Sunday, June 22, 2025

ஜான்சன் மார்க்கெட்

 

பெங்களூர் எம்ஜி ரோட்டிலிருந்து சில நிமிட தூரத்தில் ரிச்மாண்ட் டவுன் பகுதியில் உள்ளது ஜான்சன் மார்க்கெட். ஆங்கிலேயர்கள் கட்டிய இந்த பழங்கால வளாகத்தில் 60க்கும் மேற்பட்ட கடைகள். கடந்த 30 வருடங்களாக நாங்கள் பார்த்து ஒருதடவை கூட வெள்ளையடிக்காமல் அப்படியே உள்ளது. ஸ்திரமான கட்டிடம்.
திடீரென சமோசா, டீ சாப்பிடும் மூட் வந்துவிட்டால் அங்கே தான் ஓடுவோம். வரிசையாக சின்ன சின்ன கடைகள், பேக்கரிகள், ஸ்டேஷணரி மற்றும் டீக்கடைகள். பெங்களூரில் ஒரு பேக்கரியை பார்த்தீர்களென்றால் உடனே பத்து பைக்குகள் எதிரே நிற்க, கன்னடியர்கள் ஒரு கையில் டீ கிளாஸ், மற்றொரு கையில் சிகரெட்டுடன். அதிலும் ஓரிரு பெண்கள் கப் கப்பென புகையை இழுத்து விடுவது சர்வ சாதாரணம்.
வளாகத்தினுள்ளே நுழைந்து மூன்றாவது கடை மக்காஹ் கஃபே. 20 பேர் உட்கார்ந்து டீயடிக்கலாம். வாசலில் வெங்காயம் அடைத்து அவன் செய்யும் முக்கோண சமோசா செம்ம ருசி. ரவையில் அவன் செய்யும் கேக் போன்ற பதார்த்தம் அம்சமாக இருக்கும். பக்கத்து ஐ.டி கம்பெனியிலிருந்து நிறைய இளசுகள். வட இந்திய பையன்கள் தான் டீ போடுகிறார்கள். சுத்தபத்தம் ரொம்ப பார்க்க முடியாது அங்கே. அதனால் பேப்பர் கப்புகளில் டீ வாங்கிக்கலாம்.
பக்கத்தில் அந்தக்கால பேக்கரி ஒன்று, ஶ்ரீதுர்கா பேக்கரி. வாசலில் அலமாரிகளில் ரொட்டி, கேக் வகைகள், பஃப்ஸ்.. இதையெல்லாம் அடுத்து அங்கே சுடச்சுட தயாராகும் கோக்கனட் நான் ரொம்ப பிரசித்தம். மற்ற மாநிலங்களில் இதை தில்பசந்த் என்கிறார்கள். மைதாவில் சர்க்கரை, உப்பு, பால், வெண்ணெய், சோடா உப்பு கலந்து, ஈர மஸ்லின் துணியால் மூடி இரண்டு மணி நேரங்கள் ஊர வைக்கிறார்கள். பின் உருண்டைகளாக்கி சப்பாத்தி போல தேய்த்து நடுவே உலர்ந்த தேங்காய் சர்க்கரை கலவையை வைத்து மேலே இன்னொரு தேய்த்த மைதா மாவை வைத்து மூடி, ஓரங்களை சுருட்டி ஓவனில் வைத்து சுட்டு வெளியே எடுத்தால் கமகம வாசனையுடன் சுடச்சுட கோகனட் நான் ரெடி. கத்தியால் பீட்சா போல வெட்டி சாப்பிடலாம்.
பக்கத்து அலமாரியில் என்னை கவர்ந்தது ப்ளம் கேக். நேர்த்தியாக பேக் செய்யப்பட்டு இருந்தது. ‘ஃப்ரெஷ்ஷா பண்ணினதா?’ எனக்கேட்டேன். பேக்கரி முதலாளியின் நண்பர் (ஷான் என்று பெயராம்) ‘ஆமா சார்.. தினமும் பண்றது தான். உடனே வித்து தீர்ந்துடும். 2,3 நாள் கழிச்சு சாப்பிட டேஸ்ட் இன்னும் கூடும்’ என்றார். டக்கென அவரை புகைப்படமெடுத்தேன். ஒரு பீஸ் வெட்டி வாயில் போட்டால் ஒரு விதமான லேசான கசப்பும், தித்திப்பும், நடுவே அரைபடும் திராட்சை, ப்ளம், முந்திரி என ஆஹா!
‘செம்ம டேஸ்ட்டுங்க.. அந்த கசப்பு கலந்த தித்திப்பு எப்பிடிங்க?’ எனக்கேட்டேன்.
‘அதுவா? மாவு கலவையில் கொஞ்சம் ரம் சேத்திக்குவோம்!’ என்றார் அவர்.
ஐயோ! நாங்கள்ளாம் கன்னுக்குட்டிங்க! என்றபடி காரை எடுத்தோம்.

No comments:

Post a Comment