‘எங்க மாமியாரை வென்டிலேட்டர்ல வச்சிருக்காங்க’ என அக்கா Hemalatha Manoharரிடமிருந்து மெசேஜ் வர ‘நேனு இப்புடே ஒஸ்துனானு’ என தகவல் கொடுத்து விட்டு மணியை பார்த்தால் இரவு 10. ரெட்பஸ் ஆப்பில் 10.30க்கு பெங்களூர்- திருச்சி படுக்கை வசதி கொண்ட சொகுசுப்பேருந்து கிடைத்தவுடனே ஜட்டி, பனியன், டீஷர்ட், மருந்து மாத்திரை, மாஸ்க் அல்லாத்தையும் பேக்பேக்கில் திணித்து, 10.20க்கு பழைய மதராஸ் ரோடு பய்யப்பன்னஹள்ளி மெட்ரோ எதிரே டேக்கேர் சொல்லி என்னை இறக்கி விட்டனர் மனைவி Usharani Sridharஉம் சின்னவனும்.
உறக்கமில்லா வோல்வோ பேருந்து பயணம். தலைக்கு கீழே யாரோ தூக்கத்தில் ஜொள் விட்ட உறையில்லா தலகாணி குமட்டியது. தூக்கி காலுக்கு கீழே கடாசினேன். ராத்திரி பஸ் பயணம்னா இந்திரா நகர் MRP ஷாப்பில் சரக்கடிச்சுட்டுத்தான் பஸ் ஏறனும்னு சங்கல்பம் எடுத்துக்கொண்ட யாரோ ஒரு நபரால் பஸ்ஸே கப்பு. பக்கத்து பெர்த் பெரியவர் போனில் ‘நா கெளம்பிட்டன்மா! கடசி சீட்டாச்சே! தூக்கி தூக்கி போடுது. நெஞ்சை(யும்) அடைக்கிதும்மா!’ என மேடைப்பேச்சு போல அலறினார். நடுவே கண் விழிக்குப்போது சேலம் அவுட்டர். அடிவயிறு டேங்க் ஃபுல். ‘வண்டி பத்து நிமிசம் நிக்கும். பாத்ரூம் போறவங்க போயிக்கிறலாம்’ என டிரைவரின் குரல் பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்து கேட்டது. கழிவறை இருந்தும் ரோட்டோரத்திலேயே பேஞ்ச சிலர் செம்மறியாடு போல சிலிர்த்து முடித்துக்கொண்டனர்.
அக்காவின் மாமியார் மாமனார் வீடு சுப்ரமணியபுரம் சேதுராம்பிள்ளை காலனி. ஆர்ச்சுக்குள் நுழைந்தால் ஒரே தெரு தான். 40, 50 தனி வீடுகள். மாமனாருக்கு 3 சகோதரர்கள். அல்லாரும் 90ஸ் கிட்ஸ் (அதாவது 90 வயசு
) என்பதால் அவர்களது மகன், மகள், அமெரிக்காவிலிருக்கும் பேரன் பேத்தியின் வீடுகள் என பாதி காலனியே ‘ஒரேய்!’ என கர்ச்சிக்கும் மினி ரேணிகுண்டா.

‘நோயாளிக்கு என்ன ப்ராப்ளம்?’
‘சொல்ல மாட்டோம்!’
‘என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கப்போறீங்க?’
‘சொல்லவே மாட்டோம்!
‘டயாலிசிஸ் குடுத்தீங்களே என்னாச்சு?’
‘அத இப்ப சொல்ல மாட்டோம்!’
‘திரும்பவும் டயாலிசிஸ் எதுக்கு?’
‘அதப்படித்தான். சொல்ல மாட்டோம்!’
‘பெரிய டாக்டர நாங்க பாக்கனுமே?’
‘நீங்க பாக்க முடியாதே!’
‘பேஷன்ட்டோட சன்னும்(அக்கா வீட்டுக்காரர்) டாக்டர் தாங்க!’
‘இருந்துட்டு போறாரு! அதுக்கென்னப்ப!’
இப்படித்தான் இயங்கியது அந்த ஆசுபத்திரி. இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியே போகாமல், கதீட்டர் வைத்தும் சிறுநீரை வெளியே எடுக்க முடியாமல், அதனால் வயிறு பெருசா வீங்கி, சிறுநீரகங்கள் பழுதடைந்து, இதயம் பலஹீனமாகி, பேஸ்மேக்கர் பொருத்தி பலனளிக்காமல், ஏராளமாக மருந்துகளை வாங்க வைத்து, முழு தகவல் எங்களுடன் பகிரப்படாமல், 48 மணி நேரத்தில் சுமார் மூனறை லட்சத்துக்கு பில் வாங்கிக்கொண்டு அம்மாவின் இறந்த உடலுடன் கோபத்துடனும் விரக்தியுடனும் வெளியே வந்தார் என் மைத்துனர் டாக்டர் மனோகர் MBBS, MD.
முன்பே இவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். திருச்சி மெயின்கார்ட் கேட், மலைவாசலைச்சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என் எல்லோருக்கும் ஃபேமிலி டாக்டர் கிலேதர் தெருவில் சிறிய ஆசுபத்திரி நடத்தும் என் மைத்துனர் தான்.
இரவு பதினோறு மணிக்கு மேல் தாசரி, அமரர் ஊர்தி, மாலை, சந்தனம், ஜவ்வாது, நல்லெண்ணெய், சீயக்காய், வஸ்திரம் என போன் கால்கள் பறக்க, உறவினர்கள் தட்கால் புக்கிங்குடன் ‘எத்தினி மணிக்கி எடுப்பீங்க?’ என கேட்டுக்கொண்டே கிளம்ப, மறுநாள் காலை 6 மணிக்கு நான் காலனி வந்திறங்கும்போது “கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான், கனவிருள் அகன்றது, கலயம் பொழுதை, மது விருண்டோழ்கின மாமலர் எல்லாம்” எனும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சி தூரத்தில் எங்க வீட்டிலிருந்து காற்றில் மிதந்து வர, சங்கு ஊதி, திருமறைகள் ஓதும் சத்தம். திருமண்ணுடன் ஐஸ் பெட்டியில் ஆண்டாளாகிப்போன் அத்தை.
ஒருவர் இறந்ததும் அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளும் சம்பாஷணைகளும் பிரமிக்க வைப்பவை. பெரும் சரீரம் கொண்ட பூத உடல் ஜஸ்பெட்டியில் திணிக்கப்படும்போது ‘கைய ரொம்ப இறுக்கி கட்டாதீங்க!’ என உச் கொட்டும் லெக்கின் இளசுகள், அகால வேளையில் மெயின் ரோட்டில் டீ குடிக்க கிளம்பும் மாமாக்கள், பெருங்குரலுடன் ஆர்ப்பாட்டமாக அழுது அரற்றி் சட்டென காணாமல் போய் கொயட்டாக ஒரு மூலையில் செட்டிலாகி தூங்கிப்போகும் பெரியம்மா, பரணியிலிருந்து இறக்கப்படும் எவர்சில்வல் கேன் (காபி வாங்க), ‘செத்ததுலர்ந்து மூனாவது நாளுன்னா இன்னிலர்ந்து கணக்கா.. இல்ல நாளைலர்ந்தா?’ என குட்டைய குழப்பும் ஹேர்டை சித்தப்பாக்கள், ‘இட்லி, பொங்கல், வடை சொல்லீரலாமா?’ என பசியை தூண்டும் தாத்தாக்கள், ‘இவங்களுக்கு இது நல்ல சாவு, கல்யாண சாவு என புது விளக்கம் கொடுக்கும் மேல் வீட்டு டெனன்ட், காரியம் பண்ணி வைக்கிறவர் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பணம் பண்ணுவார், அவர் இன்கம்டேக்ஸெல்லம் கட்ட மாட்டார், எல்லாம் ஹாட் கேஷ்’ என கணக்கு போடும் ரிடையர்டு ஷட்டகர், எல்லா ப்ளக் பாயிண்டிலும் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் மொபைல் போன்கள், ‘முந்தி தான் எலக்ட்ரிக் க்ரிமேஷன்.. இப்பல்லாம் காஸ் தான். அடுத்த ஒரு மண்ணேரத்துல அஸ்திய குடுத்துருவான்’ என இன்ஃபர்மேஷன் கொடுக்கும் சம்மந்திகள்.
