Sunday, June 22, 2025

நண்பனின் மணநாள்

 உத்தேசமா 89 அல்லது 90 இருக்கும். ‘ஶ்ரீதரா! வீட்ல பொண்ணு பாத்துட்டாங்கப்பா. மன்னார்குடிப்பொண்ணு!’ என சொன்னபடியே முதுகில் சந்தோஷமாக ஓங்கி அடித்தான் கணபதி. ‘அவ ஃபுல்லா படிச்சதெல்லாம் கல்கத்தா பா.. நல்லா பெங்காலி பேசுவா’ என்றவன் முகத்தில் ஒரே பெருமிதம்.

கணபதியின் அப்பா திருச்சி பொன்மலை ரயில்வே உத்தியோகம் என்பதால், அவரது நெட்வொர்க் இன்ஃபளுயன்ஸ் மூலம் ரயில்வே சம்மந்தியாகவே பிடித்தார். அதுவும் கல்கத்தா ரயில்வேசில் ஜெனரல் மானேஜர் போன்ற உயர்பதவியில் இருந்தவரின் பெண். டிபார்ட்மென்டில் ராஜ உபசரிப்பு தான். தனி சலூன் கார் எனும் பெட்டி, உதவிக்கு கூடவே பயணிக்கும் பாய்ஸ். அந்தந்த ஸ்டேஷனில் நிற்கும்போது ரயில்வே சிப்பந்திகள் ஓடி வந்து சலாம் வைப்பார்கள். ஸ்டேஷனில் வண்டி நின்றதும் நாலைந்து பேர் ஓடி வந்து பெட்டி தூக்கல், ரயில்வே இரும்பு கேட் குவார்ட்ர்ஸ் வீடு, கார் ஜீப் என புழுதி பறக்கும். மேற்சொன்ன எல்லா வசதிகளையும் மாமனார் அனுபவிக்க, துர்காவின் பிள்ளைப்பிராயத்தைப்பற்றி நமக்கும் கணபதி அவ்வப்போது அப்டேட் கொடுப்பான்.
கல்யாணம் மன்னார்குடியில் தடபுடலாக நடந்தது. முதல்நாள் இரவு ஜமுக்காளம் விரித்து வரிசையாக தலகானிகள். சுமார் 20 சுற்றுக்குப்பிறகும் திறக்காத மூடி கொண்ட கனமான பித்தளை தண்ணீர் கூஜாக்கள் (காலில் போட்டுக் கொண்டால் ஆர்த்தோபீடிக் சர்ஜரி வரை போகும்) அந்தப்பக்கம் வட்ட கும்பல் சீட்டுக்கச்சேரி. காபி டபராக்கள் சத்தம். அண்டா, பாத்திரங்கள் வந்திறங்க, ஓரத்தில் காய்கறி நறுக்கும் சமையல்காரர்கள். குளிக்க பாத்ரூமுக்கு வெளியே அண்டாவில் ஆவியுடன் வெந்நீர், வெத்திலை, பூசணி விதை சீவல், ரோஸ் சுன்னம், பன்னீர் புகையிலை என எல்லா வழக்கமான அந்தக்கால இத்யாதிகளுடன் ஏராளமான திருச்சி, பம்பாய் நண்பர்கள் கலந்துகொண்ட திருமணம் மன்னார்குடியில்.
கணபதி 2001 இல் குழந்தைகள் உயர்படிப்பிற்காக நல்ல வேலையை விட்டுவிட்டு தாயகம் திரும்பியவன். பெரியவன் Vignesh Ganapathi-Subramanian ன் PS ஹஸ்கூல்- மேத்ஸ் ஒலிம்பியாட்- IIT Chennai- MTech- Stanford யுனிவர்சிட்டி - டாக்டரேட்- அமெரிக்கா கூகிள் வேலை என கச்சிதமான ரூட்டு போட்டு கொடுத்தவர்கள் கணபதி-துர்கா தம்பதி. சின்னவன் Heramba Kumarக்கு ஸ்கூட்டி- ஜிம்- CA கோச்சிங் - Big 4 ஆடிட் ஃபர்ம் வேலை என மற்றொரு ரூட்டு போட்டு அவனை CA ஆக்கி அழகு பார்த்தவர்கள்.
‘காலாகாலத்துல பசங்களுக்கு கால் கட்டு போட்றனும்டா ஶ்ரீதரா!’ என ரெண்டு பையன்களுக்கு சட்டென திருமணம். பெரியவனுக்கு அமெரிக்காவிலேயே வேலை செய்யும் பெங்களூர்ப்பெண், சின்னவன் CA என்பதால் கோவையில் வெற்றிகரமாக ப்ராக்டிஸ் செய்யும் CA ஒருவரது பெண் என கனக்கச்சிதமாக கால்குலேட் செய்தவன் கணபதி. ஒரு மாத வருடாந்திர விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்குச்சென்ற பெரியவன் விக்னேஷுக்கு கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறல்ல.. உலக்கைவேறாக பிரித்து மேய்ந்து சொல்லிக்கொடுத்த தாத்தாவால், பிற்காலத்தில் கிரிக்கெட் விசார்ட் ஆகி, எல்லா கிரிக்கெட் க்விஸ் போட்டிகளில் பரிசு வாங்கினான் விக்னேஷ்.
வெற்றிகரமாக குடும்பத்தை நடத்துதலின் பின்புலத்தில் துர்காவின் பங்கு மகத்தானது எனலாம். துர்கா கோடு போட்டால் போதும், ரோடு என்ன.. பாலமே கட்டுவான் கணபதி.
PKF ஶ்ரீதர் & சந்தானம் எனப்படும் பிரபல ஆடிட் நிறுவனத்தில் 25 வருடங்களுக்கு மேல் பணியில் இருக்கும் கணபதியை ரிடையராக விடாமல், ‘ஆறு மாதம் அமெரிக்கா போனாலும் அங்கர்ந்தே வேலை செய்’ என வைத்திருக்கிறார் ஆடிட்டர் சந்தானம். எல்லா விசேஷ நாட்களுக்கும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி, அவ்வப்போது அவரது வீட்டு பசுவிற்கும் அகத்திக்கீரை கொடுப்பதெல்லாம் வேற லெவல் லாயல்டி. ‘நம்பள நல்லா பாத்துக்கறார்னா இதெல்லாம் செய்றதுல தப்பில்ல.. கரெக்ட் தானே ஶ்ரீதரா!’ என என்னிடம் வேறு ஜஸ்டிஃபை செய்து ஒப்பீனியன் கேட்பான். இல்லேன்னா சொல்லுவேன் நான்!
இப்பசத்திக்கி நிறுத்தலேன்னா எழுதிக்கிட்டே போகலாம்.
இன்று மணநாள் காணும் கணபதி-துர்கா தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment