Friday, June 20, 2025

நீதிமன்ற அறையில் ஒருநாள்..


காலை மணி 10.30. பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா மெட்ரோ ரயிலடி விட்டு வெளியே வந்ததுமே எதிரே பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகம். கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த விசாலமான இடம். உயர்ந்த அடர்ந்த மரங்களின் ஊடே புகுந்து நம் முகத்தில் வீசும் குளிர் காற்று. பெங்களூருக்கே உரித்தான சோம்பேரித்தனமான காலை வேளை. பெங்குவின் பறவைகள் போல கருப்பு கோட்டு வழக்கறிஞர்கள் சுற்றிலும், கக்கத்தில் கேஸ் கட்டுடன். லாயரின் பொருளாதார நிலையை அந்த கோட்டை வைத்தே யூகித்து விடலாம். வளாகத்தினுள்ளேயே மூன்று நான்கு கேன்டீன்கள். பூரி, மசால் தோசை வாசனை காற்றில் மிதந்து வர, நந்தினி பாலக பூத்தில் பாதாம் பால் விற்பனை. அதையடுத்து பம்பாய் போலவே இங்கும் பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு, வாழைக்கனிகளை பொடியாக கொய்து உப்பு மிளகாயப்பொடி தூவி பல்குத்தும் குச்சியுடன் விற்கிறார்கள் மஞ்சுநாத்கள்.
உயரமான படிக்கட்டுகள் ஏறினால் மிகப்பெரிய மண்டபம். உள்ளே ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம் அம்முகிறது. இந்தப்பக்கம் கடையில் சட்ட சம்மந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனை. மண்டபத்தினுள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட நோட்டரிகள் பெயர்ப்பலகை, மடிக்கணினி மற்றும் பிரின்டருடன் நுகர்வோர்களை எதிர்பார்த்து மேசையில் அமர்ந்திருக்க, அவர்களைக கடந்தால் லிஃட் பகுதி. ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க எண்கள் கொண்ட தளங்களுக்கென இரண்டே லிஃப்ட்கள். மக்கள் வரிசையில் நின்று, கேஸ்கட்டுகள் நம் முகத்தில் உரச நெருக்கமான லிஃப்ட்டினுள் நின்றுகொண்டோம்.
ஆறாவது தளம். வழக்காடு மன்றம் விசாலமாக இருந்தது. பதினோறு மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாம். பெண்மணி ஒருவர் அன்றைக்கான கேஸ்கட்டுகளை தள்ளு வண்டியில் அடுக்கி இழுத்துக்கொண்டு வந்து நீதிபதி அமரும் மேடைக்கு கீழ்ப்பகுதியில் கொண்டுவந்து வைத்தார். கிளார்க் ஒருவர் அந்த ஒரொரு கட்டினுள்ளே இருந்து எட்டிப்பார்க்கும் துண்டுக்காகிதங்களை சரிபார்த்துக்கொண்டார். நீதிபதி பருக தண்ணீர் வைத்து கிளாசை மூடிவைத்தார் பெண்மணி. நீதிபதியின் இருக்கைக்கு அருகே லேப்டாப் & பிரிண்டருடன் தயார் நிலையில் ஒரு பெண்.
சரியாக 11 மணிக்கு ‘ஓப்பன் கோர்ட்!’ என அந்த பெண் அறிவிக்க, நாங்கள் எல்லோரும் எழுந்து நிற்க, மெதுவாக நடந்து உள்ளே வந்த நீதிபதி மேடையில் ஏறி பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு இருக்கையில் அமர்கிறார். 10 வினாடிகளுகள் கூட கடக்கவில்லை, அந்த எழுத்தர் உடனே முதல் கேஸ் இலக்கம் மற்றும் வாதி-பிரதிவாதி பெயர் சொல்லி அழைக்கிறார். எதிரே வழக்கறிஞர்கள் கூட்டமாக நிற்க, முண்டியடித்து முன்னால் சென்ற அந்த வக்கீல் ஏதோ சொல்ல, ‘பாஸ் ஓவர்!’ என அந்த எழுத்தர் அறிவித்து, கேஸ்கட்டை அந்தப்பக்கம் போட்டுவிட்டு அடுத்த இலக்கத்தை கூப்பிடுகிறார்.
‘எனது கிளையண்ட் விபத்தில் சிக்கி எலும்பு முறிவு சிகிச்சையில் இருக்கிறார்’ என வக்கீல் சுறுக்கமாக சொல்ல, ‘போன தடவை ஆபரேஷன்னு சொல்லி நாளை கடத்தினீங்க. இந்த ஒரு தடவை மாத்திரம் மட்டும் தரேன்’ என நீதிபதி சொல்ல அடுத்த கேஸ் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வக்கீல், வாதி, பிரதிவாதி என எல்லோருமே அன்றைக்கு ஆஜர் என்றால் ‘சரி! பன்னிரண்டு மணிக்கு தயாராக இருங்கள்’ என அறிவிக்கிறார் கிளார்க். ஆக அன்றைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 100 கேஸ்களை வடிகட்டி ஆஜராகாத மற்றும் வேறு திகதி கோரிய சுமார் 40 கேஸ்களை மறுதேதிக்கு தள்ளி வைத்து, மீதமானவர்களை வரிசையாக கூப்பிடுகிறார்கள்.
கடைசி இரண்டு வரிசையில் நாம், பார்வையாளர்களாக. கால் வலி என கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஒருவரை ஒரு வக்கீல் அப்படி உட்காரக்கூடாதென அன்புடன் சைகை செய்து, நீதிமன்றம் மற்றும் கணம் நீதிபதியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டுமென்பதை குறிப்பால் உணர்த்தினார்.
பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், 80 வயது முதியவர் என எல்லா தரப்பினரும் சாட்சியளிக்கவோ, குறுக்கு விசாரணைக்கோ வந்திருந்தார்கள். சாட்சிக்கூண்டில் ஏறி ஒருவர் ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ வாசகங்களை குனிந்து படித்ததும் ‘நின்ன ஹெஸ்ரு ஏனு?’ (உங்க பெயர் என்ன) என மென்மையாக கேட்கிறார் நீதிபதி. அடுத்து ‘தந்தை எஸ்ரு’ என்னவென்பதையும் வரிசையாக கேள்விகள். மேஜர் சுந்தர்ராஜனைப்போல ஆர்டர்.. ஆர்டர் என மர சுத்தியலை எடுத்தெல்லாம் தட்டவில்லை. வக்கீலும் பணிவாக தன் வாதத்தை சொல்ல, நீதிபதி குறிப்பெடுத்துக்கொள்கிறார். பக்கத்திலிருக்கும் பெண்மணி அசுரவேகத்தில் டைப் செய்ய, நீதிபதி அதையும் படிக்கச்சொல்லி சில மாற்றங்கள் செய்து, அடுத்து இரண்டே நிமிடங்களில் கேஸ் அடுத்த எண்ணுக்கு தாவுகிறது. சாரி சாரியாக வழக்கறிஞர்கள் உள்ளே வருவதும், கேசை முடித்துக்கொண்டு வெளியே செல்வதுமாக இருக்க, சுவாரசியமாக கவனித்துக்கொண்டிருந்தேன்.
சிவில் வழக்குகள் விசாரனை துரிதமாக நடக்கும் போலும். எங்குமே சினிமா பாணி விவாதங்கள் இல்லை. வக்கீல் செந்தாமரை தொண்டையை கணைத்துக்கொண்டு ‘யுவர் ஆனர்!’ என ஸ்டைலாக முகத்தை ஒரு பக்கம் சாய்த்து, ஆள்காட்டி விரலால் மூக்கை உராய்வதோ, ‘அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்!’ என திடீரென எதிராளி வக்கீல் முத்துராமன் எழுந்து நின்று கத்துவதோ இங்கில்லை.
நீதிபதி முன் என்னென்ன சொல்ல வேண்டும் என வக்கீல் நல்ல பயிற்சி கொடுத்தும் அந்த நபர் சாட்சிக்கூண்டில் ஏறியவுடன் கலவரத்துடன் இருந்தார். அவரிடம் கேள்விகள் கேட்கப்பட ‘கொத்தில்லா!’ (தெரியாது) என டக்கென பதில் சொன்னார். சர்வே நம்பர் என்ன என்ற கேள்விகளுக்கும் டான் டான் என ‘கொத்தில்லா’ தான். அடுத்து ‘என் வக்கீல் இதெல்லாம் சொல்லித்தரலையே!’ என அப்பாவியாக சொல்ல, நீதிபதியே சிரித்து விட, வக்கீல் சங்கடத்துடன் நெளிய, எதிராளி வக்கீல் முகத்தில் பெருமிதம். ‘பரவால்ல.. எதிராளி ஜெய்க்க ரொம்பவே உதவி செஞ்சிட்டார் அந்த கிளையண்ட்!’ என யாரோ சொல்ல சுற்றிலும் சிரிப்பலை.
கிளையண்ட் வராமல் காத்திருந்த சில வழக்கறிஞர்கள் ‘நன்ன கிளையன்ட்டூ இன்னு பர்த்திதே’ (இதோ வந்துட்டே இருக்கார்) என கால அவகாசம் கோர, நீதிபதியும் எச்சரித்து மாலை 3 மணிக்கு மேல் திரும்ப வரச்சொல்கிறார். அன்றைக்கு மட்டும் சுமார் 100 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டனவாம்.
இந்திய சட்ட அமைப்பு பற்றி நம் மக்களிடையே எப்போதும் கருத்து விவாதங்கள் உண்டு. நீதிமன்றங்களில் பணி செய்பவர்கள் முழு நேரம் உழைக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது. அங்கங்கே கருப்பு ஆடுகளும், அரசியல் தலையீடுகளும் எல்லா துறைகளிலும் இருப்பது தான். நாம் சில மணி நேரங்கள் பார்க்கும் அந்த நிகழ்வுகளைக்குப்பின்னால் பல மணி நேர உழைப்பு இருக்கிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த பெண்மணி குறிப்புகள் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட தாள்களோடு பின்னர் நீதிபதியின் சேம்பருக்கு சென்று, அவர் தயாரிக்கும் தீர்ப்பு சார்ந்த எழுத்துக்களுக்கு உதவுகிறார். ஆயிரக்கணக்கான பேப்பர்கள் பிரதிகள் எடுக்கிறார்கள். தற்போது தீர்ப்புக்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரிலிருந்து வலைதளத்திற்கு பதிவேற்றமும் செய்கிறார்கள்.
தேங்கிக்கிடக்கும் வழக்குகள் பல வருடங்கள் வாய்தா வாங்கிக்கொண்டு முடங்கியிருந்தாலும் நீதித்துறையி்ல் வேலை செய்பவர்களை குறை சொல்ல இயலாது என நினைக்கிறேன். நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க, விரைவான தீர்ப்பு வழக்குதலுக்கு நம் அரசு இயந்திரத்தையும் சிஸ்டத்தையும் மேம்படுத்துதல் அவசியமாகிறது.
சமீபத்தில் நண்பர் ஒருவரது நிலம் சம்மந்தப்பட்ட வழக்கு விசாரனைக்காக நான் அவருடன் நீதிமன்றம் செல்ல நேர்ந்தது. ஆவலுடன் வழக்கையும் குறுக்கு விசாரனையையும் வேடிக்கை பார்க்கச்சென்றிருந்தேன்.
எல்லாம் முடிந்து மதியம் ஒன்னறை மணிக்கு வெளியே வந்தோம். ராகவேந்திரா காண்டீனில் பாதி பேர் காராபூந்தி தூவிய தயிர்வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ‘கொத்தில்லா.. கொத்தில்லா ‘ ஆசாமி தன் வக்கீலுடன் பூரி தாலி சாப்பிட்டுக்கொண்டிருக்க, அந்த வக்கீல் ‘டூ பை த்ரீ காபி கொடி!’ என மூன்றாம் நபர் ஒருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்துகொண்டிருந்தார். அந்த மூன்றாம் நபர் ‘எதிராளி ஜெயிக்க உதவி செஞ்சிட்டார்!’ என குறிப்பிடப்பட்ட எதிராளியின் வக்கீல் தான்.

No comments:

Post a Comment