பஹ்ரைன் விமான நிலையத்தில் லேபர் விசாவில் கலவரத்துடன் வந்திறங்கிய இளைஞனின் கையில் பாஸ்போர்ட், அதன் உள்ளே சொறுகப்பட்ட டிக்கட், காலடியில் பழைய பெட்டி. நெற்றியில் விபூதியுடன் நம்மை பார்த்ததும் பரவசத்துடன் ‘சார்! ஏர்போர்ட் வந்து கூட்டிட்டு போறதா சொன்னாங்க, யாரையும் காணம்’ என தமிழில் கேட்டான். எந்த கம்பெனி விசா என்பதும் தெரியாது பாவம். ‘உங்களுக்கு அடைக்கலசாமிய தெரியுமா சார்?’ என வெள்ளந்தியாக கேட்ட அவனது ஊர் புதுக்கோட்டை பக்கம் ‘ஆவனம் கைகாட்டி’ யாம். பிறகு கம்பெனி பிரதிநிதி அரபி வந்து அவன் கையிலுள்ள பாஸ்போர்ட்டை பிடுங்கி பெயரை சரிபார்த்து ‘ஆவ்’ என முன்னே நடந்து செல்ல, தயங்கியபடியே அவனைத் தொடர்ந்தான் இளைஞன்.
பெரும்பாலான லேபர் விசா தொழிலாளர்கள் இப்படித்தான் வளைகுடா நாடுகளுக்கு வந்திறங்குவார்கள். பெட்டியில் மனைவி, குழந்தை போட்டோ, இரண்டு செட் துணிமணிகள் மற்றும் சில நூறு ரூபாய்கள் மட்டுமே. தினார் இருக்காது. தாய்மொழி மட்டுமே தெரியும். சொந்த ஊரில் ஏஜென்ட்டுகளிடம் சில லட்சங்கள் அழுது, முறையான விசாவில் வருபவர்கள் ஒருபுறம். ‘ஃப்ரீ விசா’ எனப்படும் மற்றொரு வகையில் மெக்கானிக், டெயிலர் போன்ற விசாக்களில் பணம் கொடுத்து வருபவர்களிடம் விமான நிலையத்திலேயே பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு ‘கார் துடைக்கும் வேலை, ஓட்டல், கட்டிட வேலைன்னு போயிக்கோ, மாசம் 20, 30 தினார் கொடுத்துடு’ என்று அனுப்பி விடுவார்கள். விசாவை வைத்தே இதுபோல வியாபாரம். இந்த ஃப்ரீ விசா லேபரர்கள் டெய்லர் விசாவில் வந்து சட்ட விரோதமாக ரோட்டில் பழங்கள் விற்பது, சுடுகாட்டில் வேலை என இருப்பார்கள், ஒருநாள் அதிகாரிகளிடம் மாட்டும் வரை.
முறையான விசா தொழிலாளர்கள் தினம் 10, 12 மணி நேரம் வேலை செய்து மாத சம்பளம் வாங்கியதும் எக்ஸ்சேஞ்சு மூலம் ஊருக்கு பணம் அனுப்புவார்கள். ஃப்ரீ விசா தொழிலாளர்களும் ஏஜென்டுக்கு கொடுக்க வேண்டிய தொகையை தனியே வைத்துக்கொண்டு, மீதி சேமிப்பை ஊருக்கு அனுப்புவார்கள்.
ஃப்ரீ விசாக்காரர்கள் பல வருடங்கள் தாயகம் செல்வதில்லை, டிக்கெட் பணம் அவர்களே சேமிக்க வேண்டுமே என்பதால்! மற்றவர்களுக்கு இரண்டு வருடத்திற்கொரு முறை கம்பெனியில் டிக்கெட் கொடுத்தாலும் முன்பெல்லாம் சென்னை, பம்பாய் போன்ற பெருநகரங்கள் வரை தான் டிக்கெட் கொடுப்பார்கள். அதற்கு மேல் சொந்த ஊர் செல்ல அவர்களே செலவளிக்க வேண்டும். தற்போது திருச்சி போன்ற நகரங்களுக்கு நேரடி பட்ஜெட் விமானம் இருப்பதால் தென் மாவட்டக்காரர்களுக்கு ஓரளவு நிம்மதி.
பஹ்ரைன் போன்ற நாடுகள் தொழிலாளர் நலனில் அக்கரை கொண்டு, ஃப்ரீ விசாவையே அகற்றி, முறையான ஆட்சேர்ப்பு, தங்குமிடத்தில் ஏசி வசதி, இலவச மருத்துவக்காப்பீடு, தொழிலாளர்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட அதிகாரப் பிரிவு (Regulatory Authority) போன்று நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன.
மனாமாவில் காந்தாரி எனும் கடை பெரும்பாலும் இவர்கள் படையெடுக்குமிடம். குறைந்த விலையில் ஃபா மற்றும் லக்ஸ் சோப்புகள், யார்ட்லி சென்ட் வகைகள், உள்ளாடைகள், நகம் வெட்டி, குடை, டைகர் தைலம், காலணிகள் என ஏராளமாக அங்கு விற்கிறார்கள். நாமளும் அங்க தானே போவோம்! அதிகபட்ச 30 கிலோ எடைக்குள் பெரிய அட்டைப்பெட்டிகளில் அடைத்து ஊருக்கு எடுத்துச்செல்வார்கள்.
விடுமுறையில் தாயகம் திரும்பும்போது வாங்கிய கடனை அடைப்பதோ, வட்டி கட்டுவதோ, சகோதரி திருமணத்தை முடிப்பது, பெற்றோரின் மருத்துவ செலவு, வீடு கட்ட அஸ்திவாரம் என தங்கள் சேமிப்பை முழுவதும் இழந்து வேலைக்கு திரும்புவார்கள் நிறைய கனவுகளுடன்.
திருச்சி விமானநிலையத்தில் குடும்பங்கள் அழுதபடியே இவர்களுக்கு விடைகொடுக்க, ‘ஒடம்ப பாத்துக்கம்மா’ என அம்மாவிற்கும், ‘அழக்கூடாது! தைரியமா இரு. புள்ளய பாத்துக்க!’ என மனைவிக்கும் தைரியம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு உள்ளே பாஸ்போர்ட் கண்ட்ரோல் பகுதியில் கண்களை துடைத்தபடி வரிசையில் நகர்பவர்கள் நிறைய பேர்.
பொதுவாக லேபர் கேம்ப்களில் 400, 500க்கும் மேலான தொழிலாளிகள் தங்க இரண்டு மூன்று தளங்களில்
அறைகள், தரைதளத்தில் உணவுக்கூடம், விளையாட சிறு மைதானம், சில சமயம் உள்ளேயே சிறிய கோவில், குருத்வாரா, கம்பெனிக்கு அழைத்துச்செல்ல பஸ்கள், வெள்ளியன்று மனமா பகுதிக்கு இவர்கள் சென்று திரும்ப ஷட்டில் பஸ் வசதி என தொழிலாளர் நலனுக்காக தொழிலதிபர்கள் நிறைய வசதிகள் செய்து கொடுத்தாலும் தங்கள் குடும்பத்தை பிரிந்து தொலைவில் வாழும் இவர்களது முகத்தில் எப்போதும் சோகம் நிலவும்.
பல வருடங்கள் அலைந்து திரிந்து வேலை செய்யும் முதியவர்கள் பாஸ்போர்ட் தொலைந்து போய் தாயகம் திரும்ப முடியாமல் வாடுவதும், சிலர் இறந்து விடுவதும், அவர்களது உடலை பெற யாரும் முன் வராமல் பல மாதங்கள் அரசு சவக்கிடங்கில் கிடக்கும் அவல நிலையும் உண்டு. தொண்டு நிறுவனங்கள் பணம் செலவு செய்து உடலை அனுப்புவார்கள்.
இறந்த தொழிலாளியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, தாயக விமான நிலையத்தில் சடலத்தைப் பெறும் நபரின் விபரங்கள் குறித்த ஒப்புதல் கடிதம் வரவழைத்து, வெளிநாட்டில் வெளியுறவு அமைச்சகத்தின் NOC, இறந்தவரின் அசல் பாஸ்போர்ட், இறந்தவரின் அடுத்த உறவினர் பெயரில் செட்டில்மென்ட்/நிலுவைத் தொகைக்கான டிமான்ட் ட்ராஃப்ட், கம்பெனியின் கடிதம் போன்ற டாகுமென்ட்டுகள் சமர்ப்பித்து, இறப்புச்சான்றிழ் கிடைத்த பிறகே உடலை விமானத்தில் அனுப்பி விடுவார்கள்.
சமீபத்தில் குவெய்த் நாட்டில் மின்கசிவு தீ விபத்தில் சிக்கி நாற்பதுக்கும் மேலான தொழிலாளிகள் இறந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உடல்கள் இந்திய விமானப்படையினரால் கொண்டுவரப்பட்டன. கம்பெனி மற்றும் அரசாங்கத்தின் இழப்பீடுகள் பணவசதியில்லாத இறந்தவரின் குடும்பத்திற்கும், குழந்தைகள் எதிர்காலத்திற்கும் பயனளித்தாலும், எந்த இழப்பீடும் விலை மதிக்க முடியாத உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது என்பது வருத்தம் கலந்த உண்மை. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த வருத்தங்களும் ஆறுதல்களும்.
பி.கு: சில சமயம் தனியாக வந்திறங்கும் இறந்த உடலைப்பெற நம் நாட்டு விமான நிலையங்களில் சோகத்துடன் காத்திருக்கும் உறவினர் எதிர்கொள்ளும் மற்றொரு பெரும் சவால், அங்கே வசூலுக்காக கழுகுகள் போல வட்டமிடும் ஊழியர்களையும் ஏஜென்ட்டுகளையும் கையாள்வது தான்.
No comments:
Post a Comment