இன்று காலை பெங்களூரிலிருந்து கிளம்பி ஶ்ரீநகர் வந்து சேர்ந்தோம். ஜம்மு காஷ்மிர் என்றாலே முன்பெல்லாம் ஆனந்த விகடனில் மதனின் ஷேக் அப்துல்லா கார்ட்டூன் மற்றும் இதயவீணை எம்ஜியார் பட ‘காஷ்மீஈஈஈர்.. பியூட்டிஃபுல் காஷ்மீஈஈஈஈர் பாடல் தான் நினைவுக்கு வரும். பத்திரிக்கைகளிலும், டிவியிலும் ஜம்மு காஷ்மிர் என்றாலே கலவரம், கல்லெறி சம்பவம், பயங்கரவாதம் போன்ற செய்திகளையே பார்த்திருக்கிறோம். யாசின் மல்லிக், ஃபரூக் & ஓமர் அப்துல்லாக்கள், மஃப்டி முஃப்டி போன்றவர்கள் தான் செய்திகளை நிரப்பி வந்தார்கள்.
போங்கப்பா! அரசியலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இயல்பு வாழ்க்கை திரும்பிய அந்த யூனியன் பிரதேசம் எப்பிடி உள்ளது, மக்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்க்கலாமேயென எங்களுக்கு ஆவல். அதான் ஒரு வார சுற்றுலாப்பயணம் அங்கே.
விமானம் தரையிறங்கும் முன் பள்ளத்தாக்கினை படம் பிடித்தோம். ஆஹா! அழகான நகரம். பளிச்சென சுத்தமான சாலைகள். குப்பை கூளங்கள் இல்லை. பழைய சிமென்ட்டு கட்டிடங்களுக்கு மேற்கூரை கனமான இரும்பு/தகரத்தில். வங்கிகள், காஷ்மிர் சால்வைக்கடைகள், கைவினைப்பொருட்கள் கடைகள், ரோட்டோர பானிப்பூரி, சமோசா, கச்சோரி கடைகள், தந்தூரி ரொட்டி உணவகங்கள், கல்லூரிகள் என நகரமே பிசியாக உள்ளது.
விமான தளத்திற்கு வந்த இரண்டு டிரைவர்கள், பெட்டிகளை வண்டிகளில் அடுக்கியவர்கள், பார்க்கிங் டிக்கெட் கொடுப்பவர் எல்லோருமே சொல்லி வைத்தார்போல ரோஸ் நிற சருமம், செம்பட்டை தாடி, மரியாதையுடன் ஜி… ஜி.. என பதில் சொல்லும் பாங்கு, ஒரே மாதிரியான முகம் என பாஷா படத்தின் ‘அழகு.. அழகு’ பாடலில் வரும் பல ரஜினிக்கள் போல ஒரே மாதிரி இருந்தார்கள். ‘அபி யெ ஷெஹர் கெய்சே ஹெ பாய்சாப்? ஷாந்த் ஹெநா?’ என முந்திரிக்கொட்டை மாதிரி நாம் கேட்க எங்க டிரைவர் ‘பில்குல் ஷாந்த் ஹெ ஜி! தந்தா (வியாபாரம்) அச்சா சல்த்தாஹெ’ என்றார். கேட்க சந்தோஷமாக இருந்தது. சாலையெங்கும் ஷேர் ஆட்டடோக்கள், டீக்கடைகள், மால் என மக்கள் நடமாட்டம்.
