Sunday, June 22, 2025

ராமேஸ்வரம் தனுஷ்கோடி

 காரைக்குடியிலிருந்து பெங்களூருக்கு நேற்று காலை 7.30க்கு கிளம்பினோம். ஞாயிறு என்பதால் சாலையில் வாகனங்கள் அதிகமில்லை. மோட்டார் பைக்குகளுக்கென ப்ரத்யேகமாக வெள்ளைக்கோடு போட்டிருப்பினும் சட்டை செய்யாமல் நட்ட நடு ரோட்டில் ஹெல்மெட்டும் இல்லாமல் சிலர் அதிவேகமாக செல்வது கவலையளிக்கிறது. நான்கு வழிச்சாலையும் அல்ல என்பதால் அபாயகரமானது தான். புதுக்கோட்டை தாண்டும்போது நான்கு ரோடு சந்திப்பில் எந்தப்பக்கமும் பார்க்காமல் வாகனங்கள் படாரென குறுக்காக கடக்கின்றன, என்ன சொல்வது!

8.45க்கு திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு சங்கீதாசில் நல்ல கூட்டம். டேபிளுக்கு பெயர் கொடுத்துவிட்டு ஜனங்கள் காத்திருக்க, ‘இளையராஜா சார்-6 பேர் வாங்க’ என ஓட்டல் சிப்பந்தி ஒருவர் வரிசையாக கூப்பிட்டுக்கொண்டருந்தார். மினி டிபன் காபி முடித்துக்கொண்டு முசிறி-நாமக்கல் வழியாக சேலம் நோக்கி… தொட்டியத்திலிருந்தே நான்கு வழிச்சாலை. பின் இருக்கையில் மாமியார் இருந்ததால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் போகும் முடிவை மாற்ற வேண்டியதாயிற்று, அவர்களால் இறங்கி நடக்க முடியாதென்பதால்.
கார் எஃப்எம் ரேடியோவில் எனது அபிமான பாடலான ‘மலர்களே.. நாதஸ்வரங்கள்’ (கி.போ.ர). இதை விட அபாரமாக வேறு யாரும் பாட முடியாது என நான் சொல்ல, ‘ ஆமாம்.. ஆமாம்.. பாலசுப்ரமணியன் என்னமா பாடறார்!’ என சிலாகித்த மாமியாரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. 79 வயதிலும் பாடல் வரிகளை ரசித்த அவரது விருப்பப்படி பாடலைப்பாடியது SP மலேஷியா பாலசுப்ரமணிய வாசுதேவனாகவே இருக்கட்டும்.
நாமக்கல்-சேலம் ரோடு என்னைப்பொறுத்தவரை படு அம்சமான ரோடு என்பேன். ஸ்பாட்டிஃபையில் பி.சுசிலா பாடல்கள் ஓடிக்கொண்டு வாகனமோட்டுதல் சுகமானது. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, உன்னை ஒன்று கேட்பேன், மீனே மீனே மீனம்மா, தேவியர் இருவர் முருகனுக்கு, கண்ணா கருமை நிறக் கண்ணா போன்ற முத்தான பாடல்கள், வெளியே சீராக வழுக்கிக்கொண்டு சாலை, தூரத்தில் சேர்வராயன் மலை (என நினைக்கிறேன்).
வெகுநாட்களுக்குப்பிறகு ‘ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் (ரோஜாவின் ராஜா) பாடலை கேட்கிறேன். என்ன அழகான குரல் வளம் P. சுசிலாவிற்கு. SSLC படித்துக்கொண்டிருக்கும்போது பார்த்த படம். வாணிஶ்ரீ கண்கலங்கி உருக்கமாக பாட, எதிரே சிவாஜியும் ஏவிஎம் ராஜனும் சோகத்துடன், அந்தப்பக்கம் வரலட்சுமியும் மேஜரும். அக்காட்சியில் ஏவிஎம் ராஜன் அழாமல் இருந்தது ஆச்சரியம். பாடலின் முதல் சரணத்திற்கு முன் இடையிசையில் (சோகப்பாடலாக இருந்தும்) எம்எஸ்வியின் விசில் இசை பாடலின் தரத்தை தூக்கிப்பிடித்தது என்பது உண்மை (செருகப்பட்ட வீடியோ பார்க்க!)
சேலம் தாண்டி இன்னபிற பாடல்களை கேட்க ஆரம்பித்து, ‘நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்’ போன்ற லிரிக்ஸ் ஏனோ கேட்க போரடித்து (அபாரமான இசை என்றாலும்) டக்கென ரேடியோ எஃப்எம்முக்கு மாற்றினேன் (நெஞ்சு பொறு குஞ்சு பொறு, வீசுகிறேன் பூசுகிறேன்னுகிட்டு!)
நண்பர் Prasanna R குறிப்பிட்டிருந்த தர்மபுரி-ஹோசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை (கிருஷ்ணகிரி தொடாமல்) ராயக்கோட்டை வழியாக.. அருமை. நேரமின்மையால் இருட்டும் முன் பெங்களூர் சென்றடைய வேண்டியிருந்ததால் அடுத்த முறை சாவகாசமாக சந்திக்கலாம் ப்ரோ!
ஹோசூர் தாண்டி பெங்களூர் பார்டரில் ஶ்ரீநிதி வைபவா உடுப்பி ஹோட்டல். முப்பதுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த வசதி, 200 பேர் கொண்ட இருக்கைகள். தரமான பலகாரங்கள் கிடைக்கும். டேங்க்கை காலி செய்து விட்டு உள்ளே நுழைந்து பாவ்பாஜி, மைசூர் பஜ்ஜியுடன் ஒரு வாரத்திற்குப்பிறகு கூர்க் ஃபில்டர் காபி!
5 நாள் காரைக்குடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருச்சி பயணத்துடன் இவ்வருட பொங்கல் பண்டிகை இனிதே நடந்து முடிந்தது.

No comments:

Post a Comment