HBD டாக்டர் ரமேஷ் !
திருச்சி புத்தூர் அருணா தியேட்டர் எதிரே… வேணாம்! அப்பிடியே டைவர்ட் ஆகி நாம்பாட்டுக்கு அருணா தியேட்டர்ல ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படம் பார்த்து அப்பிடியே தூங்கிப்போனது, புத்தூர் அக்ரஹாரம் ஃப்ரண்டு ஶ்ரீனிவாசன் ஆல் இண்டியா ரேடியோ காண்டீன்ல சூடா பக்கோடா வாங்கித்தந்த கதைன்னு எதையாவது எழுத ஆரம்பிச்சா திருச்சி கதைக்கரு கூரையிலிருந்து பல்லி மாதிரி ச்சொத்துன்னு வந்து விழும். அந்த மாதிரியான ஊரு அது.
பதிவு முழுக்க இந்த திருச்சி டாக்டரைப்பற்றி மட்டும் தான்.
நாம் சாலையில் பயணம் செய்யும்போது திடீரென ஊய் ஊய் என பறக்கும் ஆம்புலன்சை பார்த்து ‘பாவம் யாருக்கோ ஹார்ட் அட்டாக் அல்லது அடிகிடி பட்ருச்சோ என்னவோ!’ என பரிதாபப்பட்டபடியே கடந்து செல்வோம். விபத்தில் தலையில் அடிபட்டு, பெரும் இரத்த சேதத்துடன் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்படும் சிலருக்கு அவசர சிகிச்சையோ தலையில் கபாளம் உடைந்து மூளை அறுவை சிகிச்சை அல்லது நரம்பு சம்மந்தப்பட்ட நியூரோ அறுவை சிகிச்சை என உயிருக்கு உத்தரவாதம் உண்டா இல்லையா என ஐயப்படும் பெரும் சர்ஜரிகளை வெற்றிகரமாக செய்யும் மருத்துவர்களில் ஒருவர் இந்த டாக்டர். ரமேஷ்.
என் நெடுநாளைய நண்பர். திருச்சிக்காரர். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் MBBS, பிறகு மதுரை மருத்துவக்கல்லூரியில் நியூரோ சர்ஜரியில் MCh படித்தவர். 1996இல் சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்கான தங்க விருதை டாக்டர் MGR மருத்துவ பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றவர்.
தற்போது நாற்பத்து ஆறே (46) வயதான இவர் கடந்த 20, 22 வருட அனுபவத்துடன் இதுவரை செய்த சர்ஜரிகளின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியது (இந்த எண்ணிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்பு) என்றால் யோசித்துப்பாருங்கள், சராசரியாக ஒவ்வொரு மாற்று நாளிலும் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) ஒரு சர்ஜரி செய்கிறார் 20 வருடங்களுக்கு மேலாக எனக்கொள்ளலாம். மை காட்! எத்தனை உயிர்களை காப்பாற்றியிருப்பார் இவர்! தலைக்காயம், முதுகு தண்டுவடம் பழுது, ப்ரெயின் ட்யூமர் எனப்படும் மூளையில் கட்டி, அவசர நரம்பியல் சம்மந்தப்பட்ட நோய், ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் என எல்லா நோய்களுக்கும் இவர் தனது சொந்த ஆசுபத்திரியில் ஆற்றும் சேவைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
நியூரோ கண் மருத்துவம் எனப்படும் கண் தொடர்பான நரம்பியல் சிகிச்சைக்கான வகுப்புகளையும் இவர் கடந்த 25 வருடங்களாக எடுக்கிறார் என்றால், கையில் இருக்கும் கத்தியை கீழே வைக்கும் நேரத்தில் எல்லாம் நரம்பியல் மருத்துவம் சார்ந்த மற்ற பணிகளையும் செய்கிறார் என அர்த்தம். தனது ஆசுபத்திரியில் ஆபரேடிங் மைக்ரோஸ்கோப், நியூரோ என்டோஸ்கோப், அதிவேக ட்ரில்லர் (ஐயோ!), இன்ட்ரா ஆபரேடிவ் டாப்ளர், வெண்டிலேட்டர், நியூரோ மானிட்டர் போன்ற நவீன உபகரணங்கள் வைத்துள்ளார்.
2020இல் கொரோனா பற்றிய இவரது கட்டுரை பலரின் கவனத்தைக்கவர்ந்தது.
சில வருடங்கள் முன்பு, திருச்சி போலீஸ் கமிஷனருடன் இணைந்து தலைக்கவசம் (Helmet) பற்றிய விழிப்புணர்வு உரையை இவர் ஆற்றி, இலவச ஹெல்மெட் விநியோகம் நடத்தியது பாராட்டுக்குறியது.
இவரைப்பற்றிய இன்னொரு தகவல். சிறந்த எழுத்தாளர். மருத்துவம் சார்ந்தது மட்டுமன்றி பிற பொருள்களிலும் சிறுகதைகள்/கட்டுரைகள் மனதைத்தொடும்படி அற்புதமாக எழுதக்கூடியவர். அதிலும் நகைச்சுவை இழையோடும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
சென்ற வருடம் ஒருநாள் உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் இவரது ஆஸ்பத்திரி சென்றிருந்தேன். பூசி மெழுகிய தரை என சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. நோயாளிகள் காத்திருக்கும் பகுதியிலிருந்து இவருக்கு தகவல் அனுப்ப, உடனே தன் சேம்பரிலிருந்து என்னை வரவேற்க வெளியே வந்து விட்டார். ‘இவரா! இவ்வளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர்!’ என நீங்கள் வியக்கும் அளவிற்கு அமைதியும் பாந்தத்துடன் பேசிக்கொண்டிருப்பார். நாலயிரத்திற்கும் மேலான அறுவை சிகிச்சைகள் செய்த இவர் கைகளோ இவரது மனம் போல மென்மை.
‘வெளியே பேஷன்ட்ஸ் வெய்ட் பண்ணிட்ருப்பாங்க, உங்க நேரத்தை திருடிக்கிட்ருக்கோம், நாங்க கிளம்பறோம்’ என்ற என்னிடம் ‘இருங்க சார் போலாம்!’ என கொஞ்ச நேரம் பேசி விட்டு, நோயாளிகளை காத்திருக்க விடாமல், கீழே கார் நிறுத்துமிடம் வரை வந்து விடை பெற்றுக்கொண்டார் டாக்டர் ரமேஷ். கீழே இவரது MaRaVi ஹாஸ்பிடல் பெயர்ப்பலகை முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டோம். Ma (மனைவி) Ra (ரமேஷ்) மற்றும் Vi ( மகள் ) மூன்று பெயர்களின் காம்போ இந்த Maravi.
இன்று காலை இவரது பிறந்தநாளுக்கு தொலைபேசியில் வாழ்த்தலாம் என அழைத்தால் ‘டாக்டர் ஆபரேஷன் செஞ்சிட்ருக்கார்’ என உதவியாளரின் பதில். பிறந்தநாள் கொண்டாட்டம் கூட புறந்தள்ளப்பட்டு யாரோ ஒருவரின் உயிர் காப்பாற்றப்படுகிறது என்பது உண்மை!
No comments:
Post a Comment