சென்ற வாரம் சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக பயணம். மைசூர், பெங்களூர், கோயம்புத்தூர், கேரளா போன்ற இடங்களுக்கு கார் ஓட்டிப்போகும் எனக்கு சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வாகனமோட்டுவது அவ்வளவு சுலபம் இல்லையென உணர்ந்தேன். மேலும் அவ்வழியில் பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதமில்லை என்பதும் தெரிந்தது. காரணங்கள் இதோ.
கடந்த 20 வருடங்களாக இன்னும் 4 வழிச்சாலையாக உள்ளது. கொரோனாவிற்குப்பிறகு போக்குவரத்து அதிகரித்த நிலையில் அவ்வழியில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேலாம். தமிழக வரைபடத்தில் சென்னையானது தமிழகத்தின் உச்சியில்(வடக்கில்) உள்ளது. அதாவது ஆந்திரா எல்லைக்கு அருகில். கீழே வர வர மற்ற மாவட்டங்களுக்கு குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து செல்ல வேண்டுமென்றால் திருச்சி வழியாகத்தான் எல்லா வாகனங்களும் செல்ல வேண்டும். மதுரையோ, ராமநாதபுரமோ, கண்ணியாகுமரியோ, சில வட மாவட்டங்களோ திருச்சி எல்லையை தொட்டாவது செல்ல வேண்டும். அதனால் சென்னை-திருச்சி சாலையில் வாகனப்போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதிகளிலோ, பண்டிகை விடுமுறைகளிலோ சென்னையிலிருந்து வெளி மாநிலங்கள் செல்பவர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்கா.
சரி.. மக்கள் எப்படி வாகனம் ஓட்டுகிறார்கள்? பொதுவாக பஸ் முதற்கொண்டு அதிவேகமாக ஓடுவது மிகுந்த அச்சத்தை அளிக்கிறது. சிறிய வாகனங்கள் கூட 100கிமீ வேகத்தில் செல்கின்றன. 1000cc க்கு குறைவான வாகனங்களில் பொதுவாக இரண்டு ஏர்பேக் முன் இருக்கைகளுக்காக மட்டுமிருக்கும். அவர்கள் 100 கிமீ வேகத்தில் செல்லும்போது ஏற்படும் விபத்து உயிருக்கு உத்திரவாதம் கொடுக்காது.
வலதுபுறம் தான் வேகப்பாதை என்ற கோட்பாடை பெரும்பாலும் யாரும் உணர்ந்து கடைபிடிப்பதில்லை. நிம்மதியாக, ஜம்மென்று மெதுவாக போக நினைப்பவர்கள் வேகப்பாதையில் செல்ல விரும்புகிறார்கள். காரணம் அதிவேகமாக பின்னால் வரும் வண்டிகள் இடது புறத்தில் இவர்களை முந்திச்சென்று விடுவதால் தான். இது மிகவும் ஆபத்தானது. வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்வதால் அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த விபத்துகளுக்கு மற்றொரு முக்கியக் காரணம் சாலைகளின் மோசமான வடிவமைப்பு. சிறுகிராமங்களைத் தாண்டிச்செல்லும்போது சேவை சாலைகள் (Service roads) இல்லாதது ஒரு பெரிய குறை. அதனால் கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது, அதிவேகத்தில் வரும் வாகனங்களுடன் மோதுவது தான் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை-கிராமங்கள் சந்திப்பில் மோட்டார் பைக்குகள் சரேலென நெடுஞ்சாலையை கடப்பதில் நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இடது வலது திருப்பத்தின் போது பெரும்பாலோர் வாகனத்தில் இட/வல சிக்னல் போடுவதில்லை. ஹெல்மெட் அணிவது கிடையாது. ஒரே பைக்கில் மூன்று பேர். டிரைவர் மடியில் சிறு குழந்தை. பைக்கின் முன்புறம் சிறுவன், ஓட்டுநருக்குப்பின் மற்றொரு குழந்தை, அதற்குப்பின் மனைவி என குடும்பமே பைக்கில் செல்வது பார்க்கவே பயமாக உள்ளது. மற்றொரு காரணம் சாலை ஓரத்தில் வாகனத்தை தற்காலிகமாக நிறுத்துபவர்கள் போதுமான இட வசதி பார்த்து நெடுஞ்சாலையை விட்டுத்தள்ளி நிறுத்தாமல் அசட்டையாக நெடுஞ்சாலையை ஒட்டி நிறுத்தி விடுவதும், வேகமாக வரும் வண்டிகள், குறிப்பாக இடதுபுறம் முந்துபவர்கள் நேரே வந்து நின்றுகொண்டிருக்கும் வண்டியை இடிப்பதில் பெருமளவு உயிர்ச்சேதங்கள் அதிகம்.
மக்களுக்கும் உயிர் மேல் பயமோ ஆசையோ இருப்பதாகத்தெரியவில்லை. அஜாக்கிரதையாகவும், சாலை விதிமுறைகள் கடைபிடிக்காமலும், செல்போன் பேசிக்கொண்டு பைக் ஓட்டுவதும், முந்திச்சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து முந்துவதில் முனைப்பையும் கோபத்தையும் காட்டுகிறார்கள். ஆண்டுக்கு 500 பேருக்கு மேல் இறக்கிறார்களாம். 1500க்கு மேல் காயமடைகிறவர்கள். ஆம்புலன்சுகளுக்கு சிறிதும் மதிப்பளிப்பது யாரும் வழி விடுவதில்லை.
மேற்சொன்ன அனைத்தும் சென்ற வாரம் வாகனம் ஓட்டிச்செல்லும்போது கண்கூடாக நான் பார்த்தவை, இறப்புகள் உட்பட. விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் நான் கடந்து சென்ற ஸ்தலத்தில் மோட்டார் பைக் ஒன்று உருக்குலைந்த இரும்பு உருண்டையாக ஒரு ஓரத்தில் கிடக்க, தலை முதல் கால் வரை இரத்தம் தோய்ந்த நிலையில் இறந்து கிடந்த இளைஞனின் உடலைச்சுற்றி மக்கள் நின்றுகொண்டு ஆம்புலன்சுக்கு போன் போட்டுக்கொண்டிருந்தார்கள். கிராமத்து பக்கவாட்டு சாலையில் வந்தவன் நெடுஞ்சாலையை கவனமாக கடக்காமல், வேகமாக வந்த கார் இடித்து தூக்கியெறியப்பட்டானாம்.
என்னை மிகவும் பாதித்தது.. நெடுஞ்சாலை நடுவே தடுப்பு சுவற்றில் ஒரிரு பெரிய கருங்கற்களை தம் வசதிக்காக யாரோ அகற்றி, சிறிய பாதை அமைத்து, செடிகளுக்கு நடுவே இருந்து பைக்குகள் திடீரென வெளியே வந்து, நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கும் நம்மை பீதியுறச்செய்கிறார்கள்.
சில ஆலோசனைத்துளிகள்:
1. வாகன ஓட்டிகள் சற்று இறுக்கமில்லாத பேண்ட் அணியலாம். வசதியாக உட்கார்ந்துகொண்டு வாகனம் ஓட்டிச்செல்லலாம்.
2. காலை பதினோறு மணிக்கோ, மதியம் இரண்டு மணக்கு மேலோ தூக்கம் சுழட்டினால் தயங்காமல் வண்டியை ஓரங்கட்டி ஒரு பத்து பதினைந்து நிமிடம் குட்டித்தூக்கம் போட்டு டீ, காபி குடித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடருங்கள்.
3. குளிர்க்கண்ணாடி வெயிலுக்கு இதமாக இருந்தாலும் சிலபேருக்கு சாலை சற்று இருட்டாக தெரியும். கவனம் தேவை.
4. பின்னாலிருந்து உங்களை முந்த முயற்சிப்பவர்களை ‘போய்ட்டுப்போறான்’ என தாராள மனத்துடன் முந்த விடுங்கள். இல்லையென்றால் உங்கள் கவனம் சிதறிவிடும் அளவிற்கு பின்னாலேயே வேகமாக வருவார்கள்.
5. பாடல்கள் கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் களைப்பு தெரியாது, ஆனால் ஒலியின் அளவை மிதமாக வைத்துக்கொள்ளலாம். வெளியே மற்ற வாகனங்களின் ஹாரன் ஒலி நமக்கு கேட்க வேண்டுமே!
6. சிற்றூர்களை கடக்கும்போது வேகத்தை குறைத்து, ஹார்ன் ஒலியெழுப்புதல் அவசியம். சாலையை யாரும் கடக்கவில்லையே என நினைக்க வேண்டாம். திடீரென டிவிஎஸ்ஸில் கிராமத்து பெருசுகள் குறுக்கே வரலாம்.
7. சீட் பெல்ட் போடவில்லையென்றால் ஏர்பேக் வேலை செய்யாது என்பதை ஒரே ஒரு முறை மனைவியிடம் சொல்லிவிடுங்கள். பிறகு அவர் பார்த்துக்கொள்வார் (உங்களை
)

8. கூடுமானவரை பெட்டிகள் மற்றும் கனமான பொருட்கள், இரும்பு, கூர்மையான பொருட்கள் யாவற்றையும் பின் டிக்கியில் போட்டுவிடவும். சில விபத்துக்களில் இது போன்ற பொருட்கள் நம் மீது தூக்கியெறியப்பட வாய்ப்புள்ளது.
9. சாதாரண ரப்பர் செறுப்பு, சன்னமான காலணிகள் அல்லது வெறும் காலுடன் தொலைதூரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கால் பாதத்தில் வலி ஏற்படலாம். அதனால் கனமான அல்லது ஸ்கெட்சர்ஸ் போன்ற விளையாட்டுக்காலணிகள் ஆக்ஸிலேட்டரை சுலபமாக அழுத்தவல்லதாக இருக்கும்.
10. நெடுஞ்சாலை உணவகங்களில் உண்ணும்போது கவனம் தேவை. பஜ்ஜி, வடை, மஞ்சூரியன் போன்ற எண்ணெயில் பொறித்த பலகாரங்கள் சிலசமயம் வயிற்றைக்கெடுத்து விட சாத்தியங்கள் உள.
11. இயற்கை அழைப்பை உடனே ஏற்று அடுத்த பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி பிறகு நிம்மதியாக வாகனம் செலுத்தலாம். ‘தர்மபுரி தானே! இன்னம் ஒரு மணி நேரத்துல கிருஷ்ணகிரில நிறுத்திக்கலாம்’ என அடிவயிறு அழுத்தத்துடன் வாகனம் ஓட்ட வேண்டாம்.
12. சுங்கச்சாலையில்(Toll gate) மாங்கா, கொய்யா, வெள்ளறி போன்றவற்றை நம்மிடம் ஓடி வந்து விற்பார்கள். வாங்கி சாப்பிடுவதில் தப்பில்லை. அவர்கள் பூசும் உப்பு மிளகாய்த்தூள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். காரில் எப்போதும் ஒரு கத்தி மற்றும் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லும் உப்பு மி.தூள் இருந்தால் நல்லது. வாங்கும் பழங்களை நாமே கழுவி உண்ணலாம்.
13. முதலுதவி (First Aid)ப்பெட்டி காரில் இருப்பது அவசியம். தற்போது சிறிய பவுச்சுகளில் கிடைக்கிறது.
14. டயர் அழுத்தம் (pressure) பொதுவாக 32 முதல் 35க்குள் இருக்கவேண்டும். உங்கள் காரின் டிரைவர் பக்க கதவைத்திறந்தால் உள் பக்க கீல்களுக்கருகே அதுகுறித்த தகவல்களை ஒட்டி வைத்திருப்பார்கள் (வேற இடமே கிடைக்கலயா!) நிற்க! நான் சொல்ல வந்தது, நெடும்பயணத்தின்போது அவசரமாக டயருக்கு காற்றடிக்க வேண்டாம். அழுத்தம் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. ஓரிரு மணி நேரம் வண்டி ஓடினாலே உராய்வினால் டயர்களின் அழுத்தம் 34,35 என உயர்ந்து விடும்.
15. முக்கியமானது: பக்கத்து இருக்கையில் மனைவியுடன் வாகனம் ஓட்டுபவர்கள் ஜாலியாக சினிமா, அரசியல் என அரட்டையடித்துக்கொண்டு வாகனம் செலுத்துவது நல்லது. அதை விடுத்து பையன்/பெண் கல்யாணம், நாத்தனார், ஓர்ப்படி, மாமனார், மாமியாரைப்பற்றி பேசும் சம்பாஷணைகள் திடீரென திசை திரும்பி உங்கள் இருவருக்குமிடையே சண்டையில் முடியும் ஆபத்துள்ளது. அப்படியானபட்சத்தில் வண்டியை ஓரங்கட்டவும். வாகனம் ஓட்டும்போது அடி வாங்குவது மேலும் ஆபத்தானது.
பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment