இளம்பிராயத்து நண்பர்களை அவ்வப்போது சந்திப்பது தொன்னையில் நெய் ஒழுக சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதைப் போல. 35 வருட நட்பு, அதிலும் அவர்களது குழந்தைகளது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பேரானந்தம்.
பம்பாய் செட்டாநகர் விஜயா பில்டிங் அறை நண்பர்களான நாங்கள் ஐந்து பேர் திருவான்மியூரில் கூடிய தருணம் அது. அதில் ஒருவனான ஶ்ரீரங்கம் முரளியின் Murali Soundararajan இரண்டாவது பெண் திருமணத்தில்.
சி.ஏ முடித்து அந்தேரியில் ஆடிட் ஃபர்ம் ஒன்றிலிருந்த முரளி ஒடிசலாக, நெடுநெடுவென உயரம், வணங்காமுடியாயினும் நெற்றியை மறைக்கும் அழகு, மலர்ந்த முகம் என பேரழகனான அவனுக்கு ஐ லவ் யூ சொல்ல பம்பாய் பெண்கள் வரிசையில் நின்றாலும், எங்கள் இன்னொரு அறைநண்பன் ஶ்ரீரங்கம் ரெங்குவின் பெரியம்மா பெண்ணை கமுக்கமாக காதலித்து, திடீரென எங்களுக்கு அனௌன்ஸ் செய்து, திருமணம் முடித்தவன். பழுப்பு நிற கண்கள், சட்டை- ஸ்கர்ட் அணிந்த ஶ்ரீரங்கத்து காதலியின் போட்டோவை மணிபர்ஸில் வைத்திருப்பான். காசு வைக்கவே பர்ஸ் இல்லாதபோது காதலி போட்டோ எங்கடா வைப்பது என நாங்கள் கொயட்டாக பெருமூச்சு விட்டாலும், நண்பன் காதலுக்கு தீவிர ஆதரவு.
முகூர்த்தம் முடிந்து மணமேடையில் ஏறி நேராக முரளி-உஷாவை வாழ்த்தும்போது ‘உஷா! உங்க போட்டோவை அந்தக் காலத்துல இவன் மணிபர்ஸில வச்சிருந்தானே.. அந்த சர்ட்-ஸ்கர்ட் போட்டோ.. ?’ என நேரங்காலந்தெரியாமல் கேட்டேன். நமக்கு தான் வெ.மா.சூ.சொ கிடையாதே! அதற்கு ‘ஶ்ரீதர்! மறக்காம என்ன! இன்னொன்னு தெரியுமா? அந்த போட்டோவ கல்யாணம் வரைக்கும் தான் வச்சிருந்தார் இவர்!’ என கணவனை மணமேடையிலேயே கலாய்த்தார் உஷா.
விடிகாலை 5 மணிக்கு கோயம்பேடு விடுதியொன்றிலிருந்து கிளம்பி திருவான்மியூர் பாப்பாலால் பவன் திருமண மண்டபம் போய்ச்சேர்ந்து, பேப்பர் கப்பில் ஃபில்டர் காபியை சுவைத்தவாறே பழைய அறை நண்பர்கள் ஒவ்வொருவராக வரவேற்றேன். கீழே மினிஸ்டர் வொய்ட் வேஷ்டி.
Edelweiss எனும் பெரும் நிதி நிறுவனத்தின் CFO கம் ஹெட் ஆஃப் கம்ப்ளயன்ஸ் கம் கம்பெனி செக்ரடரியாக இருந்த ரெங்கு முதலில் உள்ளே நுழைந்தான். ICWA மற்றும் ACS முடித்து ஶ்ரீரங்கத்திலிருந்து பம்பாயில் எங்கள் அறைக்கு ஓர வகிடுடன் வந்திறங்கியவனை கயாமத் சே கயாமத் தக் அமீர்கான் போல நடுவகிடு ஸ்டைலுக்கு மாற்றிய நானே அதிர்ச்சியடையும் அளவிற்கு, அவ்வூர் பெண்டிரை அநியாயத்துக்கும் சைட் அடித்த களவானிப்பய! ‘நடுவகிடு ரெங்கு’ என முகநூல் பதிவு முன்பு எழுதியிருக்கிறேன். SEBI மற்றும் பம்பாய் பங்குச்சந்தையில் பிரபலமான ரெங்குவை லெக்சர்கள் கொடுக்கவும், சிறப்பு விருந்தினராகவும் தனியார்/அரசு நிறுவனங்கள் நிறைய அழைக்கின்றன. நிதி/நீதி சார்ந்த கட்டுரைகள் பத்திரிக்கைகளில் எழுதுகிறான் ரெங்கு என்கிற பாஷ்யம் ரங்கநாதன். 35 வருடங்களுக்கு முன் எப்போதும் ‘ஒ’வில் துவங்கும் கெட்டவார்த்தையை பிரயோகித்து அவனை விளிப்பது என் வழக்கம். ‘ஶ்ரீதர்! திரும்ப அதே மாதிரி கெ.வார்த்தை சொல்லி கூப்பிடுய்யா!’ என கேட்ட ரங்குவை கல்யாண மண்டபத்திலேயே அனைத்துக்கொண்டேன், ‘அதெல்லாம் பிரம்மச்சரியத்தோட விட்டாச்சுப்பா!’ என்றவாறே.
அடுத்து ஶ்ரீராம், ஒரு காலத்தில் கபீர்பேடி தாடியுடன் செம்ம ஸ்மார்ட்டாக இருந்த/இப்பவும் இருக்கும் இன்னொரு அறை நண்பன், மண்டபத்தில் நுழையும்போதே ‘டேய் கருப்புக் கு...டி!’ என என்னை வழக்கம்போல அழைத்தபடி நுழைய.. ஆஹா! மனம் குதூகலித்தது. அந்தக் காலத்தில் நண்பர்களை பெயர் சொல்லி கூப்பிடாமல் அடைமொழியோடு அழைப்பதே சாங்கியம்! பம்பாயில் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஶ்ரீராமை மராட்டி/குஜ்ஜு/மதராசி பெண்கள் கண்ணை கசக்கும் சாக்கில் ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். ஆனால் நல்ல பிள்ளையாக புதுக்கோட்டையில் பெண்ணெடுத்து சென்னை திரும்பி, ஷெல் பெட்ரோலிய கம்பெனியில் வேலையில் ஹோண்டா காருடன் ரிடையர் ஆன மற்றொரு சி.ஏ அறை நண்பன். இப்பவும் அதே குறும்பு, அரட்டை, சிரிப்பு!
அடுத்து வந்தவன் Balasubramaniam Chandrasekaran சந்துரு! திருச்சி ஐயப்பா நகர் பக்கத்து வீடு, ஜமால் முகமது காலேஜில் படித்த ஜாலி ஜமாலியன், பம்பாய், பெங்களூர் நகரங்களில் ஜின்டால் போன்ற பெருநிறுவனங்களில் CFOவாக பணியாற்றிய அறை நண்பன். நமக்கு வாய்த்த திருச்சி நண்பர்கள் எல்லோருமே ஜொள் கேசு தான். 90களில் செம்பூர் தெருக்களில் இலக்கின்றி என்னுடன் சுற்றிய இவன் சைட் அடிக்கும்போது அடிக்கும் கமென்ட்டுகளை ரசித்து (“ஏய்.. லட்டு மாதிரி இருக்காப்பா! தூக்கி மடியில வச்சுக்கலாம் போலர்க்குப்பா!”) பெருஞ்சப்தத்துடன் சிரித்து சிலாகித்தபோது மண்டபத்தில் அட்சதை புஷ்பம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
ஶ்ரீரங்கம் நேதாஜி தெரு நண்பர்கள் என மற்றொரு குழுவும் வந்திருக்க, அதிலும் என் பழைய பம்பாய் நண்பர்கள். சொக்கன் எனப்படும் ஶ்ரீதர் Sridharan Rajaraman , ரெங்குவின் மச்சினன் (இவனைப்பற்றிய முகநூல் பதிவும் போட்டாயிற்று) மற்றும் அமெரிக்காவிலிருந்து ‘மீண்டும் மீண்டும் வா’, ‘வனிதாமணி’ பாடல்கள் சீடியுடன் விடுமுறையில் எங்கள் அறைக்கு வரும் ஜெ. சுரேஷ் போன்ற நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்னொரு நேதாஜி ஸ்ட்ரீட் மற்றும் முகநூல் பிரபலம் ‘ராஜு’ என்கிற Swaminathan Ramasubramanian முகம் மலர எங்களுடன் சேர்ந்துகொண்டார்.
அடுத்து, பெரும்பாலும் முக்கிய பிரமுகர்கள் பக்கத்தில் அமர்ந்து விமானப் பிரயாணம் செய்யும், இன்னொரு முகநூல் பிரபலம் Saravanan Natarajan ம் வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார். நண்பர் சரவணன் துபாய் நிறுவனத்தில் முரளியுடன் பணிபுரிந்தவர். எல்லா ஆங்கிளிலும் நண்பர்களை புகைப்படமெடுக்க வைத்தார் சரவணன்.
