இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்கள் ஓய்வு பெற்றதும் வாழ்க்கையை தினம் தினம் ரசித்து அனுபவிக்க வேண்டுமா? இவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு திருநாள் தான். முகநூலில் அநேகமாக தினமும் ஒரு பதிவு போடுபவர். அன்றன்றைக்கு எதாவது விசேஷ நாளாக இருந்தால் விரிவான பதிவு எழுதுவார். சஷ்டி, பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், அமாவாசை திதி, காலபைரவாஷ்டமி, மாத சிவராத்திரி, ஏகாதசி… மன்னிக்கவும், இந்த பட்டியல் இன்னும் ஐம்பது அறுபதைத் தாண்டும். முழுக்க ஆன்மீகப்பதிவுகள். மார்கழி மாதத்தின்போது முப்பது நாளும் பதிவுகள் எழுதுவார். அரசியல்? ம்ஹூம்.. ப்டாது.
ஆன்மீகம் ஆச்சா! அடுத்து, இவர் வசிக்கும் கேட்டட் கம்யூனிட்டியில் நிகழும் எல்லா வைபவங்களிலும் கலந்துகொண்டோ அல்லது இவரே எடுத்து நடத்தும் நிகழ்ச்சிகள் பற்றிய பதிவுகள் பற்றி எழுதுவார். மெனுவில் என்னென்ன பலகாரங்கள் என்பதையும் விடாமல் குறிப்பிடுவார். நண்பர்களின் பிறந்தநாள், திருமணநாள் என அதையும் தவறாமல் பதிவிட்டு வாழ்த்துவார். அன்னையர் தினத்தன்று 94 வயதான இவரது அன்னையை மகிழ்விக்க அவரது புகைப்படத்துடன் ஒரு வாழ்த்துப்பதிவு.
முடிந்ததா? இல்லை.. இவர் ஒரு பிரமிப்பூட்டும் எழுத்தாளர் என்பதை சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் படித்தால் போதும், என்னவொரு கற்பனை வளமிக்கவர் என்பது தெரியும். சினிமா திரைக்கதை போல வசனங்களுடன் எழுதிய இவரது கிராம, அக்ரஹாரத்து கதைகளை பார்த்து மலைத்துப்போனேன். அதிலும் இவரது குடும்ப உறவுகள் சார்ந்த கதைகள் மனதை நெகிழச்செய்பவை அல்லது கொஞ்சம் வீக்கான ஆசாமிகளை அழவும் வைத்து விடுவார். கூடுதல் சந்தோஷம் என்னவென்றால் எனது ஓவியங்களான அக்ரஹாரம், டெல்லி கணேஷ், விசு, ஸ்கூல் வாத்தியார் என எல்லாவற்றையும் தனது கதை/கட்டுரைகளுக்கு எடுத்துக்கொள்வார்.
நண்பர்கள் குழாத்துடன் டிபன் சாப்பிட ஹோட்டல், கோவில் விஜயம் என அதற்கும் நேரம் ஒதுக்கி விடுவார். இவருடன் நேரம் ஒதுக்க இவரது மனைவியே இவரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்க வேண்டிய அளவிற்கு பிசியான மனிதர் இந்த தின்னவேலிக்காரர்.
முகநூல் பிறந்த சமயம் முதல் எனது நெடுநாளைய நண்பர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்று இவரது பிறந்தநாள். போதாதா எனக்கு! நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான, மன நிம்மதியான வாழ்க்கை அனைத்தையும் இறைவன் இவருக்கு ( Madhavan Yegnanarayanan) அளிக்க வேண்டுகிறேன்,ன
No comments:
Post a Comment