Sunday, June 22, 2025

மன்னார்புரமும் மாவு மில்லும்..


திருச்சி சகோதரியின் பேத்தியின் முடிகாணிக்கை & காதணி விழா.
அம்மா, அப்பா மறைந்த பிறகு நாங்கள் நால்வரும் வருடம் ஓரிருமுறை சந்திப்பது மனதிற்கு நிறைவு. முதல்நாள் காலை பத்து மணிக்கு சாலை மார்க்கமாக பெங்களூரிலிருந்து கிளம்பி, மாலை ஶ்ரீரங்கம் தாண்டும்போது ‘பைபாஸ் ரோட்ல மாட்டிக்காதே ஶ்ரீதர்! ஒரே ட்ராஃபிக்காமே’ என சகோதரி போனில் எச்சரித்தாள். திருமாவின் விசிக மாநாட்டுக்கு வந்த வாகனங்களினால் திருச்சி நகரமே ஸ்தம்பித்து விட்டது. பார்கெய்ன் பவர் காண்பிக்கத்தான் இந்த மாநாடு போன்ற அரசியல் ஹேஷ்யங்கள் மனக்கு எந்துக்கு! ஏற்கனவே கொலைப்பசி! பைபாஸ் ரோட்டிலிருத்து எங்கள் இல்லம் பத்தே நிமிடம் தான், ஆனால் இரண்டு மணி நேரம் ஆனது.
கேட்டரிங் ஆர்டர் செய்து வீட்டில் சப்பாத்தி. தொட்டுக்க இருந்த குருமா, திருமாவினால் ஆறியிருக்க, அதை சுட வைத்து அக்கா சுடச்சுட தோசையும் வார்த்துப் போட்டாள், அதுவும் உறவினர்கள் சுமார் இருபது பேருக்கு. நிறைய பேர் எங்கள் வீட்டில் தங்கியதால், மாமாக்கள் எங்கள் மூவருக்கும் மன்னார்புரம் நால்ரோடு அருகே ஹோட்டலில் தங்க அறை ஒதுக்கியிருந்தாள் அக்காவின் பெண்.
இந்த பதிவே மன்னார்புரம் பற்றி எழுதத்தான். 80களில் சிஏ ஆர்டிகிள்ஸ் படித்துக்கொண்டிருந்த நேரம். நகரில் புது படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு மாதம் கழித்து மன்னார்புரம் வெங்கடேஸ்வரா டாக்கீஸ் வந்துவிடும், பாதி டிக்கெட் விலையில். சுத்துப்பட்டு வீடுகளிலிருந்து கலர் கலராக கல்லூரிப்பெண்கள் படம் பார்க்க வருவது அங்கே சிறப்பு. பலே பாண்டியா, சாது மிரண்டால் போன்ற பழைய படங்கள் நிறைய வரும். ஞாயிரன்று எப்போதும் ஹவுஸ்ஃபுல் தான், அது வெள்ளிக்கிழமை விரதமாக இருந்தால் கூட .
அமைதியான பகுதி மன்னார்புரம். துப்பாக்கித் தொழிற்சாலை, BHEL, வங்கிகள், அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் என நடுத்தர வர்க்க குடும்பங்கள் அங்கே நாலைந்து தெருக்களில் குடியிருந்தார்கள். EMI வந்திராத காலம். ஐஓபி வங்கி, பார்வையிழந்தோர் பள்ளி இரண்டும் அங்கே. அருகே பேர்ட்ஸ் லாட்ஜில் தங்கி சீஏ படிக்கும் வெளியூர் நண்பர்களை சந்திக்க அடிக்கடி வருவேன். லாட்ஜை ஒட்டிய தெருவில் எப்பவும் கிர்ர் என்ற சத்தத்துடன் மாவு மில். கமகமவென அரிசி, கோதுமை கலந்த மிளகாப்பொடி மணம் காற்றில் மிதந்து வந்து மூக்கைத்துளைக்கும். மாவுமில்லுக்கு அடுத்த வீட்டில் பாவாடை சட்டை போட்ட இரண்டு கல்லூரிப் பெண்களால் அந்தத் தெரு இளைஞர்களுக்கு தூக்கம் கெட்டது. நாலு தெரு தள்ளி குடியிருக்கும் எங்களுக்கே என்றால் அவன்களுக்கு இல்லாமலா! சைக்கிளில் மாவு மில்லை சுற்றி சுற்றி வருவான்கள் சைட்டடிக்க. அந்த பெண்கள் இரண்டும் மாலை வேளை வாசலில் நின்றால் காவலுக்கு அப்பாவும் ஓடி வந்து நின்றுகொண்டு கரைச்சல் பண்ணுவார். மாவு மில் மிஷினில் தொங்கும் துணி மாதிரியே அவரது அழுக்கு வேட்டியும்.
மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனியில் எங்கள் வீட்டிலிருந்து நால்ரோடு வரை நேரடி சாலை இருந்தும், நாங்கள் காலனி பின்புறம் மேஜர் புரொஃபஸர் அரவாண்டி வீடு தாண்டி அந்த பாவாடை சட்டை வீட்டு வழியாக போவாம். அவர்களில் ஒருத்தி சிஏ படிக்கும் என் நண்பன் ஒருவனிடம் அக்கவுண்ட்ஸ் டியூஷன் சேர்ந்ததும், அவனுக்கு நண்பர்கள் மத்தியில் பெரும் மதிப்பு மற்றும் பொறாமை. ‘டியூஷன் எல்லாம் எப்பிடி போறதுடா?’ என கண்ணடித்தபடி கேட்டால் வெள்ளந்தியாக ‘நல்லா போயிட்ருக்கு புள்ள.. சிலபஸ் முடிக்கப்போறேன் ’ என்பான். நாம் எதிர்பாத்த பதிலை புரியாத மாதிரி காட்டிக்கொள்வான் களவாணிப்பய. அப்புறம் அவனும் ஒருதலையாக அவளை காதலிக்கிறான் என்பது அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்து வந்த அவனது சீஏ ரிசல்ட்டில் ஊர்ஜிதமானது. அவனும் ‘சிஏ முடிச்சுட்டுத்தான் என் காதலை அவளுக்கு தெரிவிக்கப்போறேன்’ என்றபோது, இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைத்தான் அப்போதே நாங்களும் நினைத்து சிரித்தோம்.
திடீரென ‘அண்ணா! எனக்கு கல்யாணம். அவருக்கு நாக்பூர்’ என அவள் பத்திரிக்கை வைக்க, அதிர்ச்சியடைந்த அவன் தாடி வளர்த்து எங்கள் வயிற்றில் பாலை வார்த்தான். கல்யாண அதிர்ச்சியை விட அந்த ‘அண்ணா’ அவனை மிகவும் பாதித்திருந்தது. ‘ஆரம்பத்துலயே மேட்டர சொல்லி துண்டு போட்டு வைக்கத்தெரியாதா இவனுக்கு!’ என எள்ளி நகையாடிய எங்களுக்கு ஏதோ இதில் பெரிய அனுபவம் போல! காதல் வராமலேயே அட்டெம்ட்டுகளுடன் ஒருவழியாக சிஏ முடித்து நாங்கள் வளைகுடா பக்கம் போய் விட்டதால் அப்புறம் அவனுடன் தொடர்பும் இல்லாமல் போனது.
நேற்று பல வருடங்கள் கழித்து அந்தப்பகுதி முழுக்க சுற்றினோம் சகோதரர்கள் நாங்கள் மூவரும், பழைய கதைகள், நினைவுகள், சம்பவங்கள் என அசைபோட்டபடி, ஹா..ஹா என்ற சிரிப்புடன். காலனி சங்கத்தின் தலைவரோ செக்ரட்டரியோ அடிக்கடி அங்கே நடக்கும் திருட்டைத்தடுக்க இரவு ரோந்து சென்றபோது உருட்டிக்கட்டைகளுடன் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அவரது முதுகை பழுக்க வைத்த கதையை சிலாகித்து சிரித்துக்கொண்டிருந்தோம்.
இப்போது எல்லாமே மாறியிருந்தது. சர்க்யூட் ஹவுஸை இடித்து விட்டு புதிய காலனி கட்டிக்கொண்டிருந்தார்கள். பார்வையிழந்தோர் பள்ளி மற்றும் ஐஓபி வங்கி அதே இடங்களில் இன்னும். நிறைய கடைகள் அகற்றப்பட்டு ஒரு டீக்கடை மட்டும். வெங்கடேஸ்வரா தியேட்டரை இடித்து விட்டார்களாம். மேஜர் அரவாண்டிக்கு அப்பவே அறுபது வயதென்றால்… கிர்ர் மாவு மில்லை காணோம். பாவாடை சட்டைப்பெண்கள் வீடு இடிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட், ஜெராக்ஸ் என வரிசையாக கடைகள். தாடி வளர்த்த அந்த சீஏ நண்பன் பற்றிய தகவல் ஏதுமில்லை. காதல் தோல்விக்குப்பின் வெறித்தனமாக படித்து நிச்சயம் பாஸ் செய்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment