Friday, June 20, 2025

அபி-ஹனி கல்யாண வைபோகமே…


பெங்களூரின் அடர்போக்குவரத்து சாலைகளினூடே காரைச்செலுத்தி பன்னர்கட்டா ரோடு ஐ.ஐ.எம் வளாகத்தையடுத்து இடப்பக்கம் மண்சாலையில் வரிசையாக ரிசார்ட்டுகள். வாசலில் மணமக்கள் பெயர் கொண்ட பதாகைகள். மிராயா க்ரீன் எனும் ரிசார்ட்டினுள் நுழைந்தோம். குரோட்டன்ஸ், விசிறி வாழை, நெடும் உயர பனை/தென்னை மரங்கள், அலங்கார வண்ண விளக்குகள் அனைத்தையும் தாண்டினால் வைபவம் நிகழும் பிரம்மாண்டமான ஹாலில் இசை நிகழ்ச்சிக்கான மேடை அலங்காரங்கள் நடந்துகொண்டிருந்தன. மணமக்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் வருவதற்கு முன்.. யார் இல்லத்திருமணம் இது?
பல வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் சந்திரசேகரேந்திர ஜெயந்தி விழாவினை விமரிசையாக நடத்திய கண்ணன்-ஜானகி (Kannan Nagarajan) தம்பதியின் இல்லத்தில் எங்களது முதல் சந்திப்பு. மஹாப்பெரியவா ஓவியம் வரைந்து பெரிய அளவில் கண்டாடி சட்டம் போட்டு அவர்களுக்கு நான் அளிக்க அந்நிகழ்ச்சிக்கு அழகும், தெய்வீகமும் சேர்த்த ஓவியமது என்பதால் சட்டென… இல்லை.. பச்சக்கென நெருங்கிய நண்பர்களானோம். பின் நட்பு தொடர, சில மாதங்கள் முன் துபாயில் அவர்களை சந்திக்கும்போது பெங்களூரில் பையன் அபிஷேக்கின் திருமண ஏற்பாடுகள் குறித்து அவர் சொன்னது கேட்டு மலைப்பாக இருந்தது. கோலாகலத்திருமணத்தை 3 நாட்கள் ரிசார்ட்டில் கார்ப்பரேட் ஸ்டைலில் நடத்தவிருப்பதாக சொன்னார். எப்படி நடத்தினார் என்பதை பிறகு பார்க்கலாம்.
எங்க விட்டேன்! ஆங்.. நிகழ்ச்சிகளுக்கான மண்டபத்தில் இருந்தேனென சொன்னேன் அல்லவா! திருமணத்திற்காக வீட்டை விட்டு மண்டபம் செல்லும் முன் அபி-ஹனி இருவரின் பெற்றோர்கள் மஞ்சள் தேங்காயுடன் பெரியவர்களின் ஆசிகளைப் பெற்று, மஞ்சள் பிள்ளையார் அமைத்து கணபதி பூஜையுடன் வாத்யாரின் வழிகாட்டுதலுடன் யாத்ரா தானம் செய்யப்பட்டது. பின்னர் வாத்தியார் அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு துண்டில் போட்டு காசி யாத்திரைக்கு எடுத்துச் செல்ல பையனுக்குக் கொடுக்க, பூஜை முடிந்து விநாயகர் முன் சூரைத்தேங்காய் உடைக்கப்பட்டு, கண்ணனின் மாமியார் பவானி திருமதி. கணபதி சுப்ரமணியன் மற்றும் ஷட்டகர் டாக்டர் ராம வெங்கட் (அமெரிக்க UNLV யில் டீன்) இருவரின் தோதாஷ்டகம் மற்றும் ஹன்சினியின் சந்திரா பட்டி மற்றும் காலா பட்டி இருவரின் பாட்டுடன் வீட்டில் இருந்து கிளம்பி மண்டபம் வந்தனர். ஆரத்தியுடன் மணமக்கள் வரவேற்கப்பட்ட, சுப நிகழ்ச்சிகள் ஆரம்பம்.
கலியாணங்களில் மிக முக்கியமான அம்சம் சாப்பாடு. முன்பெல்லாம் கலியாணங்களில் யாரோ ஒரு பெரியப்பா திடீரென பட்டாசு கொளுத்தி போட்டது போல ‘என்னை யாரும் மதிக்கலை, சாப்பிடவும் கூப்புடலை.!’ என குதித்து ஆர்ப்பாட்டம் செய்ய, அவரை சமாதானம் செய்ய ஒரு கும்பலே இறங்கும். தற்போது அதெல்லாம் குறைந்து யாரும் அழைக்காமலேயே முதல் பந்தியில் இடம் பிடிப்பார் அந்த பெரியப்பா. பொதுவாக இலையில் தண்ணீர் தெளித்து, இலையை கழுவி நம் காலில் ஊற்றுவார் பக்கத்து இலைக்காரர். ஆனால் அன்றைய மதியம் இலையில் முதல் ஐட்டம் ஈர டிஷ்யூ. வித்தியாசமான சிந்தனையை பாராட்டி மக்கள் ஆச்சரியத்துடன் இலையை துடைக்க, கர்நாடக ஸ்பெஷல் அக்கி ரோட்டி (அரிசி), தே.சட்னி, ஹரியாலி அரிசி, சாஸ், நெய் மழையுடன் 2 இன் 1 பாதாம்+பிஸ்தா ஹோலிகே(போளி) வைக்கப்பட்டது. அடுத்து ஸ்டாட்டருக்கு த்ரெட் பனீர்+ சாஸ். தவிர ஷேவிகே(சேமியா)+லிச்சி பாயசம், ஹெசருபேலே குக்கும்பர் கொசாம்பரி சாலட், காராமணி பல்யா(கூட்டு), வெண்டிக்காய்+முந்திரி பல்யா, அரிசி த்தோவே(பருப்பு நெய் போல), ப.மிளகாய்+ தக்காளி மிதக்கும் கன்னட பேலே ரசம், கர்நாடக தயிர் சாதம், பலாப்பழ பாயசம், மாங்கா தொக்கு.. யப்பா!
இந்திய திருமண சடங்குகளில் ஒன்றான மருதாணி விழா இனிதாக நடைபெற நிறைய ஆண்கள் கையில் மருதாணி! மாலை இசை விழா. மொளகா பஜ்ஜி, பனீர் புதினா சட்னி, நியூட்ரிசாய்ஸ் பிஸ்கட் வகைகள், ஃபில்டர் காபி, மசாலா டீ என மொஸ்க்கி விட்டு விருந்தினர்கள் இருக்கைகளில் அமர, நண்பர் கணேஷ் (Ganesan Ramamoorthy ) மற்றும் பிரகாஷ் இருவரும் மேடையேறி நிகழ்ச்சியை தொகுத்தளித்தனர். வித்தியாசமாக உறவினர்களே ஒவ்வொருவராக மேடையில் ஏறி பாடி அசத்த, மேடைக்கப்பால் புதினா லெமன் ஜூஸ், பனீர் மற்றும் சாஸுடன் சீஸ் முக்கோணங்கள் கொறிக்க. ஜானகியின் சகோதரி தன் கணவருடன் ‘அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா’ என நொடிக்கொருதரம் கணவரை காதல் பார்வை பார்த்து பாட, பொறாமையுடன் ‘நீங்களும் இருக்கீங்களே!’ என தத்தம் கணவர்களை பார்த்து முறைத்தனர் சில பெண்டுகள். ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை குழந்தைகள் அசத்தலாக பாட, சில சாமிப்பாடல்களை பெரியவர்களும் பாடி தம் வெகுநாளைய ஆசையை தீர்த்துக்கொண்டனர். மணமக்கள் கைகோர்த்து மெல்ல ஒவ்வொருவரிடமும் நெருங்கி குசலம் விசாரித்து பெரியவர்களை வரவேற்று, பிறகு மேடைக்கு தாவி அடுத்து அவர்களும் சில பாடல்கள் பாடி ஆட, பெண்ணின் சகோதரர் ஹ்ருதய் தன் மனைவியுடனும், பையனின் சகோதரி அனுஷாவும் களமிறங்க ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ கணக்காக ஆடல் பாடல் மயம். வேடிக்கை பார்த்த நமக்கும் கைகால்கள் பரபரவென ஆடத்துடிக்க சாப்பிட எழுந்தோம். பக்கத்து டைனிங் ஹாலில் நான்கு வகை பானிபூரி, மூங்தால் டிக்கா, ரகடா பட்டீஸ், முல்பாகல் மசால் தோசை, புலாவ், தவா பலாப்பழ பிரியாணி, பிசிபேலாபாத், ஃபுல்கா வகைகள், பலாப்பழ அல்வா, ரசகுல்லா, பான் ஐஸ்க்ரீம் என எல்லாவற்றையும் உள்ளே தள்ளி விட்டு அங்கேயே இன்னொரு ரிசார்ட்டில் ஏற்பாடு செய்திருந்த அறைகளில் தூங்கப்போனோம்.
இரண்டாம் நாள்..
காலை நாஷ்டாவிற்கு கொட்டை ரவா இட்லி+ உ.கி சாகு, போண்டா சூப், கர்நாடகா காராபாத் (உப்புமா), சட்னி வகைகள், காலி தோசா (நம்மூர் கல் தோசை), சப்போட்டப்பழ அல்வா, காபி, டீ என அமர்க்களமாக ஆரம்பம்.
மரங்களும் பூக்களும் அடர்ந்த அழகிய தோட்டத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் நிச்சயதார்த்த சடங்குகள்ஆரம்பம். காலையில் விரதம் சடங்கு, அதாவது மணமகன் அபிஷேக் தனது 'பிரம்மச்சார்ய விரதத்தை' முடித்து, 'கிரஹஸ்தா' வாழ்க்கையை நடத்துவதற்குத் தனது குருவான தந்தை கண்ணனிடம் அனுமதி பெற்று, வாத்தியார்கள் சில சம்ஸ்காரங்களை செய்து, அனைத்து தீமைகளிலிருந்தும் மணமக்களை பாதுகாக்க வேத மந்திரங்களை உச்சரித்து மணமக்கள் மணிக்கட்டில் காப்பு கட்டப்பட்டது.
அடுத்து அதே வளாகத்திலுள்ள கோவிலில் பூஜை செய்து மாப்பிள்ளை அழைப்பு துவங்க, ஆண்களும் பெண்களும் ஊர்வலத்தில் ஆடத்துவங்கினர். கண்ணன்-ஜானகி மற்றும் சம்மந்தி ராஜ்குமார்-உமா தம்பதியினர் செம்ம டான்ஸ். அழகிய அலங்கார மண்டபத்தில் நிச்சயதார்த்தம். தடைகளை நீக்க முதலில் பிள்ளையாருக்கு பூஜை, பிறகு பெரியவர்கள் முன்னிலையில் மணமக்கள் மோதிரங்களை மாற்ற, லக்ன பத்திரிக்கையை வாத்தியார் முழு குடும்பத்தின் முன்னிலையிலும் சத்தமாக வாசித்தார். நகைகள், புடவைகள், அன்றாடத் தேவைகள், உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் உட்பட ஏராளமான பரிசுகளை இரு குடும்பங்களும் வழங்கிக்கொள்ள, மண்டபத்திற்கு வெளியே புற்திடலில் உப்பு மிளகாப்பொடி மாங்கா, நிலக்கடலை சுண்டல், ஐஸ்மோர், கரும்புச்சாறு, சரக் சரக்கென துருவிய ஐஸ் கோலா விதிநோகம் மற்றும் நிறைய விளையாட்டுக்கள் நடைபெற, விருந்தினர்கள் பரவசத்துடன் இங்குமங்கும் ஓடி, விளையாடி, உண்டு மகிழ்ந்தனர்.
25 ஐட்டங்கள் கொண்ட மதிய உணவில் திராட்சை கொசாம்பரி, சேப்பங்கிழங்கு கறி, ஆவக்கா கோங்கூரா அரிசி, பாப்கார்ன் ரொட்டி, ஆந்திரா பப்பு கூற, இளநீர் பாயசம் போன்ற வித்தியாசமான பதார்த்தங்கள். இலையில் வைக்கப்பட்ட பலாச்சுளையின் பக்கத்தில் இங்க் ஃபில்லர் எதற்கு? அது இங்க் அல்ல.. தேனாம்! பலாச்சுளை மீது பீய்ச்சி அடித்து அப்படியே நம் சட்டையில் சிந்தாமல் வாய்க்குள் தள்ளி ஸ்வாஹா செய்ய! அப்புறம் மதியம் மூன்றிலிருந்து கோலாகலம் தான். புகைப்படப்பிடிப்பு, ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசு வழங்குதல், மருதாணி விழா, இரு குடும்பங்கள் அறிமுகப்படுத்துதல், சங்கீத் எனப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கண்ணன்-ஜானகி மற்றும் சம்மந்தி தம்பதியரின் நடனங்கள், மணமக்களின் டூயட், உறவினர்களின் ஆட்டம் பாட்டம் என ஜரூராக நடக்க விருந்தினர்களும் மஸ்க் மெலன் பழச்சாறு, பனீர் பார்பிக்யூ, தம் ஆலு, குழந்தை சோளம் (பேபி கார்ன் 😃), என கொறித்துக்கொண்டே இரவு பத்து மணி வரை நிகழ்ச்சியை ரசித்தனர்.
இரவு உணவுப்பரவல் அபாரம். குறிப்பாக பாதாம்-ப்ருக்கோலி சூப், தக்காளி ஷோர்பா, சார்மினார் மசால் தோசை, சுருட்டிய இலையில் வேகவைத்த குஸும் இட்லி, baked ரசமலாய், சிகப்பு அரிசிக்கஞ்சி, ஜாஸ்மின் அரிசி, தாய் பச்சைக்கறி, ஹாஜி அலி க்ரீமுடன் மாம்பழத்துண்டுகள், பான் பீடா என வித்தியாசமான உணவு வகைகள். பெருத்த வயிறுடன் ஆடியசைந்து அறைக்கு திரும்பினோம்.
மூன்றாம் நாள் கோலாகலத்திருமண வைபவங்கள். காசி அல்வா, சக்கரைப்பொங்கல், கோசு வடை, இட்லி மிளகாய்ப்பொடி, மசாலா பெண்ணெ தோசா, சிறிதுள்ளி வெங்காய சாம்பார், தஞ்சாவூர் கொத்ஸு, சட்னி வகைகளுடன் காபி என அமர்களமாக நாள் துவங்கியது. ப்ரம்மச்சாரியான மாப்பிள்ளை அபிஷேக் கையில் கைத்தடி, விசிறி, புஸ்தகம், உணவு பொருள் ஆகியவையுடன் உத்திரியம் (பஞ்சகச்சம்) தரித்து, இரட்டைப்பூணலுடன் க்ருஹஸ்தராவதற்கு தாயாராகி, சடனாக திருமணப்பந்தலில் இருந்து விலகி காசியாத்திரை செல்லக்கிளம்ப, ‘ஒ.. மை காட்’ என மாமனார் ராஜ்குமார் (இவரே மாப்பிள்ளை மாதிரி இருக்கார்) பையனை போக விடாமல் நிறுத்தி ‘டியர் அபி! இட்ஸ் நாட் ஃபேர்! வை டோன்ட் யு மேரி மை டாட்டர் ஹன்சினி! லேட்டர் நீ மனைவி குழந்தைகளுடன் காசியாத்திரை சந்தோஷமாக போலாமே! உடனே சன்யாஸத்தை கலைந்து விட்டு க்ரஹஸ்தாஸ்ரமம் எடுத்துக்கோ.. கமான் மை பாய்! என ஸ்டைலாக ரிக்வெஸ்ட் விட்டார். உடனே மணமகன் அபி கூல் டவுனாகி சன்யாஸத்தை கலைந்து விட்டு உள்ளே வர, மணமகள் ஹன்சினி மாலையுடன் தயாராக அவனை வரவேற்க காத்திருந்தாள். சம்பந்தப்பட்ட மாமா /உறவினர்கள் தோளில் சுமக்க ‘மாலை மாற்றல்’ சிரிப்பும் கும்பாளத்துடன் சிறப்பாக நடந்தது.
மணமக்கள் ஊஞ்சலில் அமர உறவினர்களும் நண்பர்களும் சூழ்ந்துகொண்டு அபி-ஹனியை வாழ்த்தி லாலி பாட, ஆசி வழங்கி திருஷ்டி கழித்த சீனியர் பெண்கள் கலர் அரிசி உருண்டைகளை ரிவர்ஸ் பௌல் செய்தார்கள். ஊஞ்சலின் சங்கிலிகள் பிரிக்க முடியாத தெய்வீகப்பிணைப்பை குறிப்பதாகும். வாழ்க்கை ஊஞ்சலைப்போல ஏற்ற இறக்கங்களுடன் இயங்கினாலும் அமைதியும் ஸ்திரத்தன்மையுடனும் இருக்க வேணும் என சொல்கிறதாம் இந்த இனிமையான ஊஞ்சல் வைபவம்.
அடுத்து மேடையை வாத்தியார்கள் டேக் ஓவர் செய்ய , அவர்களது ஜூனியர்கள் கன்னிகாதானம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்த்துக்கொள்ள, கணீரென மந்திர உச்சாடனங்கள் ஒலிக்க, கண்ணன்-ஜானகி அளித்த 9 கெஜம் கூரைப்புடவையை ஹன்சினி அணிந்து கொண்டு அப்பா ராஜ்குமாரின்
மடியில் அமர, அவளது கையில் இருக்கும் தேங்காயின் மீது அம்மா உமா தண்ணீரை ஊற்றி, ‘எங்கள் மகளை உங்களுக்கு இதோ கொடுக்கிறோம்’ என பறைசாற்றுவதாக குறிப்பிட, மணமகன் அபி தன் மாமனாருக்கு தனது தோழமையை உறுதிப்படுத்துவதாக இந்த ஐதிகம் சொல்கிறதாம். இந்த உலகில் பலவித தானங்களில் தலைசிறந்தது கன்யாதானம் எனும்படியாக தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த கன்னிகாதானம் எனும் நிகழ்வில் சொல்லப்படுகிற சங்கல்பமும், ‘தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மம ஆத்மனஸ்ச, ஏகவிம்சதிகுல உத்தாரண..’ எனத்துவங்கும் மந்திரமுமே நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தி பார்ப்பவர்களை பரவசப்படுத்தி ஆனந்தக்கண்ணீர் வரவழைத்தது.
அடுத்து பார்வையாளர்களிடையே அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும்
நல்வாழ்த்துக்களுக்காகவும் மாங்கல்யம் பரப்பப்பட்டு, மந்திரங்கள் ஒலிக்க, நாதஸ்வர மேளம் முழங்க, அபிஷேக் மாங்கல்யத்தை ஹன்சினி கழுத்தில் கட்டிய மாங்கல்ய தாரணம் நிகழ்வை கண்டு மேடை நோக்கி முன்னேறிய பெரியவர்கள் மணமக்கள்
மீது பூக்கள் மற்றும் அட்சதையை பொழிந்தார்கள். அதற்குப்பின் பூஜை, சம்பிரதாயங்கள், பெரியவர்களிடம் ஆசி வாங்குதல், புகைப்படங்கள் என மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் மேடையில் பிசியாக இருக்க நாங்கள் உணவுக்கூடத்திற்கு படையெடுத்தோம்.
பால்பாயசம் மற்றும் கவர்ச்சிகரமான டைனி பேபி ஜாமுன் இனிப்புடன் மதிய உணவு ஆரம்பம். பெண்விரல் பச்சடி (பயப்படாதீங்க.. லேடீஸ்ஃபிங்கர்/வெண்டிக்காய்), அன்னாசி பழப்பச்சடி, ப.உசிலி, ச.வள்ளிக்கிழங்கு காரக்கறி, கூட்டு, வத்தக்குழம்பு, பருப்புருண்டைக்குழம்பு, சாம்பார், மைசூர் ரசம், ஆமவடை, புளிஇஞ்சி, அரிசி அப்பளம், உலர்பழ ஜெல்லி ரோல்.. சாப்பிடும்போதே சிலர் பெல்ட்டையும் வேஷ்டியையும் தளர்த்தி விட்டு மட்கா மலாய் பழங்கள் மற்றும் திரவ தாம்பூலத்தை (Liquid Pan shots) உறிஞ்சினர்.
மதியத்திற்கு மேல், மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் மண் பானைகளில் விதைக்கப்பட்ட ஒன்பது வகையான ஊறவைக்கப்பட்ட தானியங்களின் முளைத்த விதைகள்… பெரிய பித்தளை அடுக்கில் நிறைய ஜலம் வைத்து பக்கத்தில் பாலிகைகளை கொண்டு வந்து வைத்து, இரு குடும்பங்களைச் சேர்ந்த சுமங்கலிகள் தண்ணீரில் கலந்த பாலைத் தெளிப்பதன் மூலம் தம்பதியருக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வு மற்றும் அவர்களின் சந்ததியினருக்கான ஆசீர்வாதங்களுடன் பிரார்த்தனை செய்யப்பட்டது. பாலிகைகள் கரைக்கபட்ட நீரை நடுவில் வைத்து, அதை பிரதக்ஷிணமாக சுற்றியபடி
மணப்பெண் சகிதம் பெண்கள் அனைவரும் ஆடிப்பாடி இனிமையாக முடிந்தது பாலிகை கரைத்தல் வைபவம்.
அதைத்தொடர்ந்து தேங்காய் உருட்டி, அப்பளம் உடைத்து பலத்த சிரிப்பு, கும்மாளத்துடன் நலங்கு வைபவமும் இனிதாக நடந்தேரியது.
மூன்று நாட்கள் அந்த ரிசார்ட்டில் டேரா அடித்து முழு கல்யாண வைபவங்களை எல்லா கட்டங்களிலும் கண்டு ரசித்து, ஏராளமான வளைகுடா நண்பர்களுடன் அரட்டை, கும்மாளம் எனக்கூடி மகிழ்ந்து விதவிதமான பதார்த்தங்களை சுவைத்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நானும் மனைவி Usharani Sridharம் தலா இரண்டு கிலோ எடையை கூட்டிக்கொண்டு வீடு திரும்பினோம்.
எந்தவித ஆர்ப்பாட்டமோ, கலியாண கலாட்டா மற்றும் டென்ஷன் ஏதுமின்றி கூலாக திருமணத்தை வெற்றிகரமாக நடத்தினர் கண்ணன்-ஜானகி மற்றும் ராஜ்குமார்-உமா தம்பதியினர். இந்த திருமணத்திற்காக பல மாதங்களாக திட்டமிடுதலும், தொலைபேசி உரையாடல்களும், குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல்களும் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
திருமணத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நடத்த திட்டமிட்டதாக கண்ணன் சொன்னார் எனக்குறிப்பிட்டருந்தேன் அல்லவா! எப்படி என்பதை அவரது துபாய் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தபோது விளக்கினார். கிச்சனில் ஜானகி மேற்பார்வையில் இரவு உணவிற்கு முன் தயாரான சுடச்சுட வடை பஜ்ஜியுடன் உட்கார்ந்தோம். மடிக்கணினியை உயிர்ப்பித்து விரிதாளில் (spread sheet) சில கோப்புகளைத்திறந்து கண்களில் பிரகாசத்துடனும் விளக்கினார் கண்ணன். கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்களின் லிஸ்ட், தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்ட அறைகள், 3 நாட்கள் சாப்பாட்டிற்கு அமர்த்தப்பட்ட கேட்டரர்கள், ஹோட்டல்- கலியாண மண்டபம் என விருந்தினர்களுக்கு ஷட்டிலடிக்க வாகனங்கள், கல்யாணத்திற்கு முன்/பின் புகைப்படம் மற்றும் வீடியோ, அழைப்பதழ் டிசைன், பத்திரிக்கையுடன் வைத்து அழைக்க பட்டுப்புடவைகள், வேஷ்டி துண்டுகள், பக்ஷ்ண வகைகள், மேடை அலங்கார காண்ட்ராக்டுகள், துபாய்-பெங்களூர்-சென்னை-துபாய் விமானப்பயண டிக்கெட்டுகள், குடும்பத்திற்கும் உறவினருக்கும் துணிமணிகள், பரிசுப்பொருட்கள்… மூச்சு முட்டுதா! மடிக்கணினியே சூடாகும் அளவிற்கு விதவிதமான கோப்புகளை அவர் காண்பிக்க, எனக்கு மயக்கமே வந்து விட்டது.
கண்ணனுக்கு தினமும் 12 மணி நேர அலுவல் மற்றும் நீண்ட தொலைபேசி மீட்டிங்குகள், ஜானகிக்கு மாதம் இரண்டு மூன்று முறை புதிய சவுதி ரயில் பணி தொடர்பாக துபாய்-சவுதி விமானப்பயணங்கள் போன்ற பரபரப்பான அட்டவணைகளுக்கு நடுவே கடந்த ஆறேழு மாதங்களாக கர்ம சிரத்தையுடன் மனைவியுடனும் சம்மந்தி ராஜ்-உமாவுடனும் உட்கார்ந்து திருமணம் தொடர்பான பணிகளுக்கான பட்டியல்களிட்டிருக்கிறார்
கள். இந்த ஏற்பாடுகளில் கண்ணனுக்கு நிகராக களத்தில் இறங்கி, இதில் உள்ள சிக்கல்கள் மற்றும் மெனக்கெடல்கள் எவை என்பவற்றை ராஜ்குமாரும் கணித்து அவற்றை எப்படி எதிர்கொள்வது எனவும் திட்டமிட்டிருக்கிறார்.
கண்ணன் ஸ்டைலே தனி. விருந்தினர் வருகைப்பட்டியிலினை உறுதி செய்ய பத்திரிக்கையில் ஆரெஸ்வீபி ((RSVP) இணைப்பை சேர்த்து ‘யார் யார் கலியாணத்துக்கு வருவீங்க, சம்சாரம் கூடவா, இல்ல ஜாலியா தனியாவா, புள்ள குட்டிங்க கூட வரூங்களா, வந்தா எத்தினி ரூம்பு வேணும், காலங்காத்ததால வந்தெறங்குவீங்களா இல்ல மதியம் 12 மணி, 3 மணி, சாயரச்ச, அகால வேளையா என ஏகப்பட்ட ஆப்ஷன்களை நாம் க்ளிக்க வேண்டும். இரண்டு மூன்று ரிசார்ட்டுகளில் சுமார் 350 டூ 375 பேருக்கு தங்கும் அறைகள் மற்றும் உறவினர்களுக்கு ரயில்/விமான டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து, ஒவ்வொரு வேளைக்கும் சாப்பாட்டு மெனு தயார் செய்து அதற்கான அட்வான்ஸ் தொகையை செலுத்தி, விதவிதமான மேடை அலங்கார வடிவமைப்புக்களை பார்வையிட்டு தேர்வு செய்து, சிவந்தமண் சிவாஜி- காஞ்சனா போராளிக்கூட்டம் போல குடும்பத்துடன் அமர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை தீட்டி, அட்டவணை தயாரித்து… தினமும் இரவு ஒரு மணி வரை விழித்திருந்து மேற்கூறியவற்றை தயார் செய்திருக்கிறார்கள் பிரமிப்பூட்டும் இந்த கண்ணன்-ஜானகி தம்பதி.
தவிர கன்ஃபர்ம் செய்த விருந்தினர்களுக்கென வாட்ஸப் க்ரூப் ஒன்றை ஆரம்பித்து அதிலும் ‘இன்ன ட்ரெய்ன் இன்ன டயத்துக்கு வரும், இங்கேர்த்து டாக்ஸி கிடைக்கும், கெம்பகௌடா ஏர்போர்ட் இங்க இருக்கு, ஓலா, ஊபர் கிடைக்கும், அங்கேர்ந்து ரிசார்ட்டுக்கு வர வரைபடம், யார் யாருக்கு எந்தெந்த ரூம் போட்ருக்கு’ என எல்லா விபரங்களை விலாவாரியாக அளித்த பிறகும் சில நண்பர்கள் ‘எங்க ஃப்ளைட் ராத்திரி பதினோரு மணிக்கு வருது. எப்பிடி வரனும்’, ‘ நா ஏழாவது ப்ளாட்ஃபாரத்துல வந்தெறங்குவேன் கார் அனுப்ப முடியுமா, ‘எனக்கு நேத்திலேர்ந்து மூட்டுவலி.. கரௌண்ட் ஃப்ளோர்லயே ரூம்பு கெடீக்குமா’, ‘நான் நீங்க கேட்ட தேதிக்குள் அந்த இணைப்பை முடுக்கி எத்தனை பேர் வருவோம்னு சொல்ல மறந்துட்டன், ஆனா இப்ப சொல்லிக்கிறேன் ரூம் போட்ருவீங்களா?’ என கேட்க, அதற்கும் பொறுமையாக பதிலளித்து தேவையான ஏற்பாடுகளை செய்தார் கண்ணன். இப்பணிகளுக்கு நடுவே எங்களைப்போன்ற நண்பர்களுக்கு இவர்களது துபாய் இல்லத்தில் அரட்டையுடன் முழு சாப்பாடு வேறு.
பாரம்பரியமாக கொண்டாடப்படும் பழமையான இத்திருமணம் ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, அடிப்படை அர்த்தங்களைக் கொண்ட இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட வேத யக்ஞ சடங்கு என்பதே உண்மை. கன்யாதானம், பாணிக்ரஹணம் மற்றும் சப்தபதி என்ற மூன்று பிரதான சடங்குகளின் தொகுப்பாகும். “ டூட்! என் டாடியும் உன் டாடியும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை. ஆனாலும் இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம். குறுஞ்செய்திகள் பகிர்ந்தோம். பெங்களூர் கஃபே காஃபி டேயில் மணிக்கணக்காய் அமர்ந்திருந்தோம். அக்கினியால் சாட்சியமளிக்கும் புனிதமான ஒற்றுமை பெற்றோம். எப்படித்தெரியுமா! ‘செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ அதாவது
செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.” என அபி என்கிற அபிஷேக் தன் காதல் மனைவி ஹனி என்கிற ஹன்சினியிடம் சொல்கிறான்! வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment