மாமனார் ஊர் என்பதற்காக சொல்லவில்லை, காரைக்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர். அங்கு மக்களின் அன்பான, பனிவான பேச்சு, வாழ்க்கை முறை எல்லாமே வித்தியாசமானது. ‘நல்லா இருக்கீயலாக்கா! என பரிவாக விஜாரிப்பார்கள். சென்ற வாரம் ஐந்து நாட்கள் காரைக்குடியில் டேரா போட்டு பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, அரியக்குடி (திருவேங்கடமுடையான்), நரசிம்மர், கொப்புடையம்மன், மீனாட்சியம்மன், முத்துமாரியம்மன் என எல்லா கோயில்களும் போய் வந்தோம்.
இது கொஞ்சம் சோம்பேறித்தனமான ஊர் எனலாம். ‘பாங்க்ல செக்புக் ரெடியாயிடுச்சு மாமா. நீங்க போய் நாளைக்கி வாங்கிடறீங்களா?’ என மாமனாருக்கு ஒரு வெள்ளியன்று பஹ்ரைனிலிருந்து ஃபோன் செய்தால் ‘சரி.. மாப்ள! திங்கக்கெழமை போய் வாங்கியாறேன்’ என்பார். ஏராளமான கோயில்கள். எல்லா விஷயங்களுக்கும் நல்ல நேரம், நாள் கிழமை பார்ப்பார்கள், அது டாக்டரை பார்ப்பதற்காக இருந்தாலும்.
செட்டியார் வீடுகள் பிரம்மாண்டமான இருக்கும். பெரிய வீடுகளில், திருமணமே நடத்தலாம். என் மாமனார் வீட்டு வாசல்படிக்கு 15 படிகள். அவ்வளவு உயரத்தில் வீடு கட்டுவார்கள். தற்போதெல்லாம் அதுபோன்ற நிறைய வீடுகள் பராமரிக்கப்படாமல் பாழாகி கிடக்கின்றன. சிலர் பில்டர்களுடன் ஜேவி போட்டு அபார்ட்மென்ட் கட்டி விடுகிறார்கள். சிலர் அத்தகைய பழைய வீடுகளில் நாலைந்து பெண்களை பணியிலமர்த்தி அதிரசம், தேங்குழல், மணவோலம், இனிப்புச்சீடை என பலகாரங்கள் செய்து கடைகளை விட அன்ரீசனபிள் விலைக்கு விற்றாலும் அந்த பாரம்பரிய சுவை குறைவதில்லை. வாங்கி சுவைக்கும் நுகர்வோரில் நானும் ஒருவன்.
எந்த வியாபாரம் என்றாலும் பணம் எக்கச்சக்கமாக புழங்குகிறது அங்கே. மாலை நாலு மணிக்கு மேல் ஊரே வடை பஜ்ஜி சாப்பிடுகிறது. அவ்வளவு பஜ்ஜி கடைகள். செக்காலை பேக்கரி, பேக்கரி டிசோட்டா என தெருவிற்கு இரண்டு பேக்கரிகள். கமகமவென விஜிடபிள் பஃப்ஸும் கேக்குகளும் மக்களால் மொஸ்க்கித்தள்ளப்படுகின்றன.
எல்லா ஓட்டல்களிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டம். தலகானி சைஸில் சோழா பூரி (ச்சோலே பட்டூராவிற்கு நம்மூர் நாமகரணம்), ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், ஜிகர்தண்டா என எங்கும் போஜனத்திருவிழா தான்.
‘வாசக்கதவு சைனா பூட்டு, அழுத்தி லாக் ஆயிடுச்சு, ஆனா சாவி வீட்டுக்குள்ள இருக்கு’ என மாமியார் சொல்ல, மனைவி Usharani Sridhar என்னை கல்லுக்கட்டி பகுதி சாவிக்கடை ஒன்றிற்கு இழுத்துக்கொண்டு போனார். மாப்ள எங்க கூப்டாலும் வருவாப்ல! ‘பூட்டை தொறக்க 850 ரூவா. கூடவே டூப்ளிகேட் சாவி செய்ய 350 ரூவா. வர்ரதுக்கு ஒரு மண்ணேரம் ஆகும். இதே மாதிரி மூனு வீட்ல பூட்டு லாக்காயிடுச்சி. முடிச்சிட்டு வாரேன்’ என்ற கடைக்காரர் பல்சரை உதைத்து பறந்து போனார். கடைக்குள் அவரது பையனோ மச்சானோ! அங்கேயும் புதிய பூட்டுக்கள் வியாபாரம். கோத்ரேஜ், திண்டுக்கல் பூட்டை யாரும் வாங்கறதில்லையாம். விலையும் அதிகம். அது சாவியிருந்தா தான் பூட்டுமாம். சைனாக்காரன் பூட்டு விலைக்கொறவு. அதான் பல்சர் பறக்கிறது.
காரைக்குடியில் பிரெசிடென்ட் ஹோட்டல் ரொம்ப பிரசித்தம். திறந்தவெளி சைவ உணவகம். மாலை வேளை மகிழம்பு புட்டு, வெள்ளையப்பம், கந்தரப்பம், கொழுக்கட்டை என செட்டிநாட்டு பலகாரங்கள் கிடைக்கும். இரவு கூட்டம் அம்மும். காளான் தோசை, காளான் ஃப்ரை, காயின் பரோட்டா, பரோட்டா குருமா, தோசை வகைகள் என மக்கள் சுழட்டி உள்ளே தள்ளுவார்கள். பக்கத்தில் கானாடுகாத்தான், கோட்டையூர் பகுதிகளில் பழைய செட்டிநாட்டு வீடுகளை ஹோட்டல்களாக மாற்றி சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தவன்னம் இருக்க, அங்கே சாப்பிட முன்பதிவு செய்ய வேண்டுமாம்.
50 வயதிற்கு மேலானோர் பெரும்பாலும் வெள்ளை பருத்தி அல்லது கதர் துணியில் சட்டை மற்றும் வேஷ்டி அணிபவர்கள். என் மாமனார் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 15,20 மீட்டர் காட்டன் துணியெடுத்து அப்படியே டெய்லரிடம் கொடுத்து அட்யடைம் பத்து சட்டைகள் தைத்துக்கொள்வார். மொறமொற கஞ்சி சலவை தான் எப்போதும். கீழே நாலுமுழ வேஷ்டி. உள்துறைக்கு ராஜ்கிரண் பட்டாபட்டி அன்டர்வேர். ஓட்டலுக்கு போனால் மடித்துக்கட்டிய வேட்டியை சரட்டென தூக்கி அன்டர்வேர் ஜோப்பிலிருந்து பணத்தை எடுப்பார்.
2019இல் இறக்கும் வரை நகைக்கடைகள் மற்றும் ஃபைனான்ஸ் கடைகள் நிறைந்த பஜார் பகுதியில் அடகுக்கடை வைத்திருந்தார், கிட்டத்தட்ட 50 வருடங்களாக. கடைக்குள் நாலைந்து கோரைப்பாய்கள் போட்டு அதன் மேல் மரக்கள்ளிப்பெட்டி. உள்ளே தராசு மற்றும் நகை உரசிப்பார்க்கும் கல். பஹ்ரைன் மாப்ள கடைக்கு எப்ப போனாலும் எனக்கு பன்னீர் சோடா ஆடர் பண்ணுவார். கணக்கு வழக்குகள் சரியாக வைத்து வருமாணவரி கட்டுவார். கடை இப்ப கொடுத்து விட்டோம். சென்ற வாரம் அந்த கடையை பார்க்க உள்ளுக்குள் ஏனோ வலித்தது.
No comments:
Post a Comment