Ra.One படத்தில் ஷாருக் கானிடமிருந்து “அப்பா! நோ ஸ்மோக்கிங்!” என்றபடியே சிகரெட்டை பிடுங்கி எறியும் அவரது பையன் கேட்கிறான்: ‘சிகரெட் பாக்கெட்ல தான் அது உடல் நலத்திற்கு கெடுதல்னு எச்சரிக்கை எழுதியிருக்கே!’
ஷாருக்: ‘ஆமாம்ப்பா, அது சரி.. உனக்கு தெரியுமா? வருஷா வருஷம் ஆயிரக்கணக்கானவங்க சிகரெட்டை விட்டொழிக்கிறாங்க’
ஷாருக்: ‘இல்ல.. இறந்து போய்!’
எதற்கு இதை சொல்கிறேனென்றால், அதி வேகமாக, பாதுகாப்பின்றி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் சீக்கிரம் விபத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள், தவறை உணர்ந்து அல்ல… இறந்து போய்!
பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துக்களுக்கு முதற்காரணம் வேகம் தான். அடுத்து சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது.
துபாயிலிருந்து அபுதாபிக்கு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, முன்னால் லாரி ஒன்று ஸ்பீட் லிமிட்டை விட குறைவான வேகத்தில். டிரைவர் ஹார்ன் அடித்தும் லாரி வேகத்தை கூட்டாமல், எங்கள் பஸ்ஸும் லாரியை முந்தாமல் பின்னாலேயே மெதுவாக செல்ல, ‘நாமளாவது ஃபாஸ்ட் லேனில் அவனை ஓவர்டேக் செஞ்சு போயிடலாமே!’ என நினைத்தோம். பலூச்சி பஸ் டிரைவர் சொன்னது: ‘லாரி, பஸ்ஸெல்லாம் வலது ஓரம் ஸ்லோ லேன்ல தான் போகனும். ஃபாஸ்ட் லேன்ல போவதற்குத்தடை!’. ஒரே ஒரு நிமிடம் கூட பாதுகாப்பு விதியை மீறி ஃபாஸ்ட் லேன் போய் ஓவர்டேக் செய்யக்கூடாது என்ற அவரது உறுதி எங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருந்தது.
நிறைய விபத்துக்களில் passive safety எனப்படும் சீட் பெல்ட் அணிவதாலும், பின் இருக்கைக்கை காற்றுப்பை (air bag) உள்ள வாகனங்களாலும் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்படுகின்றன.
பெங்களூர்-திருச்சி நெடுஞ்சாலையில், (குறிப்பாக ஹோசூர்-கிருஷ்ணகிரி-சேலம்) விபத்துக்கள் அனைத்தும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தும்போது ஏற்படுகிறது. எல்லா கனரக வாகனங்களும் வேகப்பாதையில் (fast lane) மிக மெதுவாக செல்வதால் மற்றவர்கள் அவர்களை கோபத்துடன் ஸ்லோ லேனில் முந்திச்செல்கிறார்கள். வரிசையாக வரும் இரண்டு மூன்று வாகனங்கள் ஒரே நேரத்தில் முந்த முயற்சிக்கும்போதும் விபத்துக்கள்.
மற்ற வாகனங்களைப்பற்றி கவலைப்படாமல் நாம் பின்பற்ற வேண்டியவைகள் இவை:
1. உங்களுக்கு முன்னும் பின்னும் கண்ணுக்கெட்டிய தூரம் வாகனங்களே இல்லையென்றால் மட்டுமே வேகத்தை சற்று கூட்டலாம், அதுவும் அவசியமிருந்தால்.
2. க்ரூஸ் (cruise control) எனப்படும் விசையை அழுத்தினால் நீங்கள் ஆக்ஸிலேட்டரை அழுத்தாமலேயே வாகனம் தானாகவே ஒரு ஸ்பீடில் செல்லும். நல்லது, ஆனால் அந்த நேரம் டிரைவருக்கு தூக்கம் சுழட்டினால் தட்கால் டிக்கெட் தான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் க்ரூஸ் கண்ட்ரோல் தேவைப்படலாம். ஆனால் நாமக்கல் பக்கம் எந்த நேரமும் ஒ்ரு தாத்தா டிவிஎஸ் ஐம்பதில் திடீரென சாலையை கடப்பார்.
3. வாகனங்களை முந்தும்போது ஹார்ன் அடித்து மற்ற வண்டியை எச்சரியுங்கள். வளைகுடா நாடுகளில் அப்படி எச்சரித்து நம் காரை முந்தியதும் சிங்கிள் ஹார்ன் கொடித்து நன்றியை தெரிவிப்பார்கள். தர்மபுரி பக்கம் அதுபோல நானும் செய்து பார்த்தேன். என்னை K9 என்று நினைத்து முறைத்தார்கள்.