இலையில் குறைந்தது 20 ஐட்டங்கள் போன்ற தற்கால கேட்டரிங் ஸ்டைலிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது காலை டிபன். டிப்பிக்கல் அந்தக்கால ஐயங்கார் திருமணங்கள் போல நெற்றியில் திருமண், சட்டையிலா வெற்றுடம்புடன் ‘உங்களுக்கென்ன வேணும்?.. இன்னொரு வடை போடவா?’ என கேட்டு கேட்டு இளைஞர்கள் அன்புடன் பரிமாறினார, மால்புவா, பாதாம் அல்வா, இட்லி, உளுந்து வடை, பொங்கல், பூரி கிழங்கு என ஐந்தாறு ஐட்டங்கள் என்பதால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டோம் (இல்லேன்னா மட்டும் கொஞ்சமாவா சாப்பிடுவோம்!). முரளியின் உறவினரும் எனது நண்பருமான Jagannathan Rajagopal இன் சகோதரர் சுதர்சனம் ராஜகோபால் எங்களை கவனித்து உணவருந்த அமர வைத்தார்.
ஆறு டு ஏழறை முகூர்த்தம், போட்டோக்கள், காலை உணவு என முடிந்தபின் கிளம்ப எத்தணித்த எங்களை முரளி மதிய சாப்பாடு சாப்பிடாமல் போகக்கூடாதென அன்புக்கட்டளையிட, நீல்கமல் சேர்களை வட்டமாக இழுத்துப் போட்டு மறுபடியும் ஆரம்பமானது எங்கள் அரட்டைக்கச்சேரி. குழந்தைகளின் படிப்பு மற்றும் கல்யாணம், மிகவும் பரிச்சயமான மற்றும் நாங்கள் சி.ஏ பாஸ் பண்ண மிகவும் உந்துசக்தியாக இருந்த திருச்சி சீ.ஏ.க்களான ஆடிட்டர் ஜி.பாலசுப்ரமணியம், கே.கே. ஶ்ரீனிவாசன் ஆடிட்டர், ஆடிட்டர் குமார்ராஜ், பால்ய நண்பன் Ganapathi Subramanian , வைத்தி Vaidya Rishi , துபாய் Venkat Kamatchinathan, ஶ்ரீரங்கம் சதாசிவம், ஶ்ரீகாந்த், V K Vijayaraghavan Viji மற்றும் Vijayaraghavan Krishnan (plus பெரிய்ய பட்டியல்) போன்ற வர்களைப்பற்றியும், திருச்சி, ஶ்ரீரங்கத்தின் அருமை பெருமைகளைப்பற்றியும் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.
மேல் தளத்தில் உ.கி சிப்ஸ், புளியோதரை என இலையின் இடதுபுறம் ஆரம்பித்து க்ராஜுவலாக வலப்பக்கம் திரும்பி, ஜிலேபி, ப.உசிலி, கோசு மல்லி, பழப்பச்சடி, கூட்டு, பருப்பு நெய், சாம்பார், மோர்க்குழம்பு, கரமது, சாத்தமது, கெட்டித்தயிர், திருக்கண்ணமுது வரை சுழட்டி அடித்து பான் பீடாவையும் விட்டுவைக்காமல் மொஸ்க்கி விட்டு, மறக்காமல் பக்ஷண பையையும் வாங்கிக்கொண்டு ‘சீக்கிரம் பையனுக்கு கல்யாணம் பண்ணுடா’ என்ற நண்பர்களின் அட்வைசுடன் கிளம்பினேன்.
முரளி தன் துபாய் வேலையை விட்டு தற்போது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரபந்தம் படித்துக்கொண்டு கோவில் கைங்கர்யங்கள் செய்கிறான். முதல் பெண்ணுக்கு (அவளும் CA & ACS) 2019இல் திருமணம் முடித்தனர் முரளி-உஷா தம்பதி.
‘தலைமுடி கொட்டியோ நரைத்தோ போனால் கூட நீங்க ரெண்டு பேரும் இன்னும் அதேபோல சியர்ஃபுல்லா இருக்கீங்களே’ என்ற எனது கேள்விக்கு, சில வருடங்கள் முன் உஷா அனுப்பிய குறுஞ்செய்தி பதில்:
//இரண்டு பெண்களுக்கும் வயசு 20ஐ தாண்டி விட்டால், நமக்கும் வயசு 50 ஐ கடந்து விட்டதாகத்தானே அர்த்தம் !
உள்ளத்தில் இளமை உஞ்சலானாலும் உடலும், உருவமும், தலைமுடி வரை நம் வயசை படம் பிடித்துக் காட்டி விடும்தானே!// 

No comments:
Post a Comment