இவரைப்பற்றி எழுதி விடுவது அவ்வளவு சுலபமல்ல. முழு ஆய்வு மேற்கொண்டு தான் இவரது ஒவ்வொரு பாடலைப்பற்றியும் பேச வேண்டியுள்ளது. Subhasree Thanikachalam அவர்கள் வழங்கும் QFR இசைக்கலைஞர்களில் தன் இசைக்குழுவினருடன் சேர்ந்து வயலின் வாசிக்கும் முக்கிய அங்கத்தினர். பாடலின் ஆரம்ப இசையோ, இடையிசையோ வரிகளின் ஊடே வரும் சிறு இசைத்துண்டு என சகலத்தையும் பிரமிப்பூட்டும் வகையில் வயலின் இசையால் அளிக்கிறார்.
‘பொன்மகள் வந்தாள்’(QFR-475) இன் ஆரம்ப வயலின் ஸ்ட்ரிங் இசையை மிரட்டலுடன் வழங்கியிருப்பார்.
‘ஆணிப்பொன் தேர் கொண்டு
மாணிக்கச் சிலையென்று’ (QFR-405)எனும் சுசிலாம்மாவின் ஆரம்ப வரிகளுடன் இணைந்து ‘அழகிய தமிழ்மகள் இவள்’ பாடலின் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என பாடல் முழுக்க எல்லா வரிகளுடன் ஃபில்லர்ஸாக மட்டுமன்றி இடையிசையையும் மற்ற இசைக்கலைஞர்களுடன் கொடுத்திருப்பார். குறிப்பாக 2வது சரணத்திற்குப்பிறகு ‘பப் பப் பப் பப் பபபபா’ எனும் குழந்தை பொம்மைகள் எழுப்பும் இசை ஒலி போல வித்தியாசமான இசையை தன் சகாக்களுடன் வயலினினில் வாசித்து பிரமிப்பூட்டுவார்.
‘தாலாட்டுதே வானம்’ (QFR-449) பாடலில் நம்மை தாலாட்டியபடியே வயலின் இசையை கொடுத்திருப்பார், அலையில் கட்டுமரம் அசைந்து அசைந்து ஆடுவது போன்ற உணர்வுடன்.
தலைவாழை இலையுடன் முழு விருந்தளித்தது போன்ற மற்றொரு பாடலானது ‘சின்னப்புறாவொன்று’(QFR-533). சோகம் கலந்து, ஆவி அங்கங்கே தென்படும் இந்த பாடல் முழுவதும் சோகத்தை வெளிப்படுத்தும் இவரது வயலின் இசை நம்மை மலைக்க வைக்கிறது.
எத்தனை பாடலுக்குத்தான் இவருக்கு மகுடம் சூட்டுவது! ஹிந்துஸ்தானி ஜோக் (Jog) ராகத்தில் ரவீந்திரன் மாஸ்டர் இசையமைத்த ‘பிரமதவனம் வீண்டும்’ QFR பாடல் நேற்று சுபஶ்ரீ அவர்கள் வழங்கும்போது பாடல் வரிகளினூடே ஒலித்த இவரது வயலின் இசையின் மகத்துவத்தை ஆனந்தக்கண்ணீருடன் விவரித்தார். மறக்காமல் QFR-551 பாடலை பாருங்கள். உறைந்து விடுவீர்கள். அவ்வளவு நேர்த்தி.
QFR-250 ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ மற்றும் QFR-249 (உள்ளம் என்றொரு கோயிலிலே) இரு பாடல்களின் ஆரம்பம் முதல் கடைசி வரை வயலின் இசையால் அசத்துகிறார் .
இவரது காலரை தூக்கி விடும் மற்றொரு பாடல் ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ (QFR-502). பாடல் முழுவதும் வயலின் இழையோடும் மெல்லிய சோக இசை மெய்சிலிர்க்க வைக்கிறது.
QFR-285 ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலின் அரம்ப மற்றும் இடையிசை யல்லாது இவர் சரணங்களுக்கு மத்தியில் தன் தனி (solo) வயலின் இசையால் பிரமிக்க வைப்பார். குழுவினரிடமிருந்து பிரித்து தனியாக இவரை கட்டம் கட்டிக்காட்டுவார் எடிட்டர் சிவா Shivakumar Sridhar.
சுபஶ்ரீ அவர்கள் சொன்னது போல இசைமேதை TKR அவர்கள் இருந்திருந்தால் QFR-407 (கண் போன போக்கிலே கால் போகலாமா’) கேட்டு இவரைக்கட்டியணைத்து உச்சி முகர்ந்திருப்பார். நடுவே TKR அவர்கள் தன் கையால் வாசித்த அந்த சிறிய (solo) தனிப்பகுதியை QFRஇலும் இவர் தனியாக வாசித்திருப்பது மிரட்டல். பாடல் முழுக்க வரும் வயலினின் சிம்ஃபனி ஸ்டைல் இசையை மிக அற்புதமாக இவரது குழுவினர் வாசித்திருப்பர்.
இந்த வரிசையும் பாருங்கள்:
(QFR-319) ‘தொட்டால் பூ மலரும் பாடலின் இடையிசை,
QFR-221 (கண்மணியே காதல் என்பது)
QFR-545 (ஆகாய கங்கை)
QFR-261 (ஜெர்மனியின்)
QFR-484 (அழகு ஆயிரம்)
QFR-317 (நினைவோ ஒரு பறவை)
மலையாள இசை உலகில் தனியிடத்தைப்பெற்றவர். திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். நிறைய உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். தொலைக்காட்சி நேர்க்காணல் கொடுக்கிறார். கப்பா டீவியில் வருகிறார். QFR இன் முக்கிய பங்களிப்பாளர். ஆனால் அந்த பணிவும், அமைதியும், குறைந்த அளவு பேச்சும் தனது தனித்துவமான திறமைகளுடன் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்கிறது எனலாம்.
இவரது ஓவியம் வரைந்த பின் 15க்கும் மேலான இவரது பாடல்களைத்தேடி தனித்தனியாக ரசித்துக்கேட்டு இவரது பாண்டித்யத்தைப்பற்றி இப்பதிவு இடுவதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.
இவர் முகநூலில் நான் தொடரும் நண்பர் Francis Xavier Violin.
No comments:
Post a Comment