4. நடுவே உங்கள் வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தவேண்டுமென்றால் நெடுச்சாலை ஓரத்தில் படக்கென நிறுத்த வேண்டாம். பெரும்பாலான விபத்துக்கள் நின்றுகொண்டிருக்கும் (stationary) வாகனங்களை மோதுவதனால் தான். செக்போஸ்ட் அல்லது ஏதேனும் பெட்ரோல் பங்க்கில் கணிசமாக இடமிருக்கும், நெடுஞ்சாலையிலிருந்து தள்ளி இருப்பதால் நீங்களும் இறங்கி கை,காலை நீட்டி 5 நிமிடம் ஸ்ட்ரெச் செய்யலாம்.
5. இரண்டு மணி நேர இடைவெளியில் டீக்கடை, பனைவெல்ல காபி என ஏதேனும் சாக்கு (மனைவிக்கு) சொல்லி வண்டியை நிறுத்துங்கள். உங்க வண்டிக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவை.
6. குடை, சுத்தியல், பாத்திரங்கள், தேங்காய் போன்ற கூர்/கனமான சாதனங்களை தயவு செய்து பின் சீட்டில் வைக்காமல் ட்ரங்க்/டிக்கியில் ஏதாவது பையிலோ பெட்டியிலோ வைக்கவும். சில விபத்துக்களில் வாகனங்கள் உருண்டு இது போன்ற சாதனங்களால் கூட நமக்கு காயம் ஏற்படலாம்.
7. ஊருக்கு கிளம்பும் முன் நான்கு சக்கரத்திலும் போதிய காற்று உள்ளதா என சரிபார்ப்பது நல்லது என்றாலும், தேவைக்கு அதிகமாக காற்று வேண்டாமே. வெயில் காலத்தில் சக்கரத்தினுள் டியூப் விரிவடையும். மேலும் சாலையில் உரசி டயர்கள் சூடாகி காற்றழுத்தம் கூடுமென்பதால் குறைந்தபட்ச அளவு காற்றுடன் பயணிப்பதே டயர்களுக்கு நல்லது. டிரைவர் பக்க கதவைத்திறந்தால் காரின் பக்கவாட்டில் முன்/பின் சக்கரங்களுக்கு தேவையான காற்றளவின் பட்டியல் (chart) ஒட்டப்படிருக்கும். முன் சக்கரத்திற்கு இவ்வளவு, பின் சக்கரத்திற்கு இவ்வளவு, இரண்டு பேர் மட்டும் பயணம் செய்தால் இவ்வளவு போன்ற விபரங்கள் அட்டவணையில் இருக்கும். ‘32ன்னு தான் அவன் போடுவான், நா எப்பவுமே 35,36 போட்டுக்குவேன்’ போன்ற ஜம்பங்கள் வேண்டாம். நிறைய விபத்துக்கள் டயர் வெடித்து, வாகனம் கட்டுப்பாட்டை இழப்பதால் ஏற்படுகின்றன.
8. நைட்ரஜன் வாயுவை டயர்களில் நிரப்புவதால், காற்றின் அழுத்தம் மிதமாகவும், டயர்களை ஆக்ஸிஜன் வாயு போல அரித்து விடாமல், எரிபொருள் திறனை (fuel efficiency) மேம்படுத்துதல் போன்ற பயன்கள் உள்ளன. ஆனால் நைட்ரஜன் வாயுவின் விலை ஒரு சக்கரத்திற்கு சுமார் 125 ரூபாய். ‘அந்த 500 ரூபாய்க்கு மூணு பேர் A2Bல டிபன் சாப்பிடலாமே’ போன்ற வாதங்கள் வேண்டாம். (பைதிவே A2B கோபித்துக்கொள்ள வேண்டாம், நீங்க ரொம்ப காஸ்ட்லி தான்)
9. இத்தனை கி.மீட்டரோ அல்லது இத்தனை மாதங்களோ கழித்து வாகனம் சர்வீஸ் செய்யப்பட வேண்டுமென்ற விதியை உதாசீனப்படுத்த வேண்டாம். அந்த சர்வீஸில் ரேடியேட்டரின் தண்ணீர் அளவு, கண்ணாடியின் வைப்பர், இஞ்சின் ஆயில் அளவு, கியர் ஆயில் அளவு, சக்கர சீரமைப்பு (அலைன்மென்ட்) எல்லாம் சரிபார்ப்பார்கள்.
10. காலை 6 மணிக்கு நெடுந்தொலைவு பயணமென்றால், முதல் நாளிரவு நல்ல உறக்கம், வீட்டுணவு போன்றவை அவசியம். முதல் நாள் இரவு பானி பூரி, ச்சோலே பட்டுரா போன்றவை வயிற்றைக்கெடுத்து விடலாம்.
11. பயணத்தின் போது நிறைய தண்ணீர் அருந்தவும். ஒண்ணறை, இரண்டு மணி நேரத்திற்கொரு முறை சிறுநீர் கழித்தல் உடலுக்கு நல்லது.
12. தலைவலியோ, லேசான காய்ச்சலோ, வயிற்று வலி போன்ற உபாதைகள் இருந்தால் டிரைவர் சீட்டில் அமரவே வேண்டாம்.
நெடுந்தூர பயணத்தை சுகமாக அடுபவித்து, கவலைகளை மறந்து அதிஜாக்ரதையாக வாகனம் செலுத்துங்கள். உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment