Sunday, June 22, 2025

லண்டன் மஹாஅரூபன்

 பெங்களூரின் ஏதோ ஒரு மூலையில் கனகபுரா ரோட்டில் பஹ்ரைன் நண்பர்கள் 5 குடும்பங்களுடன் டோக்ளா, மதூர் வடா, காபியுடன் அரட்டையடித்துக்கொண்டு இருந்த சமயம் பெயர் தெரியாத நம்பரிலிருந்து டெலிபோன்.

‘ஶ்ரீதர்! நான் மஹான் அரூபன் (Mahaan Arooban) லண்டனிலிருந்து பெங்களூர் வந்திருக்கேன். மெசஞ்சர்ல உங்க போன் நம்பர் பாத்துட்டு போன் பண்றேன்’
ஆஹா! லண்டன் மஹான் அரூபன்! (என்னவொரு கவர்ச்சியான பெயர்!). உடனே பஹ்ரைன் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். பனஷங்கரி, ஜெயநகர், பன்னர்கட்டா ரோடு முழுக்க போக்குவரத்து நெரிசல்.
எங்கள் வீட்டிற்கு நாலைந்து கி.மீ தள்ளி இந்திரா நகர் பகுதியில் விடுதியொன்றில் தங்கியிருந்த இவரை காரில் கொத்திக்கொண்டு எம்.ஜி ரோட்டைத்தாண்டி வசந்த் நகர் பகுதியில் சூசி-க்யூ ஹோட்டல் வாசலில் வாலேக்கு காரை விட்டு விட்டு, தடுத்து நிறுத்திய படு உயரமான பவுன்சர்களுக்கு பதிலளித்து விட்டு கதவைத்திறக்க, ஹோவென ஒலியெழுப்பியபடி நெருக்கமாக நின்றபடி ஆடிக்கொண்டும் பேசி, சிரித்துக்கொண்டுமிருந்த இளசுகளை கவனத்துடன் உரசாமல் கடந்து, மேற்கத்திய இசை மற்றும் கண்ணாடி கோப்பைகளின் கனகன ஓசையில் இரண்டு பேர் அமரக்கூடிய மேசையில் உட்கார வைத்தார்கள். மரக்கரி உணவு, பீனாகொலாடா எனும் நுரைக்கும் அன்னாசி பழச்சாறு என மொஸ்க்கிக்கொண்டே ‘சொல்லுங்க அரூபன்! உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்’ என பேச ஆரம்பித்து இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
‘எவ்ரிபடி… ஏஏய்’ என அடித்தொண்டையில் ‘பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்’ அலறும் 90களில் பிரபலமான அந்தக்காலப்பாடலை 90ஸ் கிட்ஸ் இன்றும் ரசிக்கின்றனர். ஒரே சத்தமாக இருந்தும் ரம்மியமான சூழலுக்கு நடுவே பளிச்சென அழகான களையான முகம் நண்பர் அரூபனுக்கு. ‘யோவ் அரூபா! உனக்கா ஐம்பது வயசு! 38ஐத்தாண்டாத மாதிரி இருக்கப்பா!’ என்ற என் மைண்ட் வாய்சை விவேக் போல நேரடியாகவே அவரிடம் சொல்லி விட்டேன். சீராக ட்ரிம் செய்யப்பட்ட இளம் தாடியைச்சுற்றி சவரப்பச்சை.
நெருங்கிய முகநூல் நண்பர்களில் ஒருவர் இந்த அரூபன். லண்டனில் 25 வருடங்களுக்கு மேலாக வங்கிகள் சார்ந்த ஐ.டி துரையில் பல வருடங்கள் கோலோச்சியபின் தனியாக கன்சல்டன்சி துவங்கி, பல வருடங்களில் கிடைத்த அனுபவத்துடன் தன் அணியை திறம்பட சமாளித்து லுக்ரேட்டிவாக வருவாய் ஈட்டுகிறார் இந்த அரூபன்.
இவரது நகைச்சுவைப்பதிவுகளை ரசித்து படிப்பவன் நான். பரஸ்பர குடும்ப விசாரிப்புகளுக்குப்பின் முகநூல் பக்கம் பேச்சைத் திருப்பினோம். முகநூலில் ஒருமித்த கருத்துக்கள், ஒரே அலைவரிசை, விளையாட்டுக்கு ஒருவரையொருவர் கலாய்த்தல், பிறர் மனம் புண்படாமல் பழகுதல், வயசு ஏறிக்கிட்டே போனாலும் இளமையாகவே இருக்க விரும்பும் மனம் மற்றும் உடல்மொழி போன்ற கல்யாணகுணங்கள் கொண்ட ஒரு சிறிய முகநூல் கும்பலின் தோள் உராயும் நான் அந்த கும்பலில் ஒருவரான இவரது ரசிகன். அப்படியாப்பட்ட நிறைய நண்பர்கள் பற்றி பேசினோம்… குறிப்பாக சிலரது மண்டைய உருட்டினோம். அவர்கள் பின்வருமாறு: கோரமங்களா சதீஷ் (தற்போது லண்டனில்) (Satheesh Kumar), திருச்சி வெங்கட் (Ramesh Venkat Ganapathy), திருச்சி ராஜகோபால் (Rajagopalan Trichy), ‘சன்டே தான் வேறென்ன’நாகராஜ் நட்ராஜ் (Nagaraj Nataraj), ஜெகநாதன் கண்ணன் (Jagannathan Kannan) , கனடா ஶ்ரீராம் (Rasanai Shriram) KRTY கீர்த்தி Keerthivasan Rajamani, அமெரிக்கா சுரேஷ் (Suresh Srinivasan), பெங்களூர் பிரசன்னா (Prasanna R) வல்லபா (Vallabha Srinivasan) , வீகேஎஸ் (Vk Srinivasan), அனன்யா (Ananya Mahadevan), குரு (Gurumoorthy Subramanian), அமெரிக்கா கீதா சந்திரா Geetha Chandra, ஆர்விஎஸ் (Venkatasubramanian Ramamurthy) லாஸ் ஏஞ்சலஸ் ராம் Ram Ramachandran, நண்பர் ஶ்ரீதர் சுவாமிநாதன் (Sridhar Swaminath) … பெரிய லிஸ்ட் இன்னம் நீளும்!
நண்பன் வெங்கட்டுக்கு (Ramesh Venkat Ganapathy) இந்த திடீர் சந்திப்பு பற்றி சொல்ல அவகாசம் இல்லை.. தெரிந்தால் என்னை கொன்னு புடுவார்.
இரவு பண்ணிரண்டை எட்டும் முன் இவரை விடுதியில் இறக்கி விட்டு ‘எக்கட உண்ட்டாரு?’ எனும் மனைவியின் தொலைபேசிக்கு பதிலளித்து விட்டு வீடு வந்து சேர இரவு 12. ‘உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்’ மற்றும் ‘ப்ளஷர் ஈஸ் மைன் டூ’ என குறுஞ்செய்திகளுடன் பகிர்ந்த புகைப்படங்களுடன்….

No comments:

Post a Comment