சட்டென இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றுக்கொள்ளலாமா கோபாலசுந்தரம் மாமா!
சுமார் 25 வருடங்கள் முன் பஹ்ரைன் முதன்மை வங்கிகள் ஒன்றின் சீனியர் வைஸ் பிரெசிடென்ட் பதவிக்கு வந்தமர்ந்தார் மாமா. அமெரிக்கா, இங்கிலாந்து, குவெய்த் போன்ற நாடுகளில் வங்கிகளில் உயர் பதவிகளில் இருந்தவர். பஹ்ரைன் வந்த சில மாதங்களிலேயே அவரது நண்பர் குழாம் கிடுகிடுவென உயர, ஏராளமான இளைஞர்களும் குடும்பப்பெண்களும் அவரது இல்லத்திற்கு விஜயம் செய்தவன்னம் இருந்தனர். மாமாவிடம் என்னை அழைத்துக்கொண்டு சென்றது வேறு யாருமல்ல. சாட்சாத் நம் பால்ய நண்பன் Ganapathi Subramanian தான்.
மாமா அவ்வளவு சீக்கிரம் அந்த தீவு நாட்டில் பிரபலமாகக் காரணம் என்ன தெரியுமா? தன்னிடமிருக்கும் அபரிதமான இசை ஞானத்தையும், கர்நாடக சங்கீதம் மற்றும் இலக்கிய அறிவையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் முனைப்புடன் எல்லோரையும் வார இறுதிகளில் தம் இல்லத்திற்கு அழைத்தார் மாமா. திரையிசைப்பாடல்களின் ராகங்களை கண்டுபிடிப்பது, டிசம்பர் சீசனில் சென்னை இசை விழாக்கள் சென்று வந்த பின் நண்பர்களுடன் அதைப்பற்றி சிலாகிப்பது, கர்னாடக இசைப்பாடல்கள், பாடகர்கள், பாடல் வரிகள், கம்போஸ் செய்தவர்களின் பெயர்களை அலசுவது என பன்முகம் கொண்டவர். கர்னாடக இசை சம்மந்தப்பட்ட க்விஸ் நிகழ்ச்சியும் நடத்துவார். நண்பர்களுக்கு மேளகர்த்தா ராகங்கள், ஆரோஹணம், அவரோஹணம், ஸ்வர வரிசை, பன்னிரண்டு இசைச்சக்கரங்கள் என விலாவாரியாக சொல்லிக்கொடுப்பார். முன் வரிசையிலிருக்கும் நாம் ‘ஒன்னுமே புரியலயே மாமா!’ என சொன்னாலும் ‘நீ நன்னா கவனிச்சி காதுல வாங்கி போட்டுக்கோ. தானாவே வந்துடும்’ என்பார் மாமா.
ச.. ப.. ச.. கற்றுக்கொண்ட பின் அடுத்து ச.. மோ.. சா.. தானே!’ என்று கேட்டான் குறும்புக்கார இளைஞன் ஶ்ரீனி. காரணம் அந்தப்பக்கம் சமோசா டிபன் காபி சப்ளை ஜரூராக நடந்துகொண்டிருக்கும். மறுநாள் அதே ஶ்ரீனி, மாமா கற்றுக்கொடுத்த 72 மேளகர்த்தா ராகங்களை கணினி மற்றும் கணிதத்தின் உதவிகொண்டு ஒரு அட்டவணையே(Chart) செய்து கொண்டு வந்தான். கவனியுங்கள்! இது 1996இல்.
காசெட்டில் பானுமதி ராமகிருஷ்ணா (தமிழ்ப்பாட்டல்ல.. தெலுங்கு), கிட்டப்பா, பி. லீலா போன்றவர்கள் பாடல்களை போட்டு குரல் யாருடையது என கண்டுபிடிக்க வேண்டும். கணிதத்துக்கும் (prime numbers) ராகங்களுக்கும் தொடர்பு இருப்பதை அழகாக விளக்கினார் மாமா. சாவேரி ராகத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்போது அந்த ராகத்தை எவ்வளவு ஜாக்கிரதையாக கையாள வேண்டுமென மாமா விளக்கும்போது சாவேரிக்கு சாவே 'ரி' தான் என நடுநடுவே பிரவாகமெடுக்கும் நகைச்சுவை..
குழந்தை மனசு மாமாவிற்கு. சாதாரணமாக பேசும்போது மற்றவர்களை விளையாட்டிற்காகக்கூட கிண்டல் செய்யமாட்டார். மனதில் பட்டதை நம் மனம் நோகாமல் எடுத்துரைப்பவர். தாய்மொழியான சுந்தரத்தெலுங்கும் தமிழ் பிராமண பாஷையும் கலந்து அவர் பேசுவது கேட்க இனிமையாக இருக்கும். அதீதமான ஆங்கிலப்புலமை உடையவர்.
நிறைய மேடை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தமிழ் சினிமா பாடல்கள் ( குறிப்பாக கண்ணதாசன் பாடல்கள்) பற்றிய பாடல்கள் தொகுப்பை வித்தியாசமாக அளித்தவர். ஆர்எஸ். மனோகர் ஸ்டைலில் 'தியாகய்யா' நாடகத்தை இயக்கி முப்பதுக்கும் மேற்ப்பட்ட உள்ளூர்க்கலைஞர்களுடன் அரங்கேற்றியவர். 'திரையிசைப்பாடல்களும் கர்னாடக இசை ராகங்களும்' என்ற நிகழ்ச்சி மூலம் நிறைய இளம் பாடகர்களை மேடையிலேற்றி அசத்தியவர். இராமர் பட்டாபிஷேக கதாகாலட்சேபம் நடத்தியவர். திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி மூன்று மணி நேரங்களுக்கு மேல் உரையாற்றியவர். திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் அனுபூதி, திருப்பா என எக்கச்சக்கமான நூல்களை மேற்கோள்காட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதில் வல்லவர். கணிதம் மூலம் ராகங்களை கண்டுபிடிப்பது, மேடையில் கச்சேரி செய்யும் பாடகர்களும் இவர்முன் குழந்தைகள் போல அமர்ந்து கவனித்து இவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்வார்கள்.
அடுத்த ஒரிரு வருடங்களில் மறுபடியும் தன் பையன் மற்றும் பெண் பிள்ளைகளுடன் இருக்க இவர் அமெரிக்கா திரும்ப வேண்டிய கட்டாயத்தால் பஹ்ரைனை விட்டுப்போனபோது சுமார் 500 பேருக்கு மேல் சேர்ந்து அவருக்கும் ருக்கு மாமிக்கும் பிரியா விடை கொடுத்தோம். பஹ்ரைனில் பிரம்மாண்டமாக நடந்த விழா அது. அதிலும் டிராமா, பாடல்கள்,சிவகுமார் ( Sivakumar Nilakantan ) மாமாவின் நகைச்சுவைத்துணுக்கு.. நடுவே மாமா அவர்கள் உருவப்படம் வரைந்து அவருக்கு அளிக்கும் அதிர்ஷ்டமும் எனக்குக்கிடைத்தது.
பல வருடங்கள் கழித்து தன்னுடைய ஜாகையை அமெரிக்காவிலிருந்து கோவைக்கு மாற்றியிருந்தார் மாமா.
1996க்குப்பிறகு 19 வருடங்கள் கழித்து 2015இல் ஒருநாள் மாமா மற்றும் ருக்கு மாமி இருவரையும் கோவையில் சந்தித்தோம். சுமார் ஐந்து மணி நேரத்தை எனக்காக ஒதுக்கி, மாமியையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு நேரே நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து.. 'ஏலா உன்னாவுபா ஶ்ரீதர்!.. பாகுன்னாவா உஷா... We will be happy to spend some time with you' என அன்பொழுக காந்திபுரம் வந்து எங்களை அழைத்துக்கொண்டு ரேஸ்கோர்ஸ் ரோடு 'அன்ன லக்ஷ்மி' சென்றடைந்தபோது மதியம் மணி இரண்டு. தக்காளி சூப்பில் ஆரம்பித்து தாம்பூலம் வரை தாலி சாப்பாட்டை பஹ்ரைன் நண்பர்கள் மற்றும் கடந்த 19 வருட வாழ்க்கை அனுபவங்களுடன் பகிர்ந்துகொண்டு மூனரை மணிக்கு கிளம்பி பேரூர் வழியாக தாழியூர் நோக்கி பயணம் செய்தோம். தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட அவர்கள் நடுநடுவே படுசரளமாக பெங்காலியிலும் சம்சாரிப்பதைப்பார்த்து நெகிழ்ந்து போனோம்.
படு சுவாரசியமானது அடுத்த பத்து கிலோமீட்டர் பயணம். தாமிரபரணியில் வளர்ந்தவரான இவர் பாரதியின் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் பற்றி மணிக்கணக்காக பேசக்கூடியவர். தன் சொந்த ஊரான தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்ட கோயில்களைப்பற்றி பேசிக்கொண்டு வந்தார். அங்கே 1885இல் ஸ்தாபகமான ஶ்ரீகுமரகுருபரர் ஸ்வாமிகள் பள்ளியில் தான் மாமாவின் தமிழ் இலக்கண, இலக்கிய ஆர்வம் ஆரம்பமானது. பிறகு கார்னேஷன் ஸ்கூல்...ஸ்வராஜா ஸ்கூல் என புதிய நாமகரணங்களுடன் பள்ளி உயர, மாமாவின் இலக்கிய அறிவும் வளர்ந்தது. குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம் மற்றும் அக்கால சைவசித்தாந்த தத்துவங்கள், மேடை நாடகங்களில் விருத்தாபி குமரகுருபரர் பாத்திரமேற்று நடித்தது என மாமாவின் இளமைக்கால வாழ்க்கை இலக்கியத்தைச்சுற்றியே வளர்ந்தது. மு.வ அவர்கள் சான்றுதல் அளிக்க கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருபத்தியிரண்டே வயதில் மாமா தமிழ்ப்பாடம் நடத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அவரது மாணவிகள் நிறைய பேருக்கு வரிசையாக திருமணமாகிக்கொண்டிருந்ததால் சின்னப்பையனான அவரை அங்கே வகுப்பெடுக்க வைப்பதில் சிக்கல் இருக்கலாமென்ற ஐயத்தில், மாமாவுக்கும் அப்போதே சட்டென திருமணம் செய்து வைத்தார்களாம் (தகவல்: மாமி
)

'நானா நானி' குடியிருப்பு வளாகத்தின் வாயிலில் ஆறு குதிரைகள் ரதம் எங்களை வரவேற்க அருகேயே புதிய மகாகணபதி மற்றும் ஶ்ரீராதா கிருஷ்ணர் ஆலயங்கள். சுமார் 180 வில்லாக்களுக்கு மத்தியில் மாமாவின் அந்த அழகான புதிய வில்லாவிற்குள் நுழைந்தோம் (படம் பார்க்க!) கீழே இரண்டு படுக்கையறைகள், வாசல் திண்ணை மற்றும் விசாலமான வரவேற்பறை, நவீன சமையலறை மற்றும் குளியலறைகள். மாடியில் மிகப்பெரிய பால்கனி, படுக்கையறை, வரவேற்பறை மற்றும் மொட்டைமாடி. நேரத்திற்கு அருமையான உணவு வழங்கும் கஃப்டீரியா, டாக்டர்கள் வசதி, தியான மண்டபம், கம்யூனிட்டி ஹால் என சகல வசதிகள் கொண்ட இடம்.
மறுபடியும் அங்கிருந்து ஐந்தரை மணிக்கு கிளம்பும்போது மாமா தானும் கூட வந்து காரில் எங்களை ராஜவீதியில் இறக்கி விட்டு வீடு திரும்பினார். அந்த வயதிலும் இவ்விருவரது விருந்தோம்பல், தமிழார்வம், நகைச்சுவை உணர்வு எங்களை பிரமிக்க வைத்தது. மாமா மிக அருமையாக ஜோசியம் பார்ப்பவரென்பதால் மற்ற தூரதேசத்து நண்பர்களின் ஜாதகப்பொருத்த விண்ணப்பங்களும், தோஷ பரிகார ஆலோசனைக்கான ஈமெயில்கள் குவிந்தவன்னம் இருந்தது உண்மை. முகநூலில் மாமா தினமும் எழுதியிருந்த 'சுபாஷிதானி' மற்றும் 'தினம் ஒரு திருப்புகழ்' பதிவுகள் இக்கால இளைஞர்கள் அவசியம் படித்துப்பயன்பெற வேண்டியவை.
கிளம்பும்போது வெள்ளி பரிசுப்பொருட்களும் மாமா மாமியின் வாழ்த்துச்செய்தியுடனான 'திருப்பா' புத்தகத்தையும் அவர்கள் எங்களுக்கு அளித்தபோது திக்குமுக்காடிவிட்டோம் என்பது சத்தியம்.
சில வருடங்களுக்கு முன் மாமி சிவலோகப்பதவியடைந்து விட, துவண்டு போனார் மாமா. ருக்கு.. ருக்கு என நொடிக்கொரு முறை அழைக்கும் மாமாவின் உடல்நலனில் மிகுந்த அக்கரையும் கரிசனமும் கொண்ட மாமி தான் மாமாவின் பலமே! மாமி இல்லையெனினும் மீண்டும் அதே புத்துணர்வுடன் முகநூலில் எழுத ஆரம்பித்தாலும், வயது மூப்பின் காரணமாக சிறு உபாதைகளால் அவதியுற்ற மாமா தன் கடைசி காலத்தை தங்களுடன் கழிக்க பிள்ளைகள் விரும்பி, அறுவை சிகிச்சை ஒன்றையடுத்து மாமா அமெரிக்கா சென்றடைந்தார்.
மீண்டும் முகநூல் பதிவு, நண்பர்களுடன் தொலைபேசி சம்பாஷனை என மாமா தன் முதுமையை சந்தோஷமாக கழிப்பது காலனுக்கு பொறுக்கவில்லை போலும். அதனால் சட்டென அழைத்துக்கொண்டான். எனினும் படுத்த படுக்கை, நீண்டகால மருத்துவம் போன்ற அவதிகள் ஏதுமின்றி கடைசி ஓரிரு நாட்களில் கூட Jegan Nathan போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு ‘Few hours to go, it looks like’ என குறுஞ்செய்திகள் அனுப்பியபடியே நிம்மதியாக ஶ்ரீவைகுண்டம் கைலாசநாதரைக்காண கண்களை மூடினார் மாமா.
வாழ்க்கையில் நிறைவாக வாழ்ந்து, அடுத்தவர்க்கு வழிகாட்டியாய் இருந்து, பிற உயிர்களை மதித்து, தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை எனலாம். அப்படி வாழ்ந்தவர் தான் Gopala Sundaram மாமா.
No comments:
Post a Comment