என்னை மிகவும் பொறாமைப்பட வைக்கும் மாநிலத்தவர் குஜராத்தியினர். பெருமைப்பட்டுக்கொள்ளும் மாநிலம் எனவும் சொல்லலாம். காரணம் சொல்லத்தேவையில்லை.
இரண்டு நாள் அகமதாபாத் காந்திநகர் பயணம். தில்லி ICAI யின் எங்களது சர்வதேச விவகார குழுவின் (ICAI International Affairs Committee) அங்கத்தினர்களுக்கான மாதாந்திர மீட்டிங். பொதுவாக தில்லியில் நிகழும் சந்திப்பு இம்முறை அகமதாபாத்தில். பல வருடங்களுக்குப்பின் குஜராத் பக்கம் செல்கிறேன். சின்ன வயசில் ஸ்கூலில் ‘காந்தி பிறந்த ஊர் போர்பந்தர்’ என படிக்கும்போது ‘காந்திஜி நமக்கு விடுதலை வாங்கித்தந்தார்’ என வாத்தியார் சொல்லும்போது கடைசி பெஞ்சிலிருந்து நாங்கள் ‘விடுமுறையும் வாங்கித்தந்தார்’ என்போம் எங்களுக்குள். 

எட்டு வருடங்கள் பம்பாய் மற்றும் குஜராத் மாநிலத்தின் அங்க்ளேஷ்வரில் (சூரத் அருகே) பணியாற்றியதாலும் 25 வருட பஹ்ரைன் வாசத்தாலும் நிறைய குஜராத்தி நண்பர்கள். பெரும்பாலோருக்கு ‘ஷ’ வராது.. ‘ச’ தான். ஃபங்சன், கமிசன், ஜங்சன் என பொளந்து கட்டுவார்கள். அலுவலகத்தில் கேசி(ஷி)யர்கள் ‘கேஸ் டேலி ஹோகயா’ என்பார்கள் பணக்கட்டால் விசிறிக்கொண்டே.
90களில் பம்பாய் நாரிமன் பாயின்ட் அலுவலகத்தில் பணிபுரியும்போது சுற்றிலும் வெறும் குஜராத்திகள். காலையில் எங்கு பார்த்தாலும் ‘கெம்ச்சோ?.. மஜாமா!’ (How are you?.. Fine!) தான். பான்பராக் விற்பனையே இவர்களை நம்பித்தான். வாய் நிறைய தாம்பூல மணத்துடன் வரும் வைஸ் பிரெசிடென்ட்டுகள் குட்கா பொட்டலத்தை அசால்ட்டாக கிழித்து வாயில் திணிப்பதே அழகு. நிறைய ஜெயின் இனத்தவர். புலால் சாப்பிட மாட்டார்கள். ஆனால் சகஜமாக தண்ணியடிப்பர்.
படு சூட்டிகை.. ரொம்ப திறமையான எமப்பயல்கள்! மார்வாடிகளையே வியக்க வைக்கும் அளவிற்கு சாமர்த்தியசாலிகள். பண விவகாரங்களில் கரார் பேர்வழிகள். குறைந்த அளவில் பணத்தை போட்டு பன்மடங்கு பெருக்குவதில் கில்லாடிகள். என் குஜராத்தி நண்பன் ஒருவன் ‘சாப்பிட மிக்சர் கொடுத்தால் நாங்கள் முதலில் அதிலுள்ள கருவேப்பிலையில் உள்ள எண்ணெயால் கையை துடைத்துக்கொள்வோம், வீணாக்குவானேன்!’ என்பான் சிரித்துக்கொண்டே.
பட்டேல் எனும் சக அலுவலக நண்பன் ஒருவன். சரியான எகத்தாளப்பேர்வழி. என்னப்பா நேத்திக்கி ஆபிஸ் வரலை என கேட்டால் ‘மனைவிக்கி உடம்பு சரியில்லை’ என்பான். ‘சரி.. அதுக்கு நீ ஏன் லீவ் எடுக்கனும்?’ என தப்பித்தவறி நாம் கேட்கப்போய், ‘பின்னே நீயா லீவு எடுப்பே?’ என்பான். இந்த பட்டேல் இரும்பு மனிதன் மட்டுமல்ல.. குறும்பு மனிதனும் கூட.
சதா கொறித்துக்கொண்டே இருக்க வேணும் இவர்களுக்கு. சர்க்கரை மீது உயிரையே வைத்திருப்பார்கள், உயிரே போனாலும். வீட்டிற்கு போனால் நெய் சொட்டச்சொட்ட ஜிலேபியும், ஆவியில் செய்த கடலை மாவு பதார்த்தமான டோக்ளா/கமண்ட் போன்ற பலகாரங்களை சாப்பிடாமல் நாம் வர முடியாது. நம்மை ரொம்ப அன்புடன் உபசரிப்பார்கள். கொஞ்சம் சர்க்கரை, நிலக்கடலை போட்ட தாலுடன் பாஸ்மதி அரிசி சேர்த்து அவர்கள் செய்யும் தால் சாவல் அபார சுவை கொண்டது. புளித்த தயிரில் செய்த ஶ்ரீக்கண்ட் எனும் வஸ்து பூரியுடன் சாப்பிட சுவையானது. சற்று பழுத்த வாழைப்பழம் மற்றும் காய்கறிகளுடன் தித்திப்பாக இவர்கள் செய்யும் சந்தியாவோ உந்தியாவோ.. செம்ம டேஸ்ட்! சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இவர்கள் செய்யும் சப்ஜியில் இடும் எண்ணையில் அப்பளமே பொறிக்கலாம். நடுங்கும் குளிர் காலத்திலும் இரவு பத்து மணிக்கு மேல் கார், ஸ்கூட்டரில் போய் ஜஸ்க்ரீம் சாப்பிடும் கூட்டம் உண்டு.
நடுத்தர வயது ஆண், பெண் எல்லோருமே தடித்த உருவம். ஆண்கள் மேலே பெருத்து கீழே வர வர குறுகிக்கொண்டே போக, பெண்கள் அதற்கு உல்ட்டா! ஒருசிலர் ‘எதற்கு வம்பு’ என டாப்ட்டு பாட்டம் ஒரே அளவு. கல்யாணம் காட்சியென வந்துவிட்டால் சாப்பாடு, டங்கு டங்கு என ஆடல் பாடல் என கலக்குவார்கள். அம்பானி வீட்டுக்கல்யாணமாக இருத்தாலும் சரி.
தென்னிந்தியர்களிடம் அளவு கடந்த மரியாதை உண்டு இவர்களுக்கு. அரட்டை அடித்து நம்முடன் இனிதாக பொழுது போக்குபவர்கள். சில வருடங்கள் முன் கென்யா சுற்றுலாவிற்கு சில குஜராத்தி நண்பர்களுடன் குடும்ப சகிதம் சென்றது மறக்க முடியாத அனுபவம்.
‘சீட் பெல்ட் போட்டுக்கனம்’ என விமான பணிப்பெண் அறிவிக்க, வெளியே கண்ணாடி வழியே அகமதாபாத் தெரிந்தது. அடுத்த இரண்டு நாளில் குறைந்த பட்சம் ஒரு கிலோ எடை கூடலாம்!
No comments:
Post a Comment