Sunday, June 22, 2025

இழந்து விட்டோம் டெல்லி கணேஷை

 தன் சுயசரிதை ‘பிள்ளையார் சுழி’யை புத்தகமாக வெளியிடும் முன்பு அதை வாரத்தொடராக முகநூலில் எழுத ஆரம்பித்தவுடன், பஹ்ரைனில் இருந்த எனக்கு அவருடனான தொடர்பு ஆரம்பமானது, காரணம் அதற்கான கார்ட்டூன்கள் வரையும் வாய்ப்பு எனக்கும் Revathi Balaji க்கும்.

ஒவ்வொரு அத்தியாயத்தை சுவாமி (Swaminathan Ramasubramanian ) க்கு அவர் போனில் விவரித்து, சுவாமி அதை உடனே எழுத்துருவாக்கி எனக்கு அனுப்பி, என்ன மாதிரி காட்சியை படமாக வரைய வேண்டுமென்பதையும் விளக்க, நான் வரைந்த படத்தை சுவாமியும் அவரும் சிறு மாற்றங்கள் செய்து புத்தகம் தயாரிக்கப்பட்டது. கைப்பட எழுதிய துண்டுச்சீட்டை சிலசமயம் சுவாமிக்கு அனுப்ப அதைப்பார்த்து காட்சிக்கான ஓவியம் வரைந்திருக்கிறேன்.
சில சமயம் மட்டும் எனக்கு நேரடியாக ‘Mr. Seethapathy Sridhar! Pl call me..’ என குறிஞ்செய்தி அனுப்பி பேசுவார். புத்தக வெளியீட்டுக்குப்பின் அவருடன் தொடர்பு அதிகமில்லையென்றாலும், எப்போதாவது போன் செய்தால் ‘சொல்லுங்க ஶ்ரீதர்’ என்றபடி போனை எடுப்பார்.
பட்டினப்பிரவேசம் படப்பிடிப்புக்கு அவர் விசுவைப்பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியதாக படம் வரையச்சொன்ன நண்பர் சுவாமி, எனது ஸ்கூட்டர் படத்தை பார்த்ததும் ‘அது மோட்டார் பைக்காச்சே! மாத்த முடியுமா ஶ்ரீதர்!’ எனக்கேட்டார். அதற்குள் இவர் ‘வேண்டாம்.. அவரை தொந்திரவு செய்ய வேண்டாம். ஸ்கூட்டர் வரைஞ்சாச்சுன்னா அப்படியே இருக்கட்டும்’ என்றார். அந்த படப்பிடிப்பு தளத்திற்கு இவர் கிராமத்திலிருந்து காதில் பூ சொறுகி வந்து இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் விசுவை சந்திப்பது, பக்கத்தில் இவரது அப்பா மகாதேவ ஐயர் போன்ற காட்சியை சுவாமி வரையச்சொன்னதும் படத்திலிருந்து ஒரு காட்சியை reference image ஆகக்கொண்டு வரைந்த ஓவிய அனுபவம் மறக்க முடியாதது.
‘பிள்ளையார் சுழி’ வெளியீட்டு விழாவில் நேரில் சந்தித்தபோது எனது ஓவியங்களை சிலாகித்து பாராட்டி, மனைவி மற்றும் மகனை அறிமுகம் செய்து வைத்தார்.
‘பாயசம்’ குறும்பட விமரிசனம் மற்றும் எனது ஓவியத்தை பார்த்து ‘ஓவியத்துக்கு உயிர் தந்தீர். உணர்வுகளுக்கும்
உயிர் தந்தீர்’ என வாட்ஸப் மெசேஜ் அனுப்பியிருந்தார்.
பஹ்ரைன் ரேடியோ FM நேயர்களுக்காக இவரது ஒரு மணி நேர நேர்க்காணல் ஏற்பாடு செய்து உடல்நிலை காரணமாக அங்கு வர இயலாமல் போனது.
சென்றமாதம் மன்னார்குடியில் எனது அத்தை மகன் Rajagopal Venkatesan மகள் திருமணத்திற்கு அவரது ஜிகிரி தோஸ்த்தான இவர் வருவதாக இருந்து உடல் நிலை சீராக இல்லாததால் வர இயலாமல் போனதால் ஆவலுடன் இவரை மறுபடியும் சந்திக்க இருந்த எனக்கு ஏமாற்றமே.
சட்டென இழந்துவிட்டோம் இவரை. ஆழ்ந்த வருத்தங்கள்.

No comments:

Post a Comment