Friday, June 20, 2025

திருச்சி மெயினகார்ட்கேட்

 வெகுநாட்களுக்குப்பிறகு திருச்சி மலைக்கோட்டைப்பகுதியைச்சுற்றி வந்தேன். மெயின்கார்ட்கேட் பகுதி வாகனம் நிறுத்த வசதியில்லாத இடமென்பதால் சுப்ரமணியபுரத்திலிருந்து ஆட்டோ பிடித்தோம். கூடவே சகோதரி Hemalatha Manoharம் மனைவி Usharani Sridhar ம்.

ஓலா ஆட்டோவென்றால் 90 ரூபாயாம். 200 ரூ கேட்ட ஆட்டோக்காரரிடம் பேரம் பேசாமல் ஏறி உட்கார, கிர்ர்ரென ரயில்வே மேம்பாலம், மேலப்புதூர் தாண்டி பேலஸ் தியேட்டர் போகும்போது ‘பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த’ TMS குரலுடன் எம்ஜியாரின் சமிக்கி வைத்த பேனர் நினைவுக்கு வந்தது. நினைத்ததை முடிப்பவன் படம். ராமகிருஷ்ணா தியேட்டர் தாண்டியும் ‘வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட’ தூரத்திலிருந்து காற்றில் மிதந்து போய்க்கொண்டிருக்கும். 3 சரணங்களாயிற்றே!
முன்பெல்லாம் சிங்காரத்தோப்பு உள்ளே புகுந்து பெரியகடை வீதி வழியே மலைவாசல் போவோம். ஆனால் தற்போது அந்த ரோட்டில் நுழையவே முடியாத அளவிற்கு கூட்டம். ஆட்டோக்காரர் செஞ்சோசஃப்ஸ் வழியாகப்போனார். புல்லரித்தது. அய் எங்க ஸ்கூல்! சரக் சரக்கென ஐஸ் கட்டியை தேய்த்து அந்த பனித்தூளுக்குள் குச்சி முனையை பிளந்து சொறுகி கலர் கலராக இனிப்பு பாட்டிலை கவிழ்ப்பான். ஜிவ்வ்வென வாயில் உறிஞ்சி மறுபடியும் வெள்ளை ஐஸ் கட்டி மேல் கலர் ஊற்றச்சொல்லும் இளமனது சட்டென நினைவுக்கு வந்தபோது லாலி ஹால் வர, வாசலில் வைஸ் பிரின்சிபால் வாழப்பள்ளி நிற்பது போல பிரமை.
பள்ளி வளாகத்தினுள் பெரிய மலைப்பாம்பு அடைக்கப்பட்டிருந்த கம்பி அறைக்குள் பாம்பு சோம்பலுடன் தூங்கிக்கொண்டே இருக்கும். சுஜாதா ஒருமுறை ‘அந்த பாம்பிற்கு மதிய உணவாக தினம் ஒரு குரங்கை உள்ளே தள்ளுவார்கள். ஆனால் அதை இதுவரை யாரும் பார்த்ததில்லை’ என எழுதியிருப்பார். சத்தியமான உண்மை. எதிரே பாய்ஸ் ஹாஸ்டல் போர்டிங்கில் மதிய உணவு நடந்துகொண்டிருக்க அந்த பிரதேசமே மட்டன் குழம்பு நாற்றசனை வரும்.
காலேஜ் எதிரே சஃபையர் லாட்ஜ் இன்னமும் இருக்கிறது. அநேகமாக அதே போர்டாகவும் இருக்கலாம். ஆட்டோக்காரர் சடாரென அந்த சந்தில் புகுந்தார். வாணப்பட்டறை தெருவென ஞாபகம். ஆஹா! இப்பவும் அதே வீடுகள். நேராக தெப்பக்குளம் போய் வ்ருட்டென இடது பக்கம் திரும்ப கொஞ்சதூரத்தில் மாயவரம் லாட்ஜ். அதே கேட். அதே கதவு. நந்திகோவில் தெருவில் ஆட்டோ வலது பக்கம் திரும்ப, இடப்பக்கம் அதே குட்டி ஆஞ்சநேயர். குங்குமம் இட்டுக்கொள்வோம். சற்று தள்ளி ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ். நண்பன் Ayyampillai Ponnusamy காலை பதினோறு மணியளவில் டீ குடிக்க சீனியர் Ganapathi Subramanian உடன் ஆபிசை விட்டு வெளியே வருவான். அடுத்து புத்தக்கடைகளுக்கப்பால் மாணவர்களின் க்ளைவ்ஸ் ஹாஸ்டல். போலீஸ் உள்ளே புகுந்து முட்டிக்கு முட்டி தட்டி, அந்த மாணவர்களுக்கு இப்ப 60,70 வயது இருக்கும்.
நந்திகோவில் தெருவை அகலப்படுத்தவே முடியாது தெரிந்ததே. வாழைத்தண்டு, வாழைப்பூ, கொடிக்கா வெத்திலை விற்பனை இப்பவும். குளத்தை ஒட்டி சுவர் ஓரம் சூடாக பஜ்ஜி வடை சுடும் ஐயரைக்காணோம் இப்ப. வரிசையாக நைட்டி விற்கிறார்கள். பழைய புத்தகங்கள் வண்டியில் விற்கிறார்கள். பாலகுமாரன் கதைப்புத்தகம் இரண்டு ரூ 150க்கு கொடுத்த கடைக்காரருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.
ஆட்டோக்காரரை அனுப்பி விட்டு என்.எஸ்.சி போஸ் ரோட்டில் இடது பக்கம் திரும்பினால் ரோட்டின் இருபுறமும் மாதுளை, வெள்ளறி விற்கும் சைக்கிள்காரர்கள். காது குடையும் பஞ்சு வாங்கச்சொல்லி பின்னாலேயே வரும் சிறுவர்களைக்காணோம். செல்லா ஸ்டோர் இருந்த இடத்திலிருந்த மங்கள் & மங்கள் கடையை இரண்டாகப்பிளந்து நடுவே கார் நிறுத்தம். பின்னால் ரெட்டைமால் தெரு அப்பிடியே இருக்கு. அந்த ரோட்டில் வேகவைத்த மக்காசோள முத்துக்கள் கடைகள் அங்கங்கே. ஜனங்கள் இப்பவும் குக்கர் ரிப்பேர் மற்றும் காஸ்கெட்க்கு வந்துவிட்டு போகும்போது பாதாம் பால் அல்லது ஜிகர்தண்டா அருந்துகிறார்கள்.
மலைவாசல் உள்ளே சந்தனம் பன்னீர் மணம். மாணிக்க விநாயகர் அதே ஜொலிப்புடன். தாயுமானவர் சன்னதி போகும் படிகளில் அதே புத்தகக்கடை. திரும்ப மெயின்கார்ட் கேட் நோக்கி நடந்தோம். சிந்தாமணி வாசலில் கரும்புச்சாறு கடையைக்காணோம். பர்மாபஜார் கடைகளின் கஸ்டம்ஸ் பொருட்கள் அமோக விற்பனை இப்ப உள்ளதா தெரியவில்லை.
மேல்அரண் சாலை (மெயின்கார்ட் கேட்) வாயிலில் பீர்க்கங்கா ப்ரஷ் விற்கும் பெண்கள். வாயிலின் பக்கவாட்டு சுவற்றில் அதே பழைய இரும்புக்கதவு பூட்டப்பட்டிருந்தது. அது வழியாக கீழே குகைப்பாதை தஞ்சாவூர் வரை போகும் என முன்பு சொல்வர்கள். எதிரே மைக்கேல் ஐஸ்க்ரீம் கடை சில மாற்றங்களுடன் தெரிந்தது.
திரும்பவும் ஆட்டோ பிடித்து மேலப்புலிவார்ட் ரோட்டில் கிர்ரென பறந்தபோது கெயிட்டி வாசலில் ஷோலே போஸ்டர் மங்கலாக தெரிந்தது எனக்கு மட்டும் தானா!

No comments:

Post a Comment