சுக்கொடுக்க, நம் பெண்களும் அவர்கள் படிப்பு பற்றி விசாரித்தனர். அடுத்து, ‘You are all from India?’ என ஒரு சிறுமி கேட்க, அதிர்ந்து போனோம். ‘Of course child! and you are also from India!’ என நாங்கள் சொல்ல, அந்த சிறுமி சொன்ன பதில் ‘We are all from Kashmir!’

No comments:

Post a Comment