Sunday, June 22, 2025

வாரத்திற்கு 90 மணி நேர வேலையா! …


வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் காலை 7 மணிக்கே அலுவலகங்கள் இயங்கத்துவங்கும். மதியம் 12.30 - 3 மணி வரை நீண்ட இடைவேளை. பிரம்மச்சாரிகள் அந்த ப்ரேக்கில் சமைத்து சாப்பிட்டு செத்த கண்ணசந்து தூங்கி விட்டோ, அல்லது ‘கபி குஷி கபி கம்’ பாதிப்படம் பார்த்து விட்டு ஆபிஸ் போவார்கள். மறுபடியும் மாலை 3 - 5.30 வரை ஆபிஸ் என்றாலும் ஆறு, ஏழு, எட்டு என லேட் சிட்டிங் இருக்கும். மதிய இடைவேளையின்போது சாலைகளும் வெறிச்சோடிக்கிடக்கும். வியாழன் மதியம் 1 மணியிலிருந்து வெள்ளியுடன் ஒன்னறை நாள் வார இறுதி விடுமுறை.
இது இப்படியே போய்க்கொண்டிருக்க, சில கம்பெனிகளின் ஆங்கிலேய, ஐரோப்பிய பாஸ்களுக்கு இது போன்ற நேர இடைவெளி பிடிக்காமல் தங்கள் நாடுகளில் உள்ளது போல மிகச்சிறிய அல்லது இடைவேளையே இல்லாத ஸ்ட்ரெய்ட் ஷிஃப்ட் எனப்படும் 7 டு 4 மற்றும் 5 டே வீக் என மாற்ற, அரசாங்க அலுவலகங்கள் தனியாக 7 டூ 2 க்கு மாறினார்கள். தனியார் கம்பெனிகள் வழக்கம்போல மாங்கு மாங்கு என மாலை 5, 6 மணி வரை வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் வேலை பார்த்த ட்ராஃப்கோ கம்பெனி பல்வேறு நாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து உள்ளூர் ஹைப்பர் மார்கெட்டுகள், இராணுவம், என சப்ளை செய்யும் Fast Moving Consumer Goods (FMCG) நிறுவனம். காலை ஆறிலிருந்தே கண்டெய்னர்கள் துறைமுகத்திலிருந்து உணவுப்பொருட்களை கிடங்கில் (warehouse) இறக்குவதும், 60, 70 நீண்ட ட்ரக்குகள் டெலிவரிக்கு கிளம்புவதுமாக இயங்கிக்கொண்டிருந்தோம். 60%க்கு மேல் இந்தியர்கள், மீதம் உள்நாட்டு அரபிய மக்கள்.
Dy CEOவான உள்ளூர் அரபிக்காரர் எனக்கு வலது கை போல உதவிக்கொண்டிருந்தார். எங்களது குழுமத்தில் துணை நிறுவனங்கள் 5 வேறு. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் லிஸ்டான நிறுவனம் வேறு என்பதால் போர்ட், ஆடிட் கமிட்டி மீட்டிங் என எல்லா பெரிய முடிவுகளும் போர்ட் அப்ரூவலுடன் இயங்கும் நிறுவனம்.
அரபிக்கார Dy CEO ஒரு முறை என்னிடம் வந்து ‘நாமளும் 7 டு 4 மற்றும் 5 டே வீக்குக்கு மாறினால் என்ன! அடுத்த போர்ட் மீட்டிங் அஜென்டாவில் நீங்கள் ப்ரொபோஸ் செய்யலாமே!’ எனக்கேட்க எனக்கு தர்ம சங்கடம். ஏதோ எனக்கு நிறைய ரெஸ்ட் தேவைப்படுவதால் கம்பெனி டைமிங்கை மாற்றுகிறேன் என சேர்மன் எண்ணி விடுவாரோ எனத்தயங்கி அவரிடமே கேட்க, ‘வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்’ என வடிவேலு அருண்விஜயிடம் கேட்பது போல குதித்தார். ‘ விலாவாரியா ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணியாரேன், அப்புறம் நீங்க சொல்லுங்க!’ என அவர் சேம்பரிலிருந்து வெளியே வந்தேன்.
அடுத்த சில நாட்கள் நிதி, விற்பனை, மனிதவளம், மெயின்டெனன்ஸ், கொள்முதல், ஸ்டோர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் என எல்லா துறை மேலாளர்களையும் கூட்டி வாரத்துக்கு 5 நாள், தினமும் 7 டு 4 நேரம் கடைபிடிப்பதால் என்னென்ன சாதக பாதகங்கள் இருக்கலாம் என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச்சொல்லி, நிறைய மீட்டிங்குகளை கூட்டி விவாதித்து, மற்ற பெரு நிறுவனங்கள் இதுபோல மாற்றங்கள் செய்து வெற்றிகண்டார்களா எனவும் தகவல்கள் திரட்டினோம்.
அதாவது, சனியன்று அரசாங்க அலுவலகங்கள், பெரும்பாலான வங்கிகள், துறைமுகம் மற்றும் சுங்கத்துறை இயங்காததால் அன்று வங்கி சார்ந்த பணிகள் எங்களுக்கு கிடையா. குறிப்பாக ஷிப்பிங் டாகுமெண்டுகள் வங்கியில் சமர்ப்பிக்கும் பணி இல்லை. சனியன்று பண்டங்கள் துறைமுகத்திலிருந்து எங்கள் கிடங்கிற்கு வர அதிக கட்டணம். துறைமுகத்தில் கிடக்கும் எங்கள் குளிரூட்டபட்ட கண்டெய்னர்களுக்கு பிரத்யேகமாக மின்சார கட்டணம், இராணுவத்திற்கு தேவையான டெலிவரிகள் கிடையாது. இதனால் நிறைய ட்ரக்குகள் காலியாக சுற்றிக்கொண்டு இங்கும் அங்கும் குறைந்த டெலிவரியென பெட்ரோலை விரயப்படுத்தின. சனியன்று குறைவான சேல்ஸ். விற்பனைப்பிரதிநிதிகள் முழு கலெக்‌ஷனுக்கு செல்லாமல் பாதியிலேயே வீட்டிற்கு ஜூட் என ஒட்டுமொத்தமாக உற்பத்தித்திறன் குறைவாக இருந்தது.
முடிவில் புதிய டைமிங் மற்றும் 5 நாள் வாரம் என்பதை ஓரிரு மாதங்களுக்கு அறிமுகப்படுத்தி, விற்பனை குறைந்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது என போர்டுக்கு உறுதியளிக்க இயக்குநர்கள் அரைமனதுடன் ஒப்புக்கொண்டார்கள்.
எங்கள் சேர்மன் மற்றும் வைஸ் சேர்மன் இருவரும் தங்கள் தேசநலனில் அக்கரையுள்ளவர்கள். என்னிடம் ‘ஶ்ரீதர்! இந்தியர்கள் படிப்பறிவு, உழைப்பு என உயர்ந்தவர்கள். இந்த நாட்டு மக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து என மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் நிலை, வசதியில்லாத மற்ற அரபிகள் என்ன செய்ய முடியும்! அதனால் அவர்கள் வாழ்வாதாரம் முன்னேற, ஏழை அரபிய தொழிலாளர்களுக்கு கடன் உதவி, அவர்களது குழந்தைகளுக்கு இலவச படிப்புதவி என நீ உதவும்படி கொள்கைகளை கொண்டுவர வேண்டும், உன்னுடன் அவர்களும் உயர வேண்டும். உள்ளூர்க்காரனுக்கு கிடைக்க வேண்டிய பதவியை உனக்கு கொடுத்திருக்கிறோம். இதை மனதில் கொண்டு எந்த மாற்றத்தையும் நீ கொண்டு வரலாம். மற்றபடி போர்ட் அப்ரூவலெல்லாம் சாங்கிய சம்பிரதாயத்துக்குத்தான் ’என அவ்வப்போது அன்புக்கட்டளை விதித்து ஊக்குவிப்பவர்கள்.
அடுத்த சில மாதங்களில்…
கடும் உழைப்பினால் அடையக்கூடிய அளவில் விற்பனை டார்கெட்டுகள் குறிக்கப்பட்டன. அதற்கேற்ப இன்சென்டிவ்களை உயர்த்தினோம். செயல்படாதவர்களுக்கு நியாயப்படுத்தும் காரணம் கொடுக்கப்படாவிட்டால் வார்னிங் மெமோ என நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தோம்.
விளைவு! ட்ராஃப்கோ விற்பனை அமோகமாக உயர்ந்தது. அரசாங்க டெண்டர்கள் புதியதாக நிறைய வந்தன. டெலிவரிகள் முன்கூட்டியே திட்டம் வகுத்து திறம்பட செயல்பட்டன. best employee அவார்டுக்கு மாதம் ஒருவரை தேர்ந்தெடுத்து உள்ளூர் பத்திரிக்கையில் போட்டோ மற்றும் 100 தினார் சன்மானம் (இன்றைய மதிப்பில் ரூ 22800). எனது அரேபிய டெபுடி CEO ஹவானா சுருட்டை கடித்துக்கொண்டு வியாழன் மாலை மீன் பிடிக்க தன் படகில் நெடுந்தூரம் கத்தார் எல்லை வரை சென்று புத்துணர்வுடன் மறுநாள் மாலை கரை திரும்பினான்(வெள்ளைக்காரர்கள் விரும்பும் மீன் பிடித்தல் பொழுதுபோக்கு). ஓவர்டைம் என்பதே சோம்பேறிகளுக்கானது என்ற உணர்வை உருவாக்கி, ‘ஆவரேஜா நீ ஓவர்டைம்ல எவ்ளோ அதிகம் சம்பாதிக்கிறயோ அதில் பாதியை இன்க்ரிமென்டா சம்பளத்தோட சேர்த்து விடறேன். இனி லேட்டா உக்கார்ரது உன் இஷ்டம், ஆனா பைசா கிடையாது’ என திட்டவட்டமாக புதிய விதிகள் கொண்டு வர, யார் லேட்டாக உட்காருவார்கள்!
ஆச்சு! பதினைந்து வருடங்களுக்கு முன்னால் செயல்படுத்திய 45 மணி நேரம் & 5 நாள் வாரத்துடன் இன்றும் பஹ்ரைன் ட்ராஃப்கோ நிறுவனம் வெற்றிகரமாக லாபத்துடன், வருடாவருடம் பங்குதாரர்களுக்கு அதிக டிவிடென்ட் கொடுத்துக்கொண்டு பணம் நிறைந்த (cash rich) நிறுவனமாக இயங்குகிறது.
பி.கு: இந்த பதிவு பரப்பளவில் சிறியதான மற்ற வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாக குவெய்த், ஒமான், கத்தார் (துபாய், சவுதி சேர்த்தியில்லை) போன்ற சிறிய நாடுகளுக்கு பொருந்தும். உற்பத்தி நிறுவனங்களின் மாடல் வேறென்பதால் அவையுடனும் ஒப்பிட முடியாது. நாராயணமூர்த்தியின் 70 மணி நேரம் மற்றும் சுப்ரமணி அவர்களது 90 மணி நேர பரிந்துரைகளையும் ஒப்பிட இயலாது (அப்பாடா! தப்பிச்சேன் 🙂)

No comments:

Post a Comment