Sunday, June 22, 2025

ராஜ்கோட்டில் ஒரு திருமணம்

 ராஜ்கோட்டில் ஒரு குஜராத்தி-தெலுங்கு திருமணம். பெண் வீட்டார் முரளி-விஜயா தம்பதி (Muralidhar Kommajosula) எனது நெடுநாளைய பஹ்ரைன் நண்பர்கள். மனவாளு! ICAI பஹ்ரைன் கிளையின் முன்னாள் தலைவர் மற்றும் பஹ்ரைன் CA Toastmasters க்ளப் பின் முன்னாள் தலைவரும் கூட. பஹ்ரைனிலிருந்து தற்போது கனடாவில் செட்டிலானவர்கள். பெண் என் பெரியவனுடன் இந்தியன் ஸ்கூலில் படித்தவள். கனடாவிலேயே குஜ்ஜு பையனை காதலித்து தற்போது ராஜ்கோட்டில் திருமணம்.

ராஜ்கோட் ஏர்போர்ட்டிலிருந்து நாங்கள் 3 குடும்பங்கள் நாலு மணிக்கு வெளியே வரும்போது நல்ல பசி. ரிசார்ட்டில் நான்கு நாள் கல்யாண வைபவம். ஏர்போர்ட்டிலிருந்து ஒன்றரை மணி நேர பயணம். டிரைவர் பரூச்சி வண்டியை சாலையோர உணவகத்தில் நிறுத்தினான்.
நிற்க! குஜ்ஜுபாய்கள் சாப்பாட்டுப்பிரியர்கள் என்பது நாமறிந்ததே. எனது ஆரம்ப பம்பாய் வேலை மூன்றும் குஜராத்தி கம்பெனிகள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து நானும் திண்ணி பண்டாரமாகியிருந்தேன். நாள் முழுக்க பான், பான்பராக், குட்கா என லாகிரிவஸ்துக்களை விரும்பி மென்பவர்கள். அதிலும் சிலர் கீழ்தாடையை முன்னுக்கு தள்ளி வெற்றிலை எச்சியை தளும்ப தளும்ப அடக்கி வைத்துக்கொண்டு அப்படியே நம்முடன் சம்சாரிப்பவர்கள். தொண்டைப்பக்கம் போகும் எச்சியை கர்ரென அவர்கள் வெளியே இழுக்கும்போது எப்படியாவது ப்ளக்கென எச்சில் தெறித்து விடுமோவென நாம் பயப்படத்தேவையில்லை. வெற்றிலை வாயை கொப்பளித்ததும் உடனே கடக் சாய் குடிக்க வேண்டும் அவர்களுக்கு. அதுவும் இரண்டு வேளை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டு முறையாவது ச்சாய் குடிக்க வேண்டும் அவர்களுக்கு.
இன்று கடக் ச்சாய் சூப்பராக இருந்தது. அந்தப் பக்கம் கமண்ட் (டோக்ளா) வைத்திருந்தான். வேணாம், வந்த முதல் நாளே அதை ட்ரை செய்து ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை. பெரிய்ய அலுமினிய தாம்பாளத்தில் அவித்த டோக்ளாவை இறக்கி வைத்ததும், கத்தியால் குறுக்கா நெடுக்கா கீறி, கடுகு தாளித்து எண்ணெயுடன் தாராளமாக மேலே விட்டு, அடுத்து பொடியாக நறுக்கிய கொ.மல்லியை தூவி, எண்ணெயில் வறுத்து உப்பு தூவிய ப.மிளகாய் மேலே தூவினால் ருசியான டோக்ளா ரெடி. நீளநீளமாக எண்ணெயில் வறுத்த பாப்டி, பாக்கர்வாடி மற்றும் கச்சோடி என சகட்டுமேனிக்கு எண்ணெய் பதார்த்தங்கள் மொஸ்க்குபவர்கள் அவர்கள்.
ஆசையாக ஓடி வந்து ‘ச்சால சந்த்தோஷம் மாக்கு ஶ்ரீதர்காரு!’ என கட்டிக்கொண்டான் சம்மந்தி முரளி. பெண்களைக்கு சாமந்தி மாலை அணிவித்து எல்லோருக்கும் தங்கும் அறையை ஒதுக்கி, பெட்டியை போட்டுவிட்டு மெஹத்தி ஃபங்ஷனுக்கு வந்தோம்.
பஹ்ரைன் இந்தியன் Gavels Toastmasters க்ளப்பில் என் பசங்களுடன் public speaking செய்தவள் ஸ்பூர்த்தி (மணப்பெண்). அந்த அனுபவம் அவர்களுக்கு உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தைரியமாக பேசக் கற்றுக்கொடுக்கிறதென்பது உண்மை. Toranto IBMஇல் பணிபுரிகிறாள். பெங்களூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்ததற்கு நன்றி தெரிவித்து, மருதாணி போட்டுக்கோங்க என பெண்ணும் பெண்ணின் தாயாரும் கவனித்துக்கொள்ள, ஆண்கள் நாங்கள் சாப்பாட்டுப்பக்கம் போனோம். நண்பன் முரளி கில்லாடி. குஜராத்தி, மெக்ஸிகன் உணவின் ஊடே ஆந்திரா சாம்பாரு மற்றும் மஜிக (மோர்) வை சேர்த்து அசத்தி விட்டான். ‘தீஸ்கோண்டி, தீஸ்கோண்டி!’ என வாயில் ஊட்டி விடாத குறையாக சாப்பிட வைத்தனர் முரளி-விஜயா தம்பதி. சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு போட்டோவும் எடுத்துக்கொண்டான் முரளி.
மற்ற பஹ்ரைன் நண்பர்களும் நாளை வந்திறங்கப்போகிறார்கள். நாளை சங்கீத், மண்டப் எனும் தெலுங்கு பூஜை, பாலிவுட் நைட் மற்றும் குஜராத்தி கர்பா நடனமாம். நடுவே வயிற்றுக்கு ஓய்வெல்லாம் கிடையாதாம். இனி அடுத்த 3 நாளைக்கு ‘சூ கபர் ச்சே!’ மற்றும் ‘பாக உண்ணாரா!’ தான்!
ரேப்பு சூஸ்தாமு!

No comments:

Post a Comment