ஒடிசலான உருவத்துடன் 70 வயது வரை சுறுசுறுப்புடன் இயங்கியவர் அப்பா. அந்த வயதிலும் ஹீரோ மெஜஸ்டிக் மொபெட் ஓட்டுவார். சுந்தர் நகர் பழமுதிர்சோலையில் சப்போட்டா பழம் வாங்கிக்கொண்டு வரும் வழியில் ஒரு டீ அடித்துவிட்டு வருவார். பஸ் பிடித்து ஜங்ஷன் போவது, வங்கிக்கு போய் வைப்புநிதி புதுப்பிப்பது, சரஸ்வதி பவனில் இட்லி வாங்கி வருவது என தனியாகவே நடமாடியவர்.
இரண்டு வருடங்களுக்கொரு முறை பஹ்ரைன் வந்து விட்டால் மாலை 5 மணிவாக்கில் குதேபியா பகுதிக்கு நடந்து போய், கடைகளை ஆச்சரியமுடன் பார்த்து விட்டு வருவார். எல்லா அரபிகளையும் ஷேக் என்பார். ‘இல்ல நைனா! அரச குடும்பத்தவர்களைத்தான் ஷேக் என்பார்கள். இவர் டாக்சி டிரைவர்’ என சொல்ல, வெள்ளை வெளேரென அரபி அங்கியில் இருந்தவரை ஆச்சரியத்துடன் பார்ப்பார். பெரிய மால்களுக்கு அழைத்துப்போய் உ.கி பிரெஞ்ச்சு ஃப்ரைஸ் வாங்கிக்கொடுத்தால் ஆசையுடன் சாப்பிடுவார்.
தன் வாழ்நாளில் 90 சதம் குழந்தைகள் நலன், படிப்பு என எங்களுக்காக நிறைய செய்து, தனக்கென பெரிதாக எதுவும் செய்துகொள்ளாதவர். அப்படியும் அவருக்கு பிடித்தவை என்னென்ன என்பது எங்களுக்கும் சொல்வார். ரஜினி படங்கள், டிவிடி ப்ளேயரில் படம் பார்ப்பது, சமோசா, மசால் தோசை, டீஷர்ட்கள், தோல் பெல்ட், காலணி என தனக்கு வேண்டியதை கேட்க கூச்சப்பட்டுக்கொண்டு மிகுந்த தயக்கத்துடன் கேட்பார். உடனே நாங்கள் வாங்கிக்கொடுத்தால் வாங்கிய பொருட்களை கண்களில் ஒளி மின்ன ஆசையாக தொட்டுப்பார்த்துக்கொள்வார்.
பெல்ட்டுக்கு எக்ஸ்ட்ரா ஓட்டை போட வேண்டுமென அவர் கேட்டபோது தான் எங்களுக்கே உறைத்தது அவரது எடை குறைய ஆரம்பித்தது என. பேண்ட் சட்டை லூசா இருக்கே என்பார். ‘சரியாவே சாப்பிடறதில்லை அதான்’ என அம்மா சொல்லும்போது மௌனம் காப்பார். போனில் பேசும்போது அவர் பேசுவது சில சமயம் புரியாமல் இருந்தபோது போனில் சிக்னல் ப்ராப்ளம் என நினைத்தோம். அப்புறம் அம்மா சொன்னபோது தான் தெரிந்தது அவர் நாக்குளறி பேசுவதென. அடுத்த சில நாட்களில் நிற்க முடியாமல் திடீரென அப்படியே பின் பக்கம் விழ ஆரம்பித்தார். தலையில் ஏழெட்டு தையல்கள் உண்டு. சட்டையெல்லாம் ஈரம், வாயிலிருந்து வழியும் எச்சிலால். முகம் சுழிக்காமல் அம்மா துடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
சைக்கிளும் ஹீரோ மெஜஸ்டிக் மொபெட்டும் வாசலிலேயே காற்றிழந்த சக்கரங்களுடன் நின்றன.
விடுமுறைக்கு இந்தியா வரும்போது நரம்பியல் நிபுணர் ஒருவரிடம் அப்பாவை காண்பித்தேன். ‘அப்பா பேசறது புரியலை. நா குளறுது’ என நான் சொல்ல, அப்பாவும் குறுக்கிட்டு ‘ வாயில இருந்து எச்சிலும் கொட்டுது’ என சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘யாராவது ஒருத்தர் பேசறீங்களா?’ என்றார் டாக்டர். காது சிவந்திருந்தது. வெளியே பேஷண்டுகள் காத்திருந்தார்கள். உடனே பேப்பரில் மூன்று நான்கு மாத்திரைகள் எழுதி சாப்பிடச்சொன்னார். ‘என்ன ப்ரச்னை அவருக்கு!’ என கேட்ட என்னிடம் ‘பார்க்கின்சன் சிம்ப்டம்ஸ் இருக்கு அவருக்கு. வயசாயடுச்சுல்ல! எதுக்கு காசையும் நேரத்தையும் வேஸ்ட் பண்றீங்க’ என சொல்லியபடியே அடுத்த பேஷண்ட்டை உள்ளே அனுப்பச்சொன்னார். எல்லாம் அப்பா முன்னாலேயே. எதற்கு மாத்திரைகள் எழுதினார் தெரியவில்லை. டாக்டர் ஃபீசை கொடுத்து விட்டு வெளியே வரும்போது என்னவோ சொன்னார் அப்பா. ‘டாக்டரெல்லாம் இனி வேணாம்’ என சொல்கிறார் போல இருந்தது.
