Sunday, June 22, 2025

திருச்சி.. காரைக்குடி

 மாமியார் வீட்டிற்கு மருமகன் போகும்போது மனைவியருக்கு என்னவொரு சந்தோஷம்! பொதுவாக பெண்கள் என குறிப்பிடவே ‘மனைவியர்’ எனச் சொன்னேன். அடுத்த நாலைந்து நாட்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். காலையில் லேட்டாக எழலாம். டீ, காபி சப்ளை ஜரூரா இருக்கும். இந்த சமயம் மாத்திரம் ‘நீங்க ஓவரா ஸ்வீட் சாப்பிடறீங்க’ போன்ற அறிவுரைகள் இருக்காது.

இரண்டு மாத இடைவெளிக்குப்பிறகு காரைக்குடி பயணம். காலை 8.30 மணிக்கு பெங்களூர் ராமமூர்த்தி நகரிலிருந்து காடுகோடி (வொய்ட்ஃபீல்ட்) வழியாக காரை செலுத்த, சாலைகளில் கூட்டமே இல்லை. வட இந்திய, வடகிழக்கு பையன்கள் எல்லாம் ட்ரெயின் பிடித்து ஷங்க்ராந்தி கொண்டாட ஊருக்கு போய் விட்டிருந்ததால் ஸ்விக்கி, சொமேட்டோ பைக்குகள் இல்லாத வர்தூர்-சர்ஜாபூர் வழியாக சீக்கிரம் ஹோசூர் வந்தடைந்தோம்.
புதியதாக கிருஷ்ணகிரி தொடாமல் ஹோசூரிலிருந்து தர்மபுரிக்கு உபரியாக போடப்பட்ட NH சாலையை பிடிக்க, சூளகிரி-ராயகோட்டை ரோடு சுமார் 20 கிமீக்கு குறுகலான வளைந்து வளைந்து செல்லும் அதி அபாயகரமான கிராமப்புற சாலை எனத்தெரிந்தது. நான் நினைத்ததுபோலவே நடந்தது. பைக் ஒன்று மோதி ஏதோ காரின் முன் கண்ணாடி உடைந்து சிலந்தி வலை போலத் தெரிய, வலைக்கு பின்னால் துல்கர் சல்மான் சாயல் பையன், KL ரிஜிஸ்டர்ட் வண்டி.
சேலம்-நாமக்கல் சாலையில் வண்டியை 100 கிமீ தாண்டாமல் செலுத்துவது ஒரு சுகானுபவமான 45 நிமிடப்பயணம். பொதுவாக நாமக்கல் ருக்மணி அம்மாள் உணவகத்தில் தான் லஞ்ச் எடுத்துப்போம். நேற்று எங்கள் கம்யூனிட்டி சமையல் போட்டியில் உஷா கலந்துகொண்டு மீதமிருந்த இரண்டிரண்டு தயிர் வடைகளே இன்றைய லஞ்ச் என அறிக.
நாமக்கல்-தொட்டியம் நான்கு வழிச்சாலை வழியாக முசிறி தாண்டியதும் இடது பக்கம் திரும்பி காவிரி பாலத்தை கடக்காமல் நேராக செல்ல முடிவு செய்தோம். பேட்டைவாய்த்தலை, பெருகமணி, சிறுகமணி, முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை போன்ற சிற்றூர்கள் காவிரிக்கு அந்தப்பக்கம். நாங்கள் இந்தப்பக்கம் மரங்களடர்ந்த குணசீலம் சாலையில் இயற்கையின் அழகை ரசித்தபடி வந்தோம்.
ஆஹா! நான் படித்த செஞ்சோசஃப்ஸ் காலேஜ் மற்றும் லாலி ஹால். எதிரே இன்னும் அதே சஃபையர் லாட்ஜ். மதியம் சாப்பிட்ட மினி லஞ்ச் பசியைக்கிளறவே திருச்சி மெயின்கார்ட் கேட் பக்கம் டிபன் சாப்பிடலாமென நினைக்கும்போது பழம்பெரும் ஆதிகுடி காபி கிளப் நினைவுக்கு வரவே, சிங்காரதோப்பு பக்கம் வந்தோம்.கெயிட்டி தியேட்டர் எங்கே? பாவி மூடிட்டானா! ஒரு காலத்தில் அங்கே நின்று ஷோலே பேனரை ரசிப்பேன். இரத்த சிகப்புக் கலர் பின்புலத்துடன் அம்ஜத்கான் போஸ்டர், உயர்த்திய கைகள் கட்டப்பட்டு லம்பாடி பாவாடையுடன் பசந்தி (ஹே.மாலினி) ‘ஹா.. ஐப்தக் ஹெ ஜான்’ என கண்ணாடித்துண்டங்கள் மீது குதித்து பாதங்களில் இரத்தம் சிந்தி ஆடினாலும் எல்லா திருச்சிக்காரனும் (அடியேன் உட்பட) அவள் அழகைத்தான் ரசித்து பாரத்துக்கொண்டிருந்த காலம் அது.
