Sunday, June 22, 2025

கணபதி அக்ரஹாரம்..

40 வருடங்களாக எனக்கு பரிச்சயமான கிராமம், பால்ய நண்பன் Ganapathi Subramanian யின் சொந்த ஊர். திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டிலிருந்து பிரிந்து ஒரு ரோடு காவிரி ஆற்றுடன் ஓடிப்போகும். கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறையடுத்து 68ஆவது கி.மீட்டரில் கணபதி அக்ரஹாரம்.
என் கண்கள் தாமாக திருவையாறு ஆண்டவர் அல்வா கடையை தேட, அதோ அசோகா அல்வா நெய் வாசனையைடன்! அல்வா சாப்ட்ட கையோடு மணிகாரமும் (காராபூந்தி) ஒரு கைப்பிடி ஓமப்பொடி சாப்பிட்டால் பிறவிப்பயனை அடையலாம் என்கிறது கடையின் தலப்புராணம். நாவில் ஜலம் ஊற வண்டியை ஓரங்கட்ட, ‘இன்னம் 2 நா கல்யாண சாப்பாடு தான், அல்வால்லாம் இப்ப வேண்டா’மென தடுத்த மனைவி Usharani Sridhar யை முறைத்து ஆக்சிலேட்டரை அழுத்த, அடுத்த 10 கி.மீட்டரில் கணபதி அக்ரஹாரம். கூடவே என் சகோதரி Hemalatha Manohar.
சுவாரசியமான தலவரலாறு. ஒருமுறை காவேரி நதியானது தனது பரந்த நீள-அகலத்தின் காரணமாக, தான் அகத்திய முனிவரை விட உயர்ந்ததாகக் கருதி இறுமாப்படைய, அவளது ஆணவத்தை அடக்க முனிவர் அவளைத் தன் கமண்டலத்தில் அடைக்க, ஆற்றைச்சார்ந்த கிராமங்களில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாடினர். இதை உணர்ந்த விநாயகர், காகத்தின் உருவம் கொண்டு தியானத்தில் இருந்த முனிவரின் கமண்டலத்தை துடைத்து காவிரி நதியை விடுவிக்க, நதியின் அவசியத்தை புரிந்துகொண்டு முனிவரும் அங்கு ஒரு கோயில் அமைத்து விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவ்விடத்திற்கு சதுர்வேதி மங்களம் எனப்பெயறிட, தற்போது இத்தலம் கணபதி அக்ரக்ஹாரம் ஆகிப்போனது. கிராமத்தை கடந்து சென்ற காவேரியும் விநாயகரை தரிசனம் செய்ய தன் பாதையை சற்று திருப்பியதாகவும் கூறப்படுகிறது.
காலை 10 மணிக்கு கோவிலில் நல்ல கூட்டம். நெடுநெடுவென உயரம் கொண்ட கார்த்திக் குருக்கள் ‘ வாங்கோண்ணா! நேத்திக்கே கணபதியண்ணா போன் பண்ணி சொல்லிட்டார்’ என வரவேற்றார். வெள்ளைக்கலரில் மூலவர் அலங்காரத்துடன் காட்சியளிக்க, த
தற்போது உற்சவம் நடப்பதால் உற்சவருக்கு மட்டும் தினமும் அர்ச்சனையாம். கர்ப்பகிரகத்தில், சனியின் மேல் விநாயகர் நிறுவப்பட்டிருப்பதால் , சனி தோஷம் உள்ளவர்கள் வழிபடவும் உகந்த தலமிது.
அர்ச்சனை முடிந்து குருக்கள் கொடுத்த மோதக பொட்டலத்துடன் நெய்யொழுக வாழை இலை வெண்பொங்கல் பிரசாதம். ‘தரிசனம் நல்லா இருந்ததா’ என கணபதியின் போனும், ‘கணபதி சார் வீட்டுக்கு உங்களை கூட்டிப்போக வந்திருக்கேன்’ என வீட்டின் கேர்டேக்கர் குமாரின் போன்.
கணபதியின் வீடு விசாலமாக, வாசலில் இருந்து கொல்லைப்புறம் வரை வரிசையாக அறைகளுடன். பட்டாசாலையின் நடுவே ரெண்டு ஃபேன்கள், பார்க்கும்போதே தூக்கம் சொழட்டி அடிக்கும். கீழே வெறுந்தரையில் சின்ன தலகானி வைத்து நாலு முழ வேட்டியுடன் படுத்தால் அடிச்சு போட்டாப்ல அதே கோலத்தில் நாள் முழுக்க தூங்கலாம். புழக்கடைப் பக்க திறந்தவெளியில் மொட்டை மாடி போக படிக்கட்டுகள். பாத்ரூம் கதவுக்கு துவாரபாலகர்கள் போல இரண்டு மர பல்லிகள். அடுத்து மாடர்னாக (கணபதி அப்பாவுக்கு பிடிக்காத) வெஸ்டர்ன் டாய்லெட். பின்னால் மாரத்தான் ஓடுவது போல அரை கி.மீ தொலைவுக்கு பெரிய தோட்டம். தென்னை, மா, வேம்பு, சீத்தா, நார்த்தங்காய், கருவேப்பிலை, பூச்செடிகள், கீரை வகைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கணபதியின் அப்பா பல வருடங்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்தவர். கோவிலுக்கு நிறைய நன்கொடை வழங்கியிருக்கிறார். பையனும் தவறாமல் கோவில் பராமரிப்புக்கு உதவுகிறான். எந்த நல்ல காரியமும் பிள்ளையாரின் ஆசியுடன் துவங்குவான் பையன். மனைவி Durga Ganapathi Subramanian உடன் அவ்வப்போது இரண்டு நாள் அங்கேயே தங்கினானென்றல் போதும், கிராமமே ரெண்டு படும். குருக்கள் வீட்டிலிருந்து தேக்சாவில் புளிப்பொங்கல், தூக்கு சட்டியில் இட்லி சாம்பார் சட்னி, மதிய, இரவு உணவு சப்பாத்தி, தேய்ர் சாதம், காபி சப்ளை என கணபதியின் ராஜாங்கம் தான். ‘அண்ணா! நீங்க சொல்ட்டேள்லியோ! பண்ணிட்டாப்போச்சு!’ என குருக்கள் சொன்ன மறுநிமிடம், கணபதியின் மோட்டா பர்சிலிருந்து காந்தி படம் போட்ட நோட்டுக்கள் சல்சல்லென வீடு மாறும். கேர்டேக்கர் குமார் தலைதெறிக்க ஓடிவந்து, கூட இருந்து, ரெண்டே நாளில் நார்த்தங்கா மரத்தை மொட்டையாக்கி, கார் டிக்கியில் உப்பு நார்த்தங்காயை சம்படத்தில் வைப்பான். சட்டென அவன் சட்டைப்பையிலும் காந்தி சிரிப்பார்.
கூகிள் மேப் சுவாமிமலைக்கு 18 கி.மீ + 25 நிமிடம் காட்ட, கபிஸ்தலமும் உமையாள்புரமும் வெளியே தெரிந்து மறைய, வண்டியை விரட்டினேன். முருகனை சேவித்து விட்டு மதிய சாப்பாடு மன்னார்குடி மாமன் மகன் இல்ல திருமண நிச்சயதார்ரத்தத்தில். (மறுநாள் முகூர்த்தம்)

No comments:

Post a Comment