..
காலை நாஷ்டா முடிச்சிட்டு சிக்கபள்ளாப்பூர் பக்கம் போலாமா என சகலை கேட்டதும் புத்துணர்ச்சியுடன் கிளம்பி விட்டோம். சகோதரிகளுக்கு குஷி. குடும்பத்துடன் அவர் கூட போனால் வழியில் வண்டியை அங்கங்கே நிறுத்த வச்சு பாய்லர் டீ, இளநீர் குடிப்பது, பெங்ககளூரின் சிறந்த உணவகங்களுக்கும் கூட்டிப்போவது என கம்பெனி கொடுப்பார். பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர். ‘கேக்குவாங்கோ.. பாக்குவாங்கோ.. ஆமாவா?’ எனத்தமிழ் பேசுவார்.
பெங்களூர்- ஹைதராபாத் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரப்பயணம். நல்ல வெயில். சீரான கருஞ்சாலைகளில் கட்காரி தெரிந்தார். தேவனஹள்ளி விமான நிலையம் தாண்டி அடுத்த 30 கி.மீ தொலைவில் ஒருசில சிறிய கிராமங்களைக்கடந்ததும் வந்தது சிக்கபள்ளாப்பூர். சிறிய டவுன்ஷிப். வங்கிகளும், பெட்ரோல் பங்குகளும், பானிபூரி கடைகளும் ஒருசேர இருந்தால் அது வியாபாரம் கொழிக்கும் ஸ்தலமெனக்கொள்க. நிறைய இளம் பெண்கள் துப்பட்டா பறக்க ஸ்கூட்டிகளில் பறக்கிறார்களென்றால் பள்ளி, கல்லூரிகள் அங்கே பரவலாக உண்டென யூகிக்கலாம். தூரத்தில் ஜெயின் கோவில் கோபுரம் தெரிந்தால் பல்க்காக மார்வாடிக்காரர்கள் அங்கே செட்டிலாகிவிட்டார்கள் எனலாம். தவிர வடநாட்டு ஹார்ட்வேர் மற்றும் இரும்பு கடைகள் நிறைய இருந்தால் புதிய வீடுகளும் கட்டிடங்களும் ICICI வங்கிகளும் அந்த பிரதேசத்தில் முளைக்கின்றன என அர்த்தம்.
பக்கத்தில் பத்தே கி.மீ தாண்டினால் பெரிய பெரிய மலைகள் நாற்புறமும் சூழ்ந்த முல்லைநிலக்காடு. ஆஸ்ரமம் அமைக்க சரியான இடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறார் சத்குரு. மலைகளில் வளைந்து வளைந்து செல்லும் சாலை அமைக்கும் பணிகள், ஆங்காங்கே கனரக இயந்திரங்கள், பாறை உடைப்புக்கள், மணல் லாரிகள் நடமாட்டம் என அனைத்துமே அங்கே ஒரு நகரம் உருவாகிக்கொண்டிருப்பதை கட்டியம் கூறுகின்றன.
தூரத்தில் தெரிந்தது ஈஷா யோகா மையம் மற்றும் 112 அடி உயர பிரம்மாண்டமான ஆதியோகி சிலையும் அவரது காலடியில் நாக மண்டபமும். எட்டு நவக்கிரக கோவில்கள் மற்றும் தனித்துவமான பைரவி கோவில் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளார்கள். ஒருவரது வாழ்க்கையில் காணப்படாத தடைகளை அகற்றுவதில் நாகத்தின் அருள் முக்கியமானதாகக் கருதப்படுவதால் உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் பாம்பு வழிபாட்டைக் கொண்டுள்ளன என்றாராம் சத்குரு. எங்கள் குலதெய்வம் நாகதெய்வமென்பதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
சாரிசாரியாக கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் நாக மண்டபத்தில் உட்கார்ந்து அடிக்கடி மொபைலை பார்த்துக்கொண்டே தியானம் செய்ய, வெளியே உணவகங்கள், இளநீர், ஐஸ்க்ரீம் கடைகள், கார் நிறுத்தத்திற்கு டிக்கெட் என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மறுபடி பயணம். பக்கத்தில் கௌரிபிடனூர் என்ற ஸ்தலம். அங்கு ஶ்ரீனிவாச சாகர அனைக்கட்டு. மிகப்பெரிய நீர்த்தேக்கம். நிரம்பி வழிய தண்ணீர் மேல் மட்டம் வரை இருந்தும் அணையை திறக்காமல் வைத்திருக்கிறார்கள். அதையடுத்து லக்ஷ்மி வெங்கடேஷ்வர பெருமாள் கோவில். சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயம். இளவயது குருக்கள் ஸ்தல வரலாறை தெலுங்கில் அழகாக விளக்கினார். ஶ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வர பெருமாள் கற்சிலை விக்கிரகங்கள் கொள்ளை அழகு. அதில் விசேஷமென்னவென்றால் தாயாரின் மூக்கில் ஜொலிக்கும் புல்லாக்கு வளையங்கள். எப்படி வளையத்தை மூக்கில் மாட்டினார்கள்! அதுவும் 800 ஆண்டுகளுக்கு முன்னரே உளியால் அந்த சிறிய மூக்கில் துளை செய்து மிக நேர்த்தியாக அணிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ராவன சனிவாரங்களில் விசேஷ பூஜைகள் விமரிசையாக நடக்குமாம். ஜிலுஜிலென குளிர் காற்று முகத்தைத்தழுவ கோயில் பிரகாரத்தில் அமர்ந்து குருக்களிடம் பேசி விட்டு கிளம்பினோம்.
யோக நந்தீஸ்வர ஆலயம் மற்றும் ரங்கஸ்தலமெனும் மிகப்பெரிய ரங்கநாதர் கோயிலும் அருகில் உள்ளதாம். மதியமாகி விட்டதால் பெங்களூர் திரும்ப பயணம் மேற்கொண்டோம். வரும் வழியில் தேவனஹள்ளி நந்தகோகுலா அமராவதி உணவகத்தில் மதிய உணவை மொஸ்க்கினோம்.
பக்கத்திலேயே நகோடா அவந்தி 108 பர்ஷ்வநாத் ஜெயின் கோவில் உள்ளதாம். வண்டியை அங்கே திருப்பி அடுத்த சில நிமிடங்களுக்குள் கோவில் வந்து சேர்ந்தோம். ஆஹா! மலைத்துப்போனோம். 300 சிலைகள் கொண்ட ஆலயம். சுற்றிலும் 117 கோபுரங்கள் சூழ, நடுவே பெரிய கோபுரத்துடன் பர்ஷ்வநாத் ஜெயின் ஆலயம். அனைத்து கோபுரங்களும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் பாணிகள். தரை நடை மற்றும் சிறந்த தரமான பளிங்குகளின் பயன்பாடு எங்கள் கவனத்தை ஈர்த்தது. 108 கோபுரங்களின் கீழ் சிறு மண்டபங்களில் 108 சமண சமய தீர்த்தங்கரர்களின் முழு உருவச்சிலைகள். எல்லோருமே பப்பி ஷேம் கோலத்தில். அவர்களது காலடியில் படமெடுத்தபடி நாகங்கள்.
பெரிய மண்டபம் கொண்ட மத்திய ஸ்தலத்தின் மேல் தளத்தில் பர்ஷ்வநாத் ஜெயின் துறவியின் மிகப்பெரிய உருவச்சிலை. பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகளுடன் நம்மை வசீகரிக்கும் கட்டிடக்கலை மற்றும் அங்கு நிலவும் அமைதி நம் ஆன்மிக விழிப்புணர்வை கூட்டுகிறது.
திரும்ப கெம்பகௌடா விமான நிலையம் தாண்டி ஏலஹங்கா, ஹெப்பால் போக்குவரத்தை கடந்து இந்திரா நகர் பகுதி செந்தூர் உணவகத்தில் பாய்லர் தேநீர் அருந்தி இரவு உணவிற்கு சகலை வீடு வந்து சேர்ந்தோம்.
இனிமையான ஒருநாள் பெங்களூர் புறநகர் பயணம்!
No comments:
Post a Comment