கேரளப்பகுதியில் நாம் பிரவேசித்தாலே ஏதோ ‘ஐயப்பனும் கோஷியும்’ மலையாளப்படம் பார்ப்பது போன்ற உணர்வு. சினிமாவில் வருவது போலவே அங்கே எல்லாம் நடக்கிறதா அல்லது பிரதிதினமும் நடப்பதைத்தான் திரைப்படமாக எடுக்கிறார்களா தெரியவில்லை. மொத்தத்தில் அந்த மலைப்பிரதேசமும், அடர்ந்த காடுகளும், சோம்பேறித்தனமாக பெய்யும் மழையும்.. எல்லாமே கவிதை தான்.
இரண்டு நாட்கள் ஆனைக்கட்டியில் ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். தமிழக எல்லையிலிருந்து 10 கிமீ தாண்டி கேரளாவின் பாலக்காட்டு பகுதிக்குட்பட்ட ஸ்தலமானு! அகாலி, கொட்டத்தாரா, அத்திக்கடவு என நூற்றுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் கொண்ட அட்டப்பாடியில் உள்ளது ஆனைக்கட்டி. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இரவில் யானைகள் நடமாட்டமுண்டாம்.
ஒவ்வொரு கிராமமும் ஒரு அழகு ஓவியம் போல. அந்த சிற்றூர்களை நெருங்கும்போதே லாட்டரி சீட்டுக்கடைகள், நேந்திரங்காய் வறுவல் கடைகள், பத்து கடைக்கு ஒரு பேக்கரி, கேரள அரசு பஸ் நிறுத்தங்கள் எல்லாம் நம்மை வரவேற்கும். உள்ளூர் மக்களை ஏற்றிச்செல்லும் அந்தக்கால வில்லீஸ் மற்றும் மேஜர் ஜீப்புகள், சர்ச்சுகள், கோவில்கள், சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள் என நம்மைச்சுற்றி ரம்மியமான சூழல்.
இளவட்ட பசங்கள் காளிஃப்ளவர் தலையுடன் ஒரே பைக்கில் மூவர் என தலைதெறிக்க ஓட்டுகிறார்கள். நம்மூரைப்போல ஸ்பீக்கரில் பாடல்களும் செய்திகளும் ஒலிக்க பிசியாக இயங்கும் டீக்கடைகள் இங்கு கிடையா. த்ரிஷ்யம் படத்தில் வருவது போல பெஞ்சு போட்ட டீக்கடைகள். கண்ணாடி அலமாரியில் பழம்பொறி, உன்னியப்பம், பரிப்புவடா. பால் கலக்காத கட்டாஞ்சாய் குடிக்கறார்கள். பேக்கரி ஒன்றில் நுழைந்தோம். யப்பா! எல்லா வகையான கேக்குகள், சிப்ஸ் வகைகள், முறுக்கு, மிக்சர் என அமோக விற்பனை நடக்கிறது.
வளைகுடாவில் கஷ்டப்பட்டு உழைக்கும் மலையாளிகள் சிறுக சிறுக சேர்த்த சேமிப்பில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டுவார்கள். வீடென்றால் இரண்டடுக்கு மாடி, போர்டிகோ என பெரிய்ய வீடாக கட்டி வாசலில் மாருதி ஆல்ட்டோவை நிறுத்தி போட்டோ எடுத்து நம்மிடம் காட்டுவார்கள். பெருமிதத்திற்கு காரணம் அவர்கள் பல வருடங்கள் உழைத்து வியர்வை சிந்தி கட்டிய வீடல்லவா! மலைச்சரிவுகளில் அது போல நிறைய வீடுகளைப்பார்க்கலாம். வீட்டைச்சுற்றி தென்னை, பலா, மா, வாழை மரங்கள்.
குறுகலான ரோடாக இருந்தாலும் படுவேகமாக ஓடும் அரசுப்பேருந்துகள் நம் காரை உரசாத குறைதான். மலைகளில் வளைந்து வளைந்து செல்லும் சீரான சாலைகள்.
எல்லா சிறிய ஊர்களிலும் கோவில், தேவாலயம், பள்ளிவாசல், ஆசுபத்திரி, கல்லூரி என சகலமும் நிறைந்தருக்கும். அழகான தேவாலயங்கள். சர்ச் ஃபாதர் வருகிறார் என்றால் ஏதோ சாருஹாசன் போல ஒருத்தர் தாடியுடன் வருவார் என நாம் நினைத்தால் பாய்ஸ் பட சித்தார்த் போல் இளைஞர் ஒருவர் சவரம் செய்த பச்சை முகத்துடன் பாஸ்டர் பென்னி என சினிமா ஹீரோ போல வருவார். கோவில்கள் மங்களூர் ஓடுகளுடன் பார்க்க அழகாக இருக்கும். தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் ஓதும் சத்தம் கேட்கும். பத்து நிமிடத்தில் நாம் சந்திக்கும் நபர்கள் மூன்று மதத்தையும் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
எல்லா வீட்டிலும் யாராவது ஒருவர் வளைகுடாவில் இருப்பர். தண்ணியடித்தாலும் அதில் ஒளிவுமறைவு கிடையாது இவர்களுக்கு. நீயும் எங்கூட தண்ணியடிக்கிறயா என அவர்கள் கேட்டால் நாம் (மதுபானம் அருந்துபவர்களில்லையென்றால்) தயங்காமல் இல்லையென உடனே சொல்லிவிடுவது உத்தமம். ‘இல்ல..அது.. வந்து.. நா எப்பயாவது ஒருநாள்… ‘ என கண்களில் பிரகாசம் (
) தெரிய சொன்னாலோ, அல்லது பக்கத்திலிருக்கும் மனைவியர் ‘ ம்ம்ம்.. அவர் அக்கேஷனலா அடிப்பாரு’ என எடுத்துக்கொடுத்தாலோ போச்சு, சடுதியில் பாட்டில்கள் திறக்கப்படும், மதுக்கிண்ணங்களில் கவிழ்க்கப்படும். பாவிகள் ! நிறுத்தி நிதானமாய் தண்ணியடித்து எஞ்சாய் பண்ணுவான்கள்!

உங்க பேர் என்ன என அவர்கள் கேட்க, நாம் ‘ஶ்ரீதர்’ என்றால் உடனே ‘ஶ்ரீதருக்கு எந்த ஊர்’ என சட்டென நம் பெயரை குறிப்பிடும்போது ஒரு அந்நியோன்யம் தெரியும். அழகான பெயர்களான ‘லதா’வை ‘லதே’ என்றும் ‘சித்ரா’வை சித்ரே என்றும் காலண்டர் போல சுருட்டிவிடுவார்கள்.
வளைகுடாவில் 27 வருடங்கள் நாங்கள் இருந்ததால் ஏராளமான மலையாள நண்பர்கள். வீட்டிற்கு போனால் மிகவும் உபசரித்து சாப்பிட வைப்பார்கள். வருஷம் முழுக்க வீட்டில் நேந்திரங்கா சிப்ஸ் வைத்திருப்பார்கள். உதவியென்று நாம் போய்விட்டால் அங்கங்கே போன் போட்டு தம் பெரு நெட்வொர்க் மூலம் நம் வேலையை கச்சிதமாக முடிக்கும் திறமைசாலிகள். ‘அவர் ஒரு பெரிய புள்ளி’ என நாம் பிரபலமானவர்களைத்தான் குறிப்பிடுவோம். ஆனால் இவர்கள் மற்றவர்களை சாதாரணமாகவே ‘புள்ளி இவ்டே வந்நு… புள்ளி நாட்டுக்கு போயி.. புள்ளி மரிச்சு போயி’ என சொல்வார்கள்.
நம் பெயர் ‘ரவி’ என எத்தனை தடவை சொன்னாலும், RAVI என எழுதிக்காட்டினாலும் அவர்கள் வாயில் நுழைவது ‘ரெவி’ தான்.
God’s own country மக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்!
No comments:
Post a Comment