Friday, June 20, 2025

கட்ரா (ஶ்ரீநகர்) to அம்ரித்ஸர்…


அந்தகாலத்திலேயே சொல்வார்கள், நம்மூர் KPN, ஷர்மா டிராவல்ஸ் பஸ்கள் எல்லாம் ஏழெட்டு வருடங்களில் பஞ்சாப், உ.பி பகுதிளுக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டு, வட இந்தியர்கள் மேலும் திருத்தங்கள் செய்து அடுத்த 10,15 வருடங்களுக்கு லக்னௌ, கான்பூர், அம்ரித்சர் பகுதிகளுக்கிடே அந்த புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் ஏகத்துக்கும் ஓடிக்கொண்டிருக்கும் என. பார்க்க வண்ண விளக்குகளுடன் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போல பளபளா, ஜிகுஜிகுவென மின்னும், ஆனால் நிறைய குலுக்கல்களுடன் பறக்கும் வண்டிகள். (மேற்படி நடிகைகள் மன்னிக்க!)
ஶ்ரீநகர் கட்ராவிலிருந்து அம்ரித்சருக்கு எங்கள் டூர் ஆபரேட்டர் குஷி யாத்ரா எடுத்திருந்த வண்டி மேற்சொன்ன பழைய பஸ். பர்ணாலாவில் பாடி கட்டிய வண்டி. டிரைவர் பகுதியை நோட்டம் விட்டேன். டிரைவர் அசகாய சூரன் போலும். சூப்பராக வண்டி ஓட்டினான். ஏதோ பெரிய டைனிங் டேபிள் முன் அமர்த்து விமானத்தை ஒட்டுவது போல அந்த டேஷ்போர்டில், 20, 25 விதவிதமான பட்டன்களை ப்ளக்கென இழுக்கிறான். கைப்பேசி எதிரே அநாயசமாக கிடந்தது. டோல்கேட்களில் டிராயரை திறந்து ஃபாஸ்ட் டேக் அட்டையை கண்ணாடி மேல் ஒட்டிக்காட்டிவிட்டு திரும்ப உள்ளே போட்டு விடுகிறான். தலைக்கு மேல் சந்த் குருதேக்பகதுர் படங்கள்.
நாமக்கல் ஹாரனை தூரக்கடாசி விட்டு விதவிதமாக விநோத ஒலியெழுப்ப ஏழெட்டு பட்டன்கள் கொண்ட ஹார்ன் பலகை. இடது பக்கம் இருசக்கர வாகனங்களை கடக்கும்போது ஒரு விதமாக ஜானகி போல கீச்சு ஒலி (அவர்கள் பயந்து விடக்கூடாதாம்), கார்களை கடக்கும்போது ஈஸ்வரி குரல் (கொஞ்சம் தெனாவெட்டாய் ‘இனிமை நிறைந்த உலகமிருக்கு’ டியூனில் ஹார்ன் ஒலியென்றால் பாருங்கள்!), கனரக டிரெய்லர்களை கடக்கும்போது சுந்தராம்பாள் போல கணீரென ‘முருகா உன் ஞானப்பழத்தைப்பிழிந்து’ டியூன் போல பப்பப்ப.. பப.. பப்பப்ப என ஒலியெழுப்பி அதகளம் செய்துகொண்டு வாகனத்தை செலுத்தினான். (வீடியோ பார்க்க!)
பிரயாணிகள் பகுதியிலும் நிறைய ஜோடனைகள். நம் வீட்டில் பொறுத்தும் பாத்ரூம் ஸ்விட்ச் போர்டுகள் பஸ்ஸில். ஏசி காற்று உள்ளே புக காற்றோட்ட வட்டங்கள் தலைக்கு மேல். எல்லா ஜன்னல்களுக்கும் குட்டி ஃபேன்கள். அழுக்கு திரைச்சீலைகள். செங்குத்தான இருக்கையை பின்னால் சாய்க்க பக்கவாட்டு இரும்புப்பிடியை ஏலேலோ ஐலஸா சொல்லி, உயிரே போகும்படி இழுத்தால் நேரே பின் பக்கம் உட்கார்ந்திருக்கும் அம்மணியின் மடியில் படக்கென சாய்ந்து விடும் அபாயம்.
டிரைவர் காதில் கடுக்கண், காதுக்கு மேல் வட்டமாக தலையை அறுவடை செய்து, தலை உச்சியில் பாமிர் முடிச்சு போல கொஞ்சம் முடி விட்டு, லைட்டாக முறுக்கிய மீசையுடன் ஸ்டைலாக இருந்தான். பஞ்சாபி பாடல் முண்டா… முண்டி.. என ஏதோ ஒன்றை முனுமுனுத்தபடியே தலையை ஆட்டி ரசித்து, அவ்வப்போது அலறும் மொபைல் போனை எடுத்துப்பேசி, இடது பக்கம் இஞ்சின் மேல் அமர்ந்திருக்கும் காளிஃப்ளவர் தலை அசிஸ்டென்ட் பக்கம் திரும்பி பேச்சுக்
கொடுத்துக்கொண்டு சகலத்தையும் அட்யடயத்தில் செய்துகொண்டு வாகனத்தை அதிவேகத்தில் செலுத்த, வேக வட்டத்தில் முள் 120ஐ முத்தமிட்டது.
ஷெர்-ஏ-பஞ்சாப் தாபா முன் வண்டியை நிறுத்த, நாங்கள் இறங்கிய பின் அந்த ஆடோமாடிக் முன் கதவு திரும்ப மூடிக்கொள்ளாதபடி கருப்பு கயிறு கொண்டு இழுத்து வைத்து கட்டினான் காளிஃப்ளவர் அசிஸ்டென்ட்.
தந்தூரி அடுப்பு பனியன் இளைஞன் எதிரே ஈரத்துணியை அகற்ற உள்ளே மலை போல பிசைந்து வைத்த மைதா மாவு. கத்தியால் ஒரு பகுதியை வெட்டியெடுத்து மலைப்பாம்பாக்கி பெருவிரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடுவே விட்டுப்பிதுக்க, பந்து போல உருண்டைகள் எட்டிப்பார்த்தன. கையால் எண்ணெயை அள்ளித்தெளித்து உருண்டையை தப்.. தப்பென தட்டி தட்டையாக்கி எடுத்து, இரு கையாலும் எடுத்து மேலும் தட்ட வட்டமாக விரிந்த மாவில் அசால்ட்டாக எள்ளை தூவி ஒரு பக்கத்தை இழுக்க, மாவு இலங்கை சைஸுக்கு வந்தது. கொஞ்சம் தண்ணீர் தெளித்து இலங்கை மாவை கத்தி (Gaddi) எனப்படும் அழுக்கு துணி மேல் படுக்க வைத்து அப்படியே தந்தூரி உள்ளே பக்க வாட்டில் பச்சக்கென ஒட்ட வைத்தான். இதெல்லாம் ஒரே நிமிடத்தில் நடந்தது. அடுத்த ஓரிரு நிமிடங்களில் நீண்ட இரும்புக்கம்பிகள் இரண்டால் குத்தி வெந்து போன ரொட்டி, நான்களை நிபந்தனையற்ற ஜாமினில் வெளியே எடுத்தான். சின்ன பெயின்ட் ப்ர்ஷ்ஷால் நெய்யை அள்ளி நான் மேல் விட்டு அரிதாரம் பூச, பளபளவென தமன்னா மேனி போல ‘பட்டர் நான்’ ரெடி. (நண்பர் Vijayaraghavan Krishnan மன்னிக்க!😃)
குஷி யாத்ரா குக்கான பட் எங்களுக்கு அங்கேயே சாம்பார், ரச, மோர் சாதம் பரிமாறினாலும், செல்லமாக ‘அடப்போய்யா! உனக்கு வேற வேலை இல்ல’ என அதை விடுத்து, சுடச்சுட அபார சுவை கொண்ட பட்டர் நான் மற்றும் பனீர் பட்டர் மசாலாவை மொஸ்க்கினோம். கூடவே கடக் ச்சாய் வேறு மதிய உணவை மேலும் சிறப்பாக்கியது. மனைவி Usharani Sridhar கொஞ்சம் சுத்தபத்தம் பார்ப்பவர், நான் மற்ற கணவர்களைப்போல பிந்தாஸாய் ஒரு நிமிட சுகத்தில் தேனீரை உறிஞ்சினேன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் வாகா பார்டரில் மாலை 6 மணிக்கு இரு நாடுகளும் தங்கள் கொடியை இறக்கி மரியாதை செய்யும் வைபவம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத இனிய அனுபவத்தை சிலாகித்து எழுத வேணும்.

No comments:

Post a Comment