மேற்சொன்ன சம்பாஷணைகளுக்கு மத்தியில் திடீரென பிரவேசித்த அக்காவின் பெண்கள் (ஒருத்தி டாக்டர் Keerthi Shri, இன்னொருத்தி சீஏ Sadana Mano) சட்டென பழைய வேட்டி ஒன்றை கிழித்து பாட்டியின் மூக்கிலிருந்த பஞ்சை அகற்றி கொடகொடவென கொட்டிய கழிவை அடுத்த 20 நிமிடம் முகம் சுளிக்காமல் துடைத்து, அது நின்றதும் ஐஸ் பெட்டி டெப்பரேச்சரை மேலும் முடுக்கி, புதிய பஞ்சை மூக்கில் அடைத்த பின் அவ்விடத்தை விட்டகன்றதும், ‘இறந்து அடுத்த சில மண்ணேரம் ஃப்ளூயிட் ஃபார்மேஷன் நிக்காதாம்’ என யாரோ எடுத்துக்கொடுக்க, ‘அது மட்டுமில்ல நெகம் கூட அடுத்த ஆறேமு மணிக்கு கொஞ்சம் வளருமாம்’ என மற்றொருவர் கொளுத்திப்போட கலவரத்துடன் தம் கை விரல்களை பார்த்துக்கொள்ளும் சில பெருசுகளும் உண்டு. மறுபடியும் ஆய்வுகளும் விளக்கங்களும் தொடங்கும். ‘அந்தம்மாக்கு சொந்த அக்கா வராங்க பாருங்க. ஆனா இன்னம் நல்லா இருக்காங்க!’ என வாய் வைக்கும் சிலரைத்தாண்டி அவர்கள் எப்படி அழப்போகிறார்கள் என ஆவலுடன் எட்டிப்பார்க்கும் சிலரும் சேர்ந்துகொண்டனர்… என்னோடு.
நேற்று மாலை ஓயாமாரி தகன மேடையில் எல்லாம் முடித்து, ஓம் நமோ நாராயணா என தாசரி காரியம், பால் எல்லாவற்றையும் திருப்திகரமாக செய்து கொடுத்த பின், பொரிகடலையில் இட்லி, வடை, சுய்யம், மைசூர் பாக், லட்டு என சகலத்தையும் சேர்த்து பிசைந்து தயாராக காத்திருக்கும் மாட்டிற்கு வைத்தபின் காவிரி குளியல், நாகநாதரில் டீ என வீடு வந்து சேர்ந்த பின் மறுபடியும் IRCTC மற்றும் ரெட்பஸ் ஆப்பில் மறுநாள் பயணத்திற்கு முன்பதிவு செய்து, ‘பத்தாம் நாளும் பண்ணலாம்.. ஏழு, ஒன்பதும் கணக்கு… இப்ப எல்லாம் நம்ப வசதிக்கு தானே!’ என மறுபடியும் ஆய்வுகள் துவங்கும் முன் இன்று காலை மத்திய பேருந்து நிலையம் வசந்த பவனில் லஞ்ச்சுக்கு தக்காளி சாதம், தயிர்சாதம், போளி பார்சலுடன் பெங்களூர் வோல்வோ பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன் இப்பதிவை ஐஃபோனில் கடகடவென தட்டச்சு செய்துகொண்டே சேலம் தாண்டியாச்சு!
ஓம் ஷாந்தி!
No comments:
Post a Comment