வாழ்த்துக்கள் கொடுந்திரபள்ளி வெங்கிடேஷ் ராமநாதன்!
50 லட்சம் யஜூர் வேதிகள் இருக்க, சாமா 400 பேர் தானாம். அதில் 300 பேர் பாலக்காடு கொடுந்திரபள்ளியில் இருக்கிறார்களாம். இந்த தகவலை ஶ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களது காலட்சேபத்தில் கேட்டேன். அது சரி.. அந்த 300 பேரிலும் பாண்டித்யம் பெற்று பிரகாசமாகத் தெரியும் சாமவேதி ஒரே ஆள், வளைகுடாவில் வேலை செய்யும் இந்த வெங்கிடேஷ் ராமநாதன் தான்!
பஹ்ரைனில் விமரிசையாக நடக்கும் பூஜை மற்றும் ஹோமங்களில் பூஜை நடத்தும் என் நண்பர் சுந்தர் (Sunder Ganesh) ‘அடுத்ததா சாமவேதம் சொல்லனும், அந்த பசங்கள கூப்டுங்கோ!’ என்றதும் இந்த வெங்கடேஷ் மற்றும் ஆனந்த் என்ற இரு இளைஞர்கள் கூட்டத்திலிருந்து முன்னே வந்து கணீரென்ற குரலில் ‘ௐ.. ஆவோராஜா…நமத்வ..ரஸ்ய ருத்ராம்’ எனத்துவங்க, எல்லோரும் நிமிர்ந்து ‘யாருப்பா இவங்க!’ என இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்க, அடுத்து ‘ஹோஓஓஓ…. தாஆஆஆஆ…ராஆஆஆஆம்…ச’ என உச்ச ஸ்தாயியில் இருவரும் மந்திரத்தை ஒலிக்க அந்த இடமே நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும். ‘வேதங்களில் நான் சாமவேதன்’ என கீதையில் பகவான் கிருஷ்ணரே சொல்வாரே, அவ்வளவு உன்னதமானது இந்த சாமவேதமாம். சாமவேதத்தின் நடையே சங்கீத வழியிலானது. இலங்கை மன்னன் இராவணன் சாமவேதத்தை இசைத்தே சிவபெருமானை மயக்கி, மகிழ்வித்து வரங்களைப் பெற்றான் என்பர். ‘த்ரிஸாமா ஸாமக ஸாமேதி கவசம்’ என விஷ்ணுசஹஸ்ரநாமத்திலும் சாமவேதத்தின் மகத்துவம் சொல்லப்படுகிறது.
பஹ்ரைனில் நான் வேலை செய்த ட்ராஃப்கோ நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன் அக்கௌண்டன்ட் பதவிக்கு என் முன்னே வந்து நின்ற வெங்கடேஷை சில நிமிட சம்பாஷனைகளிலேயே வேலையில் சேர்த்துக்கொண்டேன். கடும் உழைப்பு, நேர்மை, பெரியவர்களுக்கு மரியாதை, பிரச்னைகளை துல்லியமாக ஆராய்ந்து சட்டென தீர்வு காணும் பாங்கு என என்னை மலைக்கச்செய்தவன்.
நேரத்தே.. ஆத்யம்… ச்சவட்டு, ச்சாடி.. என கேள்விப்படாத மலையாளம் கலந்த தமிழ் வார்த்தைகள் பேசுபவன். நகைச்சுவை பிரவாகமெடுக்கும் இவனது பேச்சில். அடுத்த சில வருடங்களில் உத்தியோகத்தில் உயர்வு, இன்க்ரிமென்ட் என எல்லாம் பெற்று வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவன்.
பஹ்ரைனில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அவால் க்ரூப் (அவாள் அல்ல… AWAL Group எனப்படிக்கவும்
. அரபிச்சொல்லான AWAL என்றால் முதன்மை என்று பொருள்) இல் நிதி மேலாளர் (Finance Manager) பதவியில் இருக்கும் வெங்கிடேஷ் ACCA (UK) மேற்படிப்பும் படித்தவன். எப்போதும் ‘அண்ணா.. அண்ணா’ என என்னிடம் மிகுந்த பிரியத்துடன் இருப்பான். கலகலவென அரட்டை பேர்வழி. எல்லா தமிழ்ப் பாடல்களும் அத்துப்படி. ஸ்மியூலல் அற்புதமாக தமிழ் சினிமாப்பாடல்கள் பாடுகிறான்.

தசாவதாரம் பட கமலின் பத்து வேட வசனங்களையும் (குறிப்பாக பல்ராம் நாயுடு மற்றும் கலிஃபுல்லா) மிமிக்ரி செய்து அசத்துபவன்.
இவனது மனைவி ஶ்ரீஜாவும் ( Sreeja Venkatesh) பாலக்காடு தான். (பாலக்காட்டுப் பசங்க பெண் எடுப்பதே சுத்தி சுத்தி சாத்தபுரம், கல்பாத்தி, கோவிந்தபுரம் தானே
) மூத்த பெண் நடனம் கற்றுக்கொண்டாள். அழகாக பாடக்கூடியவள். இந்தியா திரும்பியும் வரலக்ஷ்மி மற்றும் கோகுலாஷ்டமி பூஜையின்போது Zoom இல் அவளை கூப்பிட்டு பாடச்சொல்வோம்.

No comments:
Post a Comment