பெங்களூரிலிருந்து திருச்சி செல்லும்போது சேலம்-நாமக்கல் சாலையில் வாகனம் ஓட்டுவது சுகானுபவம். ஆனால் முசிறி, தொட்டியம் பகுதியில் போக்குவரத்து அதிகமாகி சாலை பழுதடைந்த நிலையில், யாரோ அதை அம்மைத்தழும்பு போன்ற சாலை என குறிப்பட்டிருந்தார்கள். எதிரே அதிவேகமாக வரும் வாகனங்களை விட அவற்றை முந்த முயற்சித்து நமக்கு நேர் எதிரே பயங்கரமாக வரும் கனரக வாகனங்கள் நம் பயணத்தை பாதுகாப்பற்றதாக்கி விடும், கவனம் தேவை.
நண்பர் ருத்ரபசுபதி கைலாசநாதர் கார்த்திக் க்கு நன்றி. அவர் கொடுத்த அறிவுரையின்படி நாமக்கல், எருமப்பட்டி, தாத்தையங்கார் பேட்டை, துறையூர், நொச்சியம், திருச்சி.. என மற்றொரு வழி, சுமார் 2 மணி நேரம். ஆஹா! அற்புதமான பயணம். நமக்கு முன்னே பின்னே வாகனங்களே கிடையாது. சலையின் இருபுறங்களும் நீர் நிலைகளும் பச்சைப்பசேலென மரங்களும் பயிர்களும், தூரத்தே தெரியும் சிறுமலைகளும் ரம்மியமாக இருக்கிறது. ஜான் டென்வரின் Take me home, Country roads பாடல் நினைவுக்கு வரும்படியான இடங்கள் அவை. குறுகலான ரோடுகள் கொண்ட தாத்தையங்கார்பேட்டை, கண்ணனூர் தாண்டும்போது ஐயங்கார் பேக்கரியிலிருந்து கமகமவென கேக் வாசனை.
100.4 FM ரெயின்போ கோடைப்பண்பலையில் நல்ல பாடல்களுடன் பயனுள்ள செய்திகளை சொல்கிறார்கள். ஆனால் பத்து நிமிடத்திற்கொரு முறை அணில் பிரியாணி சேமியா விளம்பம். நடுவே ‘இதய நோய், வயிற்று வலி, பாம்புக்கடிக்கு சரியான சிகிச்சை பெற சரியான இடம் கரூர் தான்தோன்றிமலை SVR ஆசுபத்திரி’ போன்ற அறிவிப்புகள் நம்மை கொஞ்சம் பயமுறுத்துவது உண்மை.
எதிரே மாருதி ஆம்னி வேன் பின்னால் ‘பார்த்து வா பங்காளி’ வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது.
‘நடைப்பயணம் நான் செய்ய என்னுடன் நடை பயிலும் நிலாவே! இதோ உனக்கோர் பாடல்’ என எஃப்எம் அறிவிப்பாளர் சொல்ல, உடனே ‘அந்த நிலாவத்தான் நான் கைய்யப்புடிச்சேன்’ பாடல் ஆரம்பமானது. அடுத்து ‘அல்லித்தண்டு காலெடுத்து அடிமேலடியெடுத்து’ டிஎம்மெஸ்-சுசிலா பாடலைக்கேட்டுக்கொண்டே சீரான வேகத்தில் வாகனம் ஓடியது.
அறிவிப்பாளர் அடுத்து அம்பிகாபதி படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை ஒலிபரப்பினார். கம்பரின் மகன் அம்பிகாபதி (சிவாஜி) சோழன் மன்னரின் மகள் (பானுமதி) மீது காதல் கொண்டான் அல்லவா! மன்னர் (நாகையா) அளித்த விருந்தில் அம்பிகாபதி, கம்பர் மற்றும் கம்பருடன் எப்போதும் மோதும் (நம்பியார்) ஒட்டக்கூத்தரும் இருந்தார்.