ஜாபர்ஷா தெரு தாண்டியாயிற்று.. எங்கே ஆதிகுடி காபி க்ளப்? ஐயோ.. அந்த இடத்தையே இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அடுத்த பில்டிங் சுவர் முழுக்க புகை அடுப்புக்கரி கருப்பாக, ஆதிகுடியை நினைவுபடுத்தியது. பட்னம் பக்கோடா, கெட்டி சட்னி, அசோகா அல்வா, காபி மற்றும் வாழை இலை வாசனையை மறக்க முடியுமா!
பெரிய மார்க்கெட்டை அடுத்து இடது பக்கம் தஞ்சாவூர் ரோடு. கொஞ்சம் தள்ளி வலது பக்கம் வரகனேரி. ஒரு காலத்தில் அந்தப்பக்கம் போக தைரியம் வேணும், அங்கே ரௌடிகள் அதிகம். உங்களுக்கு ஆள் வைத்து யாரையாவது அடிக்க அடியாட்கள் உதவி தேவையா! சிறந்த முறையில் சகாயமான விலையில் கைகால்கள் உடைத்துக்கொடுக்கப்படும். என் அத்தை பையன் ஸ்கூல் புத்தகத்துக்கு அட்டை போட மறந்து போய், பயந்துகொண்டே வாத்தியாரிடம் ‘நாளைக்கி கண்டிப்பா அட்டை போட்டு கொண்டு வரேன் சார் என்றதும் ரௌடி வாத்தியார் சொன்னது: ‘அட்டை போட்டு வரலன்னா கொட்டைல அடிப்பேன்’. அந்த ஏரியாவை கடக்கும்போது வரகனேரி பற்றி மனைவியிடம் சொன்னேன்(ரௌடி வாத்யார் தவிர).
வரகனேரியை அடுத்த பால் பண்ணை அருகே முன்பிருந்த காலி மைதானத்தை காணோம். அப்பல்லாம் அங்கே பாம்பே சர்க்கஸ் போடுவான். சிங்கமோ ஏதோ ஒன்று பின் பக்கம் இருந்து வூஊஊஊம் என இடைவிடாமல் கர்ஜித்துக்கொண்டே இருக்க, சில்க் பேண்ட் மற்றும் அதன் மேலே வெல்வெட் ஜட்டியுடன் இளைஞர்கள் வெகு உயர பாரில் தலைகீழாக தொங்கிக்கொண்டும், அவர்கள் கைகளை பற்றிக்கொண்டு குறுக்கா நெடுக்கா பறந்து கடைசியில் மேல் ஊஞ்சலுக்கு ஜங்கென வந்து சேரும் புஷ்டியான மலையாள சேச்சிகளை இரண்டு தடியன்கள் தாவி இழுத்துக்கொள்வார்கள். ஸ்கூலில் படிக்கும்போதே சர்க்கஸ் வேலை கிடைக்காதா என ஏங்கியதுண்டு.
சென்னை பைபாஸ் ரோடு சங்கீதாஸ் ஹோட்டலில் காரை நிறுத்தும்போது சவ ஊர்வலம் ஒன்று ஓயாமாரி சுடுகாடு நோக்கி கடந்து போனது. இறந்தவரின் நெஞ்சை அநியாயத்துக்கு மேல்பக்கம் நிமிர்த்தி கட்டியிருந்தார்கள் (வீர மரணம் அடைந்திருப்பாரோ!) முன்பெல்லாம் அந்த அமரர் ஊர்தி முன்னால் தான் தாரை தப்பட்டையுடன் டான்ஸ் இருக்கும். ஆனால் இப்போது வண்டியின் மேலேயே இறந்தவரது கால் மாட்டில் நின்றபடி ஒருவர் உருமி மேளம் அடித்து கானா பாட்டு பாடவும் செய்து கொண்டிருந்தார். செம்ம பாடல் வரிகள்ப்பா! :
‘ஒழச்சி ஒழச்சி நீ ஓடானே..!
எழுத படிக்க நீ ஏடானே..
எழுத படிச்சாலும்.. இந்த வரியில் நீ என்ன ஆனே என்பது சரியாக காதில் விழவில்லை ’ (வீடியோவ பாருங்க)
அக்கா ஊரில் இல்லாததால் திருச்சி சுப்ரமணியபுரத்தில் இந்த முறை ஹால்ட் இல்லை. அங்கேயே ரோட்டோரத்தில் இஞ்சி, மஞ்சள் செடி, பூக்கள், வெல்லம், நெய், முந்திரி, கிஸ்மிஸ், ஏலம் (சக்கர பொங்கலுக்கு) வாங்கிக்கொண்டு காரைக்குடி மாமியார் வீட்டிற்கு அடுத்த ஒன்னேகால் மண்ணேரத்தில் வந்து சேர்ந்தோம்.

No comments:

Post a Comment