அடுத்த சில நாட்களில் கார் வைத்துக்கொண்டு அவரை வேலூர் கூட்டிச்சென்றேன். இளம் டாக்டர்கள் நாலு பேர் எங்களுடன் அமர்ந்து நாம் சொல்வதை பொறுமையுடன் கேட்டபின், ‘அவரை இங்கே அட்மிட் பண்ணுங்க. மூனு மாசம் சிகிச்சை கொடுத்து பாப்பம். ஆனா கேரண்டி இல்ல. இதையே பத்து வருடங்கள் முன் செய்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்’ என சொல்ல, கிளம்பி விடலாம் என பிடிவாதமாக எழுந்துகொண்டார் அப்பா.
ஜியார்டி நகை மாளிகை ஜிப் வைத்த பையை திறந்து சிறிய தொகைகளில் வைப்புநிதி சான்றிதழ்களை எடுத்துக்காட்டுவார். நாங்கள் அனுப்பும் பணத்தை சேர்த்து வைத்து வாங்கிய வைப்புநிதிகள். நாலைந்து லட்சம் இருக்கும். எல்லாவற்றிற்கும் நாமினியாக அம்மா பெயரை சேர்த்திருந்தார். சில வருடங்கள் முன்பு நல்ல தேக ஆரோக்யத்துடன் இருந்தபோதே சுமார் 2 லட்சத்திற்கான ஏழெட்டு வைப்புநிதிகளை உடைத்து மேஸ்திரி வைத்துக்கொண்டு மாடி போர்ஷனை கட்டியது நல்லாதாக போயிற்று என திக்கித்திக்கி அவர் சொன்ன போது அவர் மனம் நிறைவாக இருந்தது தெரிந்தது.
சைக்கிளையும் மெப்பெட்டையும் யாருக்கோ கொடுத்து விட்டார். ஒரு 25000க்கான வைப்புநிதியை எடுத்து தன் டாக்டர் மாப்பிள்ளையிடம் சொல்லி ஜேன்சனில் ஒரு ஏசி மெஷினை வாங்கி பெட்ரூமில் போட்டார். தன் மூத்த மகளின் ( என் அக்கா) புற்று நோய் சிகிச்சைக்காக ஓரிரு வைப்புநிதிகளை ஜியார்டி பையிலிருந்து வெளியேற்றினார். இதெல்லாமே தனது பார்க்கின்சன் உபத்திரங்களிக்கிடேயே. அக்கா இறந்து விட, அடுத்த சில மாதங்களில் மாப்பிள்ளையும் இறந்து விட, தனித்து விடப்பட்ட அவர்களது ஒரே பெண்ணை திருச்சியில் தங்களுடன் வைத்துக்கொண்டு பேத்தியின் படிப்பு சிலவுகளை் பார்த்துக்கொண்டார். ஜியார்டி பையும் அவரைப்போலவே சன்னமாகிக்கொண்டிருந்தது.
தினமும் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தவர் நடமாட முடியாததனால், மாதுளை, கொய்யா மரங்கள் காய்ந்து ஓய்ந்தன அப்பாவைப்போல். பாத்ரூம் கழிவு நீரை தென்னைமரம் பக்கம் திருப்பி விட்டிருந்தார் என மரத்தை பார்த்தபோது தெரிந்தது.
‘ஶ்ரீதர்! வெண்டிலேட்டரை எடுக்கப்போறாங்க. கிளம்பி வா’ என தகவல் கிடைக்க, சிறிலங்கா வழியாக திருச்சி வந்து சேர்ந்தபோது கண்ணாடி ஐஸ் பெட்டியில் படுத்திருந்தார். நெற்றியில் பெரிய திருமண். அவருக்கு பிடித்த டீஷர்ட் பேண்ட்டுடன். எக்ஸ்ட்ரா ஓட்டை போட்ட பெல்ட் கச்சிதமாக இடுப்பை சுற்றியிருந்தது.
ஐஸ் பெட்டிக்கு அந்தப்பக்கம் அலமாரியில்… ஜிப் வைத்த ஜியார்டி நகைக்கடைப் பை!
No comments:
Post a Comment