பரிமாற இளவரசி அங்கே வர, அம்பிகாபதி அவளது அழகில் (அப்பிடியா!) தன்னை மறந்து ''இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய....'' எனப்பாட, கம்பர் திகைத்தார். அரசர் முகத்திலும் கடும் சினம். அதாவது ‘கையில் பாத்திரமேந்தி வரும் அழகியான உனக்கு அதன் சுமையால் உன் மென்பாதங்கள் நோகுமே, மேலும் காலில் கொப்பளம் வருமே’ எனப்பொருள் பட தன் மகன் பாடியதை சமாளிக்க கம்பர் சட்டென அடுத்த அடியை தானே எடுத்து ''கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்'' என முடிப்பார்.
மன்னருக்கோ கடுங்கோபம். ஒட்டக்கூத்தரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மன்னரை உசுப்பி விட்டு, அம்பிகாபதியைப்பார்த்து ‘நீ எங்கள் இளவரசியை வர்ணித்து தானே பாடினாய்? எனக்கேட்க, அம்பிகாபதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கம்பர் உடனே’மன்னரே! அல்ல.. அல்ல.. வெளியே சுடும் வெயிலில் கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவி ஒருத்தியை நினைத்து தான் ''கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தன் நாவில் வழங்கோசை வையம் பெறும்'' அதாவது வெயில் சுட்டு உன் கால்கள் கொப்பளிக்குமேயெனத்தான் என் மகன் பாடினான் என சமாளித்தார். ஒட்டக் கூத்தரோ ‘அதெப்படி? நம் இளவரசி இங்கே வரும் அதே நேரத்தில் வெளியே ஒரு கிழவியா?’ என மன்னரைப்பார்க்க மன்னரும் ‘யாரங்கே! வெளியே ஏதாவது கிழவி நின்றால் அழைத்து வா’ என கட்டளையிட கம்பர் அதிர்ந்து போய், சரஸ்வதி தேவியை பிரார்த்தித்துக்கொண்டார். அடுத்த நிமிடம் வயதான கிழவி நிஜமாகவே உள்ளே அழைத்து வரப்பட, மன்னனர் சமாதானமானார். அம்பிகாபதி நிம்மதிப்பெருமூச்சு விட்டான். ஒட்டக்கூத்தர் திகைத்து ஏமாற, கம்பரோ சாட்சாத் சரஸ்வதி தேவியே அந்தக்கிழவி ரூபத்தில் வந்ததற்கு மானசீகமாய் நன்றி தெரிவித்தார்.
இப்படி சுவாரசியமாக ரேடியோவில் பழைய படக்காட்சிகளின் வசனங்களை கேட்டபடி வாகனம் ஓட்டும்போது மனசு லேசாகுமென்பது உண்மை. ஆனால் அந்த நேரத்தில் மனைவி உஷா (புதிய பாடல்களை விரும்பி கேட்பவர்) வேறு ஸ்டேஷனை படாரென மாற்ற, அதிரும் ஒலியில் சவுண்ட் இஞ்சினீயர் அனிருதின் ‘ஆலுமா டோலும்மா’ ஆரம்பமானது. நல்ல வேளை நொச்சியம் வந்து விட, வெளியே டிராஃபிக் சத்தத்தில் பாடல் கறைந்து போனது.
திரும்ப பெங்களூர் செல்லும்போது அதே சாலையில் பயணம். ஏராளமான புளியமரங்களில் காய்த்துத்தொங்கும் புளியங்காய் மற்றும் பழங்களை கொய்ய Usharani Sridharக்கு ஆசை. நல்ல மரமாக பார்த்து வண்டியை ஓரங்கட்டி பனோரமிக் ரூஃபை திறந்து புளியம்பழங்களை தேட்டா போட்டோம். அதில் வைத்த ரசம் இன்று அருமை.
நாமக்கல்லில் ருக்மணி அம்மாள் சைவ உணவகம் பிரசித்தி பெற்றது என்பதால் கூகிளானந்தா வழிகாட்டுதலில் அங்கே போய் வெஜ் சூப் வெல்கம் ட்ரிங்க்காகவும், பெரிய்ய வாழையிலையில் கூட்டு, கீரை+தேங்காய், பீன்ஸ்+கேரட் பொறியல், பருப்புப்பொடி, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், அப்பளம், சேமியா பாயசம் என ஃபுல் கட்டு கட்டிவிட்டு வண்டியை கிளப்பினோம். நாமக்கல் வழியாக செல்வோர் இவ்வுணவகத்தை மறக்க வேண்டாம்.
No comments:
Post a Comment