Sunday, June 22, 2025

ஆன்மீக பயணங்கள்.. சில உபயோகமான டிப்ஸ்!


மங்களூர், உடுப்பி மற்றும் கேரளா பக்கம் க்ஷஏத்ராடனம் செய்பவர்கள் மறக்காமல் வேஷ்டி, அங்கவஸ்திரம் கொண்டு செல்லவும். இவை கோவில் அருகே எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. கோவில்களில் ‘ஆண்கள் சட்டை, பனியன் இல்லாமல் வேஷ்டியுடனும் பெண்கள் புடவை அல்லது சுடிதார்+துப்பட்டா அணிந்தும் வரவும்’ என்ற பதாகைகள் பெரும்பாலும் நம் கண்ணில் படாத அளவிற்கு கூட்டம் அதிகம்.
‘செருப்பை பஸ்லயே/கார்லயே விட்டுடலாம்’ என உங்கள் கணவர் சொன்னால் கேட்க வேண்டாம். விடுவிடுவென வெறுங்காலில் அவர் பாட்டுக்கு நடப்பார். உங்களால் முடியாது. கார் பார்க்கிலிருந்து கோவில் வரை கூரான கல், நெறிஞ்சி முள் குத்தும். எல்லா கோவில் வாசல்களிலும் மிதியணி ஸ்டாண்டு உண்டு. சிறிய கோவில்களில் வாசலில் ஒரு ஓரத்திலோ அல்லது நாம் அர்ச்சனை தட்டு வாங்கும் பூக்கடைகளிலோ விட்டுவிடலாம்.
அவசரமாக ஓடிப்போய் 500, 200 ரூபாய்க்கு ஸ்பெஷல் தரிசண டிக்கெட் வாங்க வேண்டாம். கூட்டமில்லையென்றாலோ, பத்து, பதினைந்து நிமிடம் நின்றால் போதுமென்ற பட்சத்தில் தர்ம சேவை கியூவில் நிற்கலாம். அதே சமயம் வயதானவர்கள் கூட வந்தாலோ, உங்களால் அதிக நேரம் நிற்க முடியாதென்றால் யோசிக்காமல் டிக்கெட் எடுங்கள்.
அந்த பத்து பதினைந்து வினாடிகளில் பகவானிடம் என்னென்ன வேண்டுவது என அவசரமாக லிஸ்ட் போட்டு கடகடவென அவசரமாக வேண்டுவதை தவிர்த்து, சேவித்து முடிந்ததும் பிரகாரத்தில் உட்கார்ந்து கண்களை மூடி நமது வேண்டுதல் லிஸ்ட்டை எடுத்து விடலாம். நாம் கோவில் பிரகாரத்தில் இருப்பது ஆயாள் அறியும்!
கோவில் தலபுராணங்களையும் மூலவர், உற்சவர் பற்றிய விபரங்களையும் கூடிய மட்டும் முன்கூட்டியே கூகிள் செய்து பார்த்து விட்டு செல்வது உசிதம். ‘ஹோகி.. ஹோகி.. ஜர்கண்டி’ என செக்யூரிட்டி உங்களை விரட்டும் அந்த டென்ஷனில் ‘ஸ்படிக லிங்கம்னு டிரைவர்னு சொன்னானே! எங்க அதைக்காணோம்!’ என நீங்கள் லிங்கத்தை தேடும் முன் வெளியே தள்ளப்பட்டு விடுவோம். தலபுராணங்களை அர்ச்சகர் விவரிக்கும்போது பொறுமையாக கேளுங்கள். முந்திரிக்கொட்டை மாதிரி ‘புதுக்கோட்டை திருமயம் பக்கத்துல கூட இதே மாதிரி ஒரு திவ்யதேசமிருக்கு.. அங்கென்ன விசேஷம்னா.. ’ என உங்கள் புராணத்தை எடுத்து விட வேண்டாம்.
கோத்ரம், நட்சத்திரம் விபரங்களை அர்ச்சகர் கேட்கும்போது, தயவு செய்து உங்கள் மனைவியே அந்த விபரங்களை சொல்லட்டும். மனைவியின் நட்சத்திரம் சட்டென மறந்து ஸ்தலத்திலேயே வாங்கிக்கட்டிக்கொண்டவன் நான். நோய்வாய்ப்பட்டிருக்கும் நண்பர்கள்/குடும்ப உறுப்பினர்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி ‘சஹ குடும்பானாம்’ என சுறுக்க முடியுங்கள். யோசித்து யோசித்து ‘ம்ம்ம் அப்பறம் கலையரசி! பூராடம்!’ என லிஸ்ட்டை பெரிதாக்க வேண்டாம். உங்களையடுத்து மற்ற பக்தர்களும் அர்ச்சனைக்கு வந்திருப்பதை மறக்க வேண்டாம்.
