பெங்களூரில் மழை ஆரம்பித்துவிட்டது. பொதுவாக மதிய உணவுக்குப்பின் மனைவி Usharani Sridhar நெட்ஃப்ளிக்ஸ், அமசான் ப்ரைம், ஜீ-5 என சினிமாப்படங்கள் பார்க்க ஆரம்பிக்க, நானும் கூடவே உட்காருவேன். ஆனால் டைட்டில் முடிந்து சில நிமிடங்களில் லேசாக கண் சுழட்டி அப்படியே செட்டிலாயிடுவேன். நடுவே கண் விழிக்கும்போது ‘இவன் யாரு?.. அவளை யாரு கல்யாணம் பண்ணிக்கிறாங்க?’ போன்ற கேள்விகளை தூக்கத்தின் நடுவே கேட்டு அவரை வெறுப்பேற்றுவேன்.
மணி நாலு.. வெளியே மழைன்னா என்ன சாப்பிடத்தோனும்! கரெக்ட் பஜ்ஜி போண்டாவே தான். பஹ்ரைன் நண்பர்கள் ஶ்ரீனி-கவிதா (Srinivasan Rathinam & Kavitha Srinivasan ) தம்பதி விடுமுறைக்கு பெங்களூரில் தான் தொம்லூரில் தங்கியிருக்கிறார்கள். ‘டேய்! நீ செந்தூர் காபி போனதில்லை தானே! இப்ப கெளம்பி வறோம்.. ரெடியா இரு!’ என போனில் சொல்லிவிட்டு கிளம்பினோம்.
பானஸ்வாடி மெயின் ரோடு பாதி பாலத்தில் இடதுபுறம் சரிவாக இறங்கி SMVT ஸ்டேஷன் வழியாக விவேகானந்தா ரோடு தாண்டி இந்திரா நகர் வந்து, ஓரிரண்டு க்ராஸ்களை கடந்து தொம்லூரில் ஶ்ரீனி-கவிதாவை பிக்கப் செய்துகொண்டோம்.
பெங்களூரின் எல்லா பகுதிகளிலும் செந்தூர் காபி இயங்குகிறது. திருச்சி நாகநாதர் டீ ஸ்டால் போல தரமான உணவகம். அவர்கள் போடும் பொடி வெங்காய ஊத்தப்பம் ஒராள் சாப்பிட முடியாது. ஆய்ந்த வெங்காயத்தை கை நிறைய அள்ளி ஊற்றிய மாவின் மேல் தாராளமாக பரத்தி, பொடியை அள்ளித்தூவுவான். கூடவே சொழட்டி சொழட்டி தோசைக்கரண்டியால் எண்ணெய் விடுவான். தோசையை திருப்பிப்போடாமலேயே கீழ்ப்பக்கம் ரோஸ்டாகிறதா என மேல் பக்கம் பார்த்தே தெரிந்துகொள்வான். இந்திரா நகர் திப்ப சந்த்ரா குடியிருப்பு பகுதியில் ப்ளாட் ஒவ்வொன்றும் எட்டாயிரம் பத்தாயிரம் சதுரடியில் ஹெக்டேக்கள் மற்றும் கௌடாக்களின் வீடுகள். அந்த வீடுகளின் மத்தியில் அந்த ஹோட்டல் முன் மாலை 3இலிருந்து இரவு 10 வரை டீ, காபி, பஜ்ஜி, மசால்வடைக்காக கூட்டம் அம்மும். இளம் பெண்களெல்லாம் தற்போது தைரியமாக தனியே வந்து ஸ்டைலாக இடது கையில் டீ களாஸ், வலது கையில் தம் என… கலிகாலம்!
அவ்வளவு பெரிய பாய்லரில் இருந்து கொதிக்கும் வெந்நீரை கிளாஸ்களில் ஊற்றிக்கழுவி, 10 கிளாஸ்களை வரிசையாக நிற்க வைத்து, டீ டிகாக்ஷனை சர்ரென விடுகிறான் பையன். ‘சுகர் கம்மியா.. லைட்டா.. எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்’ என எல்லாவித தேவைகளையும் மனதில் வைத்து டீ, காபியை தயார் செய்கிறான். செம்ம டேஸ்ட்.
நல்ல மழை வேறயா! சுட சுட வாழக்கா & மிளகா பஜ்ஜி, தால் வடாவுக்காக மக்கள் கூட்டமாக காத்திருக்க, இரண்டு வித சட்னிகளுடன் பஜ்ஜி, டீ, காபி ஆயிற்று.
திப்பசந்த்ரா மார்க்கெட் வந்தோம். நம்மூர் ரங்கநாதன் தெரு போல நிறைய பூஜை சாமான் கடைகள். ரோட்டில் பழங்கள், சுடிதார் கடைகள், மெடிகல் ஷாப், மிக்சி ரிப்பேர், எலெக்ட்ரிகல், குக்கர், பாத்திரங்கள், நடுவே பல் டாக்டர்கள், சலூன் என சகலமும் இங்கே வாங்கலாம்.
குறுகலான சாலை வேறு.. கார்கள் நிறுத்த முடியாது. மனைவியரை கடை முன் இறக்கி விட்டு கணவர்கள் கார் இஞ்சின் ஆனிலேயே வைத்துக்கொண்டு போனை நோண்டிக்கொண்டிருக்க, ‘சார்! ஹோகி ஹோகி!’ என பெண் போலிஸ்காரர்கள் வந்தால் பயப்பட வேண்டியதில்லை. வண்டியை லேசாக முன்னால் நகர்த்தி மறுபடியும் ஓரங்கட்டினால் அடுத்த 20 நிமிடம் போலிஸ்கார பெண்மணி வர மாட்டார்.
அப்படியே நேராக பெமல் (BEML) கேட் சிக்னல் வந்தோம். இந்தியன் ரயில்வேக்காக ரயில் பெட்டிகள் தயாரிக்கிறார்கள் அங்கே. மெட்ரோ ரயில் பெட்டிகளும் தயாராகின்றனவாம் அங்கே. மல்லேஷ்பாள்யா விக்யான் நகர் பக்கம் வந்து புடவை சமிக்கி கடைப்பக்கம் வந்தோம். எதிரே ரோட்டி சத்கர் என புதிய உணவகம் துவங்கியுள்ளார்கள். உருண்டையான குட்டி கத்திரிக்காய் போட்ட வடநாட்டுக்கறி, சும்மா தேங்கா அறைத்துவிட்டு கமகமவென குருமா மணம். அதனுடன் ஆனியன் பராட்டாவாம். என்னா ருசி!
சரியான மழை பிடித்துக்கொள்ள, அப்படியே காகதாஸ்புரா ரோட்டில் சி.வி ராமன் நகர் வந்து சேர்ந்தோம். ஶ்ரீனி-கவிதா ஒலா பிடித்து கமர்ஷியல் ஸ்ட்ரீட் கிளம்ப நாங்கள் மழையுடனே காரை செலுத்தி ஓல்டு மெட்ராஸ் ரோடு, கஸ்தூரி நகர், ராம்மூர்த்தி நகர் எல்லாம் கடந்து வீடு வந்து சேர்ந்தோம்.
இனி மால்குடி, கோத்தாஸ், ஹட்டி, சிக்மகளூர் ஃபில்டர் காபியுடன் மே, ஜூன், ஜூலை முழுக்க தினமும் விட்டு விட்டு சொம்பேறித்தனமான மழை உண்டு.
No comments:
Post a Comment