Sunday, June 22, 2025

கட்யாவாடி ஜூனாகட்..


ராஜகோட் கல்யாணம் முடிந்து சோம்நாத் ஆலயம் செல்ல காலை 8 மணிக்கு வரவேண்டிய டிரைவர் சாவகாசமாக 9 மணிக்கு வர, அவனை கடிந்துகொண்டேன். தப்பான லொகேஷனை குடுத்துட்டாங்க என்றவனிடம் லேசாக சாராய வாடை. நண்பர் பாலுவும் ‘ஈயாளு வேண்டா.. புள்ளி ஷெரிக்க கள்ளு குடிச்சிண்டு!’ என ஊர்ஜிதப்படுத்த, கோபமாக அந்த ஜெயேஷ்பாய்க்கு போனடித்தேன். கல்யாண மாப்பிள்ளையின் கசினுக்கு வேண்டிய அவர் தான் கார் ஏற்பாடு செய்தவர். ‘சான்சே இல்ல. அவன் குடிக்க மாட்டான். இங்கெல்லாம் தண்ணியடிச்சிட்டு மாட்னா பிரச்னையாயிடும்’ என்றார். பின்ன ஏன் கப்படிக்கிது என கேட்க, குஜராத்தி டிரைவர் ‘சார் நா பீடி குடிப்பேன், மாவா போட்ட தம்பாக்கு போடுவேன்’ என பெருமையாக சொல்ல, அங்கேயே அலறி விட்டோம். ஏன்டாப்பா! வண்டி பத்திரமா ஓட்டுவியா? அதென்ன போதை வஸ்துவோ! என கேட்க, அவன் ‘அதை நீங்க சாப்ட்டா வாய் வெந்துடும்’ என்றான் வெள்ளந்தியாக.
அடுத்த அரை மணியில் மோடி அரசுக்கு புகழாரம் சூட்டியபடியே குஜராத்தின் வளர்ச்சி பற்றி அவன் சொல்லிக்கொண்டு வந்தாலும், ஊரே குப்பையும் கூளமாக இருந்தது. டீக்கடைகள் ஒரே அழுக்கு. பேப்பர் கப்பும் இல்லைங்கறான். கடலை மாவை தேய்த்து ஃபாஃப்டா எனும் பதார்த்தம், தொட்டுக்க கடி என விற்றுக்கொண்டிருந்தார்கள்.
போகும் வழியில் ஜுனாகட் ஊரை சுற்றிப்பார்த்தோம். பிரம்மாண்டமாக பர்வத மலையடிவாரத்தில் சிவாலயம் சென்றோம். அங்கிருந்து மலையுச்சி கோவிலை பத்து ரூபாய் டெலஸ்கோப்பில் பார்த்தோம். டிரைவர் சுதந்திர போராட்டம் பற்றியும், காந்தி நேருவை திட்டிக்கொண்டே, பிரிவினையின் போது ஜுனாகட்டை பாகிஸ்தானுடன் சேர்க்க முயன்ற நவாப்களின் சூழ்ச்சி எப்படி முறியடிக்கப்பட்டதென விளக்க, எங்களுக்கு வயிறு பசிக்க ஆரம்பித்தது. டிரைவர் பெயர் கோவிந்த் குகாடியா. ‘ஐயா குகாடியா! பசிக்கிதுய்யா. சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு காந்தி நேரு கதையை அப்பறம் சொல்லலாமே!’ என்றதும் பக்கா குஜராத்தி தாலி கிடைக்கும் கிராண்ட் ரெஸ்ட்ரொண்ட் வந்து நிறுத்தினான்.
பெரிய்ய தாம்பாளம் போன்ற தட்டு. தட்டுக்குள்ளே சிவாஜியின் தங்கை சிரிப்பது போல கின்னங்களை கலகலவென உருட்டி விட்டான் பையன். பரெல்லா மிர்ச்சி எனும் கடலைமாவு மசாலா திணித்து வறுத்த மிளகாய் மற்றும் ரவா டிக்கி ஃபர்ஸான் என்று சொல்லியபடியே அவன் வைக்க உடனே காலி செய்தோம். லேசாக சர்க்கரை கலந்த தால், கடி, தேசி சன்னா, ரஸ் ஆலு சப்ஜி வைத்தான். கட்யாவாடி உந்தியு (அ) உந்தியோ கமகமவென வாசனையுடன் எண்ணெய் சொட்டச்சொட்ட வந்தது. நீளமாக கொத்தவரை, இளம் வாழைப்பழம், இன்னபிற காய்கறிகள், வெல்லம், பொடி செய்த நிலக்கடலை என அதுதான் அன்றைய பிரதான ஐட்டம். நெய் சொட்டும் ரோட்டி, மஞ்சள் கலரில் பூரி என சல்சல்லென எல்லாவற்றையும் உள்ளே இறக்கினோம். ஆஃப்கான் ஹலுவா கின்னத்தில் வைக்க, என்னவொரு ருசி. அந்தக்காலத்தில் கஜினி முகமது சோம்நாத்தை சூரையாட போகும் முன் ஜுனாகட் பக்கமும் வந்தானாம். அப்போதிலிருந்து ஆஃப்கானி ஹலுவா பிரசித்தமானதாம். மாவா பாதாம் ஷ்ரீக்கண்ட் எனும் பால்கோவா கலந்த போதை வஸ்து போன்ற இனிப்பு மற்றும் ஜிம்ரி மசாலா பொடி தீவிய ச்சாஸ் (மோர்) உடன் மதிய உணவை முடித்தோம்.
190ரூபாய்க்கு அருமையான தாலி. திடீரென மணியடித்தபடியே தள்ளு வண்டி கிச்சனிலிருந்து வெளியே வந்தது. பாகுபலி தாலியாம். லிமிடெட் தாலியாக 1500 ரூபாய்க்கு ஏழெட்டு பேர் சாப்பிடலாமாம். கிட்டத்தட்ட நாற்பது ஐட்டங்கள். மிச்சம் வைக்காமல் அதை ஒரே ஆள் சாப்பிட்டு முடித்தால் ரூ ஐயாயிரம் பரிசாம். தோற்றுவிட்டால் இரண்டு மடங்கு பைசா கட்ட வேண்டுமாம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சோம்நாத்!

No comments:

Post a Comment