80களில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பக்கம் குடியிருந்தோம். SRC கல்லூரியில் படித்த என் மூத்த அக்காவுக்கு (Hemalatha Manohar) சேதுராம பிள்ளை காலனியில் டாக்டர் மாப்பிள்ளை பார்த்து கட்டிக்கொடுத்தோம். சில வருடங்களில் சுப்ரமணியபுரம் சர்ச் அருகே மெயின் ரோட்டில் ஒரு பெரிய வீடொன்று நல்ல விலைக்கு வர ஏழெட்டு லட்சத்துக்கு அந்த வீட்டை அக்கா வாங்கிப்போட்டு தனிக்குடித்தனம் பண்ண ஆரம்பித்தார்.
இப்ப எதுக்கு இந்த கதை! கொஞ்ச நேரம் கழித்து விஷயத்துக்கு வரேன். அக்கா வீட்டிற்கு பக்கத்தில் இருந்த 2 க்ரௌண்டு காலி நிலத்தில் குட்டி குட்டியாக 20 ஸ்டோர் வீடுகளை ஒருவர் கட்டி அதற்கு சிலோன் காலனி என பெயரும் வைத்தார். ஆட்டோக்காரர்கள், டெய்லர்கள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள் என அந்த ஸ்டோர்களில் நிறைய குடித்தனங்கள். ஓனரும் மாதாமாதம் வந்து நல்ல வாடகை வசூல் செய்துவிட்டுப்போவார்.
இப்ப அதுக்கென்ன! என்ன சொல்ல வர்றே என நினைப்பவர்களுக்கு.. கொஞ்சம் பொறுமை! அந்த தெருவில் நிறைய ஆட்டோக்களும், தள்ளுவண்டி மீன்பாடி வண்டிகளும் எந்த நேரமும் போக வர இருக்க, இரவு நேரத்தில் ரோட்டை அடைத்தபடி வண்டிகள் நிற்கும். அந்த சிலோன் காலனியில் நிறைய பேர் நாய் வளர்ப்பதால் பக்கத்து தெரு நாய்கள் இந்த சிலோன் நாய்களை காதலிக்க அங்கே வருவதுடன், ரோட்டிலேயே இரவு பகல் பாராமல் தினமும் காதல் வைபோகமே காணும் நன்னாள் தான். ஜோடிக்கிளிகள்… ச்சீ.. ஜோடி நாய்கள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுவது வழக்கம்.
இது தான் நீ சொல்ல வந்த நாய் காதல் கதையா என கேட்பவர்களுக்கு.. கொஞ்சம் வெய்ட் ப்ளீஸ்.
இப்படியே 30 வருடங்கள் போயிற்று. நான் பஹ்ரைனிலிருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அக்கா வீட்டு மாடியிருந்து பார்ப்பேன், அந்த சிலோன் காலனி வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைவதை. வாடகை சரியாக கொடுக்காமல், வீட்டையும் காலி செய்யாமல் நிறைய அடாவடிகள் வேறு. கில்லாடியான அந்த ஓனர் கோர்ட், கேஸ் என நடவடிக்கை எடுக்காமல் வீடுகளை அப்படியே விட்டு விட, தண்ணீர், மின்சாரம் இன்றி நிறைய வீடுகள் காலியாகி, கடந்த சில வருடங்களாக ஒரு வீடு மட்டுமே பாதி கூரையுடன் இருக்க, மற்ற இடத்தில் இடிந்த சுவர்களும் வீடுகளும் தான்.
இப்ப விஷயத்திற்கு வருகிறேன். எங்கள் வீட்டு மாடியிலிருந்து பார்க்கும்போது தினமும் அந்த ஒரு வீட்டிலிருந்து இளையராஜா, எம்மெஸ்வி பாடல்கள் சத்தமாக கேட்கும். ‘அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே’ என காலையில் ஆரம்பித்தால் இரவு படுக்கப்போகும்போது கூட ‘பூ மாலையே தோள் சேரவா’ சத்தமாக கேட்கும். ‘அந்த ஒரே வீட்ல ஒரு ஆட்டோக்காரர் இருக்கார். அவர் வைஃபோட தம்பியும் அவங்க கூட இருக்கார். தம்பி வேலைக்கு எங்கயும் போறதில்லையாம். தெனம் ரேடியோல பாட்டு கேட்டுட்ருப்பார்’ என்ற தகவலை என் அக்கா கொடுக்க, அந்தப்பக்கத்திலருந்து ‘ருக்கு மணியே பற பற பற’ ஒலிக்க, மனசுக்குள் ஸ்டைலான எம்ஜியார் சட்டென வந்து போனார்.
அடுத்த விடுமுறைக்கு வரும்போது காலங்கார்த்தாலேயே ‘நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என டிஎம்எஸ் பாடல் சத்தம். கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு மாலை வீடு திரும்ப, அந்தப்பக்கம் ‘ ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்’ என இளையராஜாவின் ஆரம்ப காலப்பாட்டு கேட்டது. ‘ஆஹா! செம்மயா பாட்டு போடறாரே அந்த வெட்டி ஆள்! ‘ என நான் ரசிக்க, என் அக்கா ‘பத்து மணிக்கு மேல பாரு. அவரு பாட்டெல்லாம் பாடுவாரு’ என்றார். தூரத்தில் அவர் நிற்பது தெரிந்தது. கிழிந்த சட்டை, முக்கா லுங்கி, எலும்பும் தோலுமாக இருந்தார். சிகரெட் தண்ணி போடுவார் என நினைத்துக்கொண்டேன்.
சொன்னபடியே பத்தரை மணிக்கு ‘உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது’ பாடலை அவர் பாட ஆரம்பிக்க, ஆச்சரியத்துடன் அவர் பாடுவதை கேட்டேன். ‘எனக்கென்று வாழ்வது கொஞ்சம்..
உனக்கென்று வாழும் நெஞ்சம்..
பனி கொண்ட பார்வை எங்கும்..
படிக்காத காவியம்’ என சரணங்களை ஏற்ற இறக்கங்களுடன் கமகங்கள் மாறாமல், பிசகன்றி அவர் பாடுவது கேட்டு மலைத்துப்போனேன். தரையில் நிற்கக்கூட முடியாதபடி படு ஒல்லியாக இருக்கும் அவருக்கு அப்படி ஒரு குரல் வளம்.
சமீபத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் பக்கம் போய் விட்டு திருச்சி வந்தபோது. மாடியில் எங்க டைனிங் டேபிளில் அக்கா நிறைய நெய் விட்டு செய்த பொங்கலை சுவைத்தபடி ‘என்ன சிலோன் காலனி பக்கமிருந்து அந்தாள் பாடற சத்தமே இல்ல!’ எனக்கேட்க அக்கா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்ற வாரம் இறந்து விட்டாராம். வயது 50. திருமணம் செய்துகொள்ளவில்லையாம். கடந்த சில வருடங்களாக சிறுநீரகம் பழுதடைந்து, மாற்று சிறுநீரகம் பொறுத்த வசதியின்றி தன் சகோதரி வீட்டிலேயே இருந்தாராம். சிகிச்சை ஏதும் இல்லாமல் கொடிய நோயுடன் தினமும் திரையிசைப்பாடல்களை கேட்டபடி தனது இறப்பை எதிர்நோக்கி காத்திருந்தவராம். நான் நினைத்தபடி சிகரெட் தண்ணி எதுவும் கிடையாதாம்.
இறப்புக்கு முன்னரே உடல் சிதைவடையத்தொடங்குவதை தினமும் கண்ட அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்! பரமஹம்ச யோகானந்தர் சொல்வது போல “ துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு மரணம் என்பது சரீரத்தின் வலி மிகுந்த சித்திரவதைகளிலிருந்து மீட்சிப்பெற்று விழிப்புடன் கூடிய சாந்தம் மற்றும் அமைதிக்குள் செல்வதாகும்”
“ஒரு புத்திசாலியால் தனது வாழ்க்கையின் இறுதிநாளையும் வளமான வாழ்க்கையாக மாற்றிவைக்க முடியும்” என அறிஞர் கன்ஃபூஷியஸ் சொன்னதுபோல இவர் பாட்டுப்பாடிக்கொண்டும், பாடல்கள் கேட்டபடியும் நிம்மதியாக இறந்தார்.
பி.கு: பெங்களூர்-சென்னை ஷதாப்தி ரயில் ஏறியதும் பொழுது போகாமல் ஜோலார்பேட்டையிலிருந்து கிறுக்க ஆரம்பித்து, சமீபத்தில் நடந்த ஒரு இறப்பைப்பற்றி எழுத.. நேரம் போனதே தெரியவில்லை, வண்டி திருவள்ளூர் தாண்டி வியாசர்பாடி வந்து விட்டது..
No comments:
Post a Comment