தீபாராதனை காட்டும்போது சத்தம் போடாமல் சேவியுங்கள். ‘தாயே! அம்பே! பரதேவதே! என எல்லோருக்கும் சேர்த்து பெருஞ்சப்தமெழுப்பி, டப் டப்பென கன்னத்திலடித்துக்கொண்டு.. வேணாம் நல்லால்ல!
தரிசணம் முடிந்து கோவிலிலேயே சாப்பிட விரும்புபவர்களுக்கு: சில உடுப்பி கோவில்களில் தட்டு, டம்ளர்களை தள்ளு வண்டியில் தள்ளிக்கொண்டு வந்து வைப்பார்கள். தட்டுக்கள் சில சரியாக அலம்பாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஜாக்கிரதை! பக்தியுடன் சுகாதாரமும் அவசியம்.
கோவில் வாசலில் பன்னீர் சோடா, லெமன் சோடா என கண்டதை வாங்கிக்குடித்து உடம்பை கெடுத்துக்கொண்டு ஈனோ சால்ட் தேடி கடைக்கு ஓடாமல் இளநீர் போன்ற பானங்களை எடுத்துக்கொள்ளலாம். இளநீர்க்காரரிடம் ஐந்து பத்து ரூபாய்க்கு பேரம் பேசவேண்டாம். அவரது சாப்பாடு இளநீரின் லாபத்தில் மட்டுமில்லை, விற்பனையிலும் தான்.
டிரைவருடன் வாகனம் எடுத்துச்செல்லும் அன்பர்கள் அவரிடம் சண்டை போடாமலிருத்தல் அவசியம். உங்கள் உயிருக்கு உத்தரவாதம் அவர் கையில். அடிக்கடி அவர் போனை எடுத்து பேசினால் கறாராக வேண்டாம் என சொல்லிவிடுங்கள். அதற்காக ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் வேண்டாம். அது அவரது மனைவியிடமிருந்தோ குழந்தைகளிடமிருந்தோ இருக்கலாம். வண்டியை ஓரங்கட்டி நிதானமாக பேசி முடிக்கச் சொல்லுங்கள்.
மனைவி பின் இருக்கையில் இருக்க, நீங்கள் டிரைவருக்கு பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேச்சு கொடுக்கலாம், அவருக்கு தூக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. தயங்காமல் டீ, காபி வாங்கிக்கொடுங்கள். பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் தூங்கி வழியாமலோ, ‘ஓஓஓ..ககக்க’ என பெரியதாக கொட்டாவி விடாமல் இருத்தல் அவசியம்.
டிரைவருடன் அரசியல் பேச்சை தவிர்க்கவும். மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்தது போல, சம்மந்தமில்லாமல் நீங்கள் திருமாவளவனை திட்டப்போய், டிரைவர் அந்த கட்சியைச்சேர்ந்தவராக இருந்தால் தொலைந்தீர்கள், அதுவும் ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும்போது! பாதுகாப்பான பயணமாக இருக்கட்டும்.
பிரயாணத்தின்போது நேர்மறையான பொருள் கொண்ட சம்பவங்கள்/அனுபவங்களைப்பற்றி பேசிக்கொண்டு செல்வது அதிமுக்கியம். ‘கரூர் தான்தோன்றி மலை கிட்ட ரெண்டு வண்டியும் நேருக்கு நேர் மோதி, ஆள் ஸ்பாட்லயே காலி.. ஊய் ஊய்ன்னு மூணு ஆம்புலன்ஸ் வந்துடுச்சு. ரோடெல்லாம் ஒரே ரத்தம்’ போன்ற பக்குவமற்ற வர்ணனைகள் அவசியமற்றவை.
பிரயாணம் நான்கைந்து நாட்களுக்கு மேலே என்றால் மிகவும் ஜாக்கிரதை, வெந்நீர் மட்டும் குடியுங்கள், எண்ணெய் பதார்த்தங்கள், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் எதுவும் பேடா. இரவில் தால் கிச்சடி சேஃபானவை. ‘கொடுத்த காசுக்கு எல்லா இடத்தையும் கவர் பண்ணலாம்’ என அலையாமல் நடுநடுவே நிறைய ஓய்வும் தேவை.
உங்கள் பயணம் இனிமையாகவும் பத்திரமானதாக இருக்கவும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment