அம்மா மண்டபத்தை ஒட்டி காவிரிக்கரையில் தேசிங்கு பிள்ளைத்தோட்டம். உள்ளே நிறைய மரங்களுடன் குளுகுளுவென காற்று. அந்தப்பக்கம் காவிரி படித்துறை. நாலு ஏக்கர் நிலப்பரப்பளவுள்ள அந்த தோட்டத்தின் தரையில் செங்கல்லால் ஏழெட்டு கட்டங்கள் போட்டு, தடுப்புக்கயிறு கட்டி, தனித்தனியாக நிறைய குடும்பங்கள் இறந்தவர்களுக்கு காரியம் செய்துகொள்கிறார்கள். தற்போதெல்லாம் நிறைய பெண்களும் கலந்துகொள்கிறார்கள். 3 மணி நேர வாடகையாம். சரியான கூட்டம். காரியம் முடிந்தவுடன் அங்கேயே படக்கென மடக்கு மேசையை அன்ஃபோல்டு செய்து பொங்கல் இட்லி காபி என டிபன்.
ஒரு காலத்தில் அம்மா மண்டபம் ஆளறவமற்ற பகுதியாக இருக்கும். மங்கம்மா நகரில் நண்பன் Venkat Kamatchinathan உடன் ICWA பரிட்சைக்கு கம்பைன்ட் ஸ்டடீஸ் முடித்து இரவு 9 மணிக்கு அம்மா மண்டபம் வழியாக போகும்போது வெறிச்சோடிக்கிடக்கும் ரோடு கொஞ்சம் பயமாக இருக்கும். இப்ப காமாட்சிநாதன் துபாயிலிருக்கிறான். 90களில் பம்பாயிலிருந்து திருச்சிக்கு விடுமுறைக்கு போகும்போது அம்மா மண்டபத்திலிருந்து நான்கே கட்டிடங்கள் தள்ளி நண்பன் ரங்குவின் வீட்டிற்கு போவேன். தட்டில் சீடை முறுக்கு மற்றும் காபி கொடுப்பார்கள் ரங்குவின் அம்மா. தற்போது அந்த பழைய வீடுகளை இடித்து விட்டு நிறைய ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் சாலையை ஆக்கிரமித்தபடி டீரிஸ்ட் வண்டிகள். ஆந்திரா சுற்றுலா பயணிகள் ரெண்டு பக்கமும் பார்க்காமல் சரேலென சாலையை கடந்து, நம்மை சடன் ப்ரேக் போட வைத்து, உபரியாக நம் இரத்த அழுத்தத்தையும் உயர்த்துவார்கள்.
காலையில் கொஞ்சம் சீக்கிரமே அங்கே போய் விட்டோம். உறவினருக்கான காரியப்பணிகள் இன்னும் ஆரம்பிக்காததால், அண்ணா Venkatesan Ravichandran ‘ஶ்ரீதர்! நீங்க காபி சாப்ட்டு வந்துடுங்களேன்’ என கேட்டவுடன் வண்டியை கிளப்பினோம். கல்யாண மண்டபங்கள், ஹயக்ரீவா ஓட்டல், ஶ்ரீனிவாச பெருமாள் கோவில், திருமஞ்சன காவேரி பாலம், மங்கம்மா நகர், ஶ்ரீராகவேந்திரா முகப்பு வளைவு.. பல வருடங்களாக பார்த்த இடங்களை கடந்து காரில் ராஜகோபுரத்தை நெருங்க நெருங்க எதிரே கோபுரத்தை பார்க்க பிரமிப்பாக இருந்தது (வீடியோ பார்க்க!)
வண்டியை ஓரத்தில் போட்டு விட்டு சாலையை கடந்தால் உலகப்புகழ் பெற்ற முரளி காபி கடை. கடைக்கு பெயர்ப்பலகை இல்லை. சிறிய பெட்டிக்கடை சைஸில் தான் ஸ்தலம். கடை வாசலில் பத்து பதினைந்து பேர். பால் ஒரு பக்கம் கொதிக்க, அந்தாண்ட ஃபில்டரில் டிகாஷன் (டிகாக்ஷன் அல்ல
) இறங்கிக்கொண்டிருந்தது. காபி கலக்கும் இளைஞர் ஒருவர். பக்கத்தில் பித்தளை ஃபில்டரை பளபளாவென துலக்கும் முதியவர். காலி டபராக்களை எடுத்துப்போய் அலம்ப ஒரு முதியவர். பால் காய்ச்சி காபி டிகாஷன் போட என ஆறேழு சிப்பந்திகள்.

ஏழெட்டு டபராக்களை கடாபுடாவென எதிரே பரப்பி குழிக்கரண்டி நிறைய சர்க்கரையை அசால்ட்டாக அள்ளி வீசினார் இளைஞர். பிடி வைத்த கெட்டிலிலை உயர்த்திப்பிடித்து டிகாஷனை சூடான டபராக்களில் சர்ரென விட்டார். ஆடையை அப்பால் தள்ளி விட்டு நுரையுடன் பாலை மொண்டு டிகாஷன் மேல் கொட்டி அந்த பாலாலேயே டம்ளரை நகர்த்தி, டம்ளர் நிரம்பியும் தாராள மனசோடு பக்கவாட்டிலும் பாலை விட்டார். நின்றபடியே மக்கள் டபரா டம்ளரை மாற்றி மாற்றி ஆற்றி உறிஞ்சி குடித்தனர்.
காபி அருந்தும் அநேகம் பேர் ஷுகர் தூக்கல் கேஸ் போலும். ‘ஷுகர் குறைவா போடுங்க’ என சொல்லி நாங்களும் ரசித்து குடித்தோம். நுரைப்புள்ளிகளுடன் அடர்ந்த காக்கி கலரில் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் காபியை பருகியபடி எதிரே பிரம்மாண்டமான ராஜ கோபுரத்தின் அழகை ரசித்தோம். எப்போதும் கூட்டம் இருப்பதால் புதிதாக காய்ச்சிய பால் மற்றும் ஃபரெஷ் டிகாஷனால் அமிர்தமான கள்ளிச்சொட்டு காபி நம் மனசை லேசாக்கி தனி புத்துணர்ச்சி கொடுக்கிறது என்பது உண்மை.
பாலை டபராவில் விடும்போதாவது அந்த இளைஞருக்கு அளவு தெரியும். ஆனால் டிகாஷனை எப்படி கச்சிதமான ஒரே அளவில் விடுகிறார் என்பது தான் விசேஷம். ஆக, வெகுநாட்களுக்குப்பின் முரளி காபி மசக்கை ஒருவழியாக தீர்ந்தது.
No comments:
Post a Comment