Sunday, June 22, 2025

An evening with a Diplomat..


சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பணிபுரிந்த இந்திய தூதரக அதிகாரியா இவர்! என்னவொரு அடக்கம், பணிவு!
வெகுநாட்களாக ‘ஶ்ரீதர்! நாம மீட் பண்ணனும்’ என அழைப்பு விடுத்தவர். சென்ற வாரம் பெங்களூரில் இவரது இல்லத்திற்கு எனது திருச்சி நண்பரும், பெங்களூரில் ஒரு வாரகாலமாக தோஸ்தி ஜோடோ யாத்ராவில் இருந்த முகநூல் ஹாஸ்ய கவிச்சக்ரவர்த்தி மோகன் Mohan அவர்களுடன் சென்று வந்தேன். அவர்களை தம்பதி சமேதராய் மாரத்தஹல்லியில் இருந்து பிக்கப் செய்து வெளிச்சுற்றுச்சாலையை (Outer ring road) பிடித்து வண்டியை நேராக ஹெப்பால் பக்கம் விட்டேன்.
போகும் வழியிலேயே இவருடமிருந்து போன் மோகனுக்கு. ‘ஹெப்பால் தாண்டிட்டீங்களா? அப்பிடியே நேரா வாங்க, ஜக்கூர் ஏர்பேஸ் அந்தப்பக்கம் தெரியுதா?’ என நேரலை உதவியுடன் இவரது பல் அடுக்கு நுழைவாயில் கேட் அருகே நின்றிருந்தார். இந்திய நாட்டின் பிரதிநிதியாக இருந்தவர் இவ்வளவு எளிமையாக கேட் வாசலில் நமக்காக காத்துக்கிடப்பதா! மனிதர் படு நகைச்சுவையுடன் பேசுபவர்.
இவரது மனைவி முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ‘பக்ஷ்ஷே உங்களப்பத்தி இவர் சொல்லியிருக்கு.. ஞங்கள் நிங்கள காண வெயிட் செய்தோம்’ என 80:20 சிக்கரி கலவை போல கேரளத்தமிழில் கொஞ்சிப்பேசிய அவருக்கு கால் நோவாம். அதனால் அவரை சிரமப்படுத்தாமல் முழுக்கை சட்டையை சரட்டென மடித்துக்கொண்டு ‘காபி கலக்கறேன்’ என களத்தில் இறங்கினார் இவர். ‘என் வைஃப்க்கு இன்னொரு பதி உண்டு. அதாவது நியூரோபதி (கால் வலி) என அதிரடியாக ஜோக்கடித்து அந்த பிரதேசத்தையே கலக்கினார், காபியுடன். அந்த அழகான மாட்யூலர் கிச்சனில் இவருடன் பக்கத்தில் நின்றபடியே பேச்சுக்கொடுத்தோம். மனுஷன் கில்லாடி. ‘எங்க வீட்ல பில்டர் காபி கிடையாது’ என்றவர் ப்ரூ காபிப்பொடியில் வெந்நீர் விட்டு டிகாக்‌ஷன் செய்து அதில் பாலை விட, அற்புதமான ஃபில்டர் காபி சுவை.
திருச்சி செயின்ட் ஜோசஃப்ஸ் கல்லூரியில் ஒரு வருடம் டியூட்டராக பணியிலிருந்தவர், மத்திய அரசுப்பணிக்காக நுழைவுத்தேர்வுகள் எழுதி உள்துறை அமைச்சகத்தின் IB (இன்டெலிஜென்ஸ் பீரோ)வில் சேர்ந்தார். IB, RAW, CBI போன்ற உளவுத்துறைகளில் வேலை செய்பவர்களுக்கு காவல் துறையில் பயிற்சி அளிக்கப்படுமென்பதால் இவரும் திருச்சி பாலக்கரை போலிஸ் ஸ்டேஷனில் பயிற்சி ஆரம்பித்து, ராஜஸ்தான் மௌன்ட் அபுவில் பயிற்சியைத்தொடர்ந்து டெல்லியில் IB, RAW போன்ற உளவுத்துறைகளில் சில வருடங்கள் பணியாற்றிய பின் டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார். IAS, IFSக்கு இணையாக வெளிநாட்டுத்தூதரகங்களில் உயர்பதவியில் வகித்து ஓய்வு பெற்றவர்.
RAWவுல இருந்துட்டு ரிடையர் ஆகி இப்ப ripe ஆயிட்டேன் என நகைச்சுவையாக சொன்னதை மிகவும் ரசித்தோம். திருச்சி மெயின் கார்ட் கேட் பகுதியில் நிர்மலா லாட்ஜில் தங்கியிருந்தாராம். அந்த காலத்தில் ஃபோர்ட் ஸ்டேஷனுக்கு இந்தாண்ட இருந்த பிரிட்டோ காலனி பற்றி பேச்சு திரும்பியது. செஞ்சோசப் ஸ்கூல் வாத்தியார்களுக்கு அங்கே வீடுகள் கொடுத்திருந்தார்கள். எல்லாவற்றையும் இடித்து விட்டு இப்ப மாரிஸ் தியேட்டர்.
பேச்சு அப்பிடியே சிங்காரத்தோப்பு வழியாக சுவாரசியமாக திரும்ப, நாற்காலியிலேயே சம்மனங்கால் போட்டுக்கொண்டோம். சிங் காரத்தோப்பைக்கடத்து செயின்ட் மேரிஸ் தோப்பில் நிறைய கிறிஸ்தவ காலேஜ் ப்ரொஃபசர்கள். கன்வெர்ட் ஆனவர்கள் என்பதால் ‘பால் சுந்தர்ராஜன்’, ‘தாமஸ் ஶ்ரீனிவாசன்’ ‘சேவியர் கிருஷ்ணன்’ போன்ற வித்தியாசமான பெயர்கள்.. இப்படி சர்ச்சைக்குறிய சமாச்சாரங்கள் பேச கசக்குமா அல்லது நேரம் போவது தான் தெரியுமா! அந்தப்பக்கம் மனைவியர்களின் வட்டமேசை மாநாடு ஒடிக்கொண்டிருக்க, யார் மண்டை உருள்கிறதோ தெரியவில்லை.
திருச்செந்துரை அக்ரஹாரம் முத்துக்கிருஷ்ண ஐயர் வீட்டில் தங்கியிருந்தாராம். இடிஞ்ச சிவன் கோவில், வேணுகோபால் சுவாமி கோவில் என அங்கு இனிமையாக பொழுதைக்கழித்த அனுபவங்களை பகிர, எல்லோரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்துகொண்டு விதவிதமான பலகாரங்களை மொஸ்க்கினோம். ப்ராமின்ஸ் கஃபேயிலிருந்து வாங்கி வந்த சேவையை பரிமாறிக்கொண்டே ‘உங்களுக்கு ‘சேவை’ செய்யனும்னு எனக்கு ஆசை’ என அடுத்தடுத்து ஜோக்குகள் இவரிடமிருந்து. நாடாறு மாசம் காடாறு மாசமென இந்தியாவிலும் அமெரிக்காவில் பையன் மற்றும் பெண் வீட்டிலும் வசிக்கிறார் இவர். அழகான இவர் வீடு முழுக்க சீன ஃபர்னிச்சர்களால் அலங்காரம்.
25 வயது இளைஞனைப்போன்ற சுறுசுறுப்பும், மனைவியை கலாய்த்துக்கொண்டும், கலகலவென அரட்டையடித்துக்கொண்டும்… அட.. அட.. இவருடன் சேர்ந்து நமக்கும் பத்து வயது குறைந்தது போன்ற உணர்வுடன் விடைபெற்றுக்கொண்டோம்.
இனிமையான மாலைப்பொழுது. ரொம்ப மகிழ்ச்சி Raghupathy N சார்!

No comments:

Post a Comment