70 வருடங்களுக்கு மேலான காஷ்மிர் பிரச்னை ஒரு வழியாக தீர்ந்து, ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின் அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. தற்போது பள்ளத்தாக்கில் வன்முறை படிப்படியாகக் குறைந்து கல் வீச்சு சம்பவங்கள் இல்லாது, சட்டம்-ஒழுங்கு நிலைமை பெரும்பாலும் கட்டுக்குள் உள்ளதாம். இந்நிலையில் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தை முழுவதுமாக திருப்ப பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பிறகு ராணுவம் மேற்கொண்ட பணிகளை சிஆர்பிஎஃப் நிரப்பும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. ஜே & கே முழுவதிலும் சுமார் 1.3 லட்சம் ராணுவ வீரர்களும், எல்லையில் மட்டும்�80,000 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெட்டியைப்போட்டு விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். கடைவீதிகளில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஆயுதமேந்திய CRPF வீரர்கள். பார்த்தவுடன் மதராசி என சொல்லும் முகம் நமக்காச்சே! நம்மை பார்த்து புன்முறுவல் செய்தனர். கூட வந்திருந்த நண்பர் Vachaspathi Sudarsanan ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியை தொட்டுப்பார்த்து ‘ஏ பந்தூக் காஃபி பாரிக் ஹெனா?’ என்றதும் வியப்புடன் ஓரடி பின் வாங்கி ஆம் என்றார் அவர். சடாரென துப்பாக்கியைத்தொடுவோமென அவர் எதிர்பார்க்கவில்லை. நட்புடன் பேசிக்கொண்டிருந்தார். ராஜஸ்தானைச்சேர்ந்தவராம். அந்த கட்டிடம் முழுவதும் துணை ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனராம். நாலு வருடமாக ஆயுதமேந்தி அங்கேயே நிற்கும் பணியாம்.
பெங்களூரில் இருந்து சுமார் 80 யாத்ரீகர்கள் எங்களுடன் சித்தீக் பேலஸ் என்ற அந்த விடுதியில் தங்கியிருந்தனர். பாதி பேர் அமர்நாத் யாத்திரை போகிறவர்கள். நாங்கள் இரண்டு மூன்று குடும்பங்கள் ஶ்ரீநகர், வைஷ்னோ தேவி கோயில், டால் ஏரி என வேறு பக்கம் போகிறோம்.
சுற்றுலா ஏற்பாடு செய்த ‘குஷி யாத்ரா’ குழுவினர் பெங்களூரிலிருந்து சமையல்காரருடன் வந்து ஹோட்டல் கிச்சனை எடுத்துக்கொண்டு, தினமும் எங்களுக்கு சமைத்துப்போடுகிறார்கள். இன்று இரவு உணவு மைசூர் போண்டா, சாலட், சப்பாத்தி, குர்மா, கன்னட கூர்க் ரசம், மசுரு (பயப்பட வேண்டாம். அது ‘தயிர்’), டீ, காபி என சுத்த ‘கர்நாடக’ சமையல். அபார சுவையான அந்த ரசத்தை தட்டில் ஊற்றி ஜிவ்வென உறிஞ்சி குடித்தோம். தென்னிந்திய காலை உணவு 8 மணிக்காம்.
அது சரி, இந்த மழையிலா அங்க போறீங்க? மண்சரிவு, வெள்ளம் என அபாயகரமா இருக்கே என நிறைய நண்பர்கள் அக்கரையுடன் கேட்டார்கள். ஆனால் இங்கே? ஒரு மழையும் இல்லை. பகலில் சரியான 29 டிகிரி வெயில். இரவு ஏழே முக்கா மணியாகியும் பகல் போல வெளிச்சம். நோ மண் சரிவு. எங்கோ ஒரு இடத்தில் நிகழும் சம்பவத்தை டீவிக்காரர்கள் நாள் முழுவதும் ஒலிபரப்பி பயமுறுத்துகிறார்கள் என உள்ளூர் மக்கள் சொல்வது உண்மை! அதை கண்கூடாக பார்த்தோம். நாளை முதல் அடுத்த 5 நாள் ஶ்ரீநகர் சுற்றுலா தான். மலைப்பிரதேச சீதோஷ்னம் எப்ப வேண்ணாலும் மாறும் எனவும் சொல்கிறார்கள். பார்ப்போம்.
No comments:
Post a Comment