முகதூலில் இவர் பதிவு தென்பட்டால் டாய்லெட் போகும் அவசரத்திலும் அதை படித்து விட்டுத்தான் ஓடுவேன். படு சுவாரசியமான பதிவுகள் எழுதுபவர்.
பல்கலை வித்தகரான இவரது எழுத்தாற்றல், தமிழ்ப்புலமை, பொது அறிவு, ஆழமான அரசியல் ஞானம் எல்லாமே நம்மை வியக்க வைக்கும்.
நடப்புக்கால அரசியல் நிகழ்வுகள் பற்றி இவர் எழுதும் பதிவுகளில் மடேர் மடேர் என சம்மட்டியால் மண்டையில் அடிப்பது போல இருக்கும் இவரது ரெப்யூட்டல் கருத்துக்களுடன் இவர் திரட்டிஅளிக்கும் அரசியல் புள்ளி விபரங்கள் நம்மை மலைக்க வைக்கும்.
இவரது தமிழ்ப்புலமை பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா! நாம் புத்தகம் படிக்கும்போதை நமது ஆர்வத்தைத் தூண்டும் வரிகளை கோடிட்டு வைத்திருப்போமே, அதற்கு ‘ஞான உழவு’ என்று பெயராம்.
பற்றில்லாதவனாகிய இறைவனைப் பற்றிக் கொண்டால், நாம் நமது பற்றுக்களிலிருந்து மீளலாம் என்பதற்கு இவர் குறிப்பிடும் திருக்குறள் ஒன்று:
பற்றுக பற்றற்றான் பற்றை - அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
இக்குறளின் சிறப்பே ஒவ்வொரு சொல்லிலும் உதடுகள் ஒட்டி ஒட்டி விலகும் என்கிறார்.
இதே போல் சாட்சி பாவமாக நாம் எல்லாவற்றிலிருந்தும் நீங்கி நின்றால் துன்பம் இல்லை என இவர் குறிப்பிடும் இந்த இன்னொரு குறளில் நம் உதடுகளும் ஒட்டாதாம்:
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்!"
வார்த்தைகளில் அற்புதமாக வித்தை காட்டும் திருவள்ளுவரின் குறள்களை பிரித்து மேய்த்து விடுவார் இவர்.
நகைச்சுவை, நையாண்டியிலும் இவர் விற்பன்னர். உதாரணத்திற்கு பாருங்க:
"போன மார்கழி மாசம்தான் நானும் அவளும் காதலிக்க ஆரம்பிச்சோம்! அவள் சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறாள்!"
"கூடாரவல்லினு சொல்லு!"
சேலம் மாவட்ட சேவாபாரதி எனும் தன்னார்வ அமைப்பின் அங்கத்தினரான இவர் நிறைய சமூக சேவையாற்றுகிறார். அவர்களது சமூக விழா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி அறிமுக உரை மற்றும் தொகுப்புரையும் திறம்பட வழங்குகிறார்.
முகநூல் ரெற்றோ க்ரூப்பில் காதலனும் காதலியும் சம்சாரிப்பதாக இவர் எழுதிய எசப்பாட்டுக் கவிதை இதோ:
அவன்: "காதல் என்ற நல்ல பாட்டு
கடிதம் எழுதியது கணக்கு நோட்டு
ஓடிப்போலாமா எனக் கேட்டு..."
அவள்: ஓ! தாராளமா!
"நானும் நீ சொன்னதைக் கேட்டு,
தாண்டினேன் வீட்டு கேட்டு!
என் டாடி புகார் மனு போட்டு
கடைசியில் போலீஸில் மீட்டு..."
அவன்: "போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு!
என் முதுகிலே கோடு போட்டு
சுழன்றது ஏட்டுவின் பெல்ட்டு!"
"ஏறி மிதித்தது இன்ஸ்பெக்டர் பூட்சு!
அத்தோட என் காதல் பறந்து பூட்ச்சு!
மைனர் பொண்ணைக் கடத்தின கேசு!
அதனால படிப்பு ஆச்சு டப்பாசு!"
கனரா வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு நேற்று பிறந்தநாள். எனது ஓவிய காட்சிக்கூடத்தை (gallery) அலங்கரிக்க வேண்டி இவரது ஓவியத்தை தாமதமாக வரைந்தாலும் பெருமை எனக்கு.
No comments:
Post a Comment