பஹ்ரைன் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பெருநிறுவனத்தில் இவன் கணக்குப்பிரிவின் தலைமை பொறுப்பிலிருந்தான். 25 வருடங்களுக்கு முன் அப்போதெல்லாம் CFO போன்ற பதவிகள் கிடையாது. சீஃப் அக்கவுண்டன்ட் அல்லது ஹெட் ஆஃப் அக்கவுண்ட்ஸ் பதவிகள் தான் கம்பெனி எம்.டி அல்லது நிறுவனருக்கு மிகவும் நெருக்கமானவை. சம்பளம், வீடு, கார், ஃபோன் என நிறைய சலுகைகளுடன் கசங்கிய சட்டையில் கழுத்தில் டை, ஓரிருநாட்கள் அதே சட்டை, இளநரை, பாலிஷ் செய்யப்படாத ஷூவுடன் வளைய வரும் சீஃப் அக்கவுண்டன்ட்டுகள் பெரும்பாலும் தென்னிந்தியர்களாகவே இருப்பார்கள்.
அவன், இவன் என ஏகவசனத்தில் விளிக்கும் அளவிற்கு நண்பன் இவன். பெட்ரோல் பங்க்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய வில்லா காம்பௌண்டுகள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், சிமென்ட், இரும்பு என பல்வேறு பிரிவுகள் கொண்ட நிறுவனங்களில் இவனது கம்பெனியும் ஒன்று. மலையாளி, சிறிலங்கன் விற்பனையாளர்கள் ஓடி, ஓடி பணங்களை வசூல் செய்து வங்கிகளில் டெபாசிட் செய்வார்கள். மறுபக்கம் வங்கிப்பணிகள், சப்ளையர்களுக்கு பணப்பட்டுவடா, அக மற்றும் புற ஆடிட்டுகள் என வேலைப்பளு அதிகம் இவனுக்கு.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை யாராவது சேல்ஸ்மேன் ஒருவன் ஒரு வியாழனன்று வசூல் செய்த பணத்தோடு வங்கிக்கு போகாமல் அப்படியே ஃப்ளைட் பிடித்து இந்தியா அல்லது சிறிலங்கா ஓடிப்போவதும் ஞாயிரன்று காலை ஆபிஸ் கார் அவன் வீட்டு வாசலில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருப்பது கண்டு ஆபிசில் சலசலப்பும், போலிஸ் மற்றும் இந்திய தூதரகம் விசாரணை என சகலமும் நடந்தேரும் விஷயங்கள். திருடியவன் கள்ள பாஸ்போர்ட்டில் அடுத்த ஓரிரு வருடங்களில் மற்றொரு அண்டை வளைகுடா நாட்டில் டிரைவர் வேலையில் இருப்பது பின்னர் தெரியவரும்.
ஜிதாஃப்ஸ் எனும் புறநகர் பகுதியில் நாங்கள் வசித்தபோது இவனும் அங்கே இருந்தான். சுமார் 500க்கும் மேற்பட்ட ஃப்ளாட்டுகள் கொண்ட காம்பௌண்ட் அது. உள்ளே நீச்சல் குளம், டென்னிஸ், நடைபயிற்சி என மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றிக்கொண்டிருப்பர். பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங்கள். புதிதாக பஃஹ்ரைன் வந்தவர்கள் பழுப்பு கலர் சுடிதாரில் பரிதாபமாக நம்மை பார்ப்பதும், அடுத்த சில மாதங்களில் அவர்கள் பளிச்சென ஜீன்ஸ், டிஷர்ட்டுக்கு மாறுவதும் அங்கே சகஜம். நாமளும் அப்படித்தானே மாறினோம்! நவராத்திரி விழா 9 நாட்கள் எங்கள் காம்பௌண்ட் சுண்டல் களை கட்டும்.
அடுத்த சில வருடங்களில் இவன் வேலை மாறி ஐந்து நட்சத்திர விடுதியின் CFOஆக உயர்பதவியில் இருந்தான். கண்ணன் எனும் அழகான பெயர் கொண்டவன். மனைவி ஷாந்தினி. எங்கள் சஹஸ்ரநாம சத்சங்கின் அங்கத்தினர். இவனது வீட்டில் சத்சங்கம் என்றால் அன்று முழு அட்டென்டன்ஸ். ‘யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச…’ சொல்லும்போதே கமகமவென கல்கண்டு சர்க்கரை பொங்கல் மணம் கிச்சனிலிருந்து வரும். ஐயங்கார் புளியோதரை, உ.கி சிப்ஸ், அவியல், தயிர் சாதம் என மஹாப்ரசாதம் மேசையில் பரத்தி வைப்பான். ‘தயிர் சாதம் நான் கலந்தது. நல்லா எடுத்துக்கோடா ஶ்ரீதர்!’ என அன்பாக உபசரிப்பான்.
பட்டைய கணக்காளனான (CA) இவனுக்கு உன்னி கிருஷ்ணன் போல சன்னமான குரல். முகத்திற்கு ரொம்ப பக்கத்தில் வந்து ‘எப்பிட்ரா இருக்கே?’ என அன்பாக விசாரிப்பான். சட்டென விதவிதமான அற்புத ஓவியங்கள் வரைந்து தள்ளுவான். நிதி சார்பல்லாது, மற்ற தலைப்புகளிலும் ஆங்கிலத்தில் நிறைய கட்டுரைகள் எழுதி பத்திரிக்கைகளில் வெளியிடுவான். சமீபத்தில் வளைகுடா நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவன்.
No comments:
Post a Comment