ஒரு நாள் முழுக்க பெங்களூர் கனகபுரா ரோடு பகுதியில் 4 நண்பர்கள் குடும்ப சமேதராய் சுற்றலாம் என ரொம்ப நாளாக இருந்த ஆசை நிறைவேறியது. கிட்டத்தட்ட 40,50 கி.மீ நீளும் கனகபுரா ரோட்டில் நிறைய கோவில்கள் மற்றும் பிரபல உணவகங்கள்.
காலை 7.30 மணிக்கு நான் Usharani Sridharஉடன் சி.வி ராமன் நகரிலிருந்து பழைய மதராஸ் சாலையை பிடித்து ஜெயநகர் பகுதியில் Suresh Kv சுரேஷ் லதா @Latha Suresh தம்பதியை பிக்கப் செய்துகொண்டும், அந்தப்பக்கம் சதாஷிவ்புராவிலிருந்து ஜே.பி.நகர் பக்கம் கிளம்பிய Harish Jagannath ஹரிஷ் நந்தினி ஜோடி விஜயன் ரேவதி Revathi Vijayan தம்பதியை தம் வண்டியில் ஏற்றிக்கொண்டும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் கலந்து கட்டிய குழாமாக கனகபுரா ரோட்டில் பயணத்தை துவக்கினோம்.
இதமான குளுகுளு காற்று வீச, சுமார் 25 கி.மீ தொலைவு பயணம். பெங்களூரில் மக்கள் தொகை ஈசல் போல பெருகிக்கொண்டிருக்க, சில பகுதிகள் திடீரென தோன்றி காய்கறிக்கடைகள், மருந்தகங்கள், மோர் சூப்பர்மார்க்கெட், மொபைல் கடைகள், உடுப்பி உபச்சாராக்கள் என மளமளவென சாலைகளை ஆக்கிரமிக்க, மிச்சம் மீதி இடத்தில் பானிபூரிவாலாக்களும், வடகிழக்கு மோம்மோஸ் பெண்களும் சேர்ந்துகொள்வார்கள்.
கபலாம்மா ருச்சி சாகர் எனும் நாட்டி (கிராம) உணவகத்தை வந்தடைய ஒரு மணி நேரம் ஆனது. பெங்களூரில் பரவலாக காணப்படும் இது போன்ற நாட்டிமனேக்களில் சுடச்சுட தட்டெ இட்லி தான் காலை பிரதான பலகாரம். சாதாரண இட்லி போல உப்பலாக இல்லாமல் சற்று தட்டையாக பெரிய வட்ட வடிவத்தில் இருக்கும் தட்டெ இட்லி மாவுக்கு கூடுதல் சமாச்சாரங்கள் அவல், ஜவ்வரிசி மற்றும் எக்ஸ்ட்ரா சோடா உப்பு. அபார சுவை. வட இந்தியர்கள் சட்டென வேலையை கற்றுக்கொண்டு சர்..சர்ரென வட்டமாக தோசை வார்க்கிறார்கள். சன்னமாக இல்லாமல் சற்று திக்காக சுடப்படும் முறுகல் தோசையில் அவன் எண்ணெய் விடுவதை மட்டும் பார்ப்பதை தவிர்த்தல் நலம். ஏற்கனவே சமோசாவும் மசால் தோசையும் டேஞ்சரான பதார்த்தங்கள் என டாக்டர் தேவி ஷெட்டி சொன்னது அப்பத்தானா நினைவுக்கு வரும்!
நெட்டிகரே அடர்ந்த காட்டுப்பகுதியில் அழகான குருவாயூரப்பன் கோவில். காலை 11.30க்கு எங்களைப்போல நாலைந்து பக்தர்கள் மட்டுமே. பக்கத்தில் சலசலக்கும் ஆறு, கேரள மங்களூர் ஓடு, லௌடு ஸ்பீக்கரில் நாராயனீயம், சிவந்த மேனியில் நெற்றியில் சந்தனத்துடன் ஒல்லிபிச்சான் கோவில் சிப்பந்திகள், நெய்பாயசம் மற்றும் அரவணப்பாயாசத்தின் கமகம மணம், சுகுமாரி சாயலில் ஈரத்தலை பெண்கள் என கேரளாவையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். ஆண்கள் சட்டையை கழட்டி மேலே முண்டுடனும் பெண்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடதார் மட்டுமே அனுமதி. முட்டி கிழிஞ்ச பேண்ட், ஜீன்ஸ் டீஷர்ட், லெக்கின்ஸ்? ம்ஹூமாம். குருவாயூரப்பனை கொள்ளை அழகுடன் அலங்கரித்திருந்தார்கள். டான் என 12 மணிக்கு கோவிலை சாத்த நாங்களும் கிளம்பினோம்.
