Friday, June 20, 2025

கல்பாத்தி அக்ரஹாரம்..

 

சில மாதங்கள் முன் பஹ்ரைன் நண்பர் கே.கே ( Krishna Kumar Gopalakrishnan ) இல்ல நிச்சயதார்த்த வைபவத்தில் கலந்துகொள்ள கோவை சென்றிருந்தோம். பஹ்ரைன் நண்பர்கள் கல்பாத்தி சுரேஷ்( Suresh Kv & Latha Suresh ) மற்றும் குருமூர்த்தி ( Gurumurthy Jayaraman & Rajee Gurumurthy) குடும்பங்களுடன் நாங்கள் 3 கார்களில்,பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் கூடி குட் மார்னிங் சொல்லி விட்டு வண்டிகளை நகர்த்தினோம். ஹோசூர்-கிருஷ்ணகிரி ரோடு கிருஷ்ணா இன்னில் டிபன் காபி முடித்துக்கொண்டு சேலம் தாண்டும்போது நண்பர் கே.கேயிடமிருந்து போன் ‘மத்யான சாப்பாடு எங்க வீட்ல’ என. வேண்டாமென சொல்லுவோமா!
கோவை நகரின் இதயப்பகுதியில் அழகிய பசுஞ்செடிகள் சூழ் வில்லா இல்லம். கே.கேயின் மனைவி ரமா மற்றும் அவரது தாயாரும் பரிமாற, டைனிங் டேபிளில் இருந்த அடப்பிரதமனும் புளிசேரியும் மொளகூட்டலும் ஓலனும் கூட்டுக்கறியும் போட்டி போட்டுக்கொண்டு சல்சல்லென உள்ளே இறங்கின. திவ்யமான ச்சாப்பாடு!
மதியம் மூன்று மணிவாக்கில் பஹ்ரைனிலிருத்து வந்து இறங்கிய திருவும் Veeraraghavan Thirumalai எங்களுடன் சேர்ந்துகொள்ள, ஏழு பேரும் ஒரே காரில் அடைத்துக்கொண்டு பாலக்காடு நோக்கி பயணம். வேகத்தடை 50 கி.மீ மற்றும் கண்காணிப்பு காமெரா இருப்பதால் மிதமான வேகத்தில் சென்றோம். பணம் புழங்கும், வண்ண விளக்குகள் ஜொலிக்கும் கடைகளின் செழிப்பின் பின்புலத்தில் ஏராளமாக வளைகுடா பணம்.
கேரளாவில் அடர்ந்த மரங்களுடன் இயற்கை வளங்கள் சூழ்ந்த இடங்களில் நிறைய காவுக்கள் (கோயில்கள்) காணலாம். புதுப்பிக்கப்பட்டு் புது வர்ணங்கள் அடிக்காமல் அதே புராதனக்கோலத்துடனேயே வைத்து கோயிலை அழகாக பராமரிப்பார்கள். குலதெய்வக்கோவில்கள் என மக்கள் வருவதும், ஐநாவில் வேலை செய்தாலும் வருடந்தவராமல் காவுக்கு சென்று கும்பிடும் பாலக்காட்டு மாதவன்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.
பஹ்ரைனில் ஓன சதியா, ஐயப்ப பூஜை என கலக்கும் என் நெருங்கிய நண்பர்கள் எல்லாமே காமேசுவரன்கள் தான். வெளிச்செண்ணையில் பராமரித்த, ஈரம் சொட்டும் நீஈஈண்ட கேசத்துடன், ஒரு ஜான் அகல ஜரிகையில் அரை வெள்ளைக்கலர் புடவை, நெற்றியில் குங்குமத்தின் மேல் சந்தனத்துடன் மனாமா கோவிலுக்கு வரும் அவர்களை பார்த்த மாத்திரத்தில் வணங்கத்தோன்றும். பெரும்பாலும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.
சின்ன கிராமங்கள், டவுன்கள், செங்கொடிகள், சுத்தமான சாலைகள், புழா எனப்படும் சலசலக்கும் ஆறுகள், தூய்மையான காற்று, பள்ளிவாசல், வர்கீஸ்கள், குரியன்கள், நேந்திரங்கா வறுவல், பேக்கரிகள், சாயாக்கடைகள், தட்டுக்கடைகள், புட்டுக்கடைகள், கோயில்கள், நம்பூதிரிகள் மற்றும் நவ்யா நாயர்கள்… இதாங்க கடவுளின் சொந்த தேசமெனப்படும் கேரளா!
'காசியில் பாதி கல்பாத்தி!’ என்பார்கள். அதாவது, காசி ஸ்ரீவிஸ்வநாதரை வணங்கினால் கிடைக்கும் புண்ணியத்தில் பாதி கல்பாத்தி ஸ்ரீவிஸ்வநாதரைத் தரிசித்தால் கிடைக்குமென்பது ஐதீகம்! சுரேஷின் குலதெய்வக் காவான பருக்கனஞ்சேரி பகவதி கோவில் விஜயம் முடிந்து, கல்பாத்தி வந்து சேர்ந்தோம். ‘இந்தப்பக்கம் சாத்தபுரம்… அதெல்லாம் கோவிந்தராஜபுரம்’ என சுரேஷ் காண்பித்தான். பஹ்ரைன் நண்பர்களிடையே ‘சாத்தபுரம்’ மற்றும் ‘கோவிந்தராஜபுரம்’ என்ற பெயர்களை கேள்விப்பட்ட எனக்கு இதெல்லாம் கல்பாத்தியில் உள்ள இடங்கள் என இப்போது தெரிந்தது. லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், மந்தகார மகாகணபதி கோயில், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் என கல்பாத்தியில் பழப்பெறும் கோயில்கள். கல்பாத்தி தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாம். வரிசையாக அடுத்தடுத்து சரிவான ஓட்டு வீடுகள், பொதுச்சுவர்களுடன். ஒவ்வொரு வீட்டின் கட்டுமானப்பாங்கும் வித்தியாசமானது. சிலர் வீட்டை புதுப்பித்து மச்சுவீடு கட்டியிருந்தார்கள்.
டேஸ்ட் ஆஃப் கல்பாத்தி என்ற உணவகம் முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழைந்தோம். பழங்கால ‘திருச்சி ஆதிகுடி ஓட்டல்’ போல கல் மேசை போடப்பட்டு ஒரு குடும்பம் பக்ஷ்ணம் கழித்துக்கொண்டிருக்க, பார்த்த மாத்திரத்தில் கல்ஃப் அடையாளங்கள் தெரிய, நாம் நினைத்தது சரி..அபுதாபியாம்.
இலைஅடை தான் கடைசி ஐட்டம் என்றதும் சுரேஷ் நேராக கிச்சனுக்கே போய், ஏதோ பேசி எல்லோருக்கும் எலஅட கொண்டு வந்து விட்டான். அடுத்து நெய்யப்பம். பஹ்ரைனில் பரவலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் உன்னியப்பம் அது. ஆனால் கல்பாத்தி நெய்யப்பம் நெய் சொட்ட சொட்ட, கடித்தவுடன் வாயில் உருகி, பற்களில் அறைபடும் சிறு தேங்காய் துண்டங்களுடன் அபார சுவை. கல்பாத்தி நெய்யப்பத்துடன் ஒப்பிடும்போது பஹ்ரைன் உன்னியப்பமும் உன்னி கிருஷ்ணன் போல சிறியது தான்.
அடுத்து வெங்காய தோசை, உலக உருண்டை போல பெரிய்ய பூரி மசால், நெய் ரோஸ்ட், அடைதோஷை (அடை தோசையல்ல😃) என எல்லாவற்றையும் மொஸ்க்கி விட்டு கல்லா பகுதி பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம் (வீடியோ பார்க்க!). ச்சக்கவரட்டி எனப்படும் பலாப்பழ அல்வா, மாகாணிக்கிழங்கு ஊறுகாய், பொருவிளங்கா உருண்டை, புளி இஞ்சி, வேப்பிலைக்கட்டி எல்லாவற்றை பற்றியும் அவர் சொல்ல சொல்ல சில பதார்த்தங்களை ஆசையுடன் பார்த்து வாங்கிக்கொண்டோம்.
இரவு 9 மணிக்கு மேல் கோவை நோக்கி திரும்ப பயணம். போக்குவரத்தில்லா சாலை. ஸ்பாட்டிஃபையில் லதா மங்கேஷ்கரின் ‘Milo na tum to hum ghabraye’ போன்ற 70களின் பாடல்களை போட லதாவும் ராஜியும் எல்லா பாடல் வரிகளையுமே ரசித்து பாட, மூன்றாம் வரிசையில் கால் வலியுடன் கஷ்டப்பட்டு உட்கார்ந்திருந்த நண்பர்கள் திருவும் குருவும் கூட பாடலை ரசித்தபடி வந்தார்கள் 😀

No comments:

Post a Comment