Sunday, June 22, 2025

புத்தூர் அருணா டாக்கீஸும் உறையூர் நாச்சியார் கோவிலும்.


ரொம்ப வருஷங்கள் கழித்து திருச்சியில் உடன் பிறந்த அக்கா, அண்ணா, தம்பி குடும்பங்களுடன் நிறைய பொழுதை கழித்தேன். சென்ற வாரம் உறையூர் நாச்சியார் கோவிலுக்கு மனைவி உஷா (Usharani Sridhar), மஸ்கட்டிலிருந்து வந்திருந்த என் தம்பி Vijay Raghavan மற்றும் அவனது மனைவி எல்லோரும் சென்றோம். புத்தூர் சர்ச் தாண்டும்போது நினைவுகள் பின்னோக்கி அங்கே மைதானத்தில் முன்பு நடக்கும் குளுமாயி அம்மன் திருவிழா நினைவுக்கு வந்தது. புத்தூர் அக்ரஹாரத்தையடுத்து வலது பக்கம் அருணா தியேட்டர். சகோதரர்கள் இருவரும் உற்சாகமானோம். ஒருகாலத்தில் அடிக்கடி உலாத்திய இடங்களாயிற்றே!
‘ஶ்ரீதர்! ஞாபகம் இருக்கா? இங்க தானே விக்டோரியா நம்பர் 203 ஹிந்திப்படம் பாத்தோம்?’
‘ஆமாண்டா. சாயிரா பானு ஆம்பிள வேசத்துல வருவா. வெறும் பென்சில் மீசை, பாப் கட்டோட அவள ஆம்பளயாக்கி இருப்பானுங்க. அது சாயிரா பானு தான்னு எட்டாங்கிளாஸ் படிக்கிற நமக்கே தெரியறப்ப, ஹீரோ நவீன் நிஷலுக்கு தெரியாதாம்’
‘ஆக்ரி கோலின்னு சுனில் தத், அம்ஜத்கான் படமும் அங்க தானே பாத்தோம்!’
‘ஆமா… டப், டப்னு சுட்டுக்கிட்டே குதிரைல டாக்குவா வருவானுங்க. அடிக்கடி ஹராம்சாதேஏஏஏன்னு கத்துவானுங்க’
‘வெள்ளைப்புடவைல நிரூபா ராய் வருவா. எல்லா படத்துலயும் மாறி மாறி பிரானும் அஜீத்தும் அவளை கெடுத்துருவானுங்க. இந்த படத்துல மட்டும் விட்டு வெச்சாங்க’
‘லீனா சந்திரவர்க்கர் அரையுங்குறையுமா அழகா இருப்பா. ஸ்டெப் கட்டிங்ல சுனில் தத். அப்பவே கிழட்டு மூஞ்சி. இந்தப்படத்தையா அப்பிடி மாஞ்சி மாஞ்சி பாத்தோம்!’
தம்பியுடன் அந்தக்கால சம்பவங்களை அசைபோடுவதில் தனி சுகம். உறையூர் வந்து விட்டோம்.
சில வருடங்கள் முன்பு முகநூலில் ‘புத்தூர் அக்ரஹாரம்’ எனும் பதிவு எழுதியிருந்தேன். என் தம்பியின் க்ளாஸ்மேட் ஶ்ரீனிவாசனைப் பற்றிய வியாசம் அது. ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஶ்ரீனிவாசன் உறையூர் நாச்சியார் கோவிலில் அன்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருப்பான் என்பதால் கண்கள் அவனைத்தேடியது. ஓரளவு கூட்டம். தூரத்தில் உட்பிரகாரத்தில் மூலவருக்கு முன்னால் அமர்ந்து பிரபந்தம் சொல்லிக்கொண்டிருந்த ஏழெட்டு பேர்கள் எல்லோருமே ஶ்ரீனிவாசனைப்போல தெரிந்தார்கள். உத்தேசமாக என் தம்பி அத்திசை நோக்கி கையை வீச, சட்டென நம் ஶ்ரீனிவாசன் கையசைத்தபடி எழுந்து கூட்டத்தை சுற்றிக்கொண்டு வந்து எங்கள் முன் பிரசன்னமானான்.
‘நா இங்க இருக்கறது எப்பிட்றா தெரியும்?’-ஶ்ரீனிவாசன் முகத்தில் சந்தோஷம். இவனது சகோதரர் ஶ்ரீரங்கம் கோவிலில் முழு நேர அர்ச்சகர். இந்த வாரம் முழுக்க ஆபிஸ் முடிந்து இரவு 9 மணி வரை இந்த கோவிலில் தான் ஶ்ரீனி இருப்பானாம். என்னவொரு கொடுப்பினை! பகல் முழுக்க கவர்மென்ட் உத்தியோகம், மாலை இறைப்பணி. கெசட்டட் ஆபிசர் ஆகி விட்டானாம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஜூன் மாதத்துடன் ரிடையர் ஆகிறானாம். மூத்தவன் அமெரிக்காவில் இருக்கிறானாம். அவனும் நெற்றி நிறைய திருமண், வார இறுதிகளில் சத்சங்கம், பாராயணம் என அப்பா வழியில். லீவுக்கு தான் போகாமல், மனைவியையும் அம்மாவையும் மட்டும் அமெரிக்காவிற்கு அனுப்பினானாம். யாகங்கள் செய்து, மறைகள் கற்பிப்பவர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஶ்ரீனி.
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் என்பதை விட நாச்சியார் கோவில் தான் எங்களுக்கு பரிச்சயமான பெயர். கோவில் மற்றும் கமல புஷ்கரணியை ஶ்ரீனி சுற்றிக்காண்பித்தான். மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ஆனால் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் இல்லை. பிறந்த தலமாயிற்றே! அவளே பிரதானம் இங்கே. அம்பாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியமான தோசையில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. பழமை வாய்ந்த கோவிலாக இருந்தும் சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment