Sunday, June 22, 2025

முல்பாகல் மசால்தோசையும் கனிப்பாக்கம் பிள்ளையாரும்

 பெங்களூர்-சித்தூர்-சென்னை …

நீங்கள் பெங்களூர்வாசியா? உணவுப்பிரியரா? அடிக்கடி வாகனம் ஓட்டிக்கொண்டு பயணம் செய்பவரா?
கடந்த வாரம் சென்னைக்கு ஹோசூர் வழியைத் தவிர்த்து சித்தூர் (ஆந்திரா) வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் கிளம்பினோம். இந்திரா நகர், அல்சூர், கிருஷ்ணராஜபுரம் பகுதியிலிருந்து சென்னை செல்பவர்கள் ஆந்திரா வழியாக செல்வது உத்தமம். வீட்டிலிருந்து 10,15 நிமிடத்தில் 4 கி.மீ தொலைவில் கிருஷ்ணராஜபுரம் கடந்து கோலார் நெடுஞ்சாலையை பிடித்தோம். ஹோஸ்கோட்டே சுங்கச்சாவடியை அடுத்து நந்தி கிராண்ட், ஶ்ரீநிதி சாகர் போன்ற கன்னட உணவகங்களில் காலை நாஷ்டாவுக்கு கூட்டம் அம்மும். காலை வேளை பெங்களூர் சீதோஷ்ணத்திற்கு பசி வயிற்றை கிள்ளும். அந்நேரத்திற்கு வாய்க்கு ருசியாக தோசை, பூரி சாப்பிடச்சொல்லும்.
இட்லி, தோசை, பூரி, பொங்கலை அடுத்து மக்கள் அதிகம் மொஸ்க்குவது சௌ சௌ பாத் தான். ஒரே தட்டில் உப்புமா+ கேசரி தான் அந்த சௌ சௌ பாத். கேசரியில் சர்க்கரையை அள்ளி வீசியிருக்க படு தித்திப்பாக இருக்கும். நீர் வயல் போல் எண்ணெயில் உப்புமா மிதக்கும். வாயில் போட்டுக்கொண்டதும் தேங்காய் துறுவல்கள் நாக்கில் பட்டு ருசியை தூக்கும். பசியை அடக்கிக்கொண்டு கொஞ்சம் அடுத்த 35 கி.மீ அழுத்தினால் கோலார். அங்கே ஆராத்யா கிராண்ட் ஹோட்டல் மிக பிரசித்தி பெற்றது. கல்லாவின் அருகில் மைசூர் தோசே, ஓப்பன் பட்டர் மசாலா, முல்பாகல் மசால் தோசே என தோசை வகைகளை பரத்தி வைத்து நமக்கு ஆசை காட்டுவார்கள். அதை பார்த்த மாத்திரத்தில் சடுதியில் மனம் தடுமாறி, தறிகெட்டு, அலைபாய்ந்து ஓப்பன் பட்டர் மசாலா தோசை ஆர்டர் செய்யச்சொல்லும்.
அதென்ன முல்பாகல் மசால் தோசே? கோலாரை அடுத்து முல்பாகல் எனும் சிறிய ஊர். திருப்பதி செல்பவர்கள் நிறைய பேர் முல்பாகலில் நிறுத்தி அங்குள்ள உணவகங்களுக்கு படையெடுப்பார்கள். இந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் இடது கோடியில் இருப்பதால் முதல-பாகிலு (இடது பக்க கதவு) என்ற பெயருடன் மருவி முல்பாகல் ஆனதாம். ஆந்திராவைச்சேர்ந்த ஆரிய வியாசா எனும் சமூகத்தினர் முதன்முதலில் தயாரித்த பண்டம் இந்த முல்பாகல் மசால் தோசே. பெங்களூரில் அதிகம் இந்த வகை தோசை கிடைப்பதில்லை. இட்லி அரிசி, உளுந்துடன் அவல், ஜவ்வரிசி, வெந்தயம் கூட்டணியை சேர்த்தறைத்து 12 மணி நேரம் உறிய பின் வார்ப்பிரும்பு தோசைக்கல்லில் வார்த்தெடுக்கப்படும் வஸ்துவாம் இது.
அந்த வார்ப்பிரும்பு தோசைக்கல் நம் சேலத்திலிருந்து தான் கர்நாடகா செல்கிறதாம். ஆப்பச்சட்டி போல் குழியாக இல்லாமல் நடுவில் தட்டையாகவும் வட்டமான ஓரப்பகுதியில் குட்டிச்சுவர் கொண்ட கல். கொஞ்சம் தண்ணியாக கரைத்த மாவை கல்லில் ஊற்றி ஆப்பம் போல கல்லை வட்டமாக சுற்ற , நடுவில் உப்பியும் ஓரங்கள் சன்னமாக இருக்கும் இந்த தோசையின் பிரபலத்திற்கு காரணம் இதன் பிரதான பங்குதாரர் நெய் ஆகும். சிகப்பு மிளகாய் சட்னியை தோசை மேல் வட்டமாக தடவி நடுவே பல்லியா எனப்படும் உருளை மசாலையை வைத்து தோசையை மூடி, மறுபடியும் தோசைக்கரண்டி கொண்டு அள்ளிய நெய்யால் ஸ்நானஞ்செய்வித்து இறக்குவார்கள். தொட்டுக்கொள்ள நிலக்கடலை, கடலைப்பருப்பு கலந்து அறைத்து தாளிக்காத, அபார சுவை கொண்ட தேங்காய் சட்னி மட்டுமே. சாம்பாருக்கு கட்டாய ஓய்வு.
பசு நெய்யின் மணத்துடன் சற்று புஷ்டியாகவும் தங்க பழுப்பு (golden brown) நிறத்தில் முதலிரவு புதுமணப்பெண் போல ஜொலிக்கும் இந்த பலகாரத்தை நம்பியார், அசோகன், நளினிகாந்த் போல பாய்ந்து பலாத்காரம் செய்து சாப்பிடப்டாது! முந்தானை போன்ற மெல்லிய ஓரங்களுடன் தோசையின் நடுப்பகுதியை செல்லமாக பிய்த்து எடுத்து நிலக்கடலை சட்னியில் முக்கி எடுத்து பச்சக்கென கடித்து விழுங்காமல் மெல்ல மெல்ல தோசை, உ.கி மசாலா மற்றும் கடலை சட்னியை நாக்கிற்கும் பற்களுக்கும் இடையே விளையாட விட்டு உமிழ்நீர் உணர்த்தும் சுவையுடன் மென்று சாப்பிட.. ஆஹா! சத்தம், சலனம், சிந்தனை எதுவுமின்றி மோன நிலையில் இருப்பது போன்ற சுகம் கிட்டும்.
சர்க்கரை குறைவான ஃபில்டர் காபியை தோசைக்கப்புறம் உள்ளே தள்ளி நாவில் காபியின் ருசியை அனுபவித்தபடி வண்டியை கிளப்பி, மௌனராகம், மெல்ல திறந்தது கதவு, உழைப்பாளி பாடல்களை ஓடவிட்டு கார்த்திக் ராஜாவின் ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ முனுமுனுத்தபடி வண்டியை ஓட்ட ,அடுத்த 2 மணி நேரத்தில் சித்தூர் வந்ததே தெரியவில்லை.
சித்தூரிலிருந்து ஆந்திரா ரேடியோ எஃஎம்மில் ‘மீரு தப்பக்குண்ட அட்வான்ஸ் டாக்ஸ் ஜமா செய்யண்டி’ விளம்பரங்கள் மற்றும் எனக்கு பிடித்த கண்டசாலா பாடல்களையும் ரசித்தபடியும்அடுத்த 35 கி.மீஇல் ராணிபேட்டை வந்தடையும் முன் ஆந்திரா பக்கம் ஒரு 10 கி.மீ டிடுவர் செய்து கானிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு வந்தோம்.
மிகப்பெரிய கோவில். ஏராளமான சுற்றுலா பயணிகள், சுகாதாரமற்ற போஜனாலயாக்கள், அழுக்கு விடுதிகள். நிறைய பேர் மொட்டை போடுகிறார்கள் அங்கே. ‘ஶ்ரீதர் நாயுடு கூல் டிரிங்க்ஸ்’ பதாகையிட்ட கடை என்னை வெகுவாக கவர்ந்தது (படம் புடிச்சுட்டேன்😀). ‘அதிசீக்ர தர்ஷன்’ டிக்கெட்டுடன் வரிசையில் சுமார் 45 நிமிடங்கள் நின்று உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டோம். வியாயகர் சிலை ரொம்ப சின்னதாக, தந்தம் தரையில் படும்படி அமர்ந்த கோலம் அழகாக இருந்தது. வெளியே வந்து அன்னப்பிரசாத கூடத்தில் அமர்ந்து வாழை இலையில் சாம்பார், கூட்டு, பொறியல், ரசம், தாளித்த மோர் என திய்வமான சாப்பாடு. சாதம், சாம்பார் என வண்டியில் தள்ளியபடி கோபமாக பரிமாறுகிறார்கள், இரண்டாம் முறை சாதம் வரும்போது ‘அன்னம் தீஸ்கண்டி.. மல்லி ராது’ ( சாதம் வாங்கிக்கோங்க.. திரும்ப வராது!) என்ற கண்டிப்புடன்.
ராணிப்பேட்டை தாண்டி ஶ்ரீபெரும்புதூர் வரை பாலம் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கரடுமுரடான சாலைகள் இல்லாது, சீராக படப்பை-முடிச்சூர்- தாம்பரம் கடந்து நங்கநல்லூரில் நாட்டுச்சர்க்கரை ஃபில்டர் காபியுடன் சென்னை பயணம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment