Sunday, June 22, 2025

ஜனநாயக கடமை

 காலையில் எழும்போதே மனசெல்லாம் ஒரே குதூகலம், வாழ்க்கையில் இரண்டாம் முறை ஓட்டு போடப்போகிறோமென. 27 வருடங்கள் அயல் நாட்டில் இருந்து விட்டு சென்ற வருடம் தான் முதல் முறையாக கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போட்டோம்.

நேற்றே எங்கள் குடியிருப்பு வளாகத்தில் அசோசியேஷன்காரர்கள் எங்களுக்கான வோட்டர்ஸ் ஸ்லிப்புகள் தயாராக வைத்திருந்தும், பக்கத்தில் மல்லேஷ்பால்யாவில் இருக்கும் ஷட்டகர் ப்ரோ அருகில் பூத் பிரெசிடென்ட்டிடமிருந்து எங்களது வோட்டர்ஸ் ஸ்லிப்புகளை வாங்கி விட்டார். எங்கள் பூத் ரொம்ப தூரமெல்லாம் இல்லை. அடுத்த காம்பௌண்டிலிருக்கும் DRDO கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தான். அப்புறமென்ன! ஜனநாயகக் கடமையை ஆற்றப்போகிறோமென மகிழ்ச்சி.
மனைவி Usharani Sridhar சத்துமாவு இத்யாதி என இரண்டு மூன்று மாவு வகைகளை இந்தியா கூட்டணி போல கலந்து தோசை வார்த்திருந்தார். தோசை நல்லா வந்துச்சா.. இல்ல ஒட்டி ஒட்டாமெ வந்துதா?’ போன்ற கேள்விகளை அனாவசியமா கேட்கக்கூடாது! தொட்டுக்க மிளகாய் சட்னியுடன் தோசையை மொஸ்க்கும்போதே பால்கனி வழியே மக்கள் கூட்டம் கூட்டமாக ஓட்டுச்சாவடியிலிருந்து கைவிரல்களை பார்த்தபடியே வருவது தெரிந்தது. காலையில் கூட்டம் இருக்குமென்பதால் மதியம் எல்லோருக்கும் வயிறு பசிக்கும் நேரம் போகலாமென காத்திருந்தோம்.
சி.வி ராமன் நகர் DRDO சாலையின் இருமருங்கிலும் வரிசையாக மேசை நாற்காலி போட்டு காங்கிரஸ் மற்றும் பிஜேபி காரியகர்த்தாக்கள் கழுத்தில் அவர்களது கொடி வர்ண துண்டுடன் பூத் விலாசம், அறை எண், வரிசை எண் விபரங்களை சரிபார்த்து மக்களுக்கு உதவிக்கொண்டிருக்க, நாங்கள் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையுடன் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நுழைந்தோம். பள்ளிக்கூடம் என்பதால் எல்லா வகுப்பறைகளிலும் பூத் வைத்திருந்தார்கள். மொபைல் போன் அனுமதி இல்லையாம். வோட்டர் ஐ.டி, ஆதார் மற்றும் வரிசை எண் விபரங்கள் தயாராக வைத்திருந்தோம். வரிசையில்… வரிசையா! நாங்க ரெண்டு பேர்தாய்யா!
எல்லாம் சரிபார்த்து விரலில் மையை வைத்து, லிஸ்ட்டில் உள்ள என் பெயரை தேடி ‘நீவு சீதாபதி அவுரா?’ என கேட்க நான் ‘அவுரு நன்ன தந்தே.. நன்ன எஸ்ரு ஶ்ரீதர் சீதாபதி’ என்றதும், என் பெயருக்கு எதிரே கையெழுத்து வாங்கிக்கொண்டு ‘அல்லி ஹோகு!’ என தேர்தல் சிப்பந்தி உள்ளே அனுப்பினார். வரிசையாக வேட்பாளர்கள் பெயர்கள் இடது பக்கமும், வலது பக்கம் பெயர்களுக்கெதிரே நீலக்கலர் பட்டன்கள். கை லேசாக நடுங்கியது, பேர் மாத்தி குத்திடப்போறோமென. நாம் குத்த வேண்டிய வேட்பாளர் பெயரை சட்டென தேடி நவாப்பழ கலர் பட்டனை அழுத்த பக்கத்தில் சிகப்பு விளக்கு எரிந்தது. பக்கத்திலிருந்த இன்னொரு இயந்திரம் பளிச்சென விளக்கெறிய, இயங்க ஆரம்பித்தது. குடியிருந்த கோவில் படம் போல இருந்தது. நாம் குத்திய வேட்பாளர் பெயர் கொண்ட ஸ்லிப்பானது கண்ணாடிக்குள் ரிப்பன் பக்கோடா போல வளைந்து எழுந்து சில நொடிகள் நம் கண்களுக்கு தெரிந்து படக்கென கீழே பெட்டிக்குள் விழுந்ததும் சிகப்பு விளக்கு மறைய, வெளியே சிப்பந்தி ‘ஆயித்து… நீவு பன்னி சார்’ என கத்த சற்று அதிர்ந்தோம், என்னப்பா இது, வெள்ளிக்கிழமையதுவுமா பன்னி கின்னின்னு மரியாதை இல்லாம! அது Banni… பன்னி அல்ல.. ‘வாங்க’ என அர்த்தம். அந்த ஸ்லிப் பெட்டிக்குள் விழ ஏழு நொடிகள் எடுக்குமாம். அதற்குள் வேட்பாளர் பெயரை நாம் சரிபார்க்கலாமாம்.
நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் மற்றும் கட்சி வெற்றி பெற மானசீகமாக வாழ்த்திக்கொண்டே வயிற்றில் லேசாக பசியுடன் வெளியே வந்தோம். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மஹதேவ்புரா ஃபினிக்ஸ் மாலில் வண்டியைப்போட்டு விட்டு மேலே உணவு மன்றம் (ஃபுட் கோர்ட்டை மொழிபெயர்க்கனுமே! உணவு நீதிமன்றம் இல்லையாம்) போய் பழைய தில்லி (Purani Dilli) உணவகத்தில் அடைத்த அல்லது பனீர் அடைக்கப்பட்ட ரொட்டி (ஸ்டஃப்டு பரான்ட்டா), காபூலி சன்னா, மண்சட்டி லஸ்ஸி எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு அங்கேயே செல்ஃபி எடுத்து நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, வரும் வழியில் கிருஷ்ணராஜபுரம் அருகே உடுப்பி பார்க் ஹோட்டலில் காபி குடித்து வீடு திரும்பி, ஆஹா! ஜனநாயகக் கடமை ஆற்றிய வைபவம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment