2016 இல் சி.ஏ ஃபைனல் எழுதிவிட்டு அடுத்த 2 ஓரிரு மாதங்களில் பஹ்ரைன் வந்த பெரியவன், ஒருநாள் பரிட்சை ரிசல்ட் பார்த்து விட்டு தன் அறையை விட்டு வெளியே வந்து ‘ரெண்டுல ஒரு க்ரூப் பாஸ் ஆயிட்டேன். இன்னொரு க்ரூப்பில் அக்ரிகேட் 50% க்கு மேலே இருந்தும் ஒரு பேப்பரில் 18 தான் வந்திருக்கு, அதனால அந்த க்ரூப் (4 பேப்பர்கள்) திரும்பவும் எழுதனும் என்றான், முகத்தில் சலனமில்லாமல். ரெண்டு க்ரூப்பும் பாஸ் ஆகியிருந்தாலும் அதே சலனமில்லாத முகம் தான். ‘சரிடா ஒரு க்ரூப்பாவது பாஸ் பண்ணிட்டியே 50% ஹேப்பி தானே!’ என நாம் கேட்க ‘I guess’ என சுருக்கமான பதிலுடன் ஜிம்முக்கு கிளம்பினான்.
‘சரி.. அந்த பேப்பரை ரிவேல்யூஷனுக்கு அனுப்பிப்பாரேன்!’ என கேட்டோம். ‘வேணாம், அது ரி-டோட்டலிங் மட்டும் தான். இன்னொரு தடவை பரிட்சை எழுதியே ஆகனும்’ என்றான்.
அதே சமயம் ஃபீஸ் கட்டி நாம் எழுதிய பேப்பரின் நகல் வாங்கி பார்க்கலாம் என்பதால் அதையாவது செய்யலாமே என நாங்கள் கேட்க, ‘18 மார்க் வர சான்சே இல்லை. 50க்கு மேல எதிர்பார்த்தேன். அப்படி எழுதியிருந்தேன். இனி என்ன செய்தாலும் பாஸ் ஆக முடியாது.’ என்றான் கூலாக.
எழுதிப்போட்டு அந்த பேப்பரின் நகலும் தபாலில் வந்தது. சாய்சில் எடுத்த எல்லா கேள்விகளுக்கும் மணிமணியாக பதில்கள், குறிப்பாக key words எல்லாவற்றையும் குறிப்பிட்டு எழுதியிருந்தான். அப்படியும் எல்லா கேள்விகளுக்கும் 15க்கு 2இலிருந்து 4 மார்க்குகள் என போட்டிருந்தது. டெக்ஸ்ட் புத்தகத்தில் இருக்கும் அதே பதில் தான் எழுதியிருந்தான். ‘நான் தான் அப்பவே சொன்னேனே! டயம் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா சீரியசா படிச்சிட்ருந்தவனை குழப்பி விட்டுட்டீங்க’ என சொல்லி விட்டு நகர்ந்தான்.
‘ப்ளஸ்-2ல ஸ்கூல் டாப்பர்! அப்படி மோசமா எல்லாம் எழுத மாட்டான்’ என்ற என் மனைவி உஷாவிற்கு மனசு ஆறவில்லை. எனக்கும் தான், ஆனா கொயட்டா இருந்தேன்.
பஹ்ரைன் சிஏ சாப்டரின் தலைவராக அப்போது இருந்தேன். சிஏ தலைமையகம் டெல்லிலிருந்து ICAI தலைவர், துணைத்தலைவர் மற்றும் மற்ற சென்ட்ரல் கவுன்சில் மெம்பர்கள் எங்கள் அழைப்பின் பேரில் பஹ்ரைன் வந்து போவார்கள் என்பதால், ஒருமுறை எங்கள் பிரெசிடென்ட் வந்திருந்த சமயம் கார் ஓட்டிக்கொண்டிருந்த நான் அவரிடம் தயங்கியபடியே ‘ஒரு சின்ன டவுட் சார்! கேக்கலாமா?’ என்று ஆரம்பித்து பையன் ஃபெயில் ஆனது, எழுதிய பேப்பரின் நகல்
வாங்கி பார்த்தது, மணிமணியாக ஆன்சர்கள் எழுதியது வகையராக்களை முத்துராமன் போல கண்களை உருட்டி விலாவாரியாக சொல்லி விட்டு அவரை பார்த்தேன்.
