Sunday, June 22, 2025

கோவை… அதிகாலை…திருமலை..

விடியற்காலை ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த எனக்கு ‘ஶ்ரீதர்! ரெடியாயிட்டீங்களா?’ என குறுஞ்செய்தி, பக்கத்து அறையில் தங்கியிருந்த நண்பர் Veeraraghavan Thirumalai யிடமிருந்து. முதல் நாள் தான் பஹ்ரைன் நண்பர் கிருஷ்ண குமார் இல்லத் திருமண வைபவங்கள் துவங்கியிருக்க, பஹ்ரைன் நண்பர்கள் நாங்கள் ஏழெட்டு குடும்பங்கள் கூடி கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தோம்.
அதிகாலை கோவை வீதிகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடியிருக்க எங்கள் நடைபயிற்சி அருமையாக ஆரம்பித்தது. ராம் நகர் பகுதியிலிருந்து மெயின் ரோடு வந்து மேம்பாலம் கீழே நடக்க, நண்பர் திருமலையின் வேகத்துக்கு ஈடு கட்டுவது மிக கடினமாக இருந்தது.
காந்திநகர் பஸ்நிலையம், ஆம்னி பஸ் நிலையம் தாண்டியதும் ஏதோ ஒரு கோவில். என்ன கோவில் அது என சற்று பக்கத்தில் போனால் மேலே ‘ஆர். ஆர். காபெல். அகல்மண்ட் பனோ.. சஹி ச்சுனோ!’ என எழுதியிருந்தது. கோவிலுக்கு அப்படியொரு பேரா என நான் வியக்க, ‘அட! முனீஸ்வப்ப ஸ்வாமி கோவில்’னு பக்கத்துலயே கொட்டை கொட்டையா எழுதியிருக்கே என திருமலை சொன்னதும் கொஞ்சம் வழிந்தேன்.
பஹ்ரைனில் 30 வருடங்களுக்கு மேலாக ‘கல்ஃப் ஏர்’ விமான நிறுவனத்தின் ஒப்பந்த துறை இயக்குநர் (Director-Contracts) இவர். மனைவி சுதா திருமலை கர்நாடக சங்கீத பாடகி. அபுதாபியில் பிறந்து வளர்ந்த இளம் பின்னணிப் பாடகர் பென்னி தயாள் அங்கே படித்துக் கொண்டிருந்தபோது சுதாவிடம் சங்கீதம் கற்றவர். தற்போது மகள் அனன்யா திருமலையும் பின்னணிப்பாடகி.
ஒரு மணி நேர நடைபயிற்சி முடிந்து நேராக அண்ணபூர்னா ஶ்ரீ கௌரி சங்கரில் நுழைந்தோம். சர்க்கரை குறைவாக அருமையான ஃபில்டர் காபி.
காபி குடித்து வெளியே வரும்போது வாசலில் ஒரு செல்ஃபி எடுக்கலாமே என யோசித்து, ‘சார்! ஓரு போட்டோ எடுக்கறீங்களா?’ என ஒருவரைக் கேட்டோம். ‘தாராளமாங்க’ என சிரித்தபடியே ஃபோனை வாங்கி இரண்டு மூன்று போட்டோக்கள் எடுத்து விட்டு தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவரிடம் ‘ரொம்ப நன்றி சார்! என்ன பண்றீங்க?’ எனக்கேட்டோம். அவர் ஒரு தொழிலதிபராம். கோவையில் ஆரம்பகாலத்தில் முதன்முதலில் வெட் கிரைண்டர் தயாரித்த ஓரிரு நிறுவனங்களில் அவருடையதும் ஒன்றாம். தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் குறிப்பாக கூர்க் பகுதி முழுக்க இவரது கிரைண்டர்கள் தானாம். (போட்டோல இருக்கார் பாருங்க) அவ்வளவு பெரிய தொழிலதிபரை போட்டோ எடுக்கச்சொன்னோமே என அவரிடமே வருத்தம் தெரிவிக்க, ‘அதெல்லாம் இருக்கடும்ங்க! உங்க நட்சத்திரம் என்ன?’ எனக்கேட்டார். நட்சத்திரம் சொன்னதும் உடனே எங்கள் ஜாதகப்பலன்கள், குழந்தைகளின் குணநலன்கள் எப்படியிருக்கும் என அந்த ஓரிரு நிமிடங்களில் புட்டு புட்டு வைத்து விட்டார். ஸ்கூட்டி ஆன்லயே இருந்தது.
விடுதிக்கு திரும்ப வரும்போது திருமலை ‘அதாங்க ஶ்ரீதர்! சென்ட்ரல் ஜெயில்’ எனக்காட்ட கொஞ்சம் வேகமாக நடையை கூட்டினேன்.

No comments:

Post a Comment