அடுத்து கல்லஹள்ளி வெங்கடேச பெருமாள் கோவில் அங்கிருந்து 28 கி.மீ. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தின் பொறுப்பாளர் பாளையக்காரர் கனவில் அருகிலுள்ள ஒரு குளத்தின் அடிப்பகுதியில் கிடக்கும் சாமி சிலையை அகற்றி கிராமத்தில் பிரதிஷ்டை செய்ய கட்டளை கிடைக்க, அதன்படி சிலை கண்டெடுக்கப்பட்டு அதை எடுத்துச் செல்லும் போது, கல்லஹள்ளி என்ற இவ்விடத்தில் வண்டியின் அச்சாணி உடைந்து, கோவில் கட்டுவதற்கு மிகவும் பொருத்தமான இடம் இதுவே என உணரப்பட்டு இங்கு வெங்கடேச பெருமாளுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்ற ஸ்தல புராணத்தை குருக்கள் அழகாக விளக்கினார்.
ஒற்றைக்கல்லால் செதுக்கிய சிலை இங்கு விசேஷம். பெருமாள் இடுப்பில் கை வைத்து ‘கடி ஹஸ்தாதாரி’ யாகவும், இடது கையில் கதையுடன் ‘கதாதாரி’ யாகவும் கண்கள் திறந்த நிலையில் வித்தியாசமாக காட்சியளிக்கிறார். துளுசியும் தீர்த்தமும் வாங்கிக்கொண்டு மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்த அரை மணியில் Pyramid valley இன்டர்நேஷனல் வந்து சேர்ந்தோம். உலகின் மிகப்பெரிய பிரமிடு அமைப்பாம். பசுமை மற்றும் சிறிய குன்றுகளால் சூழப்பட்ட அமைதியான பள்ளத்தாக்கில் 28 ஏக்கர் வளாகத்தில் தியானத்திற்காக மட்டுமே கட்டப்பட்டுள்ள பிரமிட் அமைப்பு பார்த்து பிரமித்துப்போனோம். 30, 40 மீட்டர் உயரம் கொண்ட அந்த மெகா பிரமிடுனுள் ஒரு பத்து மாடி கட்டிடத்தை தூக்கி வைக்கலாம். புனித ஆற்றல்களின் அமைதியான உறைவிடம், தியானம் செய்பவர்கள் மிக விரைவாக அமைதியை அனுபவிக்கச்செய்கிறது. அதிநவீன பயிற்சி அறைகளில் வருடம் முழுக்க கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டு, கல்லா நிறம்பி வழிவது தெரிந்தது.
வளாகத்தனுள்ளே பெரிய உணவகம். க்கும்! அதுக்குத்தானே வந்திருக்கோம்! கல்லாவிலிருந்த பஞ்சாபிப்பெண் முதலில் பணத்தை கட்டி மெனுவை ஆர்டர் செய்ங்க என கறாராக சொல்லி தன் டீஷர்ட்டை அடிக்கடி இழுத்து விட்டுக்கொள்ள நம்ம பெண்களுக்கும் அவள் மேல் கடுப்பு. ஆர்டர் செய்து 15 நிமிடத்தில் ஆவி பறக்க ஃபுல்கா, சீஸ் காய்கறிகள், தால் தடுக்கா என சுடச்சுட கொண்டு வந்து அவர்கள் பரிமாறும் முன், அவசரமாக பானிப்பூரியை லபக்கென வாய் நிறைய அடைத்து விழுங்க முடியாமல் ‘நல்லா இருக்கே’ என கண்களாலே பேசிக்கொண்டோம். முப்பதே ரூபாய்க்கு மலாய் குல்ஃபி அதுபோன்ற சுவையில் சாப்பிட்டதே இல்லை.
அடுத்தபடியா இன்னொரு ட்ரிப் வேறெங்க போகலாம் என சம்பிரதாயமாக கதைத்துக்கொண்டு, நண்பர்களை வீட்டில் இறக்கி விட்டு, ஒருநாள் பெங்களூர் சுற்றுலாவை முடித்து மாலை 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்த கையோடு, கிளிக்கித்தள்ளிய புகைப்படங்களை சர் சர்ரென எங்கள் க்ரூப்பில் ஃபார்வேடினோம்.
No comments:
Post a Comment