மெல்லிய புன்னகையுடன் அவர் சொன்னது: ‘ஶ்ரீதர்! டெக்ஸ்ட் புக்ல இருக்கறதை அப்படியே எழுதனும்னு நாங்க எதிர் பார்க்கறதில்லை. சில ஹைபதெடிகல் கேஸ்களை கொடுத்து Elucidate பண்ணும்படி மாணவர்களை நாங்கள் கேட்டால், டெக்ஸ்ட் புக் ஆன்சர் மட்டுமில்லாம அந்த கேஸ்லாவையும் பையன்கள் டிடெய்ல்டா டிஸ்கஸ் பண்ணனும்னு எதிர் பார்க்கறோம்’ என்றார். ‘கம்ப்யூட்டர் சம்மந்தமான அந்த பேப்பர்ல கூட நீங்க சொன்ன மாதிரியெல்லாம் அவன் எழுதியிருக்கானே!’ என நான் கேட்க, அவர் ‘இருக்கலாம். பேப்பர் திருத்தறவர் எதிர் பார்க்கிற அளவுக்கு எழுதியிருக்கானா தெரியலயே!’ என்றார் அவரும் விட்டுக்கொடுக்காமல்.
வீட்டுக்கு வந்ததும் பையனிடம் சொன்னபோது ‘இப்ப எதுக்காக அவரை கேட்டீங்க? அவரால என்னை பாஸ் பண்ணி வைக்கவா முடியும்? நாந்தான் இன்னொரு தடவை எழுதறேனே!’ என அங்கலாய்த்தான். ‘இல்லடா.. அவர்ட்ட சொன்னதாலத்தானே நமக்கும் தெரியுது எப்படி ஆன்சர் எதிர்பாக்கறாங்கன்னு’ என நாங்கள் கேட்க, ‘அந்த பேப்பரை எடுத்துப் பாருங்க எப்பிடி எழுதியிருக்கேன்னு, அவர் சொன்னமாதிரியா இல்லியான்னு’ என இந்த சமாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அடுத்த ரிசல்ட்டில் அந்த பேப்பரில் 54 மார்க்குகள் வாங்கி அந்த க்ரூப் பாஸ் செய்து சிஏ ஆகி விட்டவனிடம் வழக்கம்போல ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய புன்னகை மட்டுமே. நாங்கள் தான் ஃபுல் எக்ஸைட்மென்ட்டுடன் கோவில், நண்பர்களுக்கு ட்ரீட் என கொண்டாடித் தீர்த்தோம்.
சி.ஏ வையடுத்து அமெரிக்க CFA (Chartered Financial Analyst) யும் பாஸ் செய்தவனிடம் ஒருநாள் கேட்டோம் ‘அந்த பேப்பரை அடுத்த தடவை எப்பிடி எழுதியிருந்தே?’ எனக்கேட்டபோது ‘ரூல்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்றதுக்கு பதிலா இன்னொரு தடவை எழுதி பாஸ் தான் பண்ணிட்டேனில்ல.. இப்ப எதுக்கு அதெல்லாம்? ’ என மறுபடியும் பெரிய முற்றுப்புள்ளி வைத்தான்.
‘ஒரு ஆட்டத்தில் இரண்டு பேருக்கு சமமாக சில்வர் மெடல் கொடுப்பதை என்னால் ஏற்க முடியாது. 50 கிலோவுக்கான பிரிவில் யாருக்கேனும் அதிக எடையானால் மேலும் 2 கிலோ வரை ஏற்றுக்கொள்வோம் எனும்போது அதற்கும் அதிகமாக 100 கிராம் போனதை மறுபரிசீலனை செய்யச்சொன்னால் எப்படி? அப்ப இன்னொருத்தர் 102 கிராம் வரை சென்றால் நாங்கள் அவரை நிராகரி்க்கலாமா? இப்படியே போனால் இதை எங்கு போய் நிறுத்துவது! இதற்கு CAS (Court of Arbitration for Sports) எனப்படும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கும்’ என சர்வதேச ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் சொல்கிறார்.
இன்று மூன்று மணி நேரமாக நம் வழக்கறிஞர்கள் நம் தரப்பு வாதங்களுடன் இந்த நீதிமன்றத்தில் வாதிட்டார்கள். விரைவில் நமக்கு சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
No comments:
Post a Comment