Friday, June 20, 2025

மறைந்த ஓவியர் மாருதி அவர்களுக்கு அஞ்சலி.

 60களில் இருந்து குமுதம் பத்திரிக்கையில் இவரது ஓவியங்களுக்கு நான் ரசிகன். ஆண்களுக்கு திக்கான மீசை,புருவங்கள், நீண்ட கிருதா வரைவார். மீசைக்குப்பின்னால் பற்கள் தெரிய சிரித்த முகங்களை வரைவார்.

பெண்கள் படம்… சொல்லவே வேண்டாம். சுருள் கேசம், பெரிய கண்கள், ஈர அதரங்கள் இவரது ஓவியங்களில் உண்டு. ஜெயராஜ் போல் கூர்நாசி இவருக்கு பிடிக்காது போலும். மூக்கு சற்று உருண்டையாக வரைவார். கலர் படங்கள் அசத்துவார்.
கோபமான மாமியார், அல்லது அறிவாளை ஓங்கும் பெண்கள் படங்களை வரையும்போது கண்களின் வெண்படலத்திற்கு நட்ட நடுவில் பெரிய கரும்புள்ளி வைத்து ஆக்ரோஷமான பெரிய கண்களை கொண்டு வருவார். ஜெயந்தன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.சமுத்திரம் போன்ற எழுத்தாளர்கள் கதைகளுக்கு இவர் படம் தான்.
ஒரு விபச்சாரி பற்றிய தொடர்கதைக்கு இவர் படம் வரைந்திருந்தார். இரு கால்களும் சூம்பிய இளம் வாலிபன் ஒருவன் நட்பு அவளுக்கு கிடைக்க, அவனும் அவளுடனே அந்த வீட்டில் இருந்தான். வீட்டுத்திண்ணையில் எப்போதும் உட்கார்ந்திருப்பான். அவளை விட குறைந்த வயதான அவன் அவளுக்கு தம்பி மாதிரி இருந்து, இவளுக்கு நிறைய அறிவுரைகள் சொல்வது, கடைக்கு போக வர என அவளுக்கு எல்லா உதவிகளும் செய்து வந்தான். அவளும் தன் தொழிலை செய்து வந்தாள்.
ஒரு நாள் சற்று மனம் பிறழ்ந்த அவன் அவளிடம் தயங்கி தயங்கி கேட்க, மனம் இளகி அவளும் அனுமதித்தாள், இந்த ஒரு முறை மட்டும் என்ற எண்ணத்தில்.
மறுநாள் மாலை வழக்கம்போல அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும்போது, திண்ணையிலிருந்து உள்ளே ஊர்ந்து வந்த அவன் சட்டென அவளது தலைமயிரை கோத்துப்பிடித்து ‘இனி இந்த தொழிலை செய்தேன்னா, காலை வெட்டிடுவேன் ஆமா. ஒழுங்கா குடும்பத்த நடத்து’ என எச்சரிக்க, அவள் பயத்துடன் திகைத்து, விக்கித்து அவனை பார்ப்பதுடன் கதை முடிகிறது.
மிகப்பிரபலமாகிய அந்த கதையின் நாயகன் ஓவியர் மாருதி அவர்கள். கதை எழுதிய எழுத்தாளருக்கும் (பெயர் நினைவில்லை) பாராட்டுக்கள் குவிந்தன. அதே சமயம் வாராவாரம் அந்த ஓவியங்களை பார்க்க மக்கள் காத்திருந்தார்கள் என்பதும் உண்மை.
ஓவியர் மாருதி அவர்களுக்கு பூர்வீகம் திருச்சி ஶ்ரீரங்கம். அவரது சகோதரர் மகன் ஶ்ரீதர் எனது பால்ய நண்பன் Ganapathi Subramanian மூலம் எனக்கு அறிமுகமானவர். நண்பர்கள் Sankara Narayanan R A மற்றும் Sridharan Srinivasan க்கும் இந்த ஶ்ரீதர் நண்பர்.

No comments:

Post a Comment