பெங்களூரிலிருந்து மைசூர் போகும்போதெல்லாம் ராமநகரா எனும் சிறிய ஊரைத்தொடாமல் சற்று தள்ளியே பாலங்கள் வழியாக தாண்டிச்சென்று விடுவோம், ‘அப்பிடி என்ன இந்த ஊர்ல இருக்கப்போவுது!’ என எண்ணியபடியே.
இந்த முறை சென்னப்பட்னா மற்றும் ராமநகரா செல்ல முடிவு செய்து மைசூரிலிருத்து கிளம்பினோம். வழியெங்கும் மதூர் வடா வாசனை. மாலை நான்கு மணிக்கு கன்னடியர்களுக்கு போண்டா, மதூர் வடா என எதையாவது மொஸ்க்க வேண்டும். கூடவே அருமையான ஃபில்டர் காபி. சென்னபட்னா நெருங்கும்போது வரிசையாக மரபொம்மை கடைகள். Toy Land of India எனப்படும் சென்னப்பட்னாவில் சிறு,குறுதொழில் செய்யும் மரப்பட்டறைகள் ஏராளம். பாரசீகர்களிடம் கற்ற தொழில்நுட்பத்தில் ஏராளமான பொருட்கள் மரத்தால் செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்.
ரோட்டு முகனையில் மூன்று போலிஸ்காரர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருக்க, உள்ளுக்குள் லேசான பயத்துடன் மெல்ல ஊர்ந்து சென்ற என வாகனத்தின் கர்நாடக பதிவு எண்ணை பார்த்துதும் அவர் கண்கள் அடுத்த வண்டிக்கு தாவ, குறுக்கு சந்து ஒன்றில் புகுந்து சிறிய கடை முன் நின்றோம்.
பட்டறையில் செய்து நேரடியாக நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்கிறார்கள். ரூ. இரண்டாயிரத்திற்கு அவர்கள் விற்கும் பழங்கால வடிவ மரக்கடிகாரம் நெடுஞ்சாலையில் 2800க்கு விற்கிறார்கள். மரப்பாச்சி பொம்மைகள், கொலுவிற்கு தேவையான சொப்பு சாமான்கள், கடிகார சட்டங்கள், மர மணிகளால் (beads) செய்யப்பட்ட கார் சீட் கவர்கள், மரக்கரண்டிகள், கேரம்போர்டு என நூற்றுக்கும் மேற்பட்ட மரத்தாலான பொருட்கள் அங்கே விற்பனை. தலையாட்டிபொம்மைகள், கரண்டிகள், கடிகாரம் என கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு கிளம்பினோம்.
அடுத்த 12 கி.மீ தொலைவில் ராமநகரா. ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இங்குண்டு. மைசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து நகரின் உள்ளே செல்ல, ஏராளமான கடைகள் சாலையின் இருபுறமும். எல்லா கடைகளிலும் ஜன நெரிசல். போலிஸ்காரர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருக்க, உணவகங்கள், மிட்டாய் கடைகள், சுடிதார், இரும்பு சாமான்கள், மொபைல் என வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது அங்கே. நிறைய சினிமா படப்பிடிப்புக்கள் அங்க நடந்திருக்கின்றன, குறிப்பாக ‘அர்ரே ஹோ சம்பா!’ என ஷோலே கப்பர் சிங் கர்ஜித்தது அந்த ஊரில் உள்ள கல் குவாரி மலைகளில் தான். நிறைய பட்டுப்பூச்சிப்பண்ணைகள் அங்கே, அதனால் welcome to silk city என வரவேற்கும் பதாகைகள்.
ஜனார்த்தன் ஹோட்டலுக்கான கூகிள் மேப் எங்களை குறுகலான சந்திற்குள் கொண்டு சென்று விட்டது. பழங்கால உணவகம் அது. ஆனால் உணவு விற்பனை இல்லையாம். மாலை சில மணி நேரங்கள் மட்டும் திறப்பார்களாம். 5 மணிக்கு கடை திறந்ததும் வரிசையாக மக்கள் உள்ளே நுழைந்து கல்லாவின் முன் வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். உள்ளே கமகம நெய் வாசனை. கல்லாவிலிருப்பவர் ஆயித்தா.. ஆயித்தா என அடிக்கடி கத்த, பின்கட்டிலிருந்து இல்லா.. இல்லா என பதில் வர, வரிசையும் நீளமாகிக்கொண்டே போனது.
மெல்ல பின்கட்டு போய் எட்டிப்பார்த்தேன் கையில் காமிராவுடன். வயதான இருவர் பெரிய்ய கடாயில் மைசூர் பாக் கிளறிக்கொண்டிருந்தனர். மரக்கட்டைகளுடன் அடுப்பு தகதகவென எரிந்துகொண்டிருந்தது. ‘போட்டோ தெகபேடி’ (போட்டோ எடுக்காதீங்க) என்றபடியே கடாயை ஆபத்தான நிலையில் தூக்கி பெரிய ட்ரேக்களில் கவிழ்த்தனர். என்னா ஸ்ட்ரெங்த் அவர்களுக்கு! நெய்யோ யார் பேச்சையும் கேட்காமல் அதன் இஷ்டத்திற்கு ட்ரேயில் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது. ஓரளவிற்கு ஆறிய ட்ரேக்களில் கத்தி வைத்து சர் சர்ரென அலட்சியமாக குறுக்கா நெடுக்கா கோடு போட்டு ட்ரேயை தலை கீழாக இன்றொரு ட்ரேயில் கவிழ்த்துக்கொட்ட, பெரிய கருங்கல் சைஸ் மைசூர் பாக் கட்டிகள்.
அந்த 3 கிலோ ட்ரேயை அப்படியே தூக்கிக்கொண்டு முதியவர் கல்லா பக்கம் ஓடி வந்தார். ஒரு கிலோ 920ரூபாய், ஒரு ஆளுக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் விற்பனை. மக்கள் அரை மற்றும் ஒரு கிலோ டப்பாக்கள் வாங்க, சில நிமிடங்களில் ட்ரே காலி. மறுபடி அடுத்த ட்ரேக்காக 10 நிமிடம்.. ஆயித்தா.. ஆயித்தா.. இல்லா.. இல்லா.. சத்தங்கள்.. சுடச்சுட அடுத்த ட்ரே வர, வரிசை எறும்பு போல நகர்ந்தது.
கடலை மாவு, சர்க்கரை மூட்டைகள், நெய் டின்கள் இந்த மூன்று மூலப்பொருட்கள் அன்றன்றைக்கு வெளியிலிருந்து JIT (Just in time) சப்ளை தான். அதிகம் ஸ்டாக் கடையில் கிடையாதாம். மைசூர் பாக் தவிர சூடான பாதாம் அல்வா திரவப்பதத்தில் வட்ட வட்டமான டப்பாக்களில் கொட்டி விற்பனை. 25 கிராம் கப்புகளில் பாதாம் அல்வா வாங்கி அங்கேயே சில பேர் சாப்பிட, கால் செங்கல் அளவு மைசூர் பாக் கட்டிகள் டப்பாக்களில் நெய் சொட்டச்சொட்ட.. மாயமாக மறைந்தன.
கார்டோ, கூகள்பேயோ ஏற்றுக்கொள்வதில்லையாம். எல்லாம் ரொக்கப்பணம் தானாம். பெண்கள் வந்தால் வரிசையில் நிற்க வேண்டியதில்லையாம். அந்த மூன்று நான்கு மணி நேரத்தில் கல்லாவை மூடி ஷட்டரை இறக்கி விடுகிறார்கள். மைசூரில் புகழ்பெற்ற மஹாலட்சுமி ஸ்வீட்ஸ், குரு ஸ்வீட்ஸ் போன்ற கடைகளில் மைசூர் பாக் கிடைத்தாலும், நிறைய பேர் ராமநகரா வந்து இந்த கடையில் மைசூர்பாக் வாங்கிச்செல்கிறார்கள். வாங்கிய சில நிமிடங்ககளில் மைசூர்பாக் உருகி தன் உருவை இழந்து விடுவதால் தான் அவர்கள் அலட்சியமாக வெட்டி டப்பாவில் திணிக்கிறார்கள்.
ஏதோ மைசூர் பக்கம் போனோமா, குடும்பத்துடன் உல்லாசமாக ஊர் சுற்றினோமா, திரும்பினோமா என இல்லாமல் வெட்டியாக மூன்று மணி நேரம் செலவு செய்து ராமநகரா போய், போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே ஒரு மணி நேரம் வரிசையில் வேறு நின்று மைசூர் பாக் வாங்குவதில்லாமல், அந்த கடைக்காரனையும் வீடியோ மற்றும் போட்டோ பிடிப்பதெல்லலாம் வெட்டிவேலை கிடையாதா என கேட்பவர்களுக்கு…
துபாயிலிருந்து வந்திருக்கும் மச்சினர் குடும்பத்துடன் வாகனம் ஓட்டிக்கொண்டு 3 நாள் மைசூர் பயணம், Airbnb விடுதி, காவிரி ஆற்றுக்குளியல், கோவில் தரிசணம், பட்டர் மெஸ் வீட்டு சாப்பாடு, ராமநகரா மைசூர்பாக் கடை… எல்லாமே ஒரு த்ரில் தாங்க!
No comments:
Post a Comment