Sunday, June 22, 2025

பெங்களூர்-பம்பாய்-ஷீரடி!

பம்பாய் நண்பன் ரெங்குவின் மகளது திருமணம் முடிந்ததும், பெங்களூர் திரும்ப ஒரு நாள் இடையில் இருந்ததால் ஷிரிடி சாய்பாபா கோவில் போய் வந்து விடலாமா என யோசனை உதிக்க, உடனே பெரியவன் வாடகைக்கார் ஏற்பாடு செய்துவிட்டான்.
நாமே கார் ஓட்டிக்கொண்டு போய் வந்துவிட முடிவு செய்தோம். வண்டி நாங்கள் தங்கியிருந்த துர்பே பகுதிக்கே வந்து விட, அங்கிருந்து ஷிர்டி கிளம்பினோம். தொழிற்பேட்டை பகுதியென்பதால் சுற்றிலும் பெரிய டிரெய்லர்கள் மற்றும் கரடுமுரடான சாலைகள். தானே, கல்வா, மும்ப்ரா என சிறிய டவுன்களையடுத்து கல்யாண் தாண்ட, சாலைகள் ஓரளவு பரவாயில்லை.
பிவாண்டி பகுதி கடக்கும்போது சரிய்யான வெயில். பல வருடங்கள் முன் சிவசேனைக்காரர்கள் மஹாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே எனும் போராட்டத்தை துவங்க, கிளர்ச்சி வெடித்து முதலில் பற்றி எரியத்தொடங்கியது பிவாண்டி தான். ஆடிட்டுக்கு ஒரு முறை அங்கே போயிருக்கிறேன். பசித்தால் சாப்பிட சரியான உணவகங்கள் இருக்காது அப்போது. தற்போது நெடுஞ்சாலை தாபாக்கள் வந்து விட்டன. இருந்தாலும் மராட்டியர்களுக்கு மாலை நாலு மணி வாக்கில் கொறிக்கவோ, சாய் குடிக்கவோ பிடிக்காதோ என்னவோ நெடுஞ்சாலையில் டீக்கடைகள் அதிகம் காணோம்.
பம்பாய்-நாக்பூர் நெடுஞ்சாலை 2022இல் சீரமைக்கப்பட்டது. அடுத்த 3 மணி நேரத்தில் கொஞ்சம் மலைப்பகுதி மற்றும் சிறிய குகைப்பாதையை அடுத்து இகத்பூரி தாண்ட, பாலாசாஹெப் தாக்கரே சம்ருத்தி மஹாமார்க் எனப்படும் உயர்தள நெடுஞ்சாலை (elevated highway) ஆரம்பம். 105 கிமீ தூரத்திற்கு ஒரே நேர் ரோடு, அட்டகாசமாக போக்குவரத்தே இல்லாத நெடுஞ்சாலை. 120 கிமீ வேகம் வரை அனுமதிக்கிறார்கள். வழியில் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தவும் தடை. ஒவ்வொரு 20,30 கிமீ தாண்டி அங்கங்கே எமர்ஜென்சி பார்க்கிங் மட்டும் இருந்தது.
மனைவி சாய் தீர்த் எனும் தீம் பார்க்குக்கு பெங்களூரிலிருந்தே முன்பதிவு செய்தருந்தார். மாலை 6.30க்குள் மூடி விடுவார்கள் என்பதால் வண்டியின் வேகத்தை கூட்டி அங்கே சென்றடைந்து கார் பார்க் செய்யும்போது 6.25. உஷா ஓடிப்போய் டிக்கெட்டை காண்பித்து ‘ந்தா எங்கூட்டுக்கார்ரு கார் நிறுத்திட்ருக்கார். வந்துட்டே இருக்கார்’ என அவர்களிடம் கெஞ்சி, ஒரு வழியாக நான் அங்கே வந்து சேரும்போது நேரம் சரியாக 6.30, எங்களை உள்ளே விட்டதும் கேட்டை சாத்தினார்கள். எல்லாமே யாரோ செய்யும் செயல் போலிருந்தது.
இருண்ட குகைப்பாதையில் சிறிய ரயில் வண்டி தண்டவாளத்தில் விடுகிறார்கள். நாங்கள் ஒரு பெட்டியில். இந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களான துவாரகாநாத், பத்ரிநாத், பூரி ஜகன்னாத், மதுரை மீனாட்சியம்மன், அம்ரித்சர் பொற்கோவில் என ஒவ்வொரு கோவிலின் மாடல்களை அதே பொலிவுடன் அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு கோவிலின் முன்பும் அந்த குட்டி ரயில் நிற்க ஒலிபெருக்கியில் கோவிலைப்பற்றிய சுறுக்கமான தகவல்கள்.
அடுத்து 3D ஷோ. அனுமன் இலங்கை எரித்த கதை. கடலில் பெரிய்ய மலைப்பாம்பு ஊஊஊஊவென 3D கண்ணாடி வழியாக நம் முகத்துக்கு நேரே வரும்போது ஜில்லென தண்ணீரை நம் முகத்தில் பீய்ச்சியடித்து, பாம்பு வாயிலிருந்து உஸ்ஸென காற்றையும் நம் மேல் அடித்து, போதாதைக்கு நம் இருக்கையையும் கடாமுடாவென ஆட்டுகிறார்கள். சிமுலேஷன் அபாரம்.
சரியாக 9 மணிக்கு கோவிலுக்குள்ளே போய் கார் பார்க்கிங்கை தேட, யாரோ ஒரு இளைஞன் ஓடி வந்து ‘கார் பார்க்கிங் நான் காட்றேன்… வாங்க! என்றபடி முன்னால் ஓட, அவன் பின்னாலேயே வாகனத்தை செலுத்தினேன். ‘நிறைய ஏஜென்ட்டுகள் டிக்கெட் வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றுவார்கள், ஜாக்கிரதை!’ என அங்கங்கே அறிவிப்பு சுவரொட்டிகள். இவனை நம்புவதா என யோசித்தபடியே அவன் பின் செல்ல, சுமார் 200 மீ தொலைவில் கார் பார்க் இடத்தை காட்டினான் மூச்சு வாங்கியபடியே. அடுத்து பிரசாத கடைக்கு கூட்டிப்போய் பால்கோவா, சாய்பாபாவிற்கு சாத்த வண்ண வஸ்திரம் இத்யாதி வாங்க வைத்தான். ‘உங்க மொபைல் போனை இங்க விடுங்க’ என மற்றொரு கவுண்ட்டர் கூட்டிப்போனான். ‘ஆரத்தி பார்க்க ரிசர்வேஷன் பேப்பர் வாங்கி பார்த்து ‘இது ஸ்க்ரீன் ஷாட்டாச்சே! இது செல்லாது. QR கோடையும் காணமே!’ என்றபடி இன்னொரு கடைக்கு கூட்டிப்போய் எங்கள் மொபைல் நம்பரைச்சொல்ல, ஏதோ வெப்சைட்டில் எங்கள் டிக்கெட்டை தரவிறக்கம் செய்வித்து கொடுத்து 20௹ கொடுக்கச்சொன்னான்.
பெரிய்ய தொகை ஒன்றை கமிஷனாக கேட்கப்போகிறான் என நினைத்த எங்களிடம் எந்த காசும் கேட்காமல் ‘அதோ அந்த கேட்டுக்கு போங்க, ஆரத்திக்கு கூட்டிப்போவாங்க’ என்றபடி கிளம்ப எத்தனித்த அந்த இளைஞனிடம் ‘அது சரி.. நீ யாருப்பா? எல்லா உதவியும் செய்சிட்டு கிளம்பறே, காசும் வேணாங்கறே!’ என்ற என்னிடம் அவன் சொன்னது ‘அந்த பிரசாத கடைக்கு கஸ்டமர்களை கூட்டிப்போவது மட்டும் என் வேலை. உபரியாக கார் பார்க்கிங் காண்பிப்பது, மொபைல் போன் டெபாசிட் கவுண்ட்டர் காண்பிப்பது என எல்லா உதவியும் செய்கிறேன்’ என்றபடி ஓடி மறைந்தான். நான் வாங்கிய பிரசாதம், வஸ்திரம், கார்பார்க் டிக்கெட் என எல்லாம் சேர்த்து ரூ. 450 தான் செலுத்தியிருந்தேன். எல்லாமே இயந்திரகதியில் நடப்பதுபோல இருக்க, எங்கிருந்தோ யாரோ ஆட்டுவிப்பது போன்ற பிரமை.
முன்பதிவுச்சீட்டைக்காட்டி சாய் சன்னதி முன் ஆஜரானோம். ஓரளவு கூட்டம். பத்து மணிக்கு ஆரத்தி ஆரம்பமாகி மெய்சிலிர்க்க வைக்கும் இருபது நிமிடங்கள். அமர் அக்பர் ஆண்டனி படத்தில் சாய்பாபா கோவில் ஆரத்தியின்போது வில்லன் ரஞ்சித்தால் விரட்டப்பட்ட கண்ணில்லாத நிரூபா ராய் ஊர்ந்து ஊர்ந்து சன்னதி பக்கம் வர ‘ஷிர்டி வாலே சாயி பாபா’ பாடல் அந்த காட்சியை மன்மோகன் தேசாய் செம்மையாக பில்டப் செய்தது நினைவுக்கு வந்தது.
ஊரில் எல்லா கடைகளுக்கும் சாய் பெயர். இரவு பதினோறு மணிக்கு மேல் சேஃபாக தால் கிச்சடி முடித்து அறைக்கு தூங்கிப்போனோம்.
மறுநாள் சாய் சாகர் எனும் ஓட்டலில் காலை உணவு. அவர்கள் வாங்கும் 60 ரூபாய்க்கு இரண்டு பேர் சாப்பிடும் அளவு தாராளமாக பொங்கல், 60 ரூபாய்க்கு மிகப்பெரியதாக 2 பூரி மசால், 30 ரூபாய்க்கு அட்டகாசமான ஃபில்டர் காபி என எல்லாமே தாராளமயம்.
பைத்தானி புடவைகளுக்கு ஷிர்டி பிரசித்தம் என கேள்விப்பட்டு அதையும் தேடிப்பிடித்து வாங்கி மதியம் 12.30க்கு வண்டியை எடுத்தோம். வாடகை வண்டியான ப்ரெஸ்ஸா நன்றாக இருந்து. டீசல் வண்டி என்பதால் இஞ்சினின் சத்தம் இயக்குநர் சுந்தர்ராஜன் குரல் போல. ஷிர்டி, நாசிக், கசாரா, ஷஹாபூர், தானே என சீரான சாலைகள். தாபா ஒன்றில் பஞ்சாபி லஸ்ஸி (சுமார் தான்) அடித்து கல்யாண் தாண்டும்போது அப்படியே தானே பகுதி நண்பர்களை பார்த்து விட்டுப்போகலாமா என ஆசை. 5 மணிக்குள் ஏர்போர்ட் சென்றடையவேண்டுமென்பதால் வேகத்தை கூட்டி பாண்டுப் LBS மார்க்கையடுத்து வலதுபுறம் திரும்பி பொவாய் ஏரி கடந்து அந்தேரி பகுதி நுழைய, பம்பாய் உள்ளூர் போக்குவரத்தில் உ.பி பையாக்களின் டாக்சிகளினூடே வண்டி ஓட்டுவது சுகானுபவம்.
4.45க்கு டெர்மினல் 1 இல் புகுந்து, அங்கே காத்திருந்த ரென்ட்ட கார்காரனிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு, டிஜி யாத்ரா கௌண்ட்டரில் என் முகத்தை அடையாளம் பார்க்க முடியாத உபகரணத்தை சபித்து விட்டு, அடுத்த கேட்டில் ஆதார் கார்டை காட்டிவிட்டு உள்ளே மும்பய் மசாலாச்சாய் குடித்தவுடன் உடலில் தெம்பு சேர்ந்து பெங்களூருக்கு செக்கின் செய்தோம்.
இன்டிகோ பணிப்பெண் ஷ்ருதி பா(B)ட்டியா வெந்நீர் ஊற்றிக்கொடுத்த மேகி நூடுல்ஸை சுவைத்தபடி, கடந்த நான்கு நாட்களில்.. அமெரிக்க ஶ்ரீரங்கத்துப்பெண் அமெரிக்க பட்னா இளைஞனை நவி மும்பயில் கரம்பிடித்த வைபவம், நிறைய பம்பாய் நண்பர்களுடன் அரட்டை, விலேபார்லேயிலிருந்து பைக்கில் வந்து ஓரிரவு எங்களுடன் தங்கிய பெரியவன், ஒரே நாளில் முடித்த நான் விரும்பிய ஷிர்டி யாத்திரை, நான் ரசித்த பம்பாய் சாலைகளில் வாகனம் செலுத்திய அனுபவம்.. என நினைவுகளை அசை போட்டபடியே … தடக்கென ரன்வேயில் விமானம் தொட, நினைவுகளிலிருந்து மீண்டேன்.

No comments